Friday, February 13, 2009

ஒரு வேண்டுகோள்



என்னுடைய இந்தப் பழைய வலைப்பூவில் சில வசதிகள் இடம் பெறவில்லை.ஆகவே ஒரு புது வலைப்பூவை தொடங்கியுள்ளேன்.நண்பர்களே இனி அதைப் பாருங்கள்.
அதன் முகவரி:http://thesanthri.blogspot.com/

Tuesday, July 15, 2008


கி.அ. சச்சிதானந்தத்தினை நேர்காணல் செய்ய முடிவு செய்ததே அவருடன் பழகிய இலக்கிய நண்பர்களின் நினைவோடைக்காகத்தான். அதற்காக அதனளவில் மட்டும் முக்கியத்துவம் பெறும் படைப்பாளியே இவர் என்ற முடிவுக்கு நாம் வந்துவிடக் கூடாது. அதையும் தாண்டி தனிப்பெரும் ஆளுமை சச்சி. பலகாலம் நாடோடியைப் போல ஊர் சுற்றித் திரிந்தவர். எவரெஸ்ட் சிகரத்திற்கு பயணித்த முதல் தமிழர். தேர்ந்த தத்துவப் பிரியர். ஜே. கிருஷ்ணமூர்த்தியின்பால் ஈர்க்கப்பட்டவர். நோபல் பரிசுபெற்ற `சாமுவேல் பெக்கட்'டின் `கோடோவிற்காக காத்திருத்தல்' (நாடகம்), தாகூரின் சித்ரா (நாடகம்), ரோசா லக்சம்பெர்கின் சிறைக்கடிதங்கள், பனிமலைப் பிரதேசத்துக் கதைகள், கல்மாளிகை (மராட்டி நாடகம்) போன்றவற்றை தமிழுக்குக் கொண்டுவந்து சேர்த்தவர். சாகித்ய அகாடமிக்காக `மௌனி'யை பற்றி மோனாகிராப் எழுதியவர். கூடவே மௌனியின் மொத்த சிறுகதைகளையும் பதிப்பித்தவர்.`நடை' - இதழ் தொகுப்பு, `இலக்கிய வட்டம்'- இதழ் தொகுப்பு இவற்றின் தொகுப்பாசிரியர். இதுவரை `அம்மாவின் அத்தை' `உயிர் இயக்கம்' (தமிழினி) ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.பி.ஆர். ராஜம் ஐயர் அவர்களின் ‘Rambles in Vedanta என்ற எளிய வழி ஆங்கில வேதாந்த நூலைக் கொண்டுவந்தவர். அதனால் பெரும் தொகையை இழந்தவர். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இலக்கிய பரப்பில் ஜம்மென்று இயங்குபவர். எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாத எளியர். வயிறு புண்ணாகிப் போகும் அளவிற்கு குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் குறும்பர். தீராநதிக்காக கோபாலபுரத்திலுள்ள அவரது வீட்டில் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலைப் பொழுதில் சந்தித்தோம். மாலை வரை உரையாடல் நீண்டது. பசி மயக்கத்திலும் ருசியாகப் பேசினார்சச்சி .
தீராநதி : நவீன தமிழிலக்கியப் பரப்பில் `எழுத்து' காலகட்டத்தின் பிரதிநிதிகளில் ஒருவராக நீங்கள் இன்றைக்கு அடையாளம் காணப்படுகிறீர்கள். அதைத் தொடர்ந்து சமகால இலக்கியப் போக்குகள் வரை ஒரு தொடர்ச்சியான தொடர்பை வைத்தும் இருக்கிறீர்கள். உங்களின் பின்புலத்திலிருந்து ஆரம்பிப்போமா?
கி.அ. சச்சிதானந்தம் : ஹைஸ்கூல் வரைக்கும் நான் செங்கல்பட்டில்தான் படித்தேன். என் சின்ன வயசிலேயே எங்கள் அப்பா இறந்துவிட்டார். அவர் இறந்தபிறகு குடும்பத்தில் ரொம்பக் கஷ்டம். செங்கல்பட்டில் நாங்கள் மேட்டுத் தெருவில்தான் குடியிருந்தோம். எங்கள் வீட்டிலிருந்து நான்கு ஐந்து வீடுகள் தள்ளி ஒருவர் மளிகைக் கடை வைத்திருந்தார். அந்தக் கடைக்குப் போய் நான்தான் வீட்டிற்குத் தேவையான மளிகைச் சாமான்களை வாங்கி வருவேன். அவரிடம் கல்கி, ஆனந்த விகடன் எல்லாம் வரும். அந்தப் பழைய புஸ்தகங்களைக் கிழித்து பொட்டலம் கட்டிக் கொடுப்பார். அதை நான் படித்துக் கொண்டே இருப்பேன். என்னுடன் இருந்த பசங்கள் எல்லோரும் சினிமாவுக்குப் போவார்கள். என்னிடம் சினிமாவுக்குப் போக காசு கிடையாது. அதனால் ஓசியில் இந்த மாதிரி படிப்பது மனசுக்குப் பிடித்த விஷயமாக இருந்தது. அதே போல எனக்கு சின்ன வயசில் பகல் கனவு காண்பது ரொம்ப விருப்பம். மேட்டுத் தெரு பக்கத்தில் ஒரு சின்ன குன்று இருந்தது. அங்கு தனியாக உட்கார்ந்து கொண்டு ஏதாவது பகல் கனவு கண்டு கொண்டிருப்பேன். அங்கு மாடு மேய்க்கும் பசங்களோடு உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருப்பேன். காட்டு களாக்காய் பறித்துத் தின்று கொண்டே அந்த மாடு மேய்க்கும் பசங்களோடு ஊர் சுற்றித் திரிவேன். இதனால் சின்ன வயசிலேயிருந்தே தனியாகப் போக வேண்டும், தனியாக ஊர் சுற்ற வேண்டும் என்ற ஆவல் வந்துவிட்டது.இந்தச் சமயத்தில் செங்கல்பட்டு ஆஸ்பத்திரி பக்கத்தில் ஒரு நூலகம் இருந்தது. நீங்கள் நம்பினால் நம்புங்கள். என்னுடைய 12 வயதுக்குள் வை.மு. கோதைநாயகியின் எல்லா நாவல்களையும் படித்துவிட்டேன். புரியுதோ இல்லையோ எல்லாவற்றையும் படித்தேன். அவரின் 90 புஸ்தகம் முழுக்க படித்துவிட்டேன். அதே போல அந்தக் காலத்தில் ரொம்பவும் புகழ்பெற்ற ஆரணி குப்புசாமி முதலியாரின் துப்பறியும் நாவல்கள் முழுவதையும் படித்துவிட்டேன். இந்த நேரத்தில் படித்த மேஜர் புஸ்தகம் என்றால் அது சரத்சந்தர் எழுதிய `தேவதாஸ்'தான். அதைப் படித்துவிட்டு இரண்டு நாள் `ஓ'வென்று அழுதிருக்கிறேன். இப்படி கண்ட புஸ்தகங்களை படித்தேன். அதே மாதிரி விளையாட்டிலும் எனக்கு ஈடுபாடு இருந்தது. வாலிபால் விளையாடுவேன். கிரிக்கெட் விளையாடுவேன். ஆக எனக்கு சின்ன வயசு பொழுதுபோக்கு என்றால் ஒன்று: விளையாடுவது. இரண்டு: படிப்பது. சின்ன வயசிலேயே பள்ளிக்கூட படிப்பு என்றாலே எனக்குப் பிடிக்காது. பரீட்சைக்கு நான்கு நாட்கள் முன்னால்தான் நான் படிப்பேன். அதே ஞாபகத்தில் இருக்கும். அதை வைத்தே எழுதி பாஸ் பண்ணிவிடுவேன். பரீட்சைக்காகத்தான் பாட புஸ்தகத்தை கையிலெடுப்பேனே ஒழிய மற்ற நேரங்கள் முழுக்க கதைப் புஸ்தகத்தைத்தான் படித்துக் கொண்டிருப்பேன். பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு எங்கள் குடும்பம் காஞ்சிபுரத்திற்கு மாறியது. அங்கு வந்த பிறகு பச்சையப்பன் கல்லூரி இன்டர் மீடியட்டில் சேர்ந்தேன். அப்போது செட்டித் தெருவில்தான் பச்சையப்பன் கல்லூரி இருந்தது.. அதற்கு எதிரில் `திராவிட நாடு' ஆபீஸ் இருந்தது `திராவிட நாடு' ஆபீஸ் முன் திண்ணை இருக்கும். திராவிட நாட்டிற்கு வருகின்ற பத்திரிகைகளையெல்லாம் அந்தத் திண்ணையில் போட்டுவிடுவார்கள். அப்போது அண்ணா அங்கேதான் இருந்தார். மதிய உணவு இடைவேளை ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரை அங்கேபோய் அங்குள்ள பத்திரிகைகளைப் படிப்பேன். இப்படி படிக்கும் காலத்தில்தான் எனக்கு தாகூர் மீது ஒரு பைத்தியம் பிடித்தது. இதோடு கல்கி, அகிலன் போன்றவர்களையும் படிக்க ஆரம்பித்தேன். கல்லூரியில் இருந்த நூலகத்திற்குச் சென்று படிப்பேன். அப்போது அங்கு பேராசிரியராக நா.சஞ்சீவி இருந்தார். அப்போது நானும் என்னுடைய அண்ணனும்தான் இன்டர்மீடியட் படித்துக் கொண்டிருந்தோம். அதனால் இருவருக்கும் சேர்த்து ஒரு புஸ்தகம்தான் வாங்குவோம். ஒரு நாள் சஞ்சீவி முதல் வகுப்பு `அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்' என்ற கபிலரின் புறநாறூற்றுப் பாடலைதான் எடுத்தார். பாடம் நடத்திக் கொண்டே வரும்போது திடீரென்று யார் யாரிடம் புஸ்தகம் இல்லை என்றார். சிலர் எங்களிடம் புஸ்தகம் இல்லை என்றார்கள். உடனே அவர்களை வெளியே போ என்று சொல்லி அனுப்பிவிட்டார். என்னிடமும் புஸ்தகம் இல்லை. ஆனால் நான் சொல்லாமல் உட்கார்ந்திருந்தேன். ஒரு கட்டத்திற்கு மேல் என்னிடம் புஸ்தகம் இல்லை என்பதை சஞ்சீவி கண்டுபிடித்துவிட்டார். என்னை எழுந்திருங்கள் என்றார். எழுந்தேன். ``புஸ்தகம் இல்லாதவர்களை வெளியில் போகச் சொன்னேன். நீங்கள் ஏன் போகவில்லை'' என்றார். நான் சண்டை போட்டுக் கொண்டு வெளியில் வந்துவிட்டேன்.அருமையாக அவர் பாடம் நடத்தும்விதமே ரசிக்கும் விதமாக இருக்கும். அந்த வகுப்பறை ஒரு வீடு என்பதனால் வெளியில் வந்த நான் வகுப்பறைக்கு வெளியிலுள்ள படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு பாடம் கவனித்துக் கொண்டிருந்தேன். வகுப்பு முடிந்து வெளியில் வந்த அவர் ``உன்னை வெளியில் போகத்தானே சொன்னேன்'' என்றார். உடனே எனக்கு கோபம் வந்துவிட்டது. இருந்தும் பேசாமல் போய்விட்டேன். இரண்டாம் நாள் ``புஸ்தகம் வாங்கி வந்தாயா'' என்று கேட்டார். நான் இல்லை என்றேன். ``ஏன் நீங்க தகராறு செய்கிறீங்க'' என்றார். உடனே நான் கோபத்தில் ``புஸ்தகம் வாங்கவிலலையினாலும் உங்களுக்கு நான் பீஸ் கட்டுகிறேன். பாடம் கேட்க எனக்கு உரிமை இருக்கு'' என்றேன். என்னடா இவன் தகராறு பிடிச்சவன்போல என்று என்னை ஓய்வறைக்கு வா என்றார். உடனே நான் ``சார், எங்கிட்ட இரண்டு புஸ்தகம் வாங்க காசில்லை. எங்க அம்மா தமிழ், இங்கிலீஷ் புஸ்தகம் இரண்டு பேருக்கும் சேர்த்து ஒண்ணுதான் வாங்கித் தருவாங்க'' என்றேன். கூடவே ``நீங்கள் பாடம் நடத்தும் விதம் எனக்குப் பிடிச்சிருக்கு. அதற்கு நான் பீஸ் கட்டுகிறேன். பாடம் கேட்க எனக்கு உரிமை உண்டு'' என்றேன். உடனே என் நிலைமையைப் புரிந்து கொண்டு அவரே புஸ்தகம் வாங்கிக் கொடுத்தார். கல்லூரி லைப்ரரி பற்றிச் சொன்னேன் இல்லையா? அங்கிருக்கும் லைப்ரரியனுக்கு முக்கியமான வேலை என்ன தெரியுமா? லைப்ரரிக்கு வருகின்ற பசங்களை போய் பாடப் புஸ்தகங்களை படிங்கடா என்று துரத்தியடிப்பதுதான்.பம்மல் சம்பந்தமுதலியார் இருக்கின்றார் தெரியுமா? அவர் இருநூறு புஸ்தகம் எழுதி இருக்கிறார். அந்த புஸ்தகம் எல்லாம் அந்த லைப்ரரிக்கு வரும். ஒரு டிக்கெட் வைத்துக் கொண்டு புஸ்தகம் வாங்கி படித்துவிட்டு மறுநாளே போய் திருப்பிக் கொடுப்பேன். ``இதுல பதிநாலு நாள்தானே கெடு போட்டு இருக்கு உடனே திருப்பி வேற புஸ்தகம் கேட்குற'' என்று லைப்ரரியன் வம்பு பண்ணுவார். உடனே நான் சண்டை போட்டுக் கொண்டிருப்பேன். அப்படி சண்டை போடும்போது ஒருநாள் சஞ்சீவி பார்த்துவிட்டார். விசாரித்தபோது விஷயத்தை அவரிடம் சொன்னேன். உடனே அவர் இந்தப் பையனுக்கு மட்டும் என்னுடைய கணக்கில் எவ்வளவு புஸ்தகம் கேட்டாலும் கொடுங்கள் என்றார். இப்படி சின்ன வயசிலிருந்தே தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தால் உங்களுக்கென்று ஒரு தனியான கற்பனையான உலகம் உருவாகிவிடும். பிறகு உங்களுக்கு நிஜ உலகத்தைப் பற்றி எந்தக் கவலையும் இருக்காது. தனிமை விரும்பியாகிவிடுவீர்கள் நீங்கள். அந்தக் காலத்தில் காஞ்சிபுரத்தில் பெரிய ஏரி ஒன்றிருந்தது. அந்த ஏரியைச் சுற்றி பனைமரக்காடு இருந்தது. அந்தக் காட்டில் தனியாளாக சுற்றித் திரிவது மனசுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். மதிய நேரத்தில் யாருமே இல்லாத பனைமரக் காட்டில் அந்தப் பனை மரங்கள் காற்றில் சப்தமிட்டு சலசலக்கும் ஓசை எனக்கு ரொம்பப் பிடிக்கும். இதற்காகவே நிறைய ஊர் சுற்றுவேன். கல்லூரி விடுமுறை நாட்களில் புஸ்தகம் கிடைக்காதில்லையா... அந்த மாதிரி நேரத்தில் இதுபோல சுற்றுவது பிடித்தது. அப்போது ஒரு நண்பன் ``ராமகிருஷ்ண மடம் இங்கே இருக்குடா, அங்கே நிறைய புஸ்தகமெல்லாம் இருக்குடா'' என்றான். உடனே அடிச்சுபிடிச்சு மூன்று கிலோ மீட்டர் போய்ப் பார்த்தால் ``வெளியில் எல்லாம் எடுத்துக்கிட்டு போகக்கூடாது. இங்கே மடத்துக்குள்ளயேதான் படிக்கணும்'' என்று அங்குள்ள சாமியார் சொன்னார். மடத்தில் என்னோட ரசனைக்குத் தகுந்த மாதிரியான கதைப் புஸ்தகங்கள் இல்லை. வேதாந்தம் அது இதுவென்று ஏதேதோ புஸ்தகங்கள் இருந்தன. சரி, என்று சில இங்கிலீஷ் நாவல்களை எடுத்துப் படித்தேன். அப்படிப் படிக்கும்போது பல இங்கிலீஷ் வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாது. உடனே அந்த வார்த்தைகளையெல்லாம் ஒரு நோட்டில் எழுதி எடுத்துக் கொண்டு வந்துவிடுவேன். மறுநாள் அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள மடத்திற்குச் சென்று அங்குள்ள டிக்ஷ்னரியில் பார்த்துத் தெரிந்து கொள்வேன். அப்போது ஒருநாள் இந்த டிக்ஷ்னரியை கொடுங்கள் சாமீ என்று கேட்டேன். கூடவே இரண்டு மூன்று புஸ்தகங்களையும் கேட்டேன். அதெல்லாம் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார். இந்த சாமியாரை சரிக்கட்டுவதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்துப் பார்த்து அந்த சாமியாருக்குத் துணியெல்லாம் துவைத்துப்போட ஆரம்பித்தேன். அதன் மூலம் பழக்கம் நெருக்கமானது. அதை வைத்து புஸ்தகங்கள் கேட்டேன். இருநூறு பக்க புஸ்தகத்தை கொடுத்துவிட்டு மறுநாளே கொண்டு வந்துவிட வேண்டும் என்பார். இரவெல்லாம் கண்விழித்துப் படித்தாலும் 100 பக்கம்தான் படிக்க முடியும். இருந்தாலும் மறுநாள் நான் சொன்ன மாதிரியே தவறாமல்கொண்டுபோய்க் கொடுத்துவிடுவேன். ``என்னடா படிச்சுட்டீயா'' என்று கேட்பார். ``இல்ல.. சாமி... கொஞ்சம் பாதிதான் படிச்சேன். நீங்கதான் உடனே திருப்பி எடுத்துக்கொண்டுவான்னு சொன்னீங்களே''ன்னு பதில் சொல்லுவேன்.``சரி, கொண்டுபோய் படிச்சிட்டு கொண்டுவா''ன்னு சொல்லுவார். இந்த இடத்தில் இன்னொரு பியூட்டி என்னவென்றால், விவேகானந்தரை படிச்சா கடவுளைப் பார்க்கலாம்னு திருக்கழுக்குன்றத்துல இருக்குற சாமியார் ஒருத்தர் சொன்னார் என்று உடனே அவரைப் பார்க்கப் போனேன். போய் ``சாமீ நானும் விவேகானந்தரையெல்லாம் படிச்சிருக்கேன். நீங்க ஏதோ கடவுளை எல்லாம் பார்க்குறீங்கன்னு கேள்விப்பட்டேன்'' என்றதும் அவர் ``நான் தினம் கடவுளைப் பார்க்கிறேன்'' என்றார். ஒரு நாள் விடாமல் தொடர்ந்து அவரைப் பார்க்கப் போனேன். அவரும் கடவுளை காண்பிக்கிறேன். கடவுளை காண்பிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். எனக்கு கோபம் வந்துவிட்டது. இவர் ஏதோ திருடன் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டு ``சாமீ... நான் தொடர்ந்து ஒரு வருஷமா வர்றேன். நீ கடவுளையே காண்பிக்க மாட்டங்குற'' என்றேன். உடனே அவர் ``இன்னைக்கே என்னோட உயரத்துக்கு உன்னால வர முடியுமா?''ன்னு கேட்டார். அப்போது எனக்கு அது புரியவில்லை. பிற்பாடு அந்த வார்த்தைக்குள் இருக்கும் வேறு அர்த்தம் பிடிபட்டது. சரி, மடத்தில் இருந்த சாமியார் கதைக்கு வருவோம். அப்படி துணி துவைத்து போட்டுவிட்டு புஸ்தகம் வாங்கிக் கொண்டிருந்த சாமியிடம் ``இவ்வளவு பெரிய புஸ்தகமா இருக்கு சாமீ... ஒரு நாலு அஞ்சு நாளு டைம் கொடுங்களேன்''னு கேட்டேன். ``உனக்கு என்னடா புரியும் இதுல'' என்றார் அவர். நான் கேட்டேன் ``நீங்க படிச்சு இருக்கீங்களா சாமீ'' என்றேன். ஒரு வாரம் டைம் கொடுத்தால் உங்க துணியை துவைப்பேன். இல்லையின்னா நான் வரவேமாட்டேன் என்றதும் சரி என்று ஒத்துக் கொண்டார். இப்படி புஸ்தகம் படிப்பதற்காக எவ்வளவோ காரியங்களைச் செய்திருக்கிறேன்.எங்கள் பேராசிரியர் சஞ்சீவி தமிழரசு கழகத்தைச் சேர்ந்தவர். மா.பொ.சி.யின் கட்சியைச் சேர்ந்தவர். அவருடைய அரவணைப்பின் பேரில் நிறைய புஸ்தகங்களை நூலகத்திலிருந்து எடுத்துப் படித்தேன். காஞ்சிபுரத்தில் படிப்பை முடித்துக் கொண்டு மெட்ராஸுக்கு குடிபெயர்ந்தோம். இங்கு வந்ததும் பச்சையப்பன் கல்லூரியில் பி.காம். சேர்ந்தேன். அப்போது முரசொலி மாறன், நாஞ்சில் மனோகரன் பி.ஏ. ஆனர்ஸ் கடைசி ஆண்டு மாணவர்கள். இங்கு வந்ததும் அதே மாதிரி லைப்ரரியே கதி. அப்போது எல்லாம் லைப்ரரியில் டிக்கெட் கொடுப்பார்கள் இல்லையா? அதில் பிகாம் என்று போட்டிருக்கும். ஆனால் நான் இங்கிலீஷ் லிட்ரேச்சர் புத்தகத்தைக் கேட்பேன். அங்கிருந்த செங்கல்வராயன் நாயுடு என்ற லைப்ரரியன் ``நீ பிகாம்தானடா படிக்குற? அப்புறம் எதுக்கு இங்கிலீஷ் லிட்ரேச்சர் புத்தகம் கேட்கிற?'' என்று கொடுக்கமாட்டார். எப்படியாவது புத்தகம் வாங்கியாக வேண்டுமே? உடனே அவருக்கு ஏதாவது எடுபிடி வேலை செய்வேன். அப்படிப் படிப்பதில் பெரிய ஈடுபாடு. அதற்காகத்தான் இந்த எடுபிடி வேலையெல்லாம். அந்த நேரத்தில்தான் கன்னிமரா லைப்ரரி என்று ஒன்று இருக்கிறது, மிகப் பெரிய லைப்ரரி என்று கேள்விப்படுகிறேன். 1954ல் உள்ளே போகிறேன். கேள்விப்பட்டது போலவே எங்கு பார்த்தாலும் ஒரே புஸ்தகம். கல்லூரி லைப்ரரியில் உள்ளே விடவில்லை. ராமகிருஷ்ண மடத்தில் உள்ளே விடவில்லை. ஆனால் கன்னிமராவில் கடல் போல புஸ்தகங்கள். உள்ளே போய் தாராளமாக படி என்று இஷ்டத்திற்கு திறந்துவிட்டார்கள். ஒரே ஆச்சர்யம். சந்தோஷம் தாளமுடியவில்லை.கன்னிமராவில் உறுப்பினராக வேண்டுமென்றால் அந்தக் காலத்தில் கவுன்சிலர்தான் ரெக்கமென்ட் செய்ய வேண்டும். அன்று இதுதான் விதி. திறந்துவிட்டும் அனுபவிக்க முடியவில்லை. ஒருமாசம் அவதிப்படுகிறேன். எங்கள் மாமா மூலமாக லக்ஷ்மணன் முதலியார் என்று ஒரு ஜட்ஜ்கிட்ட போய் கையெழுத்து வாங்கினேன். அவர்தான் எம்.ஆர்.ராதா வழக்கை விசாரித்தவர், தீர்ப்பு அளித்தவர். தமிழ்நாட்டில் ஒரு லைப்ரரியில் உறுப்பினர் ஆக இவ்வளவு சிக்கல்கள். ஆனால் 2005_ல் லண்டன் போனேன். அங்குள்ள லைப்ரரிக்கு உள்ளே போய் புஸ்தகம் கேட்டால் `உங்களுக்கு வங்கிக் கணக்கு இருக்கிறதா?'' என்றார்கள். ``இல்லை. என்னுடைய மகன் இங்கே வேலை செய்கிறான். நான் அவனைப் பார்க்க இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன்' என்றதும் ``இப்போது கையில் பாஸ்போர்ட் வைத்திருக்கிறீர்களா?'' ``இல்லை'' என்றதும், ``உங்கள் மகனின் வருமான வரி எண் தெரியுமா?'' என்றார்கள். ``தெரியாது'' என்றேன். `சரி, வீட்டிற்குச் சென்றதும் ஈமெயிலில் அனுப்புங்கள் முகவரி கொடுத்துவிட்டு எடுத்துக் கொள்ளுங்கள்' என்றார்கள். `எத்தனை புஸ்தகங்கள் எடுக்கலாம்' என்று கேட்டதற்கு `எத்தனை புஸ்தகம் எடுக்கப் போகிறீர்கள்' என்கிறார்கள். `நான் 19 புஸ்தகம்' என்றதும் `சரி' எடுத்துக் கொள்ளுங்கள் என்று சர்வசாதாரணமாக சொல்லிவிட்டார்கள். இதுதான் பிரிட்டீஷ்காரனின் அணுகுமுறை.
தீராநதி : 2005-ல் இந்த மாதிரியான ரூல்ஸ் அங்கு இருந்தது என்பது வாஸ்தவம். ஆனால் ஒரு முப்பது நாற்பது வருடங்களுக்கு முன் அங்கு இதே விதிமுறை இருந்திருக்குமா?
கி.அ. சச்சிதானந்தம் : ஆமாம். 1960-ம் ஆண்டு கூட இதே ரூல்ஸ்தான் இருந்திருக்கிறது. அங்கிருக்கும் லைப்ரரியிலிருந்து திருடி வந்து புஸ்தகத்தை வெளியில் விற்க முடியாது. யாரும் வாங்கமாட்டார்கள். நூலகத்திலேயே பத்து சதவீத புஸ்தகங்கள் ஆண்டுக்கு திருடு போய்விட்டால் நல்லதென்று நினைக்கிறார்கள். ஏனென்றால் அவ்வளவு புஸ்தகங்களை பராமரிப்பது கஷ்டமாக இருக்கிறது என்பதால். அவர்களுக்கு இடநெருக்கடி. அவர்கள் லைப்ரரியில் ஒரு பெரிய பெட்டி வைத்திருப்பார்கள். கம்ப்யூட்டரில் ஒரு வருடத்திற்கு மேலாக யாரும் எடுத்து என்ட்ரி போடாமல் இருக்கும் புஸ்தகத்தை தூக்கி அந்தப் பெட்டியில் போட்டுவிடுவார்கள். நீங்கள் விரும்பிய தொகையை கொடுத்துவிட்டு உங்களுக்கு தேவையான புஸ்தகத்தை எடுத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் புஸ்தகங்கள் புதியதாக நூலகத்திற்குள் வருகிறது.தீராநதி : சரி, உங்களுக்கு சி.சு. செல்லப்பாவுடன் எப்படி பழக்கம் ஏற்பட்டது? கி.அ. சச்சிதானந்தம் : போஸ்டல் ஆடிட்டில் வேலை கிடைத்தது. ரொம்ப சௌகர்யமான வேலை. ஒரு நாளைக்கு ஆயிரம் மணியார்டரை செக் பண்ணிவிட்டால் போதும். பக்கத்திலுள்ள கன்னிமரா லைப்ரரிக்குப் போய்விடுவேன். அலுவலகத்தில் என்னை யாராவது தேடினால் உடனே லைப்ரரிக்குத்தான் வருவார்கள். யானைக்கால் அய்யங்கார் என்ற ஒருத்தர் போஸ்டல் ஆடிட்டில் இருந்தார். அவர் சில புஸ்தகங்களை அறிமுகம் செய்தார். ஒரு நாள் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் `முரசொலி' அலுவலகத்திற்குப் பக்கத்திலுள்ள பெட்டிக் கடையில் `எழுத்து' என்று ஒரு பத்திரிகை அழுக்கு கலரில் தொங்கிக் கொண்டிருந்தது. அப்போது (1959-60) அரை ரூபாய் இருந்தது. அதன் பிறகு 25 காசு. அப்புறம் 50 காசு. அந்தப் பத்திரிகையை ஒன்று வாங்கிப் புரட்டிப் பார்த்தால் `புதுக் கவிதை' என்று போட்டிருந்தது. அதற்கு முன் வால்ட் விட்மன் எல்லாம் ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன். இதுமாதிரி யாரும் ஏன் தமிழில் எழுதவில்லை என்று யோசித்திருக்கிறேன். `எழுத்து' பத்திரிகையில் புதுக்கவிதை என்று இருந்ததை `படித்தபோது ஒரே மகிழ்ச்சி. உடனே அலுவலகத்தில் இருந்த ஆபீஸ் பாயைக் கூப்பிட்டு' 19ஏ பிள்ளையார் கோவில் தெருவில் இருக்கின்ற `எழுத்து' ஆபீஸுக்குப் போய் பழைய மாத `எழுத்து', புதிய மாதத்திற்கான `எழுத்து' என்று எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டுவா' என்று சொல்லி அனுப்பினேன். அவன் போய் பார்த்துவிட்டு அங்கே யாரும் இல்லை சார். அவர் பத்திரம் எழுதுறவர் சார் என்று திரும்பிவிட்டான். மறுநாள் நான் திரும்பவும் சொல்லி பத்திரிகையை எடுத்துக் காண்பித்து அனுப்பி வைத்தேன். போனவன் சில பழைய `எழுத்து' இதழ்களை வாங்கி வந்தான். சில நாள் கழித்து ஜப்பானிய சிறுகதை ஒன்றை மொழிபெயர்த்து கையில் எடுத்துக் கொண்டு செல்லப்பாவை பார்க்கப் போனேன். கீழே அவரது மனைவி நின்று கொண்டிருந்தார். `செல்லப்பா என்று ஒருவர் இங்கே இருக்கிறாரா?' என்றேன். `மேலே இருக்கார் போக' என்றார். உள்ளே போனால் சின்ன ரூம். விளக்கை போட்டுக் கொண்டு ஜன்னலுக்குப் பக்கத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார். ஆபீஸ் பாயை அனுப்பி புஸ்தகம் வாங்கியதைச் சொல்லி அறிமுகம் செய்துகொண்டேன்.. சரி, என்று உட்காரச் சொன்னவர் பேச ஆரம்பித்தார். மாலை நான்கு மணிக்கு உள்ளே போனேன். இரவு பத்து மணிக்குதான் வெளியே வந்தேன். நான்-ஸ்டாப்பான பேச்சு. புதுமைப்பித்தன், டி.எஸ்.எலியட் என்று அது இது என்று பேசிக்கொண்டே இருந்தார்.``சார்... நான் ஜப்பானிய சிறுகதை ஒன்று மொழிபெயர்த்திருக்கிறேன். முதலில் நீங்கள் படித்துப் பாருங்கள்'' என்று கொடுத்துவிட்டு வந்தேன். உடனே அதை அடுத்த இதழில் போட்டுவிட்டார். Lifeல் வந்த கதை அது. அதைத்தான் நான் மொழிபெயர்த்திருந்தேன். ரொம்ப நல்ல கதை. இப்படித்தான் செல்லப்பாவுடன் நட்பு உண்டானது. கடம்பட்டு ராமகிருஷ்ணன் என்று ஒரு மலையாளக் கவிஞர். அவனும் நானும் ஏ.ஜி.எஸ். ஆபீஸில் சக ஊழியர்கள். நான்தான் அவனின் முதல் ரசிகன். சில மாதங்களுக்கு முன்னால்தான் இறந்துபோனான். மகா குடிகாரன். காலை பத்து மணிக்கே இரவில் தான் எழுதிய கவிதையை எடுத்துக்கொண்டு வந்து ஆபீஸில் என் நாற்காலி பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு ராகம் போட்டு படிப்பான். எங்கள் செக்ஷனின் கோபால நாயர் என்று ஒரு அதிகாரி இருந்தார். அவருக்கு ராமகிருஷ்ணன் கவிதையை படிக்க ஆரம்பித்தால் கடுகடுவென்று கோபம் வந்துவிடும். ``இனிமேல் ராமகிருஷ்ணனை உள்ளேவிட்டாய் என்றால் உன் வேலை போய்விடும்'' என்று `என்னிடம் சொல்லிவிட்டு போய்விட்டார். ராமகிருஷ்ணன் என்னிடம் வை.கோவிந்தன் என்று ஒருத்தர் இருக்கிறார். `சமிக்ஷா' என்று ஒரு பத்திரிகை நடத்திக் கொண்டிருக்கிறார். நீ அவரைச் சந்திக்க வேண்டும்' என்று என்னை சித்ரா டாக்கீஸ் (இன்று மௌண்ட்ரோடில் பாட்டா செருப்பு கடை இருக்கும் இடம்) இருந்த இடத்திற்குப் பின்னால் கூவம் பாலத்தைத் தாண்டி இருந்த அவரது அலுவலகத்திற்கு அழைத்துக் கொண்டு போனான். கடம்பட்டு ராமகிருஷ்ணன் வெறும் டீ, பீடியைக் குடித்துவிட்டு எவ்வளவு தூரம் வேண்டும் என்றாலும் நடந்தே போய்விடுவான். அன்றைக்கும் ``நீ மாடிக்கு மேலே போ... நான் பின்னால் பீடி அடித்துவிட்டு வந்துவிடுகிறேன்'' என்று சொல்ல நான் மேலே போனேன். ஒருவர் ஆணி அடித்துக் கொண்டிருந்தார். அவரிடம் கோவிந்தன் இருக்கிறாரா என்றதும் கீழே இறங்கி அறையின் உள்ளே போனவர், `என்ன விஷயம்' என்றார். அவரைப் பார்க்க வேண்டும் என்றதும் `நான்தான் கோவிந்தன்' என்றார். பார்த்த மாத்திரத்திலேயே அவரின் எளிமை எனக்குப் பிடித்துப் போய்விட்டது. அவர் நடத்திய `சமிக்ஷா'வில் நான் எழுதிக் கொடுத்தவற்றை அவர் வெளியிட்டார். நான் எழுதி முதல்முதலாக காசு கிடைத்தது அவரது பத்திரிகையில்தான். கல்கத்தாவிற்குச் சென்று நான் திரும்பிய அனுபவத்தை வைத்து `கல்கத்தா டைரி' என்று ஒரு கட்டுரை எழுதினேன். அதை அவரே மொழிபெயர்த்து `சமிக்ஷா'வில் வெளியிட்டார். ரொம்ப அருமையான கட்டுரை அது. நான் மௌனி பற்றி எழுதிக் கொடுத்தேன். அதையும் வெளியிட்டார்.வை.கோவிந்தனைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் அவர் ஒரு சாக்ரடீஸ். அவர் வீட்டில் தகழியைப் பார்த்திருக்கிறேன், வைக்கம் முகம்மது பஷீரைப் பார்த்திருக்கிறேன். காரு. நீலகண்டபிள்ளை, ஆனந்தன், இயக்குநர் அரவிந்தன், அடூர் கோபாலகிருஷ்ணன் எல்லாம் வருவார்கள். அவர் உயிரோடு இருக்கின்ற வரை மெட்ராஸில் இலக்கியக் கூட்டம் போட்டார். அங்கு எல்லா மொழிக்காரர்களும் பங்கு கொள்வார்கள்.
தீராநதி : கூட்டத்தை எந்த இடத்தில் போடுவார்?
கி.அ. சச்சிதானந்தம் : மகாஜன ஹாலில்தான் போடுவார். ஆனந்தகுமாரசாமி வந்து பேசிய இடம் அது. பாரதியார் பேசிய இடம். முதன் முதலாக ஆல் இண்டியா ரைட்டர்ஸ் மாநாடு நடத்தியவர் அவர்தான். அதில் செல்லப்பா, க.நா.சு. மௌனி, நகுலன் எல்லாம் கலந்து கொண்டிருக்கிறார்கள். தினமும் செல்லப்பா வீட்டிற்குப் போவேன், இல்லையென்றால் கோவிந்தன் அலுவலகத்திற்குப் போவேன். இந்த இடம்தான் கதியென்றுகிடப்பேன். அதே போல தி.ஜானகிராமனும் இலக்கியக் கூட்டங்கள் போடுவார். அப்போது அவர் சென்னையிலுள்ள ஆல் இண்டியா ரேடியோவில் வேலை பார்த்தார். ஜானகிராமன் போடும் இலக்கியக் கூட்டத்திற்கு செல்லப்பாதான் என்னை முதன் முதலில் அழைத்துக் கொண்டு போனார். ஜானகிராமன் தான் எழுதும் கதைகளைப் பற்றி செல்லப்பாவிடம்தான் அடிக்கடி அபிப்ராயம் கேட்பார். ஜானகிராமனின் சில கதைகள் சம்பந்தமாக செல்லப்பா வெளிப்படையான அறிவுரைகள் சொல்ல இருவருக்குக் கருத்து வேறுபாடுகள் வந்துவிட்டதால், அதற்குப் பிறகு கூட்டத்திற்குப் போவதை செல்லப்பா நிறுத்திக் கொண்டார். அப்படி கருத்து வேறுபாடுகள் வருவதற்கு முன்பாகவே என்னை ஜானகிராமனுடன் அறிமுகப்படுத்திவிட்டார் செல்லப்பா. நான் மட்டும் தனியாக கூட்டத்திற்குப் போக ஆரம்பித்தவுடன் செல்லப்பாவிற்கு வருத்தம் வந்துவிட்டது. க.நா.சு. மட்டும்தான் அந்த விஷயத்தில் பெருந்தன்மையானவர். ``நீ எந்த ஆளிடமாவது போ. எனக்கு கவலை இல்லை'' என்று சொல்வார். தனக்கு சிஷ்யனே வேண்டாம் என்று நம்பியவர் அவர். நான் செல்லப்பாவிடம், ``சார் ஜானகிராமன் கூட்டத்திற்குப் போகலாமா?'' என்று கேட்டேன். உடனே காச்சுமூச்சு என்று கத்திவிட்டார். ஒவ்வொரு முறையும் செல்லப்பாவிடம் எப்படியாவது சண்டையே இல்லாமல் சமாதானமாகிவிடவேண்டும் என்றுதான் அவர் வீட்டுக்குப் போவேன். ஏதாவது பேச புது சண்டை வந்துவிடும். ``சார்... அவர் கொடுக்கின்ற பலகாரம் நன்றாக இருக்கிறது. அதற்காகவாவது போகலாமே?'' என்றதும் கடுங்கோபம் வந்துவிட்டது அவருக்கு. அதோடு நிற்காமல் ``சார்.. அவர் பொண்ணு ரொம்ப நல்லா அழகா இருக்கு. அதைப் பார்க்கவாவது போகக் கூடாதா?'' என்றும் கேட்டுத் தொலைத்துவிட்டேன் ``உனக்கு என்ன வயது? எனக்கு என்ன வயசு? இதெல்லாம் என்கிட்ட பேசலாமா நீ?'' என்று முறைத்தார். ஜானகிராமன் கூட்டத்திற்கு போட்டியாக `எழுத்து' கூட்டம் என்று செல்லப்பா தன் வீட்டில் கூட்டம் போட்டார். அங்குதான் பிரமிள், வெங்கட்சாமிநாதன், ந. பிச்சமூர்த்தி, ந.முத்துசாமி, சி.மணி, வி.து. சீனிவாசன் _ இவர்தான் என் குரு. எம்.ஏ. ஃபிலாஸஃபி படித்தவர். அவரோட வாழ்க்கையை எழுதினாலே ஒரு நாவலாயிடும். அவ்வளவு பெரிய அறிவாளி. அதே அளவுக்கு சொந்த வாழ்க்கையில் தோற்றுப் போனவர். பிறகு இவர்களுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தேன். இந்தக் காலகட்டத்தில்தான் இலங்கையிலிருந்து தர்மு சிவராமு `எழுத்து, பத்திரிகைக்கு நிறைய கடிதங்கள் எழுதினான். என்னிடம் அதே போல எழுதிய முந்நூறு லெட்டர்கள் இன்னும் இருக்கிறது. தர்மு சிவராமு என்பவனை அதுவரை இந்த ஊர் ஆள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். தமிழ் உரைநடைக்கு தர்மு சிவராமுதான் புதிய கோணத்தைக் கொடுத்தான். அதை நீங்கள் மறுக்கவே முடியாது. என்னைக்கூட எவ்வளவோ திட்டி எழுதி இருக்கிறான். அது முக்கியமில்லை. சிவராமுவின் உரைநடை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவனின் கவிதைகளில் எல்லாம் எனக்குப் பிடிக்காது.அந்தக் காலத்தில் பாஸ்கரன் என்று ஒருத்தர் இருந்தார். சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் துறை அதிகாரியாகப் பணிபுரிந்தவர். பேராசிரியர். ரொம்பத் திமிர் பிடித்தவர். ஆனாலும் பெரிய படிப்பாளி. அவர் ஒரு நாள் செல்லப்பாவிடம் வந்து ``ஹு இஸ் தட் ஃபிலோ தர்மு சிவராமு? இஸ் ரைட்டிங் வெரி குட் மேன்'' என்று சொல்லி, அவனுடைய எழுத்துக்களை நிறைய வெளியிட்டு அவனை உற்சாகப்படுத்து'' என்று சொல்லி ஒரு தொகையைக் கொடுத்துவிட்டு போய்விட்டார். நான் செல்லப்பாவிடம், ``யாரு சார்... இந்த ஆள். ரொம்ப நல்லா எழுதுறானே?'' என்று கேட்டேன். இப்போதும் எழுத்தில் வந்த சிவராமுவின் எழுத்துகளை வாசித்தீர்கள் என்றால் ரொம்ப பிரமாதமாக இருக்கும். புதிய ஸ்டைலில் எழுதி இருப்பான். அந்த புதிய பாணி உரைநடையை எழுதிய பிரமிளுக்கு அன்றைக்கு வயது என்ன தெரியுமா வெறும் 19. செல்லப்பாவிடம் கேட்டதற்கு அவர், ``அவன் இந்த ஊர்க்காரன் இல்லப்பா... சிலோன்காரன்'' என்று சொன்னார். ஒருநாள் காலை நான் ஆபீஸுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தபோது செல்லப்பா ஒருவரை என் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்தார். ``இவன்தான் தர்மு சிவராமு'' என்று அறிமுகப்படுத்தினார். அவன் பேசிய தமிழே எனக்குப் புரியவில்லை. வந்தவன் ``ரொம்ப பசியா இருக்கு'' என்றதும் காபி கொடுக்கச் சொன்னேன். உடனே அவன் ``எனக்கு காபி எல்லாம் பிடிக்காது பால்தான் சாப்பிடுவேன்'' என்றான். சரியென்று பால் கொடுத்தேன்.
என் வீட்டில் ழீன்பால் சார்த்தரின் `ஜெயின்ட் ஜெனே' என்று ஒரு பெரிய புத்தகம் இருந்தது. அதைப் பார்த்ததும் சிவராமு ``இது உனக்குப் புரியுதா?'' என்றான். எனக்கு ஒரே கோபம், தம்மாத்துண்டு பையன் இவன் நம்மிடம் ரொம்பத் திமிரா பேசுறானே என்று. இப்படியே பழக்கமாகி பிறகு என் வீட்டிலேயே சில காலம் தங்கியும் இருந்தான். அது இருக்கட்டும். `எழுத்து' எதற்கு தொடங்கப்பட்டது என்று தெரியுமா உங்களுக்கு?`சுதேசமித்திரன்' என்ற பத்திரிகையின் தீபாவளி மலரில் ஒரு விவாதம், சிறுகதை வளர்ந்திருக்கிறதா? இல்லையா? என்று. அதில் சி.சு. செல்லப்பா `வளரவில்லை' என்று ஒரு கட்டுரை எழுதிக் கொடுத்தார். அவர்கள் போடமாட்டேன் என்று மறுத்துவிட்டார்கள். அப்போதுதான் செல்லப்பா முடிவு பண்ணினார். ஏற்கெனவே செல்லப்பாவுக்கு பத்திரிகை அனுபவமுண்டு. க.நா.சு. சந்திரோதயம், சூறாவளி என்று பத்திரிகைகள் நடத்திக் கொண்டிருந்தார். அதில் சி.சு. செல்லப்பா உதவி ஆசிரியராக இருந்திருக்கிறார். முதன் முதலாக `வாடி வாசல்' சந்திரோதயம், சூறாவளியில்தான் வெளிவந்தது. அதற்கு முன்னால் `சுதந்திர சங்கு' என்று ஒரு காந்திய பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. அதில்தான் செல்லப்பாவின் முதல் சிறுகதை வெளிவந்தது. சங்கு சுப்பிரமணியன் தான் அதன் ஆசிரியர். அவர் எழுத்தாளர்களை ஊக்குவித்து வந்தார். அவர் எப்படி கதை எழுத வேண்டும் என்றெல்லாம் `வகுப்பெடுத்துக்' கொண்டிருந்தார். அதற்கு செல்லப்பா போவார். செல்லப்பாகூட சுதந்தர சங்குவில்தான் நான் பிறந்தேன் என்று எழுதி இருக்கிறார். க.நா.சு. சிட்டி, பி.எஸ். ராமய்யா போன்ற மணிக்கொடி நண்பர்கள் கூடி செல்லப்பாவை `எழுத்தை' ஆரம்பி, நாங்கள் அதில் எழுதுகிறோம் என்றார்கள். உடனே செல்லப்பா `எழுத்து'வைத் தொடங்கினார்.
தீராநதி : நாம் தர்மு சிவராமு சம்பந்தமாகப் பேசிக் கொண்டிருந்தோம். அதைவிட்டு நகர்ந்து போய்க் கொண்டிருக்கிறோம்.
கி.அ. சச்சிதானந்தம் : சிவராமு சிதம்பரத்தில் தங்கி இருந்தான். தமிழ்ப்புத்தாண்டு வருகிறது உடனே நீ புறப்பட்டு வரவும் என்று எனக்கு சிவராமு தந்தி அனுப்பினான். ``மௌனியை உனக்கு அறிமுகப்படுத்துகிறேன். நீ கட்டாயம் மௌனியை பார்க்க வேண்டும்'' என்று சொன்னதால் சிதம்பரத்திற்கு நான் போனேன். அன்றைக்கெல்லாம் சிதம்பரத்திற்குப் போவதென்றால் பெரிய சிக்கல். பஸ்ஸெல்லாம் அடிக்கடி கிடையாது. அப்போது மௌனி தெற்கு ரத வீதியில் குடி இருந்தார். வீரராகவன் தெருவில் அவருடைய அரிசி மில் இருந்தது. அங்குதான் நண்பர்களைத் தங்க வைப்பார் மௌனி. வீட்டுக்கே போய்விடலாம் என்று பிரமிள் சொன்னதால் கொளுத்தும் வெயிலில் குடையை பிடித்துக் கொண்டு மௌனி வீட்டுக்குப் போனோம். போகின்ற வழியில் சிவராமு ``மௌனி ஒரு மாதிரியான ஆளு. சில நேரத்தில் முகம் கொடுத்துப் பேசுவார். சில நேரத்தில் பேசாமல் இருந்தாலும் இருந்துவிடுவார். மௌனி உன்னிடம் பேசவில்லை என்றால், நீ என் மீது கோபித்துக் கொள்ளக்கூடாது'' என்றான். எனக்குக் கோபம் வந்துவிட்டது. ``என்னடா விளையாடுறீயா? நான் வீட்டுக்கே திரும்பிப் போய்விடுகிறேன்'' என்றதும், ``இல்ல... இல்ல.... ஒரு முன்னெச்சரிக்கைக்காக சொல்கிறேன் அவ்வளவுதான் ஆனால் நீங்க வர்றீங்கன்னு அவர்கிட்ட முன் கூட்டியே சொல்லிட்டேன்'' என்றான்.இன்றைக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது எனக்கு. கண் முன்னால் மௌனி நிற்கிறார். கூடத்தில் ஒரு பெஞ்சு போட்டு புஸ்தகத்தை வைத்துக் கொண்டு சட்டை போடாமல் எழுதிக் கொண்டிருந்தார். இவர்தான் மௌனி என்றான் சிவராமு. ``நீ உள்ளே போ நான் திண்ணையிலேயே உட்கார்ந்து இருக்கிறேன்'' என்று சொல்லிவிட்டான். மௌனிக்கு நான்கு பிள்ளைகள். அதில் வசந்தன் என்று ஒருத்தன் இருந்தான். எம்.ஏ., பி.எட் படித்தவன். அவனுக்கு கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்த பிற்பாடு திடீரென்று பைத்தியம் பிடித்துவிட்டது. அவன் திண்ணையில்தான் உட்கார்ந்திருப்பான். யாராவது போனால் மூக்குப்பொடி கேட்பான். வீட்டிற்கு உள்ளே போனவுடனேயே என்னை அவன் (வசந்தன்) மடக்கிவிட்டான். ``தெரியுமா? பக்கத்து தெருவுல பெரிய கொலை நடந்துடுச்சு. போலீஸ்காரன் எல்லாம் வந்துவிட்டான். பெரிய கலாட்டா ஆயிடுச்சு'' என்றான். உடனே மௌனி ஓடிவந்து என்னை அழைத்துக் கொண்டு உள்ளே போய்விட்டார். கொலை நடந்ததாக அவன் சொன்னது பத்து வருடத்திற்கு முந்தி நடந்த கதை. அந்தக் கதையை என்னிடம் அவன் நேற்று நடந்தது மாதிரி சொல்கிறான். மௌனியைப் பார்த்தவுடனேயே எனக்குப் பிடித்துபோய்விட்டது. எப்படி செல்லப்பாவைப் பார்த்தவுடன் எனக்கு பிடித்ததோ அதேபோல்.``சரி, நீங்க நேத்து ராத்திரி வர்றன்னு சொன்னீங்க. ஏன் வரலை?'' என்றார். காத்துக் கொண்டிருந்து இருக்கிறார். அவர். நான் அவரிடம் ``சார்.. எங்க அப்பா இங்க இருக்குற அண்ணாமலை காலேஜுலதான் பி.ஏ. படிச்சாரு'' என்று சொன்னேன். ``அப்போ மீனாட்சி காலேஜுன்னுதானே இதுக்குப் பேரு?'' என்றார். ``ஆமாம்... பி.ஏ. ஃபிலாஸஃபிதான் சார் படிச்சிருக்கார்'' என்றேன். உடனே. தங்கு தடையில்லாமல் பேசிக் கொண்டே இருந்தார். அன்றையிலிருந்து தர்மு சிவராமு அவரை விட்டுவிட்டான். நான் அவரைப் பிடித்துக் கொண்டேன். தர்மு சிவராமுக்கும் மௌனிக்கும் பெரிய சண்டையே நடந்தது. அது ஒரு பெரிய கதை.
தீராநதி : அவர்கள் இருவருக்கும் என்ன கருத்து முரண்பாடு?
கி.அ. சச்சிதானந்தம் : திரிகோணமலையில் இருந்த தன்னுடைய வீட்டை விற்றுவிட்டான் சிவராமு. அந்தக் காலத்தில் சிலோனிலிருந்து இந்தியாவிற்கு பணத்தைக் கொண்டு வருவது ரொம்ப கஷ்டம். அதனால் மௌனியிடம் ``சார் உங்க பேங்க் அக்கவுண்ட்டுக்கு அனுப்புகிறேன். நீங்கள் எனக்கு எடுத்துக் கொடுத்துவிடுங்கள்'' என்றான். அவர் ``அதெல்லாம் சட்டவிரோதம். நான் வருமானவரி கட்டுகிறேன். அதுவெல்லாம் சரிப்பட்டு வராது என்று மறுத்துவிட்டார்.'' அதெல்லாம் சிவராமு புரிந்து கொள்ளமாட்டான். அதே போலதான் நானும் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டேன்.
தீராநதி : நீங்கள் என்ன சிக்கலில் மாட்டிக் கொண்டீர்கள்?
கி.அ. சச்சிதானந்தம் : ஒருநாள் ஏதோ பேச்சு வருகின்றபோது என்னுடைய `வீசா' முடிவடைந்துவிட்டது. அதைப் புதுப்பித்துத் தர வேண்டும் என்றான். கிருஷ்ணன்மேனன் என்று ஒருத்தர் எனக்குத் தெரிந்தவர் இருந்தார். புகழ் வாய்ந்த மனநோய் மருத்துவர் சாரதாமேனனின் வீட்டுக்காரர்தான் அவர். அவரிடம் ``இவர் ஒரு எழுத்தாளர். இவருடைய வீசா முடிவடைந்துவிட்டது. கொஞ்சம் நீங்கள் உதவி செய்ய வேண்டும்'' என்று உதவி கேட்க ``சரி, வரச் சொல்'' என்றார். நானும் சிவராமுவும் போனோம். அவரிடம் பாஸ்போர்ட்டை கொடுத்தேன் வாங்கிப் பார்த்தவர் ``என்னங்க `வீசா' காலம் முடிவடைந்து எட்டு மாதம் ஆகப் போகிறது இப்போது வருகிறீர்களே. சட்டப்படி இது குற்றம்'' என்று கத்த ஆரம்பித்துவிட்டார். சரி என்று வெளியில் வந்ததும் சிவராமுவை நான் திட்டிவிட்டேன். உடனே சிவராமு என்ன செய்தான் தெரியுமா? சிவராமு அந்த விஷயத்தில் ரொம்ப தைரியசாலி. பாஸ்போர்ட்டை கிழித்து எறிந்துவிட்டான். இந்தப் பிரச்னையினால்தான் என் மீது கோபம் அவனுக்கு.அன்றைக்கு எல்லாம் தமிழ்நாட்டில் மதுவிலக்கு இருந்த காலம். சிலோன்காரர்கள் இங்கே வந்தவுடன் என்ன செய்வார்கள் என்றால் தாலுக்கா ஆபீஸ் போய் பர்மிட் வாங்கிக் கொள்வார்கள். பர்மிட் வாங்கிக் கொண்டு மதுபாட்டில் விற்பார்கள். வாழ்க்கைக்குத் தேவையான வருமானம் அவர்களுக்கு இதிலிருந்துதான் கிடைக்கும். ஏதோ யூனிட் அளவு கணக்கில் கொடுப்பார்கள். சிதம்பரம் தாலுக்கா ஆபீஸில் மாதா மாதம் இவனுடைய பாஸ்போர்ட்டை காண்பித்து காண்பித்து சரக்கு வாங்கி விற்பான். தாலுக்கா ஆபீஸில் தங்கி இருக்கின்ற முகவரி கேட்டபோது மௌனியின் அட்ரஸை கொடுத்து இருக்கிறான். மௌனியைத் தேடி போலீஸ்காரன் வந்திருக்கிறான். மௌனி குடிப்பார் ஆனால் இந்த அளவுக்குக் குடிக்கமாட்டாரே என்று சந்தேகப்பட்டு வந்திருக்கிறான். மௌனி சிவராமுவைக் கூப்பிட்டு கேட்டு இருக்கிறார். எந்த அட்ரஸைக் கொடுத்த என்றதற்கு `உன்னுடைய அட்ரஸைத்தான் கொடுத்திருக்கிறேன்' என்று சொல்லி இருக்கிறான். உடனே `வெளியே போடா' என்று சொல்லிவிட்டார். மௌனி ஊரில் பெரிய மனிதர். அரிசி மில் எல்லாம் வைத்திருக்கிறார். அவருடைய பெயர் கெடுவதை அவர் விரும்பவில்லை. அவரும் குடிக்கக் கூடியவர்தான். அவருடைய மூன்றாவது பையன் பெரிய இன்ஜினீயர். கல்யாணமாகி ஒரு வருடம் கூட ஆகவில்லை. எலக்ட்ரிக் ஷாக் விபத்தில் செத்துப் போய்விட்டான். அந்த துக்கத்தில்தான் குடிக்க ஆரம்பித்திருக்கிறார். தர்மு சிவராமுவின் மனநிலை எப்படித் தெரியுமா? யார் அவனுக்கு அதிகமாக உதவி செய்திருக்கிறார்களோ அவரைத்தான் அவன் திட்டுவான். இலங்கையில் இருந்த அவனுடைய வீட்டை பத்தாயிரம் ரூபாய்க்கு விற்றான் என்று வைத்துக் கொண்டால் இந்திய ரூபாயில் ஐயாயிரம் ரூபாய்தான் அவனுக்கு கையில் கிடைத்தது. அதில் பெரிய இழப்பு அவனுக்கு. ஆனால் அவன் அதற்காக கவலையேபடவில்லை. சிவராமு இந்தியா வந்ததே கனடா போவதற்காகத்தான்.தீராநதி: பாரிஸ் போவதற்குத்தானே அவர் இங்கு வந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்!கி.அ. சச்சிதானந்தம் : இல்லை. கனடா போவதற்காகத்தான் இந்தியாவிற்கு வந்தான். அதற்குப் பிறகு பாரிஸ் போவதற்காக பிரெஞ்ச் படித்தான். பிறகு விட்டுவிட்டான். இங்கிலீஷ் நாவல் ஒன்றை எழுதி கனடாவுக்கு அனுப்பினான். ஆனால் அது எதுவும் வேலைக்கு உதவவில்லை.
தீராநதி : பிரமிள் உங்களைப் பற்றி விமர்சித்து நிறைய கவிதைகள் எழுதி இருக்கிறாரே? உங்களுக்கும் அவருக்கும் எதன் பொருட்டு தர்க்கம் நடந்தது?
கி.அ. சச்சிதானந்தம் : அடிப்படையில் நான் ஓர் ஊர் சுற்றி. பிரமிள் ஊர் சுற்றுவதையே விரும்பாதவன். ரூமுக்குள்ளேயே அடைஞ்சிகிடப்பான். நான் 1974 வாக்கில் வீட்டில் சொல்லாமல் கொள்ளாமல் நேபாளுக்கு சென்று ஆறு மாதம் தங்கி இருந்தேன். மௌண்ட், எவரெஸ்ட் என்று சுற்றினேன். அப்படிப் போய்விட்டு வந்ததும் அவனிடம் ``எவரெஸ்ட் மலைக்கு முதன் முதலில் தமிழ்நாட்டிலிருந்து நான்தான் போயி இருக்கிறேன்'' என்றேன். அதற்கு அவன் ``இதுவெல்லாம் ஒரு சாதனையா?'' என்று கேலி பேசினான். நீங்கள் சொல்வதைப் போல நிறைய கவிதைகளில் என்னைத் திட்டி எழுதியிருக்கிறான். பலமுறை என்னிடம் பணம் கேட்டிருக்கிறான். `வேலை செய்து பணம் சம்பாதி' என்று சொன்னேன். அவனிடம் ``உன்னுடைய உரைநடைதான் நன்றாக இருக்கிறது. உன் கவிதைகள் எனக்கு பிடிக்கவில்லை'' என்று சொன்னேன். அதேபோல விமர்சனத்தையும் நிறுத்திக் கொள் என்றேன். அவன் நிறைய பொய் சொல்வான். அதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். சங்கரலிங்கம் என்று ஒருத்தன் இருந்தான். இலங்கை அகதி அவன். சிவராமு தன்னைத்தானே பேட்டி எடுத்துக் கொண்டு சங்கரலிங்கம் பேட்டிக் கண்டதைப் போல ஒரு பத்திரிகையில் போட்டுவிட்டான். சங்கரலிங்கத்தை உண்மை தெரியாமல் ``யாரோ ஒருவனைத் திட்டுவதற்கு நீ எதுக்கடா அவனை போய் பேட்டி எடுத்தே'' என்று கேட்டேன். அவன் என்ன செய்தான் ``நான் செய்யுல சார்... அவனே கேள்வி எழுதி நான் பேட்டி எடுத்த மாதிரி எழுதிட்டான்'' என்று சொன்னான். நான் தர்முசிவராமுகிட்ட ``என்னடா பெரிய தார்மீகம், ஜே.கிருஷ்ணமூர்த்தி, தத்துவம் என்றெல்லாம் சொல்றீயே இப்படிச் செய்யலாமா?'' என்றேன். உடனே என் மீது அவனுக்கு கோபம் வந்துவிட்டது. அதேபோல சிவராமு இறப்பதற்கு முன்னால் என்னை விமர்சித்து ஏதேதோ எழுதி வெளியிட்டான். என்னுடைய `பீக்காக்' பதிப்பகத்தை `பீ'காக் என்று எழுதினான். அதை `லயம்' சுப்ரமணியன் வெளியிட்டார். உடனே நான் வக்கீல் நோட்டீஸ் அனுப்பிவிட்டேன். பிறகு சுப்ரமணியன் மன்னிப்புக் கேட்டதால் பிரச்சனையை பெரிதாக்காமல் விட்டுவிட்டேன்.இன்னொரு முக்கியமான காரணம் என்னவென்றால், தர்முசிவராமு வை.கோவிந்தனிடம் போக ஆரம்பித்தான். அவரிடம் என்னைப் பற்றியும் ந.முத்துசாமி பற்றியும் நிறைய குறை சொல்லி இருக்கிறான். அவருக்கு கோபம் வந்துவிட்டது. உடனே அவர் சிவராமுவிடம் ``சச்சிதானந்தம் ஒரு மனுஷன். முத்துசாமியும் ஒரு நல்ல எழுத்தாளர். இருவரும் என் நண்பர்கள். இவர்கள் இருவரையும் பற்றி என்னிடம் குறை சொல்வதாக இருந்தால் என் இடத்திற்கு இனிமேல் வராதே!'' என்று கத்திக் கொண்டிருக்க, அந்தச் சமயத்தில் நான் எதேச்சையாக அங்கு சென்றுவிட சிவராமுவுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. உடனே சரசரவென்று இறங்கிவிட்டான். நான் இந்த இடத்தில் என்ன செய்ய முடியும்? அப்படித்தான் ஒருநாள் முத்துசாமி வீட்டில் நான், முத்துசாமி, அவர் மனைவி எல்லோரும் இருக்கின்றபோது முத்துசாமியைப் பார்த்து சிவராமு ``நீங்கள் ஒரு நல்ல சிறுகதை எழுத்தாளர். சிறுகதையில் நீங்கள் பெரிய இடத்திற்குப் போகவிடாமல் உங்களை குடும்பம்தான் நாசம் பண்ணுகிறது. (ஒரு நல்ல எழுத்தாளனுக்கு குடும்பமே இருக்கக் கூடாது என்பது சிவராமுவின் தியரி)'' என்று சொல்லிவிட்டான். முத்துசாமிக்கு நடந்திருப்பதோ காதல் கல்யாணம். கணவன் மனைவிக்குள் நல்ல ஒற்றுமை. உடனே முத்துசாமியின் மனைவி இவனை வீட்டிற்கு வரக் கூடாது என்று சொல்லிவிட்டார். இதனால் இருவருக்குள் பெரிய சண்டை.இந்தச் சமயத்தில்தான் எங்களிடமிருந்து பிரிந்து போய் பெசண்ட் நகரில் குடி இருந்தான். அந்தச் சமயத்தில் அவனுக்கு நரோ ஜெயராமன்தான் நிறைய உதவி செய்தார். நானும் அடிக்கடி போய் பார்ப்பேன். பண உதவிகள் செய்தேன்.
தீராநதி : நீங்கள் எதற்காக `பீக்காக்' என்று தனியாக பதிப்பகம் தொடங்கினீர்கள்?
கி.அ. சச்சிதானந்தம் : `எழுத்து' நின்று போய்விட்டது. அப்போது செல்லப்பாவிடம் ``சார்... நீங்கள் எழுதிக் கொடுங்கள், நான் செலவு செய்து கொண்டு வருகிறேன்'' என்றேன். அப்போது செல்லப்பா வீட்டில் பெரிய வறுமை. தனக்குக் கிடைத்த சுதந்திரப் போராட்ட தியாகி உதவித் தொகையைக் கூட அப்போது அவர் வாங்கமாட்டேன் என்று மூன்று வருடங்கள் உதாசீனப்படுத்திக் கொண்டிருந்தார். அப்புறம் நடையாக நடந்து நான் சில உதவிகள் செய்து உதவித் தொகையை வாங்கித் தந்தேன். அப்போதுதான் க.நா.சு. ``செல்லப்பா தியாகி உதவித் தொகையை வாங்கிக் கொண்டு இப்போது ரொம்ப சௌகர்யமாக இருக்கிறார்'' என்று எழுதிவிட்டார். அதனால் பெரிய வாக்குவாதம் வந்தது.செல்லப்பா எழுதுவது எப்படியோ அச்சாகிவிட்டால் பிற்காலத்தில் எப்படியும் காப்பாற்றப்பட்டுவிடும் என்பதால் நான் அவரை வற்புறுத்தி எழுதுங்கள் என்றேன். உடனே ``தமிழ் சிறுகதை பிறக்கிறது ஏற்கெனவே வெளிவந்தது இருக்கிறது. அதைச் சில திருத்தங்கள் செய்து மாற்றித் தருகிறேன், நீங்கள் போடுங்கள்'' என்றார். சி.மோகன் `க்ரியா'விடம் கருத்துவேறுபாடாகி தனியாகச் சென்று `மிதிலா அச்சகம்' என்று ஒன்றை ஆரம்பித்தார். என் வீட்டு மாடியில்தான் `க்ரியா' பதிப்பகம் அப்போது இருந்தது. அதன் மூலம் எனக்கு சி.மோகனை ஏற்கெனவே தெரியும். அவரிடம் சென்று கேட்டேன். அவர் ``பேப்பர் செலவுக்கு மட்டும் முதலில் பணம் தந்துவிடுங்கள், அச்சுச் செலவை வேண்டுமென்றால் பிறகு வாங்கிக் கொள்கிறேன்'' என்றார். அப்படி உருவானதுதான் `பீக்காக்' பதிப்பகம்.
தீராநதி : ஆனந்தகுமாரசாமி பற்றிய ஆய்வாளர்களில் அல்லது அவரின் பங்களிப்பைப் பற்றிய தகவல்களைப் பேசுபவர்களில் இந்திய அளவில் நீங்கள் குறிப்பிடப்படும்படியான நபராக இருக்கிறீர்கள். அவரின் பங்களிப்பைப் பற்றிப் பேசுங்களேன்?
கி.அ. சச்சிதானந்தம் : முதன் முதலில் ஆனந்தகுமாரசாமியை நான் படிக்க ஆரம்பித்ததே நான் ஊர் சுற்றத் தொடங்கிய போதுதான். இந்திய அளவில் முக்கியமான ஸ்தலங்களுக்குச் செல்லும்போது, அந்த இடங்களை வெறுமனே பார்த்துத் திரும்பாமல் அவற்றை பற்றி உணர்வுபூர்வமான கருத்துபூர்வமான தகவல்களையும் தெரிந்துகெண்டால் இன்னும் ரசிக்கலாம் என்று ஒருவர் சொல்ல, அதற்காக படித்தேன். துரைராஜசிங்கம் என்பவர் ஆனந்தகுமாரசாமியின் நூற்றாண்டுவிழாவையொட்டி ஒரு மலர் வெளியிட அதற்கான விமர்சனம் `ஹிண்டு'வில் வெளியாகி இருந்தது. அதை நான் படித்தேன். அதில் வெளியாகி இருந்த கோலாலம்பூர் முகவரிக்கு ``இந்தப் புஸ்தகத்தை நீங்கள் அனுப்பித் தந்தால் நான் பணம் அனுப்புகிறேன். இல்லையென்றால், எங்கு கிடைக்கும் என்று தகவல் தந்தால் வாங்கிக் கொள்கிறேன்'' என்று ஒரு கடிதம் எழுதினேன்.அப்போது ரிசர்வ் பாங்கின் ஏகப்பட்ட கெடுபிடி. வெளிநாட்டு பண மாற்றம் என்பது சுலபமானதல்ல; அந்த முகவரியிலிருந்து ``முதலில் பணத்தை அனுப்புங்கள். பிறகு புஸ்தகத்தை அனுப்புகிறேன். ஏனென்றால் இந்தப் புஸ்தக விஷயத்தில் பல அனுபவங்களை நான் இந்தியர்களிடமிருந்து பெற்றிருக்கிறேன்'' என்று ஒரு பதில் கடிதம் வந்தது. துரைராஜசிங்கம் என்பவர் ஆனந்தகுமாரசாமியின் பெரிய பற்றாளர். ஆனந்த குமாரசாமியின் எல்லா புஸ்தகத்தையும் அவர் சேகரித்து வைத்திருந்தார். அப்போது நான் திருமணமாகாதவன். 700 ரூபாய் இருந்தால் வாங்கிவிடலாம் என்றதும் உடனே பணம் அனுப்பி வைக்க, புஸ்தகம் வந்து சேர்ந்தது. அன்றிலிருந்து துரை ராஜசிங்கம் நிறைய கடிதங்களைத் தொடர்ந்து எனக்கு எழுத ஆரம்பித்துவிட்டார். ஆனந்த குமாரசாமியின் புஸ்தகங்களை படித்துப் பார்த்ததும் பிடித்துப்போய்விட்டது. உடனே அப்போது இருந்துதான் நான் ஆனந்தகுமாரசாமியின் நூல்களைச் சேகரிக்க ஆரம்பித்தேன். கோவிந்தன் இருக்கிறார் இல்லையா அவர் ஒரு பகுத்தறிவுவாதி. எம்.என். ராயின் குழுவைச் சேர்ந்தவர். அவருக்கு ஆன்மிகம் என்பதெல்லாம் பிடிக்காது. `ஹிஸ்டரி ஆஃப் த இண்டியன் ஆர்ட்' என்ற ஆனந்தகுமாரசாமியின் புஸ்தகத்தை அவருக்கு படிக்கக் கொடுத்தேன். படித்துப் பார்த்த அவர் ``அடடே பெரிய ஆளுய்யா இவன்'' என்று அவரும் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தார்.ஆனந்த குமாரசாமியின் பெரிய பங்களிப்பு எதுவென்றால், இந்தியாவின் கலை மரபுகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவரைத் தவிர வேறு ஆட்கள் யாரும் நம்மிடம் இல்லை. அவரை விட்டுவிட்டு இந்தக் கலைகளை நீங்கள் புரிந்து கொள்ள முடியாது. எப்படி மேற்கத்திய நாடுகள் கிழக்கத்திய நாடுகளை அழித்திருக்கிறது. கிழக்கத்திய நாடுகள் மேற்கத்திய கலாச்சாரத்தை அப்படியே உள்வாங்கிக் கொள்ளக்கூடாது. நமக்கென்று சில மதிப்புகள் இருக்கிறது என்று பிரிட்டீஷ்காரர்களை நோக்கி தன் எழுத்துக்களால் விமர்சித்தார் ஆனந்த குமாரசாமி.`இவன் யாருடா நம்மை விமர்சிக்கிறது?' என்று வெள்ளையர்கள் திரும்பிப் பார்க்கத் தொடங்கினார்கள். ஆனந்த குமாரசாமியின் அம்மா ஆங்கிலேயர். அப்பா தமிழர். இரண்டு வயசு வரைதான் இலங்கையில் இருந்திருக்கிறார். மீதி காலம் முழுக்க லண்டனில் வாழ்ந்தவர். ஆக, இவர் சொல்வதில் ஏதோ அர்த்தம் இருக்கிறதென்று ஆங்கிலேயர்கள் கவனிக்க ஆரம்பித்தார்கள். ஆனந்த குமாரசாமியின் மொழி இருக்கிறதே அது அசல் ஆங்கிலேயனின் மொழி. நாம் எவ்வளவு வேண்டுமென்றாலும் ஆங்கிலத்தில் எழுதலாம், ஆங்கிலேயனின் மொழி நடை என்று ஒன்று இருக்கும் இல்லையா? ஆனந்த குமாரசாமியின் அந்த நடைதான் எல்லா ஆங்கிலேயரையும் இந்திய கலைகள் பக்கம் திருப்பியது.மேலை நாடுகளில் கலை என்றால் அது கலைக்காக மட்டும்தான். ஆனால் இந்தியாவில் கலை என்றால் வெறும் கலைக்காக அல்ல அது. கலைநயம் மிக்க ஒரு பொருள் பயன்பாட்டிற்கான ஒரு பொருளாகவும் இங்கே இருக்கும். ஆக, இந்த வித்தியாசத்தை விளக்கினார். ஆனந்த குமாரசாமியின் முதல் கட்ட எழுத்துக்கள் எல்லாம் வெறும் தகவல்களாகவே இருக்கும். இரண்டாம் கட்ட எழுத்துக்களை எடுத்துக் கொண்டால் விளக்க உரையோடு கூடிய தகவல்களாக இருக்கும். `டான்ஸ் ஆஃப் சிவா'வை எடுத்துக் கொண்டால் வெறும் தகவல்மட்டும்தான் இருக்கும். மூன்றாவது காலகட்டத்தில் அவருக்கு வயதாகி எழுதும்போது ஆன்மிகத் தன்மையோடு வெளிப்பட்டிருக்கும். இந்தக் காலகட்டத்தில் தத்துவத்தில் ஈஸ்ட் வெஸ்ட் என்றெல்லாம் தனித்தனியாக கிடையாது. அந்தக் காலத்தில் `கிழக்கு கிழக்குதான், மேற்கு மேற்குதான். இரண்டும் சேரவே முடியாது' என்ற, நோபல் பரிசு வாங்கிய ஆங்கில எழுத்தாளர் கிப்லிங் கோட்பாட்டை முதலில் உடைத்தவர் ஆனந்த குமாரசாமிதான். இம்பிரியலிஸம் கோலோச்சிய காலத்தில் உடைத்தார். ``நாகரிகமற்ற உலகத்தை நாங்கள் நாகரிகப்படுத்த போகிறோம்'' என்றுதான் அன்றைக்கு இங்கிலீஷ்காரன் வாதிட்டான். இதையெல்லாம் உடைக்கிறார் குமாரசாமி. உலகத்தில் உள்ள பெரிய பெரிய தத்துவவாதிகளின் சிந்தனைகள் எல்லாம் அனுபூதி மட்டத்தில் எல்லாம் ஒன்றே என்ற கருத்திற்கு வந்து சேர்கிறார். இதைச் சொல்வதற்கு ஆனந்த குமாரசாமிக்கு எல்லா தகுதிகளும் உண்டு. செவ்வியல் மொழி என்று சொல்லப்படுகின்ற மொழிகளான தமிழ் அவருக்குத் தெரியும். சமஸ்கிருதம் தெரியும். ஹீப்ரு தெரியும், லத்தின் தெரியும். கிரீக் தெரியும். ஆக, செவ்வியல் இலக்கியங்கள் தத்துவம் என்று சொல்லப்படுகின்ற புஸ்தகங்களையெல்லாம் மூல மொழியிலேயே படித்தவர் அவர்.
தீராநதி : ஆனந்த குமாரசாமியின் தந்தைதானே முத்துக்குமாரசாமி. அவர் இலங்கையில் பெரிய செல்வந்தர் இல்லையா?
கி.அ. சச்சிதானந்தம் : யாழ்ப்பாணத்தில் மிகப் பெரிய பணக்கார தமிழ் சமுதாயத்தில் பிறந்தவர் முத்துக்குமாரசாமி. அந்த தமிழ் சமுதாயம் நல்ல நல்ல காரியங்களை எல்லாம் செய்திருக்கிறது. சிலோன் அரசாங்கத்தில் இவர் ஒரு அங்கத்தினர். சிங்களரை எல்லாம் நீங்கள் மட்டமாக கருதுகிறீர்கள் அவர்களின் கலாச்சாரம் அவ்வளவு தரம் குறைந்ததல்ல என்று இங்கிலாந்தில் முதன்முதலாக இவர்தான் எடுத்துப் பேசுகிறார். அதைப் பேசிவிட்டு சிலோன் திரும்பிய முத்துக்குமாரசாமியை பெரிய தேரில் உட்கார வைத்து சிங்களர்கள் கொழும்பில் ஊர்வலமாக அழைத்துக்கொண்டு போனார்கள்.அந்தச் சமயத்தில் சிங்களர் - தமிழர் பாகுபாடெல்லாம் அங்கு உருவாகவில்லை. தர்மு சிவராமு சொல்லுவான் பண்டார நாயக்கா காலத்திற்கு முன்புவரை சிங்களப் பெண்கள் எல்லாம் மிக மிக அறியாமைவாதிகளாம். தமிழர்களின் நிலப்பரப்பு ரீதியிலான பிரச்சனை என்னவென்றால், அவர்கள் வசித்துக் கொண்டிருந்த பகுதியெல்லாம் நீர் ஆதாரம் இல்லாமல் வறண்ட பூமியாக இருந்திருக்கிறது. தென் இலங்கை அப்போது வளராமல் கிடந்திருக்கிறது. நிலவளம் இல்லாததால் தமிழர்கள் எல்லாம் நன்றாக படித்துவிட்டு பிரிட்டீஷ் ஆட்சியில் அரசு வேலைக்குப் போய்விட்டார்கள். பிரிட்டீஷ் காலத்தில் 90 சதவீதம் அரசு ஊழியர்கள் தமிழர்கள்தான் இருந்திருக்கிறார்கள். அதனால் சிங்களரை அவன் (பிரிட்டீஷ்) பொருட்படுத்தவே இல்லை.தாய்வழி சமூகத்தில் அன்று சிங்களர்கள் யாரும் யாருடனும் வாழலாம் என்ற நிலை இருந்திருக்கிறது. திருமணமாகாத சிங்களப் பெண்ணுக்கு குழந்தை பிறந்து பள்ளியில் படிக்கச் சென்றால் தகப்பனின் பெயர் கேட்பான். இவளுக்கு தகப்பனின் பெயர் தெரியாது. அதனால் யாரோ சாமிநாதப்பிள்ளை என்ற ஒருவருடைய பெயரையே பதிய வைத்திருக்கிறார்கள். இப்படியே நூறு பெயர்களுக்கு தகப்பன் சாமிநாதப் பிள்ளை என்று பதிய வைத்திருக்கிறார்கள். உடனே பிரிட்டீஷ்காரனுக்கு சந்தேகம் வந்துவிட்டது. என்னடா இது 100 பேருக்கு சாமிநாதப் பிள்ளைதான் தகப்பனா என்று விசாரித்துப் பார்த்தால் அந்த சாமிநாதப்பிள்ளை என்பவன் கிழவனாக இருக்கிறான். அவனிடம் அதிகாரி ஒரு சிங்களப் பெண்ணின் பெயரைச் சொல்லி `அந்தக் குழந்தைக்கு நீதான் தகப்பனா?' என்று கேட்டால் ஆமாம் என்றிருக்கிறான். அதிகாரிக்கு ஒரே குழப்பம். தொடர்ந்து விசாரித்ததில் ``பதிவு இல்லாமல் இருந்து போனால் அரசாங்கத்தில் சலுகை பெறமுடியாது. இந்தப் பெண் பிள்ளைகளைக் கெடுத்து ஏமாற்றிவிட்டு போய்விட்டார்கள் பாவம். அதான் என்னோட பெயரைக் கொடுத்தேன்'' என்று சொல்லி இருக்கிறான். இப்படிப்பட்ட பின்னணியில்தான் முத்துக்குமாரசாமி அம்மக்களுக்காக வாதாடி இருக்கிறார்'' என்று சிவராமு விளக்கினான். சிங்கள இன மக்களில் இருந்த பணக்காரர்கள் எல்லாம் அன்றைக்கு வெளிநாட்டில் இருந்தார்கள். சிலோனையே அவர்கள் பார்த்திருக்கமாட்டார்கள். ஆனால் சிங்களன் என்று தன்னைச் சொல்லிக் கொள்வார்கள்.ஆசியக் கண்டத்திலேயே முதல் பாரிஸ்டர் பட்டம் பெற்றவர் முத்துக்குமாரசாமிதான். `டிஸ்ரேலி' என்று ஒரு பிரதமர் இருந்தார். அவர் முத்துக்குமாரசாமியின் நண்பர். அவர் ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அந்த நாவலில் வரும் கதாபாத்திரம் முத்துக்குமாரசாமியைக் குறிப்பதைப் போலவே இருக்கும். அதை நான் ஜெராக்ஸ் எடுத்து இன்றும் வைத்தி ருக்கிறேன். முத்துக்குமாரசாமி எலிசபெத் பீபி என்ற இங்கிலீஷ்காரியை கல்யாணம் பண்ணிக்கொண்டார். எலிசபெத் பீபி மிகப்பெரிய பணக்கார குடும்பம். அந்தக் குடும்பம் ஏற்கெனவே இந்தியாவில் வியாபாரம் செய்தவர்கள். அந்தப் பழக்கத்தில்தான் இருவருக்கும் கல்யாணம் நடந்தது. கல்யாணமாகி இரண்டு வருடத்திற்குப் பிறகு அதாவது 1877-ல் ஆனந்த குமாரசாமி பிறந்தார். குழந்தை பிறந்த கையோடு எலிசபெத் பீபி இங்கிலாந்திற்குச் சென்றுவிட்டார்.அவர் போன ஒரு வருடத்தில் முத்துக்குமாரசாமி இறந்துவிட்டார். இந்தத் தகவல் தெரிந்ததும் அந்த அம்மா சிலோன் திரும்பவே இல்லை. ஆனந்த குமாரசாமி இங்கிலாந்திலேயே வளர்ந்து தன்னுடைய 24 வயதில்தான் இந்தியாவிற்கே வருகிறார். இந்தியாவிற்கு வந்து கனிமங்களைப் பற்றி ஆய்வு செய்கிறார். அவர் ஒரு கனிமவியல் அறிஞர். இந்தியக் கலைகளின் மீது ஆர்வம் வர, பிறகு இந்த வேலையை விட்டுவிட்டார்.

Monday, June 30, 2008

Friday, June 27, 2008

தலித் இலக்கியம் பின் தங்கி விட்டது.சோ. தர்மன்

சமகால இலக்கிய பரப்பில் மறுக்க முடியாத படைப்பாளி சோ.தர்மன். ஆரம்ப காலங்களில் யதார்த்த வகையான எழுத்துகளை படைத்துக் கொண்டிருந்த இவர் `கூகை' என்ற புதிய வகை நாவலின் மூலமாக நவீன வகை எழுத்தாளராக அடையாளப்படுத்தப்பட்டருக்கிறார். சமகால அரசியல், பண்பாட்டுச் சிதைவுகளை மையமாகக் கொண்ட `கூகை', `இயல் விருது' `தமிழக அரசு விருது' உள்ளிட்ட சில விருதுகளை பெற்றிருக்கிறது.

1980களிலிருந்து எழுதி வரும் சோ.தர்மனின் பூர்வீகம் கோவில்பட்டி அருகில் உள்ள உருளைக்குடி.இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக பஞ்சாலைத் தொழிலாளியாக வேலை பார்த்த இவர், அந்த வாழ்க்கை அனுபவம் குறித்து இதுவரை ஒரு கதையும் எழுதவில்லை என்பது ஆச்சர்யம். 1992இல் இவரின் முதல் சிறுகதை தொகுப்பு வெளியானது. பிறகு `தூர்வை' (நாவல்) `சோகவனம்' (சிறுகதை) `வனக்குமாரன்' (சிறுகதை) `வில்லிசைவேந்தர்' பிச்சைக்குட்டி பிள்ளை (மோனோகிராப்) `சோ.தர்மன் சிறுகதைகள் முழு தொகுதி' (மருதா) `கூகை' (காலச்சுவடு) என்று தொடர்ந்து எழுதி வருபவர். கோவில்பட்டியிலுள்ள கவிதா விடுதியில் காலை 11 மணிக்கு பதிவு செய்யத் தொடங்கிய இந் நேர்காணல் இரவு வரை நீண்டது. அதன் சுறுக்கப்பட்ட வடிவம்தான் இது.அதோடு இவரின் முதல் நேர்காணல் என்ற தகுதியும் இதற்குண்டு.

தீராநதி : உங்கள் அப்பா ஒரு கூத்துக் கலைஞர். ஒரு நல்ல கதை சொல்லி. கருவிலேயே கதை கேட்டு வளர்ந்தவர் நீங்கள். வாய்மொழி வழியாக கதை சொல்லி வந்த பரம்பரையில் எழுத்து வழி கதை சொல்லியாக பரிணமித்திருக்கிறீர்கள்.கூத்து என்ற மாபெரும் கலையும்,அதில் பரிசோதனைகளை மேற்கொண்டு அதை மேலும் செழுமைபடுத்திய சுயசிந்தனையாளர்களும், பெரும் பிரதியை வெறும் மனப்பதிவாகவே காலம் காலமாக காப்பாற்றி வந்த கலைஞர்களும் அரிதாகி விட்ட சமூகச் சூழலில் இன்றைக்கு நாம் வந்து நிற்கிறோம். ஒரு சமூகத்தின் வாழ்வியல், பிறகான ஒரு தலைமுறைக்கு வரலாறாக மாற்றம் பெறுகிறது என்பதினால் உங்களின் கூத்துக் குடும்பப் பின்னயிலிருந்து பேசத் தொடங்குவோமா?

சோ.தர்மன்: நீங்கள் குறிபிட்டுக் கேட்கும் மாதிரியான ஒரு வாழ்க்கை எனக்கு இயல்பாகவே கிடைத்தது. எங்கள் அப்பா சோலையப்பன் ஒரு கூத்துக் கலைஞர். இராமாயணக் கும்மி என்று சொல்லப்படுகின்ற ஒயில் கும்மியில் ராமர் வேஷம் போடுவார். என் சித்தப்பா லஷ்மணன் வேஜம் போடுவார். ஆக, நான் சிறு வயதிலேயே ராமனின் தோளில் பயணப்பட்டிருக்கிறேன்.சீதையின் மடியில் படுத்துறங்கி இருக்கிறேன். அனுமனின் நீண்ட வாலையும், கழற்றி வைக்கப்பட்ட ராவணனின் பத்து தலைகளையும் என் மடியில் வைத்து விளையாடி இருக்கிறேன். இந்த மாதிரி ரொம்ப நாள் நடந்திருக்கிறது. இது எங்கள் குடும்பத்தில் சில பாதிப்புகளை உருவாக்கியது. என்ன மாதிரியான பாதிப்பென்றால், நாங்கள் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். உரிய காலத்தில் விதைத்தாக வேண்டும். உரிய காலத்தில் உழுதாக வேண்டும்.அந்த வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு எங்கள் அய்யா மதுரை,திருநெல்வேலி என்று கூத்தாட போய்விடுவார். அப்போது விவசாய வேலைளெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் எங்கள் அய்யா கூத்திற்குதான் முதலிடம் கொடுத்தார். இன்னமும் கோவில்பட்டி பக்கத்திலுள்ள எங்கள் ஊர் உருளைக்குடியில் சில மாணவர்களுக்கு அவர் கூத்து சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.இன்னும் எங்கள் கிராமத்தில் ராமராக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இப்போது அவருக்கு எண்பது வயது ஆகப் போகிறது. இந்தக் கூத்துக் கலையை தனக்குப் பின்பாக யாராவது வளர்த்துவிட வேண்டும் என்பதற்காகவும், அழித்து விடக்கூடாது என்பதற்காகவும் பலருக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஆக, ஒருநேரத்தில் கதையை கேட்கக் கூடிய அதை நேரடி காட்சிகளாகப் பார்க்கக் கூடிய ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இது என் பதின்மூன்று வயது வரைக்கும் எனக்குக் கிடைத்துக் கொண்டிருந்தது. அதனுடைய விளைவாகத்தான் எனக்கு வாசிப்பின் மீதான ஆர்வம் வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

தீராநதி: சரி,உங்களின் வாசிப்பு சம்பந்தமான விஜயங்களுக்குள் வருவோம். எப்போது வாசிப்பை நவீன இலக்கியங்களின் பக்கம் திருப்ப ஆரம்பித்தீர்கள்?

சோ.தர்மன்: எல்லோரையும் போலத்தான் என்னுடைய வாசிப்பும் ஆரம்பித்தது. முதலில் சிந்துபாத் கதைகளில் தொடங்கி கல்கண்டு, குமுதம் பக்கம் போய்க் கொண்டிருந்தது. என்னுடைய தாய் மாமன்தான் பூமணி. என் அம்மாவுடன் பிறந்தவர். ஆனால் அவர் வாசிக்கக் கூடிய பத்திரிகைகளோ, அவர் எழுதிக் கொண்டிருந்த களமோ எதுவும் எனக்கு அப்போது தெரியாது. ஆனால் எல்லாவற்றையும் விழுந்து விழுந்து படிப்பேன். என்னுடைய பதிநான்கு பதினைந்து வயதில் கோடை விடுமுறைக்காக என் தாய்மாமன் பூமணி வீட்டிற்குப் போய்விடுவேன். அப்போது அவரது வீட்டில் `எழுத்து' பத்திரிகை கிடக்கும். `தீபம்' பத்திரிகை கிடக்கும். இப்படி புதுப்புது பத்திரிகைகளாக கிடக்கும். அப்போது நான் ஒரு நாள் ``படிப்பதற்கு ஏதாவது இரண்டு புஸ்தகம் இருந்தால் கொடுங்க மாமா'' என்று கேட்டேன். அவர் ``நீ படிப்பீயா?'' என்று கேட்டார். நான் ``புஸ்தகங்கள் எல்லாம் படிக்-கின்ற பழக்கமுண்டு'' என்றேன். அவர் ``நீ எது எதுவெல்லாம் படித்திருக்கிறே''என்றதும் நான் சாதாரணமான புஸ்தகங்களை எல்லாம் சொன்னதும் ``அப்படியா?'' என்று சொல்லிவிட்டு இரண்டு புஸ்தகங்களை எனக்கு முதலில் கொடுத்தார். இரண்டுமே கி. ராஷநாராயணன் எழுதிய புஸ்தகங்கள். அதை ஒரே நாளில் நான் படித்துமுடித்து விட்டேன். அதற்கு பிறகு எனக்குள் புதுசா ஒரு மின்னல். அதை அப்படித்தான் சொல்ல வேண்டும். அதுவரை நான் படித்துக் கொண்டிருந்ததெல்லாம் கற்பனையான மனிதர்களைப் பற்றிய புஸ்தகங்கள். அதற்கு மாறாக, அந்த புஸ்தகத்தில் கி. ராஷநாராயணன் என்னோட வாழ்ந்த மக்கள், என்னுடைய அப்பா கதை, தாத்தா கதை பூராவையும் பதிவு செய்திருந்தார்.

நான் படித்த உடனேயே என்னுடைய அய்யாவிடம்அந்த புஸ்தகத்தைக் கொடுத்தேன்.அவருக்கு படிக்கின்ற பழக்கங்கள் உண்டு. இப்பவும் சிலந்தி பூச்சி மாதிரி பெரிய எழுத்தில் இருக்கின்ற ஒரிஜினல் ராமாயண புஸ்தகத்தின் 14 பாகங்களையும் வீட்டில் வைத்திருக்கிறார். யாருக்கும் கொடுக்க மாட்டார். இப்பவும் திடீரென்று ஒரு நாள் எடுத்து அதிலுள்ள யுத்த காண்டத்தை படித்துக் கொண்டிருப்பார். அவர் ராஜநாராயணனின் புஸ்தகத்தைப் படித்துவிட்டு `இந்த மாதிரி ஒரு நாளைக்கு நான் நூறு கதைகளை எழுதுவேனே' என்றார். அந்த அளவுக்கு அவருடைய கதையாக இருந்தது அது. ஆக இந்த மாதிரியான தீவிர இலக்கிய புஸ்தகங்கள் என்பது பூமணி மூலமாகத்தான் எனக்குக் கிடைத்தது. அவர் பக்கத்து ஊராக இருந்தாலும் காலையில் கோவில்பட்டிக்கு வந்து விடுவார். சாயுங்காலம் அவருடைய கிராமத்திற்குத் திரும்புவார். அவருடைய அறிமுகம் கிடைத்தது. பிறகு பா. செயப்பிரகாசம் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. இவர்கள்தான் எனக்குச் சரியான திசையைக் கொடுத்தார்கள்.

தீராநதி : உங்களுடைய முதல் கதை பரிணாமன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த `மகாநகரி' என்ற மாத இதழில் வெளி வந்திருக்கிறது. அந்தப் பத்திரிகையின் அறிமுகம் எப்படி நிகழ்ந்தது?

சோ.தர்மன் : என்னுடைய கவிதைகளை எல்லாம் சேர்த்து புத்தகமாக்கினால் இரண்டு தொகுப்புகள் போடலாம். கவிதை என்றால் என்னவென்றே தெரியாமல் நான் கவிதை எழுதிக் கொண்டே இருந்தேன். கல்லூரி ஆண்டு மலரில் வரும். தினமணி, தினக்கதிர் பேப்பர்களில் வெளி வரும். என்னுடைய வாசிப்பு அதிகமாக அதிகமாக நான் நினைத்ததை கவிதையில் சொல்ல முடியாத ஒரு சூழல் உருவாகியது.அப்போது சிறுகதை எழுதிப் பார்க்கலாமே என்று ஒரு ஆர்வம் வருகிறது.அப்போது எட்டயபுரம் பாரதி விழாவிற்கு பரிணாமன் வந்திருந்தார். எட்டயபுரம் பாரதி விழாவில் தவறாமல் பங்கேற்கக் கூடியவர் அவர். பி. லெனின் வருவார். கல்கி வருவார். இப்படி பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் வருவார்கள்.அப்போது நான் சென்றபோது பரிணாமனிடம் என்னை அறிமுகப்படுத்தினார்கள்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராக இருந்து இப்போது ஓய்வு பெற்றிருக்கின்ற தி.சு. நடராசன் அந்தப் பத்திரிகைக் குழுவில் இருந்தார். அவரும் அந்த விழாவிற்கு வந்திருந்தார். அவரை எனக்கு முன்பாகவே தெரியும். அவர்தான் பரிணாமனிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். உடனே அவர் ``ஏதாவது படைப்பு இருந்தா கொடுங்களேன்'' என்றார். ``கவிதைகள்தான் சார் எழுதிக்கிட்டு இருக்கிறேன்'' என்றதும் ``கவிதையை விடுங்க. சிறுகதை எழுத முடிஞ்சா பாருங்க'' என்று தி.சு. நடராசன் என்னிடம் சொன்னார். அப்போது கவிதைக்கு நிறைய பேர்கள் இருக்கிறார்கள். நாம் நூறோடு நூற்றி ஒன்றாக இல்லாமல் சிறுகதை எழுதிப் பார்க்கலாமே என்று எழுதினேன். `விருவு' என்ற சிறுகதை எழுதி அனுப்பினேன். அது இப்போது எனக்கு மிகமிகச் சாதாரண கதைதான்.அந்தக் கதையை அனுப்பிய மறுமாதமே அதை பிரசுரம் பண்ணிவிட்டார்கள். எனக்கோ ஆச்சர்யம். அப்போது அதை ரொம்ப நல்ல கதை என்று அவர்கள் சொன்னார்கள். என்னுடைய முழு சிறுகதை தொகுப்பில் அதை முதல் கதையாகப் போட்டிருக்கிறேன்.

தீராநதி : வில்லிசை வேந்தர் பிச்சைக்குட்டி என்பவரைப் பற்றி மோனோகிராஃப் புத்தகம் ஒன்றை எழுதி இருக்கிறீர்கள். பரவலாக கவனம் பெற வேண்டிய ஆய்வு நூல் அது. தமிழின் வழக்கம் போல் வந்த இடம் தெரியாமல் கிடக்கிறது. விறுவிறுப்பான நடை.அத்தியாயத்திற்கு அத்தியாயம் `சுவாரஸ்ய தகவல் கொண்ட நூல் அது.பிச்சைக்குட்டி மாதிரியான சுய திறமை கொண்ட கலைஞர்களைப் பற்றிய பதிவுகள் எல்லாம் நம் சமூ-கத்-தில் சொற்பமானதாகவே உள்ளது. இதற்கு காரணமென்ன?

சோ.தர்மன் : வில்லிசை என்பது வேறு மாவட்டத்தில் கிடையாது. தூத்துக்குடி, கன்னியாகுமரி,திருநெல்வேலி மாவட்டங்களில் மட்டும்தான் வில்லிசை இருக்கிறது.அதனுடைய தோற்றுவாயே கன்னியாகுமரி,திருநெல்வேலி மாவட்டம்தான். ஒரு கலாபூர்வமான கலைஞன் உருவாகும் போது அதற்கான ரசிகர்கள் தன்னாலேயே வந்துவிடுவார்கள். அவர்கள் சோரம் போக வேண்டிய அவசியம் எல்லாம் கிடையாது. அதற்கு நல்ல உதாரணம் தான் பிச்சைக்குட்டி. அவர் சாகின்ற வரைக்கும் அவருடைய வில்லிசைக் கலையை வில்லிசையாகவே வைத்திருந்தார். அத்தனை சினிமா கலைஞர்களும் அவரைத் தேடி வந்தார்கள். அவரைத் தேடி வராத சினிமா கலைஞர்களே அன்றைக்குக் கிடையாது. என்.எஸ். கிருஷ்ணனை எடுத்துக் கொள்ளுங்கள் டி.எம்.மதுரம், எஸ்.எஸ். ராஜேந்திரன் என்று அவ்வளவு பேர்களும் இவரிடம் கற்றவர்கள்தான். இவரை காமராஜர் கூப்பிட்டுக் கொண்டு சென்று தங்க வைத்து இரண்டு மூன்று நாட்கள் இவர் இசையைக் கேட்ட பிறகு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அவ்வளவு பெரிய கலைஞனாக இருந்தார் பிச்சைக்குட்டி. ஆனால் அப்படியான கலைஞர்களை உருவாக்குவதற்கு இன்றைக்கு யாரும் தயாராக இல்லை.

தீராநதி : காருகுறிச்சி அருணாசலம், பிச்சைக்குட்டி இவர்களை போன்ற கலைஞர்களை பற்றிய பதிவுகள் நம்மிடம் இல்லாததற்கான காரணமென்னவென்று கேட்கிறேன்?

சோ.தர்மன் : கூத்து மட்டும்தான் ரசிப்பதற்கான பொழுது போக்கு என்ற கட்டாயம் இருக்கும் போது அதை கௌரவித்துக் கொண்டிருந்தோம். ஊடகங்களின் வளர்ச்சி வரும் போது அவனுக்குத் தேவையான அனைத்தும் அங்கு கிடைத்து விடுகிறது. இது போக அண்மை காலத்தில் உலகமயமாக்கல் போன்ற கொள்கைகள் வந்த பிற்பாடு நான் தமிழன் என்று சொல்லிக் கொள்ளலாம்.வாழ்க்கையில் ஐரோப்பியனாகத்தான் வாழ்ந்து கொண்டிருப்பேன்.என்னுடைய வாழ்வியல் முறைகள், என்னுடைய குழந்தையின் வளர்ப்புகள், நான் கேட்கக் கூடிய மியூசிக், டான்ஸ் எல்லாமே மேற்கத்திய கலாச்சாரத்திற்கு வந்தாயிற்று. நம்முடைய இசைக் கலைஞர்கள் எனக்கு தேவையில்லாத-வர்களாக ஆகும் போது அவர்களை பற்றிய பதிவுகளும் சாத்தியமில்லாமல்தான்போய் விடுகிறது.

வெங்கட்சாமிநாதன் வில்லிசை பற்றி ஒரு புஸ்தகம் எழுதி இருக்கிறார். பாவைக் கூத்தைப் பற்றி ஒரு பிரமாதமான புஸ்தகத்தை டெல்லியில் இருந்து கொண்டு எழுதி இருக்கிறார். யார் செய்ய வேண்டிய வேலையை யார் செய்திருக்கிறார் பாருங்கள்? இங்குள்ளவர்கள் கலையைக் காப்பாற்றுகிறேன் என்று சொல்லிக் கொண்டு முற்போக்காளர்கள் என்று சொல்லிக் கொண்டுஇருப்பவர்களுக்கு இது பற்றியெல்லாம் எந்த அக்கறையும் கிடையாது. நான் இந்த வில்லிசையை பற்றி ஆய்வு செய்தது கூட ஒரு தற்செயலான காரியம்தான்.எனக்கு வில்லிசை பற்றியோ மற்ற கலைகளைப் பற்றியோ பெரிய அளவுக்கான புலமை இல்லை. அப்படி நான் ஆய்வை மேற்கொண்ட போது அவர் எங்கள் ஊரைச் சார்ந்தவராக இருந்ததினால் இன்னும் கொஞ்சம் ஆர்வமிகுதியில் வேலைகளில் இறங்கினேன். இந்த ஆய்வு நேரத்தில் எனக்கு ஒரு விஷயம் ஆச்சர்யத்தைக் கொடுத்தது. இன்னும் கொஞ்சம் பச்சையாகவே சொன்னால் யார் யார் எந்த சாதியை சேர்ந்தவர்களோ அந்த சாதிக்காரர்கள் தான் அந்த ஆளுமையானவர்களை பற்றிய ஆய்வு புத்தகத்தை எழுதுகிறார்கள்.வ.உ.சிதம்பரம்பிள்ளை வரலாற்றை பிள்ளைமார்கள்தான் எழுதி இருக்கிறார்கள்.விஸ்வநாததாசன் என்பவரின் வரலாறை விஸ்வநாதன் சாதியைச் சேர்ந்தவர்தான் எழுதி இருக்கிறார்.ஆனால் நான் மட்டும்தான் இந்த விஷயத்தில் விதி விலக்கு.பிச்சைக்குட்டி சைவ பிள்ளைவாள்.நான் சைவ பிள்ளைமார் சாதியை சார்ந்தவன் கிடையாது. அவருடைய கலை வாழ்க்கை மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக செய்தேன்.அதற்காக நான்கு ஐந்து வருடங்கள் உழைத்து உருவாக்கியிருக்கிறேன்.ஏனென்றால் அவரைப் பற்றிய எந்தப் பதிவுமே அதற்கு முன் கிடையாது.இப்போது படிப்பவர்கள் சொல்கிறார்கள். ரொம்ப நல்ல புஸ்தகம். அவருக்குப் பெரிய மரியாதையைக் கொடுத்திருக்கிறீர்கள் என்று. ஆக, இதுபோல் அர்ப்பணிப்பு மனநிலையில் செய்யக்கூடியவர்கள் இருந்தால்தான் ஒரு நல்ல கலைஞனைப் பற்றிய பதிவுகளை நம்மால் உருவாக்க முடியும்.

இதுபோக, இன்றைக்கு வ.உ.சிதம்பரம் பிள்ளையை போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை பற்றிய புஸ்தகத்தை எழுத வேண்டும் என்றால் உட்கார்ந்த இடத்திலேயே இருந்து கொண்டு ஒரு புஸ்தகம் எழுதிவிடலாம்.ஆனால் காருகுறிச்சி அருணாசலம் பற்றி என்ன பதிவுகள் நம்மிடம் இருக்கிறது. ஆனால் அவரும் ஒரு கலைஞர், மதிக்கப்பட்ட கலைஞர். அவரைப் பற்றி பதிவு பண்ண வேண்டும் என்று வருகிறபோது அவரைப் பற்றிய தகவல்களை தேடித் தேடி எடுக்க வேண்டிய நிலைதான் இருக்கிறது. கள ஆய்வு செய்ய வேண்டியது இருக்கிறது. அவருடன் சமகாலத்தில் வாழ்ந்தவர்களை தேடிச் சந்தித்து நேர்காணல் செய்ய வேண்டி இருக்கிறது.அப்படி தேடிச் சென்று கேட்டால் சொல்ல மறுப்பார்கள். அவர்களோடு உட்கார்ந்து சகஜமாகப் பேசினால் விஷயத்தை பிடுங்கி விடலாம். ஒரு நாள் இரண்டு நாள் என்று தொடர்ந்து போக வேண்டும். நாம் எதுவும் தெரியாதவனைப் போல நம்மை முட்டாளாக்கிக் கொண்டு அவரிடம் பேச வேண்டும். அவரை குருவை போன்ற ஸ்தானத்தில் வைத்துக் கொண்டு கதை கேட்க வேண்டும். இவ்வளவு தூரம் ரிஸ்க் எடுத்துதான் பிச்சைக் குட்டியைப் பற்றிய புஸ்தகத்தை நான் தயார் பண்ணினேன்.

தீராநதி : இந்தப் புத்தகம் வெளிவந்த பிற்பாடு பிச்சைக் குட்டியின் வட்டாரத்தை சார்ந்தவர்கள் படித்துப் பார்த்துவிட்டு விட்டுப்போன தகவல்களை உங்களிடம் சொன்னார்களா?

சோ.தர்மன் :நான் எழுதிய அதே அளவுக்கான விட்டுப்-போன தகவல்கள் இப்போது எனக்குக் கிடைத்திருக்கிறது. அந்த மாதிரியான ஆட்களையெல்லாம் நான் சந்திக்கத் தவறி விட்டிருக்கிறேன். அவர்களுக்கு நான் பிச்சைக் குட்டியை பற்றி புஸ்தகம் எழுதியிருக்கும் தகவல் கிடைக்கிறது. கிடைத்ததும் அவர்கள் எனக்கு எழுதுகிறார்கள்.இப்போது நான் மறு பதிப்பு கொண்டு வரும்போது அந்தப் புஸ்தகத்தில் இவற்றையெல்லாம் சேர்க்க இருக்கிறேன்.

தீராநதி :விட்டுப்போன தகவல்களைக் கொடுப்பவர்கள் எல்லாம் பிச்சைக்குட்டியின் சமூகத்தைச் சேர்ந்தவர்களா?

சோ.தர்மன் : ஆமாம். பிள்ளைமார் சங்கத்திலிருந்து கூட என்னைத் தொடர்பு கொண்டார்கள். பல தகவல்களை கொடுத்தார்கள். ஒரு நல்ல விஜயம் பண்ணி இருக்கிறீர்கள் என்றார்கள்.ஒரு பாராட்டுக் கூட்டம் கூட வைக்கிறோம் என்றார்கள். நான் அதற்கு உடன்படவில்லை. அவருடைய பிள்ளைகள் கூட இப்போது நல்ல உயர் பதவியில் இருக்கிறார்கள். அவர்களும் என்னை வந்து சந்தித்தார்கள். நான் எழுதிய இந்தப் புஸ்தகம் காஞ்சி மடத்தின் கவனத்திற்கு போய் இருக்கிறது. காஞ்சிப் பெரியவர் சாகும்போது கூட பிச்சைக் குட்டியின் பாட்டை போடுங்கள் என்று சொல்லி அதை கேட்டதாக ஒரு புதிய தகவல் கிடைத்திருக்கிறது.

காஞ்சி மடத்திலிருந்து ஒரு கடிதம் எனக்கு வந்தது. அதில் ``நீங்கள் பிச்சைக் குட்டி பிள்ளையைப் பற்றி எழுதிய புஸ்தகம் எங்களுக்கு கிடைத்தது. அதில் எங்கள் மடத்தையும் பெரியவரை பற்றியும் பதிவு பண்ணி இருந்த விஷயங்கள் எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது''என்று எழுதி இருந்தார்கள். கடிதத்துடன் பிரசாதம் அர்ச்சனை அரிசியையெல்லாம் சேர்த்து வைத்து ஒரு பார்சல் அனுப்பி இருந்தார்கள்.

தீராநதி : நீங்கள் காஞ்சி சங்கர மடத்திற்கு தொடர்பில்லாத ஒரு ஆள். ஆனால் பிச்சைக்குட்டிக்கு மடத்திலிருந்து அவர் ஊர் ஊராக சென்று கச்சேரி செய்ய பெரிய காரையே வாங்கி கொடுத்திருக்கிறார்கள். கூடவே தங்க வில்லைகளை கொடுத்து கை விரலுக்கு கணையாழி பண்ணி போட்டுக்கச் சொன்னதாக எழுதி இருக்கிறீர்கள். கலைமீது அவர்களுக்கு இருந்த ஈடுபாட்டால் செய்தார்கள் என்பதை விட பிச்சைக் குட்டியின் சமய பிரச்சாரத்திற்காக இதை செய்திருக்கிறார்கள் என்றே எடுத்துக் கொள்ளலாம்.இந்த இடத்தில் என்னுடைய கேள்வி என்னவென்றால் மடம் சம்பந்தமான தகவல்களை எழுதும்போது கூட பிச்சைக் குட்டியின் பார்வையில் மடத்தின் புரிதல் எப்படி இருந்தது என்ற பார்வையில்தான் நீங்கள் எழுதுகிறீர்கள்.இதனால் வியந்தோதப்பட்ட விதத்தில் அந்த நூல் அமைந்து-விடுகிறது. சமூக பார்வையோடு கூடிய எழுத்து என்பது இல்லா-மல் இருக்கிறதே. இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சோ.தர்மன் : நான் எடுத்துக் கொண்ட விஷயம் அதில் பிச்சைக் குட்டி என்கிற ஒரு கிராமிய வில்லிசைக் கலைஞனை பதிவு பண்ண வேண்டும் என்ற அளவில் மட்டும்தான். அதை மட்டும்தான் நான் செய்ய முடியும். மற்ற சமூக பார்வைகளோ, இதர விஷயங்களோ அவரிடம் என்னவாக செயல்பட்டது என்பதை நான் சொல்வதற்கு நான் அவருடைய சமகாலத்து ஆள் கிடையாது. முழுக்க முழுக்க கேள்வி ஞானத்தினால் மட்டுமே திரட்டப்படுகின்ற விஷயங்களாகவே இது இருக்கிறது. அதில் நான் உள்ளே நுழைந்துவிட்டேன் என்றால் நான்தான் இருப்பேனே ஒழிய பிச்சைக் குட்டி இருக்க மாட்டார். கலை இருக்காது. அவருடைய கலைத் தன்மை இருக்காது.மற்ற பதிவு பண்ண வேண்டிய விஷயங்கள் எல்லாம் பின்னுக்குப் போய்விடும். என்னுடைய கருத்துகள் மேலோங்கிக் கொண்டு நிற்கும். அதனால் ஒரு சின்ன `பிட்' விஷயமாக இருந்தால் கூட அதில் அவருக்கு என்ன பங்களிப்பு இருந்தது என்பதை மட்டுமே பதிவு செய்திருக்கிறேன். விளாத்திக்குளம் நல்லப்ப சாமிகள் பற்றி கூட ஒரு சின்ன கட்டுரை இருக்கிறதில்லையா?

ஆமாம்.அவர் பைத்தியமாக அலைந்தது மாதிரி ஒரு கட்டுரை வருகிறது.

எல்லோரும் அவரை பைத்தியம் என்றுதான் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். அவர் கையேந்தி பிச்சைக்கூட எடுத்ததாக சொல்கிறார்கள். இப்போது கூட அவரது சமாதியில் எல்லோரும் விழுந்து விழுந்து கும்பிடுகிறார்கள்.அரசு கூட விழாவெல்லாம் எடுத்து நடத்துகிறது. ஆனால் அவர் பைத்தியமில்லை என்ற புது விளக்கத்தை பிச்சைக்குட்டிதான் முதன் முதலில் கொடுக்கிறார்.எப்படிக் கொடுக்கிறார். ``அனைவரும் சுவாமிகள் தனது அந்திம காலத்தில் பைத்தியமாக நடமாடினார் என்று கூறுகிறார்கள். நான் அதை ஒப்புக் கொள்வதற்கு இல்லை. ஏனென்றால், சுவாமிகள் வாழ்ந்த காலம் இரண்டு கட்டம். ஒன்று, நாத உபாசனை. அதாவது நாதத்தை உபாசித்து சஞ்சரித்து, தானும் அனுபவித்து, மற்றவர்களையும் அனுபவிக்கச் செய்வது. இந்த நாத உபாசனை அடுத்த கட்டம் அடைந்தது. அதுதான் நாதத்தில் ஒன்றிய கட்டம். பிற்காலத்தில் சுவாமிகள் நாதத்துடன் ஒன்றி விட்டார். இதை நான் வெறும் நிகழ்ச்சிக்காகச் சொல்லவில்லை, மிகவும் உண்மை. நானும்கவனித்திருக்கிறேன்.என்னைப்போல் உங்களில் பலரும் கவனித்திருப்பீர்கள்.எவரிடமும் எதையும் பேசாது உணர்வற்று நடமாடிய சுவாமிகள் மைக் மூலமாகவோ அல்லது ரேடியோ மூலமாகவோ கர்நாடக சங்கீதக் குரல் கேட்டால் சடாரென அப்படியே நிற்பார். கை விரல்களை மேல் நோக்கி அசைத்து லயிப்பார். சில சமயம் `பலே' என்பார். அந்தப் பாட்டுமேலே சஞ்சாரம் செய்யத் தோது இல்லாமல் இறங்கிவிட்டால் அவ்வளவுதான். `ச்சே' என்று நகர்ந்து விடுவார். இது எப்படி சாத்தியம்? லௌகீக விஷயங்களில் செல்லாத அவர் இதயம், எப்படி சங்கீதத்திற்கு நின்றது? தலையாட்டியது? பின் பிடிக்காவிட்டால் உதறிச் சென்றது? அதுதான் நாதத்துடன் ஒன்றிய நிலை என்பது. அதாவது சங்கீதம் தவிர வேறு எதையுமே ஏற்காத நிலை. இதை நாம்தான் புரிந்து கொள்ளாமல் சுவாமி அவர்களை பைத்தியம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். சுவாமிகள் பைத்தியம் அல்ல. அவரை புரிந்து கொள்ளாத நாம்தான் பைத்தியம்'' என்று விளக்கம் தருகிறார். ஆக, அவர் ஒரு வில்லிசைக் கலைஞராக இருந்தாலும் கூட ஒரு கர்நாடக இசைக் கலையின் மேதை நல்லப்ப சுவாமிகளை பற்றி அவர் என்ன கருத்தை முன் வைக்கிறார் பாருங்கள்! பிச்சைக் குட்டியும் கர்நாடக சங்கீதத்தை முறைப்படி கற்றவர்தான். ஆனால் பிச்சைக்குட்டியை வில்லிசைக் கலைஞராக மட்டுமே காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் முறைப்படி அவர் குரு வைத்து கர்நாடக இசையை கற்றவர் என்பது வேறு விஜயம். இன்றைக்குள்ள வில்லிசைக் கலைஞர்களிடத்தில் நீங்கள் பேசிப் பாருங்கள். கர்நாடக இசை பற்றி அவர்களுக்கு எந்த அளவுக்கு ஞானம் இருக்கிறது?

நான் ஓரளவுக்கு இந்த பிச்சைக்குட்டி புஸ்தகத்தை எல்லா வில்லிசைக் கலைஞர்களுக்கும் இலவசமாக கொடுத்திருக்கிறேன்.எல்லோருக்கும் பிச்சைக்குட்டியைத் தெரியும். குரு என்று ஏற்றுக் கொள்கிறார்கள். `வாத்தியார்' என்ற வார்த்தையைத் தவிர மறு வார்த்தையை சொல்ல மாட்டார்கள். ஆனால் யாரும் படிப்பதில்லை. என்ன பண்ணுவீர்கள் நீங்கள்? இவர்களிடம் எப்படி ஒரு கலாப் பூர்வமான சிருஷ்டி வெளி வரும்? வில்லிசையைப் பற்றிய சோதனையை எப்படி இவர்களால் பண்ணிவிட முடியும்?

தீராநதி : எழுதப் படிக்கத் தெரியாத பிச்சைக்குட்டி ஆண்டாளின் வரலாற்றினை கதையாகப் படிக்க அழைப்பு வந்தபோது உடனே அதை ஏற்கிறார். நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் அ. சீனிவாசராகவன் அவர்களைச் சந்தித்து ஆண்டாளை பற்றிய கதையை தயார் செய்து கொடுக்கச் சொல்கிறார். சீனிவாச ராகவன் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியின் பேராசிரியர். தமிழ்ப் புலமை மிக்கவர். பெரிய எழுத்தாளராக அறியப்பட்டவர். தன்னுடைய `வெள்ளைப் பறவை' எனும் நூலுக்காக மத்திய அரசின் `சாகித்ய அகாதெமி' விருதைப் பெற்றவர். அவர் தயார் செய்து கொடுத்த கதையை வைத்து நிகழ்ச்சியும் செவ்வனே நடந்து முடிகிறது. ஐதீகத்திலும் சாஸ்திரத்திலும் ஊறிய பெரியவர்களெல்லாம் படிக்காத வேந்தரைப் புகழ்ந்து பேசுகிறார்கள்?

சோ.தர்மன் : அதுவரை யாரும் ஆண்டாள் கதையை வில்லிசையில் படித்தது கிடையாது. ஸ்ரீரங்கத்திலிருந்து ``ஆண்டாள் கதையை வில்லிசையில் படிக்க வேண்டும். தொகையை பற்றிக் கவலை இல்லை. நீங்கள் கேட்ட தொகையை நாங்கள் கொடுக்கிறோம்'' என்று ஒரு தபால் வருகிறது. பிச்சைக்குட்டியும் ஒத்துக் கொள்கிறார். ஆண்டாளைப் பற்றி வில்லிசையில் கதை படிக்க வேண்டும் என்றால் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் சமயத்தில் விடியவிடியக் கூட படிக்க வேண்டியது இருக்கும். அவ்வளவு தூரம் சொல்வதற்கு ஆண்டாளிடம் என்ன விஷயங்கள் இருக்கிறது? அதற்கு பிறகுதான் யோசிக்கிறார். ஆண்டாள் குழந்தையாகவே கண்டெடுக்கப்படுகிறாள். அவளுக்கு பூர்வீகமே இல்லாமல் போகிறது. அப்படி ஒரு பூர்வீகம் இருந்தால் அவளின் அம்மா, அப்பாவின் ராஷ பரம்பரையை பற்றி ஒரு இரண்டு மணி நேரம் படிக்கலாம். அப்படி ஒன்றுமே இல்லை!? அதற்காகத்தான் அவர் அ. சீனிவாசராகவன் என்பவரிடம் போகிறார். இலக்கியப் புலமையுள்ள பேராசிரியர் அவர். இப்போது இருக்கின்ற பேராசிரியர்களைப் போன்றவர் இல்லை அவர். ஆங்கிலத்துறைப் பேராசிரியர் இவரை பார்த்ததும் ``வாப்பா... பிச்சைக் குட்டி. நீ பெரிய பெரிய சமஸ்தானத்-திற்கு எல்லாம் போவீயே? ஏன் என்னிடம் வந்திருக்குற'' என்று கேட்கிறார். இரண்டு பேரும் நண்பர்கள்தான். அப்போது விவரத்தைச் சொல்கிறார். உடனே கல்லூரிக்கு `லீவு' போட்டு விட்டு உலக இலக்கியங்களில் உள்ள ரோமியோ ஷூலியட் லைலா மஜ்னு, ஜேக்ஸ்பியர் என்ற அத்தனை காதல் கதைகளையும் பிச்சைக்குட்டியிடம் சொல்கிறார். அதை முழுக்க பிச்சைக்குட்டி வில்லிசைக்கு தகுந்த மாதிரியான மெட்டுகளாக மாற்றுகிறார். இத்தனையும் சேர்த்து ஆண்டாள் கிருஷ்ணனை நோக்கிப் பாடுகின்ற காதல் பாடல் வரிகளாக பிச்சைக்குட்டி, மாற்றுகிறார். மாற்றி ஷ்ரீரங்கம் போய் வில்லிசை நிகழ்த்துகிறார். அதைப் பார்த்த ஐதீகமான ஆட்கள் எல்லாம் ``பிச்சைக்குட்டி உங்களைப் பார்த்தா ஐதீகமான ஆள் மாதிரியும் தெரியுல... ரொம்ப ஒழுக்க சீல விதிகளை கடைப்பிடிச்சு வாழ்கின்ற ஆள்மாதிரியும் தெரியுல.. இன்னைக்கு மாதிரி ஒரு ஆண்டாள் கதையை நாங்கள் இதுவரைக்கும் கேட்டதே இல்லை'' என்று சொன்னார்களாம். அதற்கு பிச்சைக்குட்டி நகைச்சுவையாக அந்த சீனுவாசராகவனின் (கதை எழுதி கொடுத்த பேராசிரியர்) `புண்ணியம்' என்றாராம்.

இந்த இடத்தில்தான் நமக்கு ஒரு கலைஞனுக்கான தேடல் பிச்சைக்குட்டியிடம் இருந்திருக்கிறது என்பது புலனாகிறது.இன்றைக்கு நம்மிடம் கலைஞர்கள் இல்லையென்று நாம் சொல்லவில்லை. கலைஞர்களுக்கான தேடல் என்பதே இல்லை என்று சொல்கிறோம். எல்லோருமே சினிமாப் பாடல் மெட்டுக்களை வைத்துக் கொண்டு ஒப்பேற்றுகிறார்கள். புதுப் புது மெட்டுக்களை உருவாக்க யாரும் முயற்சிப்பதில்லை.பிறகு பிச்சைக்குட்டியோ தானே பாடல்களை எழுதுவார். ஆனால் இன்றைக்கு உள்ளவர்களிடம் பாடல் எழுதுகின்ற தகுதி யாரிடமுமே இல்லை. இரவல் பாடல்களைப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் இந்த ஊரில் ஒரு பாடலைக் கேட்கிறேன். திருநெல்வேலிக்கு போய் ஒருவரின் பாடலைக் கேட்கிறேன், அவரும் அதே பாடலைத்தான் பாடுகிறார். பிறகு ஏன் இதை நான் கேட்க வேண்டும்? ஆக மொத்தத்தில் கலை என்பதில்லை.

தீராநதி : நீங்கள் பேசியதிலிருந்து சுய சிந்தனை வெளிப்படுகின்ற ஒரு கலையாற்றல் என்பது இன்றைக்கு இல்லாமல் போய்விட்டது என்ற ஒரு விஜயம் பிடிபடுகிறது. இந்த விபத்து, கலைஞர்கள் வியாபாரிகளாக ஆனதினால் நிகழ்ந்ததா?

சோ. தர்மன் : வியாபாரிகளாக ஆனதினால் நிகழ்ந்ததென்று சொல்ல முடியாது. அவர்களுக்குள் ஒரு சலிப்புத் தன்மை வருகிறது. இவ்வளவு ரிஸ்க் எடுத்து இந்தக் கலையை கற்றுக் கொண்டால் நம்மால் என்ன பெரிய அளவில் சம்பாதித்து விட முடியுமா? அல்லது பேரும் புகழும் வாங்கி விட முடியுமா? சினிமாவுடன் போட்டி போட்டு நம்மால் என்ன செய்து விட முடியும் என்ற சலிப்புத்தன்மை தான் அதற்கு காரணமாக இருக்குமென்று நான் நினைக்கிறேன்.

இன்றைக்கு கோயில் திருவிழா நிகழ்ச்சிகளுக்குக் கூட நல்ல கிராமியக் கலைஞர்களை கூப்பிடுவது கிடையாது. பெரிய பெரிய திரைகளைக் கட்டி சினிமா போடுகிறார்கள். சமீபத்தில் வெளியான புதுப்புது படங்கள் கூட சி.டி.யில் கிடைத்து விடுவது அவர்களுக்கு மேலும் சௌகர்யமாகி விட்டது. படிப்பறிவே இல்லாத மகாகலைஞர்கள் இருக்கிறார்கள்.ஆனால் அவர்களுக்கு நம் சமூகத்தில் மரியாதை இல்லை.நான் சமீபத்தில் வில்லிசையை பற்றிய ஆய்வை மேற்கொண்ட போது ஒரு சிறு சந்தேகம் வந்தது. வில்லை மையப்படுத்தி ஒருவன் ஒரு போட்டியை வைத்திருப்பானா? இந்த வில்லை ஒடித்துவிட்டால் என்னுடைய பொண்ணைக் கட்டிக்கோவென்று எவனாவது ஒருவன் சொல்லுவானா? இங்கே ஏதோ ஒரு நெருடல் வருகிறது எனக்கு. இந்தச் சந்தேகம் ஒரு நியாயமான சந்தேகம். ஒரு முட்டாள், ஒரு முரடண் கூட ஒரு வில்லை வளைத்து விடலாம், தூக்கிவிடலாம். அப்போது சீதையை கட்டிக் கொடுத்து விடுவானா அவன்? ஏன் அவன் இந்த வில்லை மையப்படுத்துகிறான்?

நான் என்னுடைய தமிழ்ப் பேராசிரியர் மற்றும் பல பேரிடம் கேட்டேன். `கம்பன் மன்றம்' என்றே வைத்து நடத்திக் கொண்டிருக்கின்ற ஆட்கள். `திருவள்ளுவர் மன்றம்' என்று நடத்தி கொண்டிருக்கின்ற ஆட்கள் இப்படி போர்டு போட்டுக் கொண்டிருக்கிற பல பேராசிரியர்கள் இருக்கிறார்கள். அந்த ஊரில் அவர்கள்தான் புலமையானவராக, தன்னைக் காட்டிக் கொள்வார்கள். அவர்களிடமெல்லாம் போய் இந்த சந்தேகத்திற்கு விளக்கம் கேட்டேன். அப்படி கேட்டதற்கு `நீ யாரு?' `எங்க இருக்குற?' `இத தெரிஞ்சு நீ என்ன செய்யப் போற?' என்றார்கள். ஆக, தனக்குத் தெரியாது என்ற விஜயத்தை ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள். நான் கேட்கும் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய அவர்களுக்குத் தெரியவில்லை.

ஒரு கிராமத்தில் படிப்பறிவு இல்லாத ஆள். வயதான ஆள். ஆனா மகாபாரதத்தைக் கரைத்துக் குடித்தவர். அவர் இப்போது இறந்து விட்டார்.

தீராநதி : அவர் பெயர்?

சோ. தர்மன் : அவர் பெயர் வெங்கடாசலபதி. அவருடைய ஊரு வெங்கடாசலபுரம். அங்க அவரிடம் கேளுங்களேன் என்று சிலர் சொன்னார்கள். சரியென்று அவரை தேடிப் போனால் அவரிடம் சிலர் மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு கதை கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவருடைய வேலையே இதுதான். இது போல கதை சொல்லிகள் கிராமத்தில் நிறையப் பேர் இன்றைக்கும் இருக்கிறார்கள். அவர்களை தேடிப் போவோர்கள் வேண்டுமென்றால் இன்றைக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் அவர்களாகவே இப்போதும் இருக்கிறார்கள்.அவர்கள் மாறிப்போகவே இல்லை. அவரிடம் சென்று ``அய்யா எனக்கு இந்த மாதிரி ஒரு சந்தேகம்'' என்று சொன்னேன். என்னை உட்காரச் சொன்னவர் அந்த சந்தேகத்திற்கான விளக்கத்தை கம்பனுடைய வரியிலிருந்தே எடுத்துச் சொன்னார். ``சீதை ஒரு இடத்தில் மைதானத்தில் பந்து விளையாடிக் கொண்டிருப்பதாக காட்சி. அப்படி பந்து விளையாடிக் கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு வில் மைதானத்-திற்குள் கிடக்கிறது. இவள் அந்த வில்லை ஒத்தைக் கையால் எடுத்து தூரப் போட்டு விட்டு மறுபடியும் விளையாடுகிறாள். இதை ஜனகன் மேலிருந்து பார்க்கிறான். எவ்வளவு கனம் வாய்ந்த வில் இது. இதை ஒத்தைக் கையினால் எடுத்து இவள் தூரப் போடுகிறாளே? அப்போது இவளுக்கு எவ்வளவு பெரிய பலசாளி கணவனாக வரவேண்டும். இவளுக்கு சமமான மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்கவே அந்த வில்லை மையப்படுத்தி அந்தப் போட்டியை வைத்திருக்கிறான்'' என்று சொன்னார். அவரால் அதை விளக்க முடிகிறது. இன்றைக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் பேராசிரியர்களால் இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்ய முடியவில்லை. தமிழ்த் துறைத் தலைவன் என்கிறான்! தமிழ்த்துறைப் பேராசிரியர் என்கிறான்! விடிய விடிய பட்டிமன்றம் பேசுகிறான். அதே மாதிரி இன்னொரு சந்தேகம். வில்லிசை பற்றிய சந்தேகம். வில்லிசை பற்றி இதுவரை வந்த புஸ்தகத்தில் என்ன எழுதி இருக்கிறார்கள் என்றால் இந்தக் கலை இரண்டாயிரம் வருடம் முந்தியது என்று எழுதி இருக்கிறார்கள். போன மாதம் `செம்மல'ரில் கூட ஒருவர் எழுதி இருக்கிறார். இரண்டாயிரம் வருடத்திற்கு முந்தின இசைக்கலை என்று. இதில் என்னால் உடன்பட முடியவில்லை. நான் ஓரளவிற்கு சங்க இலக்கியங்களை எல்லாம் படிக்க ஆரம்பித்த பிற்பாடு அதில் எங்கும் வில்லிசையைப் பற்றின பதிவு என்பது எங்கேயுமே இல்லை. சிலப்பதிகாரத்தில் பதிவு செய்யப்படாத கூத்துக் கலைகளே கிடையாதே! எல்லாக் கூத்துகளையும் இளங்கோவடிகள் பதிவு செய்திருக்கிறாரே! அப்போது இவர்கள் வில்லிசையை பற்றிச் சொல்கின்ற காலகட்டங்கள் என்பது பொய்யா? அது கற்பனையா? அப்புறம் பைய தொல்காப்பியத்திற்குள் போகும் போது முதலில் தோன்றியது தோல் கருவிகள் என்று சொல்கிறார். அப்புறம் துளைக் கருவிகள். மூன்றாவதாகத்தான் நரம்புக் கருவிகளுக்கு வருகிறார். அப்போது இவர்கள் சொல்லும் காலகட்டம் எல்லாம் முதல் இரண்டிலேயே அடிப்பட்டு விடுகிறது.நரம்புக் கருவிகள் என்று வருகிற போதே ரொம்ப கிட்டத்திற்கு வந்து விடுகிறோம். சரி, இன்னும் கொஞ்சம் விசாரித்துப் பார்க்கலாம் என்று பேராசிரியர்களிடம் கேட்டால் தங்களுக்குத் தெரியவில்லை என்ற பதிலைத்தான் மறைமுகமாகச் சொல்கிறார்கள்.பிறகு நானே தொடர்ந்து முயற்சித்த போது பெரும்பாணாற்றுப் படையில் ஒரு வரி வருகிறது.

``குமிழின்/புழற்கோட்டுத் தொடுத்த மரற்புரி நரம்பின்/வில்யாழிசைக்கும் விரலெறி குறிஞ்சி'' (பெரும்பாண் 169-184) இந்த வரியைத் தவிர வேறு வரிகள் இருக்கலாம். ஆனால் நானறிந்த அளவில் இந்த ஒரு வரிதான் இருக்கிறது.அப்போது மேற்கொண்டு ஆய்வு செய்யும் போது வில்லிசை என்பது அவ்வளவு காலத்திற்கு (இரண்டாயிரம்) முந்தி தோன்றி இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. அது ஒரு பூர்வீகமான கலையும் அல்ல. தற்செயலாக உருவான இந்தக் கலைதான் பிற்காலத்தில் வில்லிசையாகப் பரிணமித்திருக்கிறது. ஏனென்றால், நிறைய கலைகள் விளையாட்டிலிருந்துதான் கூத்தாக மாறி இருக்கிறது. அது போன்றுதான் இந்தக் கலையும் உருவாகி இருக்கக்கூடும் என்ற முடிவுக்கு வந்தேன். இங்கே இன்னொன்றும் முக்கியம். எந்த ஆய்வும் இதுதான் இறுதியானது என்று சொல்லிவிட முடியாது. நாளைக்கு ஒரு ஆய்வாளன் வந்து தர்மன் எழுதி இருப்பது தப்பு என்று சொல்லலாம். அதற்குப் பெயர்தான் ஆய்வு. எல்லா ஆய்வுகளும் உண்மையை நோக்கித்தான் போகின்றன. அதில் என்னுடைய ஆய்வு என்பது கொஞ்சம் ஒருபடி கிட்டத்தில் போய் இருக்கிறது, அவ்வளவு தான். `நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்' போன்ற சில ஆய்வு மையங்களிலிருந்தெல்லாம் இது நல்ல ஆய்வென்று சொன்னார்கள்.

தீராநதி : வில்லிசையைப் பற்றி பல்வேறு அறிஞர்கள் வரலாற்று நூல்களை, பண்பாட்டு நூல்களை எழுதி இருக்கிறார்கள். சுப்பு ஆறுமுகம் கூட ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார். அதில் அவர் வேட்டைக் கருவியான கொலைக் கருவி, கலைக் கருவியான போதே வில்லிசை பிறந்தது என்ற கருத்தை வைக்கிறார்.வில்லிசைபற்றியபல ஆய்வுகள் புராணங்களோடு தொடர்புடையவனாக உள்ளன.நீங்கள்தான் முதன் முதலாக சமூகவியல் பார்வையிலான ஆய்வை வில்லிசையைப் பொறுத்த அளவில் மேற்கொள்கிறீர்கள். அதோடு இந்தக் கலை, நாட்டார்களின் மரபுவழி வந்த பண்பாட்டுக் கலை என்று ஒரு இன வரைவியல் தன்மையில் நோக்குகிறீர்கள்.கூடவே மார்க்சிய கருத்தியலின் படி ஆய்வை செலுத்தி இருக்கிறீர்கள். உங்களை அறியாமலே இந்த ஆய்வு மார்க்சிய நோக்கிலான ஆய்வாக வந்திருக்கிறதா? அல்லது அந்தத் தத்துவ புலத்தோடுதான் ஆய்வையே மேற்கொண்டீர்களா?

சோ.தர்மன் : சுப்பு ஆறுமுகம் சொல்வதைப் போல எந்த ஒரு கலையும் ஒரே நாளில் தோன்றிடவே முடியாது.பல்வேறு வகையில் வளர்ந்து வளர்ந்து இறுதியான ஒரு கலை வடிவத்திற்கு வர பல மாதங்கள் பல வருடங்கள் ஆகவே செய்யும். வில்லிசைக் கலையோடு சம்பந்தப்பட்ட உபகரணங்கள் முழுக்க முழுக்க பனையோடு சம்பந்தப்பட்டவை. சங்க இலக்கியத்தை நீங்கள் எடுத்துக் கொண்டால் எல்லாக் கூத்துகளுமே கள்ளுண்ட பின்பு நிகழ்த்தப்பட்டதாகவே வரும். கவனிக்க வேண்டியது இது. இப்படியே போகும்போது தான் அந்த ஆய்வு தவிர்க்க முடியாமல் இனவரைவியலுக்குச் சென்றது. தவிர்க்க முடியாத ஒன்று அது. எல்லாவற்றையும் கூட்டிக் கழித்து பார்க்கும்போது அந்த இடத்திற்குதான் என்னால் வர முடிந்தது. ஏனென்றால், நாடார் சமூகம் என்பது ரொம்பக் கடுமையான உழைப்பாளிகள் நிறைந்த சமூகம். பனையேறுவது என்பது சாதாரண தொழில் இல்லை. உடலிலுள்ள அத்தனை உறுப்புகளும் இயங்கக் கூடிய ஒரு வேலை பனையேறுதல் என்பது. அவர்களால் கள்ளுண்ணாமல் இருக்கவும் முடியாது. அவர்களால் பாட்டுப் பாடாமல் இருக்கவும் முடியாது. அவர்களுடைய தனிமை என்ற ஒன்று இருக்கிறது பாருங்கள். அவர்கள் காட்டிற்குள் தான் இருக்க வேண்டும். ஆறு மாதத்திற்கு காட்டை குத்தகைக்கு எடுத்து விடுவார்கள். இந்தப் பனைத் தொழில் மாதிரி நேரம் தவறாமையான தொழில் வேறு எதுவும் இருக்க முடியாது. நாம் ஒரு சொட்டு பதநீர் குடிக்கிறோம் இல்லையா, அதற்காக அச் சமூகத்து மக்கள் படுகின்ற பாடு இருக்கிறதில்லையா, அதுவெல்லாம் இன்னும் இலக்கியத்தில் பதிவு செய்யப்படவே இல்லை. காலையில் ஒரு பனையேறி மரத்தில் ஏறி பனையின் பாளையை சீவி விட்டு விட்டு கலையத்தைக் கட்டிவிட்டு வருவார். மதியமும் அவர் அதே குறிப்பிட்ட நேரத்திற்குப் போக வேண்டும். அதே போல சாயுங்காலமும் அவர் போக வேண்டும். அப்படி; தொடர்ந்து போய் பாளையை சீவாவிட்டால்,இரண்டு நாள் தொடர்ந்து அவர் வெளியூர் போய்விட்டால் பாளையின் கண் அடைத்து அதில் பனங்காய் திரண்டு விடும். அதற்குப் பிறகு அந்தப் பனையில் இவரால் கள் இறக்க முடியாது. பதநீர் இறக்க முடியாது. ஆக, பிணையல் மாதம் மாதிரி அந்தப் பனை காட்டிற்குள்ளாகவே ஒரு குடிசையை அமைத்துக் கொண்டு அந்தப் பனைக்கு அடியிலேயேதான் கண்காணித்துக் கொண்டு கிடக்க வேண்டும். இவர் வெளியூர் செல்ல நேர்ந்தால் மாற்று ஆளை நியமித்து விட்டுதான் செல்ல முடியும். அப்படியான ஒரு தொழில் அது. அவ்வாறு கண்காணித்து தான் ஒரு சொட்டு பதநீரை இவர்களால் இறக்க முடியும். இவ்வளவு கஷ்டமான தொழில்தான் அவர்கள் பார்க்கக் கூடிய தொழில். அந்த ஆறுமாதம் ஊரை விட்டு அவர்கள் தனிமைப்படும்போது அவர்களுக்கான பொழுது போக்கு என்ன இருக்கிறது? எதுவுமே கிடையாது. அந்தச் சமயத்தில் வில்லிசை என்பது அவர்களின் பொழுதுபோக்குக் கலையாக பரிணமித்திருக்கிறது என்ற கோணத்தில் என்னுடைய ஆய்வை நான் கொண்டு போய் இருக்கிறேன்.

தீராநதி : இங்கே பனைக்கும் வில்லிற்கும் எந்த இடத்தில் சம்பந்தம் வருகிறது?

சோ.தர்மன் : வில்லிசையில் பயன்படுத்தப்படுவது மொத்-தம் ஐந்து உபகரணங்கள். இப்போது வரை வில்லிசைக்குப் பயன்படுத்தப்படும் வில்லை கூந்தப்பனையில்தான் செய்கிறார்கள். அந்த வில்லை வளைத்து வில்லின் இரு புறமும் இணைத்துக் கட்டியிருக்கும் கயிறு பனையின் நாரினால் செய்யப்பட்டது. வில்லிசையில் பிரதான வாத்தியமாக பயன்படுவது மண் பானை குடம்தான். அந்தக் குடம் நாடார்கள் கள்ளிறக்கப் பயன்படுத்தும் மண் கலையம்தான். குடத்தை அடிக்கும் பட்டை பனையிலிருந்து கிடைப்பதுதான். பானையின் கீழே இருக்கும் பிறுமனை அதுவும் பனை சில்லடை தான். அவன் அடிக்கும் வீசுகோல் மாட்டிற்குப் பயன்படுத்துவது. வில்லில் கட்டி இருக்கும் சலங்கை மாட்டின் கழுத்தில் கட்டி விடும் நார்த்தங்காய் சலங்கை என்று சொல்வார்களே அதே தான். ஐந்தே ஐந்து வாத்தியங்கள் முதலில் இருந்தது. பிச்சைக் குட்டி மாதிரியான ஆட்கள் வந்து கொஞ்சம் நவீனப்படுத்திய பிற்பாடுதான் ஆர்மோனியம், தபேலாவையெல்லாம் உள்ளே கொண்டு வருகிறார்கள்.நவீனப்படுத்துவதற்கு அவர்களுக்கு அவை தேவைப்பட்டிருக்கின்றன.

தீராநதி : சரி, உங்களின் வாதப்படியே பார்த்தால் முதலில் நாடார் மக்களின் இசைக் கலையாக இருந்த ஒன்று பிறகு எப்படி பிச்சைக்குட்டி போன்ற இசை வேளாளர் என்று குறிக்கப்படுகின்ற சைவப்பிள்ளைமார்களின் இசைக்கலையாக மாறியது?

சோ.தர்மன் : பிச்சைக்குட்டிதான் முதன் முதலில் அந்தக் கலையை கையில் எடுக்கிறார். அவருக்கு முன்னால் இருந்த அத்தனை வில்லிசைக் கலைஞர்கள் நாடார் சமூகத்திலிருந்துதான் உருவாகி இருக்கிறார்கள்.வில்லிசை என்பது வெளியில் பிரபலமடையாமல் இருந்ததற்கு காரணம் என்னவென்று பார்த்தால் நாடார் சமூகம் என்பது ரொம்ப ரொம்பத் தீண்டப்படாத சமூகமாக இருந்ததினால்தான். திருவிதாங்கூர் சமஸ்தான வரலாற்றை எல்லாம் நாம் படித்துப் பார்த்தால் அந்தச் சமுதாயத்தை மாதிரி அடிமைப்படுத்தப்பட்ட சமுதாயம் வேறு எதுவுமே இல்லை என்று சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு அவர்களை தனிமைப்படுத்தி வைத்திருந்தார்கள்.அவர்கள் சார்ந்திருந்த தொழிலும் அப்படித்தான் இருந்தது. ஊரை விட்டு காட்டில் தனித்திருந்து தொழில் செய்ய வேண்டும்.

தீராநதி : உங்களுக்குத் தெரிந்த அளவில் எப்படி எல்லாம் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் அம்மக்கள்?

சோ.தர்மன் : தோள் சீலைப் போராட்டம் என்ற பெரிய போராட்டமே இருந்திருக்கிறதே? வள்ளியூர் பக்கத்தில் ஏதோ ஒரு சந்தை இருக்கிறது. தாலி அறுத்தான் சந்தை என்றுதான் அதற்குப் பெயர். தோள் சீலை அணியக்கூடாது என்பதை மீறி இந்தச் சமூக மக்கள் தோள்சீலை போட்டுக் கொண்டு போன போது `எப்படி நீ சட்டை போடலாம்' என்று பிடித்துக் கிழிக்கும் போது தாலியையும் சேர்த்து அறுத்து விடுவான். மிகப் பெரிய வரலாறு இருக்கிறது இதற்கு. பதிவும் செய்திருக்கிறார்கள். கூரை வீட்டில்தான் அவர்கள் வசிக்க வேண்டும். இன்றைக்கு ஊர் உலகம் முழுக்க அவர்கள் கையில் தான் வியாபாரம் இருக்கிறது. ஆனால் அன்றைக்கு இவர்கள் வியாபாரம் செய்யும் காசை கீழே வைத்துவிடவேண்டும். கடைக்காரர் பொருளை வைத்த பிற்பாடு இவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். கையிலிருந்து நேரடியாக வாங்க முடியாது. அத்தனையும் மீறி இன்றைக்கு தங்களின் கடின உழைப்பின் மூலமாக நல்ல ஒரு அடையாளத்திற்கு வந்திருக்கிறார்கள். அதுவரை காட்டிற்குள்ளாகவே நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்த கலை, கோயிலுக்குள் வரவே இல்லை. காட்டிற்குள் இருக்கும் போது அவர்களின் கதை எப்படி இருந்திருக்கும் என்றால், நாடார் மக்கள் செய்த வீர தீரச் செயல்கள். பனைமரத்திலிருந்து கீழே விழுந்து மரணமுற்றவர்களின் கதைகள். அவர்கள் பட்ட கஷ்டங்கள். அபரிமிதமான லாபங்கள் இவைகளை மையமாக வைத்து பாட்டு படித்து கொண்டிருந்தார்கள். வில் என்பது இசை கருவியே இல்லையே? அது ஒரு போர்க்கருவி.

இப்படியே கால வளர்ச்சியடையும் போது அச்சமூதாயமும் தன்னை நிலை நிறுத்தும் அளவிற்கு வரும் போது அக்கலை, காட்டை விட்டு வெளியில் வருகிறது. ஏனென்றால், அவர்களுக்கு அதற்குமுன் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. பத்திரகாளி கோயில் அவர்கள் உருவாக்கிய கோயில் தெரியுமா உங்களுக்கு? அப்போது எங்களுக்கென்று ஒரு தெய்வத்தை உருவாக்கிக் கொள்கிறேன் என்று அவர்கள் உருவாக்கிய தெய்வம் பத்திரகாளி. இதே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் மூக்க நாடாரை வெட்டிக் கொல்கிறார்கள், கோயிலுக்குள் போனதற்காக. மூக்க நாடாரை வெட்டிக் கொல்லப்பட்ட இடம் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் போனால் யாரும் காட்டுவார்கள். இருளப்ப நாடாருக்கும் சேதுபதி மன்னருக்கும் இடையே நடந்த கோர்ட் வழக்குகளை எடுத்தோம் என்றால் இரண்டு வால்யூம் போடலாம். இருளப்ப நாடார் க்ஷிs சேதுபதி மன்னருக்கும் நடந்த வழக்குகளை எடுத்தீர்களென்றால் இதே தான். லண்டன் பிரிவிவ் வரைக்கும் போகிறார்கள். நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல. லண்டன் பிரிவிவ் வரைக்கும் என்ன தீர்ப்பு வருகிறது? அதற்கு முன் அவர்களை என்ன காரணத்திற்காக தீண்டத்தகாதவர்களாகச் சொல்கிறார்கள் என்று பார்த்தால் அது ஒரு வேடிக்கையான விஷயம். `நீ வந்து போதைப் பொருளை உருவாக்குபவன். போதையை உண்பவன். இந்து தருமத்தின்படி இது இரண்டும் தப்பு. ஆகவே, கோயிலுக்குள் உனக்குஅனுமதி கிடையாது.'' இதைத்தான் சொல்கிறான் பிரிட்டீஷ்காரன். அப்போது இவர்கள் ``நாங்கள் இப்போது அந்தத் தொழிலை செய்யவில்லை. நாங்கள் அந்தத் தொழிலை விட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது'' என்று இவர்கள் பதில் மனுதாக்கல் பண்ணுகிறார்கள். ``நீ அந்தத் தொழில்தான் பார்க்கிறாய்'' என்று அந்த மனுவை தள்ளுபடி பண்ணிக் கொண்டே வருகிறான்.

இந்த விஷயத்தில் ஓரளவுக்கு பிரிட்டீஷ்காரர்கள் நியாயமாகவும் நடந்திருக்கிறார்கள்.பக்கத்தில்ஓட்டப்பிடாரம்என்றவ.உ.சிதம்பரம்பிள்ளையினுடைய ஊர்.கோவில்பட்டியில் முன்பு தாலுகா அலுவலகம் கிடையாது.தாலுகா அலுவலகம் பிரிட்டீஷ் காலத்தில் ஓட்டபிடாரத்தில்தான் இருந்தது. கோவில்பட்டியிலிருந்து இரண்டு எஸ்.சி.கள் அந்த தாலுகா ஆபீஸுக்கு வேலைக்குப் போகிறார்கள். தினமும் `லேட்டாக' போகிறார்கள். தாசில்தார் ரேங்கில் இருந்த துரை ``ஏன் நீ தினமும் லேட்டாக வருகிறாய்'' என்று இவர்கள் இருவரையும் கேட்கிறான். அதற்கு இருவரும் ``நாங்கள் கோவில்பட்டியிலிருந்து தினமும் வருகிறோம் துரை'' என்கிறார்கள். ``ஏன் இங்கேயே வீடு பார்த்துத் தங்க வேண்டியதுதானே''என்றதற்கு ``எங்களுக்கு யாரும் இங்கே வீடு கொடுக்கமாட்டேன் என்கிறார்கள்.'' ``ஏன் கொடுக்கமாட்டேன் என்கிறார்கள்'' என்று துரை மறுபடியும் கேட்க, ``நாங்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். இங்கே பிள்ளைமார் சாதியர்களின் ஆதிக்கம் அதிகம். அதனால் வீடு கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்'' என்று இருவரும் பதில் தர, `இது உண்மையா என்று விசாரி' என்று ஒரு அதிகாரிக்கு உத்தரவிடுகிறார் துரை. அதிகாரி சென்று விசாரித்து கொண்டு வந்து ``உண்மை.அவர்களுக்கு வீடு இங்கு மறுக்கப்படுகிறது'' என்று சொன்னவுடனேயே துரை எழுதுகிறான் ``நாளையிலிருந்து ஓட்டபிடாரத்திலுள்ள தாலுக்கா ஆபீஸ் கோவில்பட்டிக்கு மாற்றப்படுகிறது'' என்று, அப்போது அங்கிருப்பவர்கள் எல்லாம் கோவில்பட்டிக்கு பஸ்ஸில் வர ஆரம்பிக்கிறார்கள். கோவில்பட்டிக்கு அப்படி வந்ததுதான் இந்த தாலுகா ஆபிஸ். இதற்கு எந்த வருடம். எந்தத் தேதி என்பதற்கு ஆவணங்கள் எல்லாம் இருக்கிறது. பிரிட்டீஷ்காரன் இது மாதிரி பிரச்னைக்குள் போகவே மாட்டான். நியாயம் தர்மம் எல்லாம் சொல்லவே மாட்டான்.

தீர்த்தம் என்று சொல்கிறோம் இல்லையா. அப்படி தீர்த்தம் பிடிப்பதில் ஒரு தகராறு வருகிறது. இரு கோஷ்டிகக்குள் நான் தான் முதலில் தீர்த்தம் பிடிப்பேன் என்று தகராறு எழுந்து,இருதரப்பினரும் அரிவாள் கம்புகளுடன் வருகிறார்கள். கோர்ட்டிற்குப் போகிறது வழக்கு. பிரிட்டீஷ்காரன் தீர்த்தம் என்றால் என்னவென்று கேட்கிறான். அப்போது அவர்கள் விளக்குகிறார்கள். உடனே நீதிபதி ஒரே குழாயில் இரண்டு வழிகளை வைத்து இருதரப்பினரையும் ஒரே சமயத்தில் பிடித்துக் கொள்ளச் சொல் என்று தீர்ப்பு வழங்கி விடுகிறான். அதே மாதிரி சாதாரணமான ஒரு பெண் ஷமீன் கூட உறவு வைத்து கள்ள உறவில் ஒரு குழந்தையைப் பெறுகிறாள். அந்த மன்னர் யார்? அந்தப் பெண் யார் என்பதற்குள் நாம் போக வேண்டாம். அந்தப் பெண் லண்டன் பிரிவிவ் வரைக்கும் இந்த ஷமீனை வழக்குக்கு இழுக்கிறாள். மேற்படி இவர் மூலமாக எனக்கு இந்தக் குழந்தை பிறந்தது. எனக்கான எதையும் இவர் கொடுக்கவில்லை என்று கோர்ட்டில் வாதாடுகிறாள். இது முறை தவறி பிறந்த குழந்தை ஆகையால் எதுவும் கிடையாது என்று தீர்ப்பாகிறது. நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் ஒரு சாதாரண ஏழைப் பெண் நீதி கேட்டு லண்டன் வரை அவளால் போக முடிந்திருக்கிறது அன்றைக்கு. இன்றைக்கு உள்ள நிலவரப்படி ஒரு சாதாரண ஒன்றிய கவுன்சிலர் மீது போய் தைரியமாக கம்ப்ளைண்ட் கொடுக்க முடிகிறதா நம்மால்? அப்படிக் கொடுத்தால் மறுநாளே மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி விடுகிறான்.

தீராநதி : நான் கேட்ட கேள்வி, எப்படி பிள்ளைமார் சமூகத்திற்கு இக்கலை கைமாறியது என்பதை பற்றி?

சோ.தர்மன் : பிச்சைக்குட்டி பிள்ளையின் குருவான அய்யம்பிள்ளை தான் முதலில் வில்லிசையை கோயிலுக்குள் நிகழ்த்தப்படும் ஒரு கலையாக கொண்டு வந்து பெருமை சேர்க்கிறார். கிராமியக் கலைகள் பலவற்றை அய்யம்பிள்ளை பெருதெய்வ வழிபாட்டிற்குள் கொண்டு வருகிறார். ஒரு நல்ல கலை எங்கு நடத்தப்பட வேண்டுமோ அங்கு மறுக்கப்படுகிறது. அது கூடாது என்று சொல்லி அவர் அதை கையில் எடுக்கிறார். அப்படி வரும் போது ஐம்பெரும் காப்பியங்களான அத்தனையையும் வில்லிசைக்குள் கொண்டு வருகிறார்கள். பிச்சைக்குட்டி பிள்ளை தொழிற்சங்க வாதியாக இருந்தவர். ஒரு கம்யூனிஸ்ட்டாக இருந்தவர். ஹோமியோபதி டாக்டராக இருந்தவர். அதற்குப் பிறகு சாத்தூரிலுள்ள ஆயிரம் வைசிய மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக இருந்தவர்.அதை எல்லாவற்றையும் ரிசைன் பண்ணிவிட்டு முழுநேர வில்லிசைக் கலைஞராக மாறுகிறார்.

தீராநதி : வியாபார ரீதியாக, அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக நாடார்கள் அடைந்த வளர்ச்சியின் அளவிற்கு இலக்கிய ரீதியான வளர்ச்சி என்பது அவர்களிடத்தில் நடந்திருக்கிறதா?

சோ. தர்மன் : நாம் ரொம்ப ரொம்ப தவறாக அதைப் புரிந்து கொண்டிருக்கிறோம். இன்றைக்கு தமிழ் நாட்டில் எழுதிக் கொண்டிருக்கின்ற எழுத்தாளர்களில் பலர் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நீங்கள் கவனமாகப் பதிவு செய்ய வேண்டும். அவர்கள்தான் அதிகம். நமக்குத் தெரியாமல் இருக்கிறது. ஆனால் நாம் ஐயர் எங்கே இருக்கிறார்கள் என்று தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இவர்களோடு ஒப்பிடுகையில் ஐயர் எழுத்தாளர்களே இன்றைக்கு இல்லை. ஆனால் அவர்களை விமர்சித்தே நாம் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் சொல்லப் போனால் இன்றைக்கு தலித் எழுத்தாளர்களே கம்மி.

தீராநதி:இதுவரை தமிழில் பதிவாகியுள்ள தலித் இலக்கியங்கள் என்று பறைசாற்றப்படுகின்ற எந்த எழுத்துமே என்னை ஆகர்ஷிக்கவில்லை என்று எழுதி இருக்கிறீர்கள். தலித் கதையாடலை, தலித்தின் தனித்தன்மையை தலித் சமூகச் சித்திரங்களை கலாபூர்வமாக சித்திரித்து சிருஷ்டிக்கும் ஒரு உன்னதக் கலைஞன் இனிமேல்தான் வர வேண்டும் என்று முன்பு ஒருமுறை எழுதி இருந்தீர்கள். மேற்சொன்ன இந்த மூன்று நாவல் குறித்தும் கலா பூர்வம் இல்லை என்கிறீர்கள். நீங்கள் சொல்லும் கலா பூர்வம் என்பதன் அளவீடு என்ன?

சோ. தர்மன்: நீங்கள் கேட்டிருக்கும் கேள்வி ரொம்ப ரொம்ப முக்கியமான கேள்வி. கலாபூர்வமான சிருஷ்டி என்பது என்னவென்றால் கதை எல்லோருக்கும் தெரியும். கதை தெரியாத ஆட்களே கிடையாது. அந்தக் கதையை எழுதுவதற்கும் எல்லோருக்கும் தெரியும். அதைக் கலாபூர்வமாக எழுதுவதற்கு எழுத்தாளனுக்கு மட்டும்தான் தெரியும். அந்த எழுத்தாளன் என்பவன் யார்? முதலில் உதாரணத்திற்கு புதுமைப்பித்தனின் ஒருகதை. அவர் எழுதுகிறார் : ``வாய்க்காலில் ஓடிய தண்ணீரில் குழந்தை தன்னுடைய கால்களை முக்கி விளையாடிக் கொண்டிருந்தது. கால்களை முக்கி முக்கி விளையாடியபோது தன் காலில் அணிந்திருந்த வெள்ளிக் கொலுசு சூர்ய ஒளி பட்டு மின்னியது. இப்போது குழந்தை கால்களை தண்ணீருக்குள்ளேயே வைத்துக் கொண்டது.'' இந்த மூன்று வரிகளையும் எழுதிவிட்டாரா? அப்புறம் மேற்கொண்டு அடுத்த வரியை எழுதுகிறார். ``அப்புறம் என்ன? ஆணானப்பட்ட சூர்யபகவான் குழந்தையின் கால் தரிசனத்திற்காக காத்திருந்தார்.'' இதுதான் கலாபூர்வம்.

இன்றைக்கு இந்த மாதிரி கலாபூர்வமான எழுத்தில் நம்பர் ஒன் யார் என்றால் மா.அரங்கநாதன். தமிழ்ச் சிறுகதையில் சமகால சாதனையாளர் யாரென்றால் மா. அரங்கநாதனைதான் நான் சொல்வேன். இன்றைக்குப் பேசுகிறார்கள் தலித் கதை, தலித் கதை என்று... எத்தனை தலித் கதைகளை மா. அரங்கநாதன் எழுதி இருக்கிறார் தெரியுமா? தலித் எப்படி உருவானான் என்று எழுதி இருக்கிறார். தொழில் ரீதியாக எப்படி ஷாதியைப் பிரித்தார்கள் என்று எழுதி இருக்கிறார். அவருடைய `உவரி' என்று ஒரு கதை. டூர் வருகின்ற பஸ் ஒன்று உவரி என்ற கிராமத்தின் பக்கத்தில் வரும்போது பிரேக் டவுண் ஆகி விடுகிறது. அப்போது ஒரு தம்பதி பச்சைக் குழந்தையை கையில் எடுத்துக் கொண்டு வந்து ``பக்கத்தில் கடை எங்கிருக்குங்க... குழந்தை அழுகிறது. பால் வாங்கிக் கொடுக்க வேண்டும்'' என்று எதிரில் வருகின்ற ஒரு விவசாயிடம் கேட்கிறார்கள்.

நல்ல மதிய நேரம். உடனே அவர் சொல்கிறார். ``இந்த வெயிலிலாம்மா போகப் போறீங்க. பாவம் அந்தக் குழந்தை என்ன பாடுபடும். இந்தாங்க இந்தத் துண்டை போத்திக்கிடுங்க. நான் இந்த மரத்தடியில்தான் நிற்பேன் பிறகு வரும்போது துண்டைக் கொடுங்க'' என்று கொடுக்கிறார். இதுவரை கதை. அப்போது இருவரும் போன பின்பு விவசாயி சொல்வதாக எழுதுகிறார். ``இந்த ஊர்லதான் முதன் முதல்லா சாலமன் வந்து இறங்கினானாம். இந்த ஊர்ல இறங்காம, வேற எந்த ஊர்ல இறங்குவான்'' என்று எழுதுகிறார். இந்த இரண்டு வரியில் சாலமன் பற்றிய பெரிய ஹிஸ்டரியை அப்படியே கொண்டு வந்து இறக்குகிறார் இல்லையா, இதான் கலாபூர்வம். அதற்குப் பிறகும் கதை நமக்குள் ஓடிக்கொண்டே இருக்கும்.

அதேபோல ``சிலுவையில் தொங்கிய ஏசு கிறிஸ்துவை வழிபட்டுக் கொண்டிருந்த முத்துக்கருப்பனை ஷன்னல் வழியாக ஃபாதர் பார்த்தார். நேரடியாக போய் ``யாரப்பா நீ'' என்றார். முத்துக்கருப்பன் சொன்னான் ``சாமி ஸ்தோத்திரம். நான் சுசீந்திரன் தானுமலையானை தரிசித்துக் கொண்டிருந்தேன். தானுமலையானை தரிசிக்கும்போது அங்கு எனக்கு கர்த்தர் தரிசனம் தந்தார். நேரடியாக கோத்தாறு வந்துவிட்டேன்'' என்று சொன்னான். அப்போது ஃபாதர் சொன்னார். ``இனிமேல் நீ வழிபட வேண்டியது தானுமலையானை அல்ல; கர்த்தரைத்தான்'' என்றார்.

முத்துக்கருப்பன் சொன்னான். ``ஃபாதர் நான் இப்போது கர்த்தரை வழிபட்டுக் கொண்டிருக்கும்போது தானுமலையான் அல்லவா தெரிகிறார்'' என்று எழுதுகிறார். இது கலை. இது மாதிரி நான் முயற்சி பண்ணி இருக்கிறேன். அதில் நான் தோற்று இருக்கலாம். போர் ஹே எழுதுகிறார். புலி, கடவுளிடம் போய் சாகா வரம் கேட்டது. கடவுள் சொன்னார். முடிந்தால் கவி தாந்தேயிடம் போய்க் கேள். நீ கேட்கும் வரம் சாத்தியமாகலாம் என்கிறார். புலி தன் கம்பீரமான நடையை கவி தாந்தேவிடம் காட்டி விட்டு சுருண்டு படுத்துக் கொண்டது. கவி தாந்தே புலியின் கம்பீரத்தையும் அதன் வரிக் கோடுகளையும் தன்னுடைய கவிதையின் ஒரு வரியில் பதிவு செய்தார். புலி சாகா வரம் பெற்றது. என்ன சொல்கிறார். கவிதைக்குதான் சாகவரம் உண்டென்கிறார். இதான் கலாபூர்வம் என்பது.

தீராநதி:இப்படி முடிவற்ற ஒரு வரிக்காக கலையை ரசிப்பது என்பதை சுந்தரராமசாமி செய்திருக்கிறார்.தேவதச்சன் கவிதைகளில் அசாத்தியமாக செய்திருக்கிறார்.ஆனால் பலருடைய நாவல்களில் கலாபூர்வம் இருந்தால் விஷயம் இல்லை. விஷயம் இருந்தால் கலாபூர்வம் இல்லை. இந்தச் சிக்கலை எப்படி அகற்றுவது?

கோ.தர்மன்:விஷயம் இல்லாமல் கலாபூர்வம் செய்தோமானால் அந்தரத்தில் நிற்கும். அதற்கு சரியான உதாரணம் - யுவன் சந்திரசேகர், ஜெயமோகனிடம் கதைக்கான விஷயங்கள் நிரம்பவே இருக்கும். அவரை நிராகரிக்கவெல்லாம் முடியாது. கரிசான் குஞ்சு எழுதுகிறார். செத்த மாட்டை விட்டு விலகி ஓடி விடும் உண்ணிகளைப் போல் அவனுடைய நண்பர்கள் அவரை விட்டுப் போய்விட்டார்கள் என்று எழுதுகிறார். இந்த உதாரணத்தை யார் எழுத வேண்டும். இன்றைக்கு கூப்பாடு போடுகின்ற தலித்துக்கள் அல்லவா எழுத வேண்டும். நான் இன்று அந்த ஒரு வரியை படிக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது.

தீராநதி : நெடிய கல்வி பாரம்பரியமுள்ள சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மொழியைக் கையாளுவதற்கும், இப்போதுதான் கல்வியறிவை பெற்று எழுத வந்திருக்கின்ற தலித்துகள் மொழியை கையாளுவதற்கும் வேறுபாடு இருக்குமல்லவா?

சோ.தர்மன் : நீங்கள் குறிப்பிட்டுச் சொல்லும் கருத்து சரியானது. இதுபற்றி நிறைய இடங்களில் நானும் விவாத்திருக்கிறேன்.தலித் எழுத்துகளுக்கு எந்த முன்மாதிரியுமே இல்லை. ஆனால் மற்ற எழுத்துக்கு நீண்ட பாரம்பர்யம் இருக்கிறது. ஆனால் எத்தனை நாளைக்கு முன்மாதிரி இல்லை, இல்லை என்றே சொல்லிக் கொண்டிருக்க முடியும்?

தீராநதி : இலக்கியத்திற்குள் தலித்தியம் என்பது ஒரு சங்கம் கட்டுவதைப் போல மாறிவிட்டது. இதைச் சொல்வதினால் கோபிப்பவர்களும் இருக்கிறார்கள். எந்தப் படைப்பும் ஒரு அமைப்பை நிறுவுவதற்காக உருவாக்கப்படும் போக்கு ஆரோக்கியமானதா?

சோ. தர்மன் : அண்டம் முழுவதுமே படைப்புக்கான கருவாக இருக்கும்போது நான் குறிப்பிட்ட ஒன்றை மட்டும்தான் எழுதுவேன் என்றால் நீ உன்னை சுருக்கிக் கொள்கிறாய் என்றுதான் அர்த்தம். இன்றைக்கு வாசகன் என்பவன் எழுத்தாளனைக் கடந்து விஷய ஞானம் உள்ளவனாக மாறிவிட்டான். அப்போது சொல்கின்ற முறையில்தான் அவனைப் படிக்க வைக்க முடியும். என்னுடைய `கூகை' கதையின் பிற்பகுதியில் அந்தப் புனைவை நான் செய்திருக்கிறேன். அதில் சிலரின் பார்வையில் நான் ஒருவேளை தோற்று இருக்கலாம். அது எனக்கு கௌரவமான தோல்வி.

தீராநதி : ஊருக்குள் எப்படி ஒதுக்குப் புறமாக சேரிகளை உண்டாக்கி கொடுத்திருக்கிறார்களோ அதேபோல தான் தலித் இலக்கியம் என்பதை இலக்கியத்திற்குள் ஒரு ஓரமாக `காலனி'போன்று உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.எங்கள் எழுத்தையும் பொது இலக்கியம் என்ற வரையறைக்குள்ளாகவே வகுக்க வேண்டும் என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இதுபோல குழப்பங்கள் ஏன் நிலவுகிறது?

சோ. தர்மன் : நான்கு மாநிலங்கள் கூடி ஏற்பாடு செய்திருந்த சாகித்திய அகாதெமி கூட்டத்தில் பதினைந்து வருடங்களுக்கு முன்பாகவே ``என்னை பிறப்பால் வேண்டுமென்றால் தலித் என்று குறிப்பிடுங்கள். ஆனால் எழுத்தால் என்னைப் பிரிக்காதீர்கள்'' என்றேன். இலக்கியத்தில் என்ன இட ஒதுக்கீடு என்று கேட்-டிருக்கிறேனே. ஆனால் மற்ற எல்லோருமே தன்னை தலித் எழுத்தாளர் என்று சொல்லிக் கொண்டுதான் எழுதினார்கள்.இன்றைக்கு அவர்கள் தலித் அங்கீகாரத்தை அழிப்பதற்கு என்ன காரணமென்றால் தலித் இலக்கியம் பின் தங்கி விட்டது.

தீராநதி: அப்போது 90களிலிருந்து வெளிவந்திருக்கும் ஒரு தலித் படைப்பு கூட உங்களை கவரும்படியாக இல்லையா?

சே.தர்மன் : இதுவரைக்கும் கிடைத்த தலித் இலக்கியங்கள் எனக்குச் சொன்ன விஷயங்கள் இவை : தலித் என்றால் எண்ணெயே தேய்க்காமல் பரட்டைத் தலையோடு இருப்பான். எதற்கெடுத்தாலும் கோபப்படுவான். சண்டை போடுவான். தலித் பொம்பளை என்றால் அவள் லேசாக சோரம் போவாள். தலித்துகளை லேசில் ஏமாற்றிவிடலாம். இதை மீறி என்ன கொடுத்திருக்கிறது தலித் எழுத்துக்கள்? தலித் பண்பாட்டைக் கொடுத்திருக்கிறதா? தலித்தினுடைய பாஷையையாவது கொடுத்திருக்கிறார்களா? இவர்கள் எழுத்தில் பேசும் தலித் பாஷையே போலியானது.

Wednesday, May 14, 2008

இலக்கியவாதிகள் தான் விஞ்ஞானிகளுக்கு யோசனை சொல்லவேண்டும்.- நம்மாழ்வார்


தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பகுதியிலுள்ள இளங்காடுதான் நம்மாழ்வார் பிறந்த ஊர். அண்ணாமலை, பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., அக்ரி பட்டப்படிப்பு படித்தவர். கோவில்பட்டி மங்கல வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் ஆறு ஆண்டுகள் பணி செய்த இவர், இயற்கை வழி விவசாயத்திற்காக பணியைத் துறந்தார். பிறகு நோபல் பரிசு பெற்ற dominique pyre என்பவரின் நிறுவனத்தில் (களக்காடு) பணியில் சேர்ந்தார். ஐரோப்பிய நாடுகள் முழுக்க பயணம் செய்தவர் நம்மாழ்வார். நம் நாட்டு வேப்பிளைக்கான காப்புரிமையை பெற ஜெர்மனியில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடி மீட்டு, வென்று வந்தவர். இதுவரை Leisa, kudumbam உள்ளிட்ட 250க்கும் மேலான என்.ஜி.ஓ.க்களை உறுவாக்கியவர். எழுபது வயதை எட்டியிருக்கும் நம்மாழ்வாரை திருச்சி திருவானைக்கோயிலில் உள்ள அவரது வீட்டில் தீராநதிக்காக சந்தித்தோம்.

தீராநதி : பூமி சூடாகி விட்டது. பருவ காலங்களில் பெருத்த மாறுதல்கள் உண்டாகிவிட்டன. இதனால், தன் இயல்பான தன்மையிலிருந்து பல்வேறு மாறுதல்களை உயிரினங்கள் சந்திக்கப் போகின்றன. உணவுகளில் ஊட்டச்சத்து இல்லை. சுகாதாரக் கேடு அளவுக்கு அதிகமாக அத்துமீறிப் போய்க் கொண்டிருக்கிறது என்று தினம் தினமும் பல்வேறு அதிரடிச் செய்திகள் தினசரிகளில் சூழலியல் பற்றி வெளி வந்து கொண்டே இருக்கின்றன. மக்களும் வழக்கமாக படித்து விட்டு வழக்கம் போல் உண்டு உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே நாம் எந்த அளவுக்கான அபாயச் சூழலில் இருக்கின்றோம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

நம்மாழ்வார் : இப்போது கிட்டத்தில் சந்தித்த செய்தி படிக்கிறேன் கேளுங்கள் : ‘‘அழுகிய நெற்பயிற்களை அகற்ற டபுள் செலவு _ மத்தியக் குழுவிடம் நெல்லை விவசாயிகள் வேதனை.’’ ஒன்று : நெல்லிலிருந்து விவசாயிக்கு வர வேண்டிய வருவாய் போய்விட்டது. இன்னொன்று: அழுகினதை அள்ளிப் போட்ட பிறகு நிலத்தைச் சுத்தம் செய்ய வேண்டிய கூடுதலான வேலையன்று வந்து சேர்ந்திருக்கிறது. இது வரைக்கும் நம் மாநிலத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் எல்லாம் மழையே பெய்தது கிடையாது. இது கோடைகாலம். நல்ல வெயில் அடிக்க வேண்டிய காலம். வெயில் அடிக்க வேண்டிய காலத்தில் மழை கொட்டுகிறது. அப்போது இது எதைக் காட்டுகிறதென்றால், பருவகாலங்கள் மாறிப் போய்விட்டதைக் காட்டுகிறது. இன்னொன்றை இங்கு நான் குறிப்பிட ஆசைப்படுகிறேன். 1987_ல் இயற்கை விவசாயப் பயிற்சிக்குப் போனேன். அங்கு ஒரு பெரியவர் வந்திருந்தார். சுற்றுச்சூழல் கழகத்தினுடைய தலைவர் அவர். அவர் என்னிடம் ‘‘இனிமேல் உங்கள் நாட்டில் பருவ மழையே பெய்யாதென்று’’ சொன்னார். இதை அவர் 1987_ல் சொன்னார்.

ஏன் என்று நான் கேட்டதற்கு, ‘‘உங்களுடைய மேற்குத் தொடர்ச்சி மலை 3 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறது. அதில் 300 அடி உயரத்திற்கு மரங்கள் எல்லாம் இருக்கின்றன. அது அரபிக் கடலிலிருந்து வருகின்ற ஈரக் காற்றையெல்லாம் மேகமாக மாற்றி, மழையாக மாற்றி கீழே இறக்குகிறது. அந்த மழை நீரை பூமியில் இறக்கி பிறகு ஆற்றில் நீராக ஓடுகிறது. அந்த மரங்களையெல்லாம் நீங்கள் வெட்டிவிட்டு, இடுப்பளவு உயரமுள்ள ‘டீ’ தோட்டம் போட்டு விட்டீர்கள். இன்னமும் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இன்னமும் குறையவே இல்லை அது. அதற்குப் பிறகு முழங்கால் உயரத்திற்கு உருளைக்கிழங்கு செடிகளை நடுகிறீர்கள். ஒரு ஜான் உயரத்திற்கு முட்டைக்கோஸ், காலிஃபிளவர் எல்லாம் பயிர் செய்து கொண்டிருக்கிறீர்கள். அதனுடைய விளைவு அரபிக்கடலிலிருந்து வரக் கூடிய ஈரக் காற்றை மேகமாக மாற்ற முடியவில்லை. மழையாக மாற்ற முடியவில்லை. அப்படியே தப்பித் தவறி மழை பெய்து ஓடுகின்ற தண்ணீரைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆகவே எங்குப் பார்த்தாலும் வெள்ளம். ஆக, இனி உங்களுக்கு புயல் மழைதான் வரும். பருவ மழை வருவதற்கு வாய்ப்பில்லை’’ என்று சொன்னார் அவர். அவர் சொன்ன அன்றிலிருந்து தொடர்ந்து உற்றுக் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். அதே தான் நடந்து கொண்டிருக்கிறது. நான் போகின்ற அத்தனை கூட்டங்களிலும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நான் எழுதும் அத்தனை கட்டுரைகளிலும் எழுதி கொண்டுதான் இருக்கின்றேன். யாராவது இதை வாசித்து உணர மாட்டார்களா? தவறைத் திருத்திக் கொள்ள மாட்டார்களா? என்று. ஆனால் யாரும் யோசித்த மாதிரி தெரியவில்லை. தொடர்ந்து காடு அழிக்கப்படுகின்ற செய்தி வந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கென்று ஒரு இலாக்கா இருக்கிறது. ஒரு துறை இருக்கிறது. காட்டை பாதுகாப்பதற்காகவே பணமெல்லாம் செலவழிக்கிறார்கள். அந்த நிகழ்ச்சிகளுக்கு மந்திரிகள் எல்லாம் கூட வருகிறார்கள். ஆனாலும் அழிக்கப்படும் காடுகள் பற்றி எந்த அக்கறையும் இல்லை. இதன் மூலம் உண்டான விளைவுகளைத்தான் இன்றைக்கு நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த மரங்கள் மொத்தம் இரண்டு வேலைகளைச் செய்கின்றன. ஒன்று: நமக்கு உணவளிக்கிறது. நம் கால் நடைகளுக்கு உணவளிக்கிறது. இரண்டு: நம்முடைய கரிக் காற்றை உள்வாங்கிக் கொண்டு சுத்தமான காற்றாக மாற்றி திரும்ப நமக்கே அளிக்கிறது. இன்று நாம் என்ன செய்கிறோம்? சாலையோரங்களில் இருக்கின்ற மரங்களையெல்லாம் வெட்டிச் சாய்த்து விட்டு ரோட்டை அகலப்படுத்துகிறோம். எதற்கு ரோட்டை அகலமாக்குகிறோம். வண்டி வேகமாகப் போவதற்காக. அப்போது வாகனத்திலிருந்து நிறைய புகை வெளியேறப் போகிறது. அந்தப் புகையை உறிஞ்சுவதற்கு வேண்டிய மரங்கள் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஏதோ இங்கு மட்டும் நடக்கின்ற நிகழ்ச்சி இல்லை இது. உலகம் முழுக்க நடக்கின்ற நிகழ்ச்சி. ஆனால் பாதிப்பு என்பது நமக்குத்தான் அதிகமாக இருக்கும். ஏனென்றால், தென்னிந்தியாவிலுள்ள ஐந்து மாநிலங்களில் தமிழ்நாடுதான் தண்ணீர் குறைந்த மாநிலம்.

இன்றுள்ள நிலையில் இமயமலையே உருகி ஓடி வந்து கொண்டிருக்கிறது. கங்கை ஆற்றிற்கும் காவிரி ஆற்றிற்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? காவிரியில் மழை பெய்தால் தண்ணீர் வரும். கங்கையில் பனி உருகினால் தண்ணீர் வருகிறது. கோடை காலத்தில் கங்கையில் தண்ணீர் வருகிறது. அதனால் அங்கு விளைச்சல் என்னவோ அதிகமாகவே இருக்கும். ஆனால் இப்படியே இமயமலையில் பனிமலை உருகிக் கொண்டே போனால், நாளை கங்கையிலேயே தண்ணீர் வராது. இப்படியே உருகிக் கொண்டு வந்தால் வங்காள விரிகுடாவின் கடல் மட்டம் உயரும். அப்போது சென்னை பாதி இல்லாமல் போய்விடும். கடலூர் பாதி இல்லாமல் போய்விடும். நாகப்பட்டினம் இல்லாமல் போய்விடும். கன்னியாகுமரி இல்லாமல் போய்விடும். இதைக் கூட யோசிக்க கூடிய அளவிற்கு அந்தப் பதவியிலும், அந்தப் பொறுப்பிலேயும் இருப்பவர்களுக்கு அறிவில்லை. அதையெல்லாவற்றையும்தான் இவை கூட்டிக் காட்டுகின்றன.

தீராநதி : காடுகள் அழிக்கப்பட்டு வருவதைப் பற்றியும், மரங்கள் வெட்டப்படுவதினால் உண்டாகும் விளைவுகளைப் பற்றியும் பேசினீர்கள். எனக்குத் தெரிந்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வறிக்கையின் படி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களை விட, தமிழகத்தின் ஆனைமலை, முதுமலையில் புலியின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. காட்டு கணக்கீட்டின் விவரப்படி புலி உள்ள ஒரு காடு ஆரோக்கியமான காடாக கணக்கிடப்படுகிறது. ஒரு காட்டில் ஒரு புலி உள்ளதென்றால், பல நூறு மான்களும், காட்டு எறுமைகளும் அந்தக் காட்டில் வசிக்கின்றன என்பது பொருள். ஏழெட்டுப் புலிகள் உள்ள காட்டில் மான்கள், காட்டு எறுமைகள், யானைகள், ஓநாய்கள், பன்றிகள், நரிகள் என்று ஆயிரக்கணக்கான விலங்கினங்கள் வாழ்வதாக பொருள் கொள்ளப்படும். ஏனென்றால், பல்வேறு விலங்கினங்கள் இருந்தால்தான் அவற்றை வேட்டையாடி ஒரு புலி ஆரோக்கியமாக வாழமுடியும். அதே போல சோலைக் காடுகளில் மணல்களின் உற்பத்தி ஒரு இன்ஞ்ச் வளர்ந்திருப்பதாக ஆர்வலர்கள் சொல்கிறார்கள் (தகவல் : ஓசை என்ஜிஓ). இவையெல்லாம் நீங்கள் அறிந்த ஒன்று தான். என்னுடைய கேள்வி என்னவென்றால்... மற்ற மாநிலத்தைக் காட்டிலும் வனப்பகுதிகளின் வளர்ச்சி விகிதம் தழைத்து வரும் மாநிலத்தின் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சத்தியமங்கல காட்டைக் கிழித்து இரயில் பாதை அமைக்க வேண்டும் என்கிறார். வன உயிரினங்கள் ஜீவிக்கக்கூடிய வனப்பகுதிக்குள் மனித குல சௌகர்யத்திற்காக நிறைவேற்றப்படும் இந்தத் திட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களை நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையானவர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். சுற்றுச்சூழல் பற்றிய போதிய படிப்பறிவே இல்லாத மந்திரிகள் இருக்கும் நாட்டைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

நம்மாழ்வார் : இதில் உங்களுடைய வார்த்தைகளைக் கொஞ்சம் மாற்றிச் சொல்ல வேண்டுமென்று நினைக்கிறேன். படிப்பறிவு என்பது வேறு. கல்வி அறிவு என்பது வேறு. படிப்பறிவின்போது என்ன செய்கிறோம் என்றால், அடுத்தவர்களின் அறிவை நாம் உள் வாங்குகிறோம். கல்வியறிவு என்பது உள்ளே இருக்கின்ற ஆற்றல் வெளியில் வருவது இரண்டும் நேர் எதிரானது. நம்முடைய நாட்டில் நிறைய படித்து விட்டார்கள். அதனால்தான் அறிவே இல்லை. அறிவு என்பதென்னவென்றால், தொட்டணைத் தூறும் மணற்கேணி. அந்த மணற்கேணியில் தோண்டத் தோண்ட தண்ணீர் வருவது மாதிரி உள்ளிருந்து அறிவு வெளிப்பட வேண்டும். இங்கு அறிவே வெளிப்படவில்லை. அதற்குப் பதிலாக இவர்கள் சந்தர்ப்பவாதிகளாக இருக்கிறார்கள். இந்த நேரத்தில், நாம் எதைப் பேசினால் மக்களுடைய ஆதரவு எனக்கு கொஞ்சம் கூட வரும். என்னுடைய பெட்டியில் இன்னும் கொஞ்சம் ஓட்டு விழும். அதை மட்டும்தான் யோசித்துப் பேசுகிறார்களே ஒழிய வேறு எதையும் யோசித்துப் பேசவே இல்லை. மக்களுக்கு நலமென்றால் அது எதில் இருக்க முடியுமென்றால் குறிஞ்சி, குறிஞ்சியாக இருக்க வேண்டும். முல்லை, முல்லையாக இருக்க வேண்டும். மருதம், மருதமாக இருக்க வேண்டும். நெய்தல், நெய்தலாக இருக்க வேண்டும். இதை இளங்கோவடிகள் அந்தக் காலத்திலேயே சொல்லி இருக்கிறார். தொல்காப்பியத்தில் சொல்லி இருக்கிறது. திருவள்ளுவருக்கு 133 அடிக்கு சிலை வைத்திருக்கிறோம். திருவள்ளுவர் என்ன சொன்னார் என்பது பற்றி யோசிக்கவே இல்லை. ‘‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண்’’ என்று சொல்லி இருக்கிறார். நம்முடைய பாதுகாப்பு என்றால், அது காடும் சேர்ந்ததுதான். காடு இருந்தால்தான் தண்ணீர் வரும். தண்ணீர் இருந்தால்தான் மக்களுக்கு வாழ்க்கை இருக்கும். ஆக, மக்களுக்கு அறிவில்லை. ரோடு போட்டு முன்னேறுவதைத் தடுக்கிறார்கள் என்று ஒருவர் பேசினால் இதைவிட முட்டாள் தனம் ஒன்று இருக்கவே முடியாது. நம்முடைய மடமைக்கு அளவே இல்லை. நாம் செய்ய வேண்டியதெல்லாம் பெரும்பாலான மக்களுக்கு இந்த அறிவைக் கொண்டு போய் சேர்த்து இதனால் நமக்கு அழிவு வரும் என்ற உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தி, பிறகு நாம் எல்லோரும் சேர்ந்து வரப்போகும் அழிவைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற உணர்வைத்தான். அந்த வேலையை மட்டும் தான் இப்போதைக்கு நம்மால் செய்ய முடியும்.

நாம் இவ்வளவு பேசுகிறோம் இல்லையா? இவையெல்லாம் ஆட்சியில் உள்ளவர்களுக்குத் தெரியாதென்று நாம் சொல்ல முடியாது. எல்லோரும் மனு கொடுத்திருக்கிறார்கள். எல்லோரிடமும் மனு கொடுக்கப்பட்டிருக்கிறது. பத்திரிகைகளில் செய்தி வெளி வந்திருக்கிறது. இவையெல்லாம் அறிந்து கொண்ட பிறகும், இவர்கள் செய்யும் தவறுகளைக் குறைத்துக் கொள்ளவே இல்லை. ஒவ்வொரு தடவையும் கூட்டவே செய்கிறார்கள். உதாரணத்திற்கு: எங்கு பார்த்தாலும் தொழிற்சாலைகள். ஆற்றங்கரையெல்லாம் தொழிற்சாலைகள். ஆற்றங்கரையில் இருக்கின்ற தொழிற்சாலைகள் என்ன செய்கின்றன? ஆற்றிலிருக்கின்ற நீரை தொழிற்சாலையின் உள்ளே இழுத்துக் கொள்கிறது. மறுபடியும் தன்னுடைய கழிவு நீரையெல்லாம் ஆற்றினுள் விடுகிறது. இந்தக் கொடுமை எந்த மந்திரிக்குத் தெரியாது சொல்லுங்கள்? எதிர்க் கட்சியாக இருக்கும் போது மந்திரிக்குத் தெரிகிறது. ஆளுங்கட்சியான பின்பு தெரியமாட்டேன் என்கிறது. ஆக, அவர்களின் நடத்தையில், பண்பிலுள்ள குறைபாட்டை நாம் பார்க்கிறோம். அதைத் தடுத்து நிறுத்தவே முடியாது. குற்றவாளிகளை நீங்கள் குற்றவாளி என்று சொன்னால், அவர்களுக்குக் கோபம் வரும். ஆனால் ஒரு குடியாட்சி நாட்டில் குற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு மக்களுக்கு மட்டும் தான் அதிகாரம் இருக்கிறது. மக்கள் இதைப் புரிந்து கொண்டார்கள் என்றால், மக்களே இதைத் தடுத்து நிறுத்துவார்கள். நம்முடைய வேலை அங்குதான் இருக்கிறது.

தீராநதி : தொழிற்சாலைகள் மூலமாக நடக்கின்ற சீர்கேடுகளைப் பற்றி விரிவாகப் பேசினீர்கள். இந்தத் தருணத்தில் சமீபத்தில் நடந்த நந்திகிராம் பிரச்னை என் ஞாபகத்திற்கு வருகிறது. 1946_47 காலங்களில் நிலப்பிரபுத்தத்துவத்திற்கு எதிரான ‘தெபாகா’ போராட்டத்தின் வீரமிக்க வரலாற்றிற்குச் சொந்தக்காரர்கள் அம்மக்கள். நந்திகிராமில் 1942_டிசம்பர் 17ஆம் நாள் இருப்புக்கு வந்த ஜட்டியா சர்க்கார் (மக்கள் அரசு) 1944 டிசம்பர் வரை நீடித்தது. மகாத்மா காந்தியின் வேண்டுகோளின்படி 1944_ம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று இந்தப் போட்டி அரசு கலைக்கப்பட்டது. இப்படி நெடிய பாரம்பரியமுள்ள ஒரு மக்கட் கூட்டத்தினை, பெரும் முதலாளிகளுக்காக பொருளாதார வளர்ச்சி, என்ற பெயரில் சூறையாடியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) ஆளும் மேற்கு வங்க அரசு. ஏறக்குறைய 150,000 பேர் வாழ்வாதாரத்திற்காக சார்ந்திருக்கும் நிலத்தை அபகரித்து சுமார் ஆயிரத்திற்கும் மேலான நபர்களுக்கு வேலை தருவதாக கூறியது. இதே கருத்தியலுக்குள் தமிழக அரசு வரத் தொடங்கி இருக்கிறது. இதில் நடக்கும் மோசடிகள் குறித்துப் பேசுங்களேன்?

நம்மாழ்வார் : நீங்கள் நிறைய உட்கட்சி அரசியலுக்குள் சென்றுவிட்டீர்கள். இந்த நேரத்தில் உட்கட்சி அரசியலை விமர்சிப்பது சரியாக இருக்காது. ஆனால் நான் ஒன்றைச் சொல்கிறேன் கேளுங்கள்: காந்தி என்ன நந்திகிராமுக்கு மட்டுமா இருந்தார். இந்தியா முழுவதற்கும்தான் சுதந்திரம் கேட்டார். இந்தியா முழுவதும் காந்தியவழியில்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால், இன்றைக்கு இந்தியா காந்திய வழியில் போய் கொண்டிருக்கிறதா? காந்தியைக் குழி தோண்டிப் புதைக்கின்ற வேலைகளை மட்டும்தான் செய்து கொண்டிருக்கிறது. அப்படி பார்த்துக் கொள்ளுங்கள் இதை.

தீராநதி : நீங்கள் சொல்வது புரிகிறது. ஆனால், நந்திகிராம் என்பது பெரிய பாரம்பரியம் உள்ள பகுதி அது...

நம்மாழ்வார் : இடத்தையும், ஆளையும் குறிப்பிடாதீர்கள். இன்றைக்கு காந்தி பெயரைச் சொல்பவர்கள்தான் ஆட்சியில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஒவ்வொரு அக்டோபர் இரண்டாம் தேதியும், ஒவ்வொரு ஜனவரி 30_ம் தேதியும் காந்தி சமாதியில் போய் மலர்வளையம் வைப்பதுதான் இவர்களுடைய வேலையாகவே இருக்கிறது. அன்றைய தினம் ஒவ்வொரு ஆட்களும் போய் மலர்வளையம் வைத்துவிட்டு வந்ததுதான் செய்தித்தாள்கள் முழுவதும் செய்தியாக வெளி வருகிறது. எல்லா நான்கு ரோடுகளும் சந்திக்கும் இடத்தில் சிலையாக உட்கார்ந்திருக்கிறார் காந்தி. இவருக்கு மாலை போடுவதுதான் இவர்களுக்கு பெரிய வேலையாக இருக்கிறது. அப்போது இந்தியா முழுமைக்குமாக யோசியுங்கள்? யார் காந்தியின் தோள் மீது ஏறி நிற்கிறார்களோ அவர்களே காந்தியைப் புதைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆக, எந்த ஒரு குறிப்பிட்ட கட்சியைப் பற்றியும் நாம் இங்குப் பேச வேண்டாம்.

தீராநதி : சரி, எந்த ஒரு குறிப்பிட்ட கட்சியைப் பற்றியும் பேச வேண்டாம். ஒட்டுமொத்த இந்திய அரசியல் பற்றியே பேசுங்கள்?

நம்மாழ்வார் : ஒட்டுமொத்த இந்திய அரசியல் மக்கள் விரோத போக்காக போய்க் கொண்டிருக்கிறது. இந்த மண்ணிற்கு விரோதமான போக்கில் போய்க்கொண்டிருக்கிறது. நம்முடைய வரலாற்றை குழிதோண்டி புதைக்கிறது. அப்படி எடுத்துக்கொள்ளுங்கள்.

தீராநதி : தொழிற்சாலைகளுக்காக தாரை வார்க்கப்படும் விளைநிலங்கள் பிற்காலத்தில் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும்?

நம்மாழ்வார் : இன்றைக்கு நம்முடைய தமிழ்நாடு அரசு, செய்தித் தாள்களில் எத்தனையோ லட்சம் ஏக்கர் நிலங்களை விவசாயிகளுக்குக் கொடுத்திருக்கிறோம் என்று சொல்லி இருக்கிறது. என்ன கொடுத்திருக்கிறது? ஒன்றிற்கும் உதவாத நிலத்தைக் கொடுத்திருக்கிறது. அதாவது, விவசாயத்திற்கு உதவாத நிலத்தைக் கொடுத்திருக்கிறது. சுடுகாட்டு பூமியைக் கொடுத்திருக்கிறது. அவர்களே சொல்கிறார்கள். ‘நிலத்தை நாங்கள் திருத்திக் கொடுத்திருக்கிறோம்’ என்று. ஆனால் மத்தியில் இருக்கின்ற உணவு அமைச்சரும், நிதியமைச்சரும் பிரதமரும் சேர்ந்து என்ன சொல்லி இருக்கிறார்கள். ‘‘சின்ன விவசாயி நிலத்தை விட்டு வெளியில் போய்விட வேண்டும்’’ என்று சொல்லி இருக்கிறார்கள். யாரை நிலத்தை விட்டுப் போய்விட வேண்டும் என்று மத்தியில் உள்ளவர்கள் சொல்லி இருக்கிறார்களோ அவர்களுக்கு நிலத்தைக் கொடுத்திருக்கிறார்கள். அப்போது என்ன செய்யப் போகிறார்கள் என்றால், நிலத்தை பிடுங்கிக் கொள்ளப் போகிறார்கள். நிறைய வசதியாக இருப்பவன் நிறைய நிலம் வைத்திருக்கிறான். காலங்காலமாக விவசாயம் நடந்து வரும் நிலம். ஆற்றோரத்து நிலம். விளைச்சல் நிலம். இப்போது அதை விற்பதற்கு அவன் தயாராக இருக்கிறான். அதை வாங்கியல்லவா சின்ன விவசாயிக்குக் கொடுக்க வேண்டும்? விவசாயத்திற்கு லாயக்கு இல்லாத நிலத்தைக் கொடுத்தால் அவன் ‘இது’ விவசாயத்திற்கு லாயக்கற்றது என்று போட்டுவிட்டுப் போய் விடுவான். அதைப் புடுங்கி தொழிற்சாலைகளுக்குக் கொடுத்துவிடலாம். மறுபடியும் தொழிற்சாலைகளுக்குக் கொடுப்பதற்காகவேதான் இந்த ‘தரம்’ குறைந்த நிலங்களை சிறு விவசாயிகளுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எதையுமே மக்கள் நலத்திற்காகவே செய்யவில்லை. நீங்களே யோசித்துப் பாருங்கள்?

அப்புறம் இன்னொன்றைப் பார்ப்போமா? இந்த நாட்டில் இன்னமும் 28 கோடி பேர் பசியோடு தூங்கப் போகிறார்கள். 28 கோடி பேர்! இவர்கள் சதவீதம் சதவீதம் என்று சொல்வார்கள். சதவீதத்தில் சொன்னால் உங்களுக்குப் பெரியதாகத் தெரியாது. 75 சதவீதம் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ‘சோகை’ நோய் இருக்கிறது. இரத்தத்தில் இரும்புச் சத்து இல்லை. 57 சதவீதம் குழந்தைகளுக்கு கண் பார்வை சரியாக இல்லை. வைட்டமின் ‘கி’ பற்றாக் குறையாக இருக்கிறது. இதற்கு என்ன காரணமென்றால், தாய் வயிற்றில் இருக்கும் போதிலிருந்தே அந்தக் குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைக்கவில்லை. நம்மால் சத்தான உணவைக் கொடுக்க முடியவில்லை. அப்புறம் எதை வைத்து ‘வளர்ந்து விட்டோம். வளர்ந்து விட்டோம்’ என்று சொல்கிறார்கள்? பெரும்பாலான மக்களுக்கு என்ன இல்லையென்று பார்த்தோமேயானால், அவர்களுக்கு என்று தனி சொத்து கிடையாது. அப்போது அவர்கள் பொது ஆதாரத்தை நம்பி இருக்கிறார்கள். அவர்களின் ஆடு பொது இடத்தில் மேய வேண்டி இருக்கிறது. அவர்களின் மாடு பொது இடத்தில் மேய வேண்டி இருக்கிறது. இவர்கள் விறகை பொது இடத்திலிருந்து எடுக்க வேண்டி இருக்கிறது. தண்ணீரை பொது இடத்திலிருந்து எடுக்க வேண்டி இருக்கிறது. அதையெல்லாவற்றையும் தனியாரிடத்தில், ஒரு முதலாளி இடத்தில் ஒப்படைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அப்போது வறுமைக் கோட்டிற்கு உள்ளே இருக்கின்ற கோடானுக்கோடி மக்களை அழிவை நோக்கித் தள்ளிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களை விளிம்புக்கு வெளியே இருக்கின்ற மக்கள் என்று சொல்வார்கள். அவர்களை மேலும் சாவை நோக்கித் தள்ளுவதற்குத்தான் இந்தத் திட்டங்கள் எல்லாம் செல்லுபடியாகும். ஆக, கிராமங்களில் இருக்கின்ற நிலங்கள் மூன்றே மூன்றிற்குத்தான் பயன்படுத்தப்பட வேண்டும். ஒன்று: மழைநீர் பெருக்கெடுத்து ஓடி கடலில் கலக்காதபடி அங்கேயே குளம் வெட்டுவதற்குப் பயன்படுத்த வேண்டும். இரண்டு : அங்குள்ள ஆடு, மாடுகள் மேய்வதற்காக மேய்ச்சல் நிலங்களை உண்டு பண்ண பயன்படுத்த வேண்டும். மூன்று. : அங்கேயும் காற்று சுத்தமாக, மழை வர, குளிர்ச்சி நிலவ வேண்டும் என்பதற்காக மரங்களை நட பயன்படுத்த வேண்டும். இந்த மூன்றிற்கும் தவிர, வேறு எதற்கும் கிராமத்தின் நிலத்தை இவர்கள் கொடுக்கிறார்கள் என்றால், வேறு ஏதோ ஆதாயம் கருதி செய்கிறார்கள் என்று அர்த்தமே தவிர நாட்டு நலனுக்காக செய்வதற்காக அல்ல; அப்படித்தான் நாம் பார்க்க வேண்டும்.

தீராநதி : இலவச நில மனைப்பட்டாக்கள் பற்றி நீங்கள் பேசியதால் எனக்கு அமார்த்யா சென் சொன்ன தகவல் ஒன்று நினைவுக்கு வருகிறது. அமார்த்யா சென், இந்தியா மற்றும் பிற நாடுகளில் பஞ்சங்கள் குறித்து ஆராய்ந்துள்ளார். உணவு கிடைக்காமையினால் பஞ்சம் உருவாகவில்லை என்று அவரது நூலில் நிரூபித்திருக்கிறார். நிலப்பட்டா வழங்குவதில் உள்ள கோளாறுகளே பஞ்சங்களின் காரணம் என அதில் வாதிடவும் செய்கிறார். இந்தியாவில் பட்டினிச் சாவுக்குப் பலியாவது உணவு இல்லாததால் அல்ல; இருக்கும் உணவுக்கான உரிமை அவர்களுக்கு இல்லாததே. இன்று ஆப்பிரிக்கா, சஹாரா பகுதி முழுவதும் உள்ளதை விடக் கூடுதலான இந்தியர்கள் போதிய ஊட்டமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியக் குழந்தைகளில் பாதிப்பேருக்கு மேல் போதிய எடையின்றி உள்ளனர் என்கிறார் அவர். சர்வதேசக் குழந்தை உணவுச் செயல்பாட்டுக் கூட்டிணைவு (மிஙிதிகிழி இன்டர்நேஷனல் பேபி ஃபுட் ஆக்ஸன் நெட்வொர்க்) என்ற அமைப்பு மூன்றாம் உலக நாடுகளில் ஒவ்வொரு 30 விநாடியும் ஒரு குழந்தை பாதுகாப்பற்ற புட்டிப்பால் அருந்தி இறக்கிறது என்ற தகவலை வெளியிட்டிருக்கிறது. இதையெல்லாம் தடுத்து நிறுத்த நாம் என்ன செய்தால் தகும் என்று நீங்கள் அறிவுரை சொல்ல முடியுமா?

நம்மாழ்வார்: அமார்த்யா சென் சொல்லும் சில தகவல்கள் நமக்கு உபயோகமாக இருக்கிறது. இது ஆட்சியாளர்களின் கண்களைத் திறப்பதற்கு உபயோகப்படும். அதற்கு மேல் உபயோகப்படாது. ஏனென்றால், வெளிநாட்டில் படித்து விட்டு வெளிநாட்டில் உள்ளதைப் போல இங்கேயும் பொருளாதார கணக்குகளையெல்லாம் போட்டுக் கொண்டிருக்கிறார். அவர் சொல்வதில் மிக முக்கியமான விஜயம். ‘‘நாம் வெட்கப்பட வேண்டிய ஒரு சூழ்நிலையில் இருக்கிறோம். ரொம்ப வளமான நாடு கலிபோர்னியா. வளமே இல்லாத இடம் சஹாரா பாலைவனம். இந்த இரண்டும் இந்தியாவில் இருக்கிறது. அப்போது இதை எப்படி ஒரு தேசம் என்று சொல்லுவீர்கள். ஒன்றுமே இல்லாத மக்கள் ஏராளமாக இருக்கிறார்கள். வசதியைக் குவித்துக் கொண்ட சில மக்கள் மேலே இருக்கிறார்கள். ஆக, கலிபோர்னியாவும் இங்கு இருக்கிறது. சஹாராவும் இங்கே இருக்கிறது’’ என்று சொல்கிறார் அமார்த்யா சென். அதை அப்படியே நாம் எடுத்துக் கொள்வோம். ஏனென்றால் அது ரொம்ப நல்ல விஷயம். ஒரு பொருளாதார மேதை பார்வையில் பட்டிருக்கிறது.

இன்னொன்றையும் அவர் சொல்கிறார். ‘‘பள்ளிக்கூடத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. வீடுகளில் பூட்டு தொங்குகிறது. ஏனென்றால் வாழ வழியின்றி குடும்பம் இடம் பெயருகிறது. கூடவே குழந்தைகளும் போக வேண்டி இருக்கிறது. ஒரு குழந்தைக்கு ஐந்தாம் வகுப்பு வரையாவது படிப்பு சொல்லிக் கொடுக்க முடியவில்லை’’ என்று அவர் வருத்தப்படுகிறார். ஆனால் நான் என்ன சொல்கிறேன் என்றால், ஐந்தாம் வகுப்பு வரை படித்து என்ன செய்யப் போகிறது அந்தப் பிள்ளை. இங்கு பி.ஏ., வரை படித்தவன் என்ன செய்துவிட்டான். இதை ஒரு அளவாகப் பார்ப்பதில் ஒரு பிரயோஷனமும் கிடையாது. இந்தியா ஒன்றும் இங்கிலாந்து அல்ல; இங்கிலாந்தில் நான்கு மாதங்கள்தான் வெயில் அடிக்கும். இங்கு 12 மாதமும் வெயில் அடிக்கிறது. ஒருவனிடம் தண்ணீரையும் நிலத்தையும் கொடுத்துவிட்டால் அந்தக் குடும்பம் எப்படியாவது பிழைத்துக் கொள்ளும். அந்தக் குடும்பத்தில் உள்ள குழந்தை முதல் வயதானவன் வரை அந்நிலத்தில் வேலை செய்வார்கள். அவ்வளவு ஏன் அவன் கழிக்கும் மலம் ஜலமே செடி கொடிகளை வளர்த்து விடும். அதானே எரு. அவன் வைத்திருக்கும் ஆடு சாணி போடும். மாடு சாணி போடும். ஆட்டு பாலை குழந்தை குடிக்கும். மாடு கொடுக்கும் பால் தயிராகி அவர்களின் சாப்பாட்டிற்கு சேரும். சக்தி தரும் ஒரு முருங்கை மரம் போதும் அவர்களுக்கு. ஒரு பப்பாளி மரம் போதும் அவர்களுக்கு. இவர்களுக்கு நிலமே இல்லாத வேலைகளைத்தான் இந்த வளர்ச்சித் திட்டங்கள் எல்லாம் செய்கிறது. உடனடியாக நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், இன்றைக்கு வளர்ச்சித் திட்டம் என்று எதை எதையோ செய்து கொண்டிருக்கிறோமே, அதை உடனடியாக நிறுத்திவிட வேண்டும். போட்டதை அப்படியே போட்டு விட்டுத் திரும்பி நிற்க வேண்டும். எங்கிருந்து நாம் தப்பு செய்தோமோ அந்த இடத்திற்குத் திரும்பிப் போனதற்கு பிற்பாடுதான் வளர்ச்சியைப் பற்றி யோசிக்க வேண்டும். உதாரணத்திற்கு எங்கு நம்முடைய தப்பு ஆரம்பித்ததென்றால், ‘பசுமைப் புரட்சி’யில்தான் ஆரம்பித்தது. பசுமைப் புரட்சிக்கு முன்னால் என்ன நடந்ததென்றால், நான் என்னுடைய அப்பா நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் வயலில் வேலை செய்து விட்டுத்தான் பள்ளிக்கூடம் போக வேண்டும். பதினொன்றாம் வகுப்பு வரையிலும் அப்படித்தான் போனோம். அன்றைக்கு என்னுடைய அப்பா என்ன செய்யவில்லை என்றால் விவசாய உற்பத்திக்காக டவுனிலிருந்து எதையும் வாங்கவில்லை. அவர் டவுனிலிருந்து விவசாயத்திற்காக ஏதாவது வாங்கி இருந்தால் அது: கொழுவடிப்பதற்காக இரும்பு வாங்கி இருக்கிறார். கடப்பாறை வாங்கி இருக்கிறார். அறிவாள் வாங்கி இருக்கிறார். மண்வெட்டி வாங்கி இருக்கிறார். ஆக, இரும்புச் சாமான்கள் மட்டும்தான் வெளியில் வாங்கியது. மற்றபடி எங்கள் வயல்வெயில் இருக்கின்ற இலை தழைகளையே எருவாகப் பயன்படுத்திக் கொண்டோம். வரப்புகளில் இருந்த மரத்தை வைத்தே வீட்டிற்கு கட்டில், ஜன்னல், கதவு, பீரோ, வண்டி என்று சகலத்தையும் செய்து கொண்டோம். உள்ளூர் ஆசாரியார் இவற்றை அழகாக செய்து கொடுத்து விட்டார். நாங்கள் அதற்கு ஈடாக களத்தில் நெல் அடிக்கும் போது அரிசி, சாப்பாடு என்று கொடுத்துவிட்டோம். முடி திருத்தும் தொழிலாளியின் வீட்டுப் பெண்தான் எங்கள் குடும்பத்திற்கு மருத்துவம் பார்த்தார். அவருக்கு நெல் கொடுத்தோம். இராத்திரி சாப்பாடு எங்கள் வீட்டிலிருந்து தான் அவர் வீட்டிற்குப் போகும். இப்படித்தான் எல்லோரும் பகிர்ந்துண்டோம்.

எங்கள் அப்பா எங்கள் தாத்தா கொடுத்த இரண்டு ஏக்கர் நிலத்தை பத்து ஏக்கராக மாற்றி, அவரது நான்கு மகன்களுக்கும் ஆளுக்கு இரண்டு ஏக்கர் வீதம் பிரித்துக் கொடுத்தார். ஆனால், இன்றைக்கு என்ன நடக்கிறது? இரண்டு ஏக்கர் வைத்திருந்தால் ஒரு ஏக்கரை விற்று பையனை இஞ்ஜினீயரிங் காலேஜுக்கு அனுப்பிவிட்டு இன்னொரு ஏக்கரை விற்று மகளுக்குக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு விவசாயி ஓட்டாண்டியாக தெருவில் நிற்க வேண்டியதுதான். இதற்குக் காரணம் பசுமைப்புரட்சி. அந்தப் பசுமைப்புரட்சி என்பது எல்லாவற்றையும் வெளியில் வாங்கிச் செய்யும் விவசாயமாக மாற்றி விட்டது. கிராமத்தை உறிஞ்சுவது, சுரண்டுவது என்பது பசுமைப்புரட்சியிலிருந்துதான் ஆரம்பமானது.

தீராநதி : அன்றைக்கு ஏற்பட்ட உணவு பற்றாக் குறையினால் பலர் செத்து மடிந்து கொண்டிருந்தார்கள். உணவு உற்பத்தி போதுமான தேவைக்கு ஏற்ற அளவில் இல்லை. ஆகவே பசுமைப்புரட்சி என்ற திட்டத்தால் தான் வறுமையை ஒழித்திருக்கிறோம். இந்த நிலைமையைச் சரி செய்திருக்கிறோம். அதிலிருந்து பிழைத்து மீண்ட தெம்பில்தான் இவர்கள் இன்றைக்கு விமர்சிக்கிறார்கள் என்று அந்தத் தரப்பிலிருந்து எதிர்வாதம் வருகிறதே?

நம்மாழ்வார்: நீங்கள் விவசாயம் படித்திருக்கிறீர்களா?

தீராநதி : இல்லை.

நம்மாழ்வார் : விவசாயம் செய்திருக்கிறீர்களா?

தீராநதி : இல்லை. (ஆனாலும் ஒரு விவசாயியாக வேண்டும் என்பதுதான் என் லட்சியம்.)

நம்மாழ்வார் : உங்களைப் போல உள்ளவர்களுக்குப் புரியவே புரியாது. ஏனென்றால், அவன் வந்து பொய் சொல்கிறான். இங்கே அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். மந்திரிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு விவசாயம் தெரியாது. விஞ்ஞானமும் தெரியாது. அப்போது அவர் என்ன செய்கிறார். விஞ்ஞானியிடம்தான் யோசனை கேட்கிறார். அப்போது அந்த விஞ்ஞானி என்ன செய்ய வேண்டும்? விஞ்ஞான பூர்வமாக பதில் சொல்லவேண்டும். அன்றைக்கு ஏன் விளைச்சல் அதிகமாக இல்லை என்பதை விஞ்ஞானபூர்வமாக அவர் சொல்ல வேண்டும். அவன் விஞ்ஞானபூர்வமாக ஒரு பதிலைச் சொல்லாமல் இப்படி மேலோட்டமான ஒரு கேள்வியை உங்களிடம் கேட்கிறான். நான் வரலாறு முழுவதும் படித்திருக்கிறேன். நம்ம விவசாயப் பெண்ணிடம் உட்கார்ந்து பேசி இருக்கிறேன். விவசாயப் பெண் பள்ளிக்கூடம் போய் இருக்க மாட்டாள். அவள் ஒரு விடுகதை போட்டாள். என்ன விடுகதை போட்டாள். ‘அடி காட்டுல. நடு மாட்டுல. நுனி வீட்டுல.’ அறுக்கும்போது அடியில் இருக்கின்ற கட்டையை காட்டில் விட்டோம். நடுவில் உள்ளது மாட்டிற்குச் சென்று விட்டது. நுனியில் உள்ளது வீட்டிற்கு வந்துவிட்டது. அடிக்கட்டைக்கு விவசாயி காசு செலவழிக்கவில்லை. நடுவில் இருந்த மாட்டிற்கு காசு செலவழிக்கவில்லை. வேண்டாததை மண்ணிற்குக் கொடுத்தார். வேண்டாததை மாட்டிற்குக் கொடுத்தார். பால் வீட்டிற்கு வந்தது. சாணி மண்ணிற்குப் போய்விட்டது. பயிர் விளைந்து கொண்டே இருந்தது. அப்போது விளைந்தது வீட்டில் இருந்தது. நீங்கள் கடனை வாங்கி, கடனுக்கு யூரியாவையும், டிஏபியையும் போட்டதால் நிறைய விளைந்திருக்கிறது. ஆனால், விவசாயி கையில் ஒன்றுமில்லை. ஏனென்றால் விளைந்ததை விற்று கடன் அடைத்திருக்கிறார். இன்றைக்கு நாடு முழுவதும் உள்ள 112 கோடி பேர்களில் 65 சதவீதம்பேர், அதாவது 73 கோடி பேர் கிராமத்தில்தான் உள்ளோம். இந்த 73 கோடி பேர்களை கிராமத்தில் பட்டினி போட்டுவிட்டு அப்புறம் என்ன நீங்கள் விளைய வைக்கவில்லை.. விளைய வைக்கவில்லை என்று வாயாடுகிறீர்கள். இங்கே எல்லோருக்கும் எங்கே சாப்பாடு போட்டீர்கள்.

இப்போது தானே சொன்னேன் 28 கோடி பேர் இன்னமும் பசியோடு தூங்கப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்று. இதை நான் சொல்லவில்லையே? தேசிய உழவர் கமிஷன் தலைவர் சாமிநாதன் அவர்கள்தான் அறிக்கையாகக் கொடுத்திருக்கிறார். அந்த அறிக்கை மந்திரி சபையிலேயே இருக்கிறது. ஆக, பொய் சொல்வது நழுவுவது இதையெல்லாம் விஞ்ஞானிகள் செய்யக் கூடாது.

இந்த ரசாயனப் பொருட்களை நிலத்தில் போட்டதால் நிலம் உப்பாகப் போய் இனிமே ஒரு தானியம் கூட இருக்க முடியாது. இதை ஆரம்பித்ததே மிகவும் வளமான பகுதிகளில்தான் ஆரம்பித்தார்கள். இந்தியா முழுவதும் எங்கெல்லாம் ஆறுகள் நிறைய பாய்கின்றதோ அங்கே ஆரம்பித்தார்கள். வடக்கே ஒரு பஞ்சாப் இருக்கிறது. அங்கே ஐந்து ஆறு பாய்கிறது. அங்கே ஆரம்பித்தார்கள். இங்கே தென்னிந்தியாவில் ஒரு பஞ்சாப் இருக்கிறது. (பஞ்சாப் என்றால் ஐந்து ஆறுகள் என்று பொருள்) இங்கும் ஐந்து ஆறுகள் பாய்கிறது. அதுதான் திருவையாறு. நம்முடைய காவிரி வட்டம் முழுவதும் இதைப் புகுத்தினார்கள். எங்கெல்லாம் ஆறு பாய்ந்து செழிப்பாக இருந்ததோ அங்குதானே பசுமைப் புரட்சியை புகுத்தினீர்கள்? அங்கெல்லாம் இன்று ஒன்றும் விளையாத கட்டத்திற்குப் போய் விட்டது பூமி. அன்றைக்கு இதுதான் ஒரே வழி என்று சொன்னீர்களே? இது எப்படி சரியான வழியாகும்? அப்போது ஒவ்வொரு நாளுக்காகவும் ஒவ்வொரு திட்டத்தையா போடுவீர்கள்? இன்றைக்கு என்ன சொல்கிறார்கள். நிலைத்த, நீடித்த, வேளாண்மை என்கிறார்கள். நிலைத்த நீடித்த வளர்ச்சி என்கிறார்கள். நிலைத்த நீடித்த வளர்ச்சி என்னவென்றால், இன்றைய தேவைக்காக நீங்கள் ஒன்றைச் செய்ய வேண்டும். ஆனால் அது நாளைய தேவையைக் கெடுத்துவிடக் கூடாது. அதற்கு பெயர் தான் sustணீவீஸீணீதீறீமீ டெவலப்மெண்ட். அந்த சஸ்டைனபுலிட்டியை இப்போது இழந்து விட்டு நிற்கிறோம். ஆக, அன்றைக்கு அதைச் சரி என்று சொன்னது நியாயம்தானே என்றால், அதைவிட முட்டாள் தனம் வேறு எதுவும் கிடையாது.

அன்றைக்கு அமெரிக்காக்காரன் சொன்னதைப்போல சொன்னீர்கள். அதில் அமெரிக்காக்காரனுக்கு லாபம் இருக்கிறது. வட்டிக்குக் கொடுத்திருக்கிறான். அதற்காக உங்களிடமிருந்து வட்டி வாங்கிக் கொண்டிருக்கிறான். அவனுடைய ரசாயணப் பொருட்களையெல்லாம் நம்மிடம் விற்றிருக்கிறான். நம்முடைய பூமியை நாசமாக்கி இருக்கிறான். நம்முடைய நுகர்வோரை விஷமாக்கி இருக்கிறான். நுகர்வோர் என்றால் 112 கோடியும் நுகர்வோர்தான். மண்ணைக் கெடுத்திருக்கிறான். விவசாயியை பொருளாதார ரீதியாக நஷ்டத்தை ஏற்படுத்தி ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் பேர் கடந்த ஒரு பத்து வருடங்களுக்குள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இதுவரை இவ்வளவு பெரிய விவசாயிகள் தற்கொலை உலகத்தில் வேறு எந்தத் தேசத்திலும் நடந்திருக்க முடியாது. ஒருலட்சத்து எழுபத்தைந்தாயிரம் விவசாயிகள் இன்றைக்கு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால், அதற்கு தோற்றுவாய் பசுமைப்புரட்சியிலிருந்து தொடங்குகிறது.

வெள்ளையன் ஒரு இருநூறு ஆண்டுகள் நம்முடைய நாட்டை ஆண்டான். அவன் என்ன செய்தான் ஷமீன்தாரை நியமித்து விவசாயிகளிடமிருந்து நிலத்தையெல்லாம் புடுங்கிவிட்டான். தூக்கி ஷமீன்தார் கையில் கொடுத்துவிட்டான். அப்போது சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தும் காந்தி காலத்திலிருந்தும் சுதந்திரம் வந்தால் நிலத்தை விவசாயிகளின் கையில் ஒப்படைப்போம் என்றார்கள். அதைச் செய்யவில்லை. ஆகையினாலே தான் பற்றாக்குறை. இன்றைக்கு வரை அந்த உண்மையை மூடி வைத்துக் கொண்டு பற்றாக்குறையால்தான் ‘பசுமைப் புரட்சி’யைக் கொண்டு வந்தோம் என்கிறார்கள். வரலாற்றையும் ஒழுங்காகப் படிக்கவில்லை. விஞ்ஞானத்தையும் ஒழுங்காகப் படிக்கவில்லை. வரலாற்றையும், விஞ்ஞானத்தையும் ஒழுங்காகப் பார்க்கவில்லை என்றால் நம் முன்னேற்றத்திற்கான எந்த வெளிச்சமும் நமக்குக் கிடைக்காது.

தீராநதி : இந்திய மக்கள் மேலை நாட்டு விஞ்ஞான தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள், உணவு தானியங்கள்தான் சுத்தமானது, உடலுக்கு ஆரோக்கியமானது என்று நம்பும்படி மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள். காந்தியின் சுதேசி மனப்பான்மையை இந்தியர்களே தூக்கி எறிந்து விட்டார்கள். அல்ஜீரிய போராளி ஃபிரான்ஸ் ஃபனான் சுதேசி கொள்கையை அகப் பொருள் புறப் பொருள் என்று தனித்தனியே ஆராய்ந்து காந்தியின் பார்வையை மறு ஆய்வுக்குட்படுத்தி மேலும் ஆழமான சுதேசி கருத்தியலைக் கட்டமைக்கிறார். ஒரு நாட்டின் உண்மையான புரட்சியை விவசாயிகளிடம் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். அதுவே உண்மையான புரட்சியாக அமையும் என்றும் ஃபனான் குறிப்பிடுகிறார். கோபால் ஆசிரமம் என்ற புது ஆசிரமத்தை மீரா பென் நிறுவி சுற்றுச் சூழல் குறித்து போராடி வந்திருக்கிறார். அம்மக்களின் கதைப் பாடல்களில் பஞ்ஜ் எனப்படும் ஓக் மரங்கள் முற்றிலும் இன்று அழிக்கப்பட்டு விட்டதைக் கண்டறிந்தார். அதே போல அம்ரிதா தேவி தலைமையில் பிஷ்னோய் சமூகத்தினர் புனித ‘கேஜ்ரி’ மரங்களை வெட்டுவதை எதிர்த்து அப்பழங்குடி மக்கள் மரங்களைக் கட்டியணைத்து வெட்ட விடாமல் உயிர்தியாகம் செய்தார்கள் என்பது நம் வரலாறு.

இன்றைக்கு மேதா பட்கர் இவ்விஷயத்தில் முன்னுதாரணமாக நிற்கிறார். தமிழகத்தில் நீங்கள் தீவிரமாக இயங்குகிறீர்கள். கென்ய நாட்டில் ‘கிரீன்பெல்ட்’ இயக்கம் போல வலுவான அரசியல் இயக்கமாக மாறவேண்டிய தேவை நம் நாட்டில் உருவாகி இருக்கிறது? இதை எவ்வாறு சாத்தியமாக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

நம்மாழ்வார் : இன்றைக்கு நிறைய இயக்கங்கள் நம்நாட்டில் செயல்படுகின்றன. நீங்களே சொல்லி விட்டீர்களே. மேதா பட்கர் ஒரு இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறார் என்று. வடக்கே வந்தனாசிவா ஊர் ஊராகப் போய் களப்பணி செய்து வருகிறார். இங்கு நாம் செய்து கொண்டிருக்கிறோம். ஆந்திராவில் டெக்கான் டெவலப்மெண்ட் சொஸைட்டி என்ற ஒரு அமைப்பு இயங்கி வருகிறது. அவர்கள் என்ன செய்தார்கள் என்றால், நிலத்தை விட்டு வெளியே நகரங்களுக்குக் கூலிகளாகச் சென்ற விவசாயிகளை அழைத்து மறுபடியும் நிலத்தில் விவசாயம் செய்யச் சொல்லி, நிலத்தை மேம்படுத்தி இழந்து போன தானியத்தையெல்லாம் உற்பத்தி செய்து, அங்கு தேவைக்கு மீறிய மகசூலை எட்டி அவர்களின் தேவைக்குப் போக அவர்களே மற்றவர்களுக்கு ரேஷன் அளிக்கிறார்கள். 2002 ஆம் ஆண்டு ஒரு கிராமத்தில் ஆரம்பித்தவர்ககள் இன்றைக்கு நூறு கிராமத்தில் இதைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இதே போல, கேரளத்தில் ஒரு கிராமத்தில் ‘தனல்’ என்ற ஒரு இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த எல்லா இயக்கங்களும் ஒன்றுசேருகின்ற காலகட்டத்தில்தான் நாம் இன்றைக்கு இருக்கிறோம். இன்னும் கொஞ்ச காலங்களில் இவை ஒன்று சேரப்போகின்றன.

மக்களிடம் அறிவிருந்ததென்றால், எடுத்துச் சொன்னவுடன் அவன் மாறிவிடுவான். அறிவில்லை என்றால் அவன் கஷ்டங்களை அனுபவிக்கும் போதுதான் மாறுவான். இப்போது அவன் கஷ்டங்களை அனுபவிக்கின்ற காலகட்டம் வந்துவிட்டது. ஆக, மக்கள் மாறக்கூடிய நேரம் இது. விவசாயத்தைப் பொருத்த மட்டும் மற்றதிலிருந்து கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது. மற்றவை எல்லாவற்றையும் பேசிதான் தீர்க்க வேண்டி இருக்கும். விவசாயம் என்பது செய்து காட்டி தீர்க்க வேண்டிய விஷயம். இன்றைக்கு தமிழ்நாட்டில் எனக்கு 100 பண்ணைகள் இருக்கின்றன. இந்த நூறு பண்ணைகளையும் பயிற்சி மையமாகப் பயன்படுத்துகிறோம் நாம். அதில் மக்கள் நேரடியாக வந்து பார்க்கிறார்கள். பார்த்ததை அவர்கள் தன்னுடைய நிலத்தில் நடைமுறைப்படுத்துகிறார்கள். ஆக, நம்முடைய உற்பத்தி முறையை மாற்றுவதென்பது கடினமான காரியமில்லை. ஆக, வள்ளுவர் என்ன சொல்லி இருக்கிறார் என்றால் ‘‘ஆங்கதை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு’’ என்று சொல்லி இருக்கிறார். எல்லா வளமும் இருந்தாலும் அரசாங்கம் உருப்படியாக அமையவில்லை என்றால், எது ஒன்றும் உருப்படாமல் போய் விடும் என்பது இதன் பொருள். ஆக அரசாங்கத்தை நேர்படுத்துவதற்குத்தான் நாம் அதிகம் உழைக்க வேண்டி இருக்கிறது.

தீராநதி : ஆற்றுநீரைப் பயன்படுத்தி தஞ்சை மாதிரியான வட்டாரங்களில் மூன்று போகம் விளைவித்திருப்பதை நாம் அறிந்துள்ளோம். ஆனால், ஆற்று நீர் ஆதாரமே இல்லாத செங்கல்பட்டு மாதிரியான பகுதிகள் ஏரி குளங்களை உண்டாக்கி அதன் வழியாக நீர்த்தேக்கி மூன்று போகம் விளைவித்து, அப்பகுதி செல்வச் செழிப்பாக இருந்திருக்கிறது. இன்றைக்கு ஆற்று நீர் ஆதாரங்கள் முழுக்க அரசியல் காரணங்களால் நாம் இழந்திருக்கிறோம். அண்மையில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் கூட பிரச்னையாகி தவிக்கிறது. இச் சமயத்தில் ஏரி, குளங்கள் மூலமாக _ செங்கல்பட்டு மாதிரி _ ஒரு விவசாயத்தை நம்மால் வளர்த்தெடுக்க முடியுமா? ஏரிகளை நம்பி மட்டுமே பயிர் செய்வதென்பது பிற மாவட்டங்களிலும் சாத்தியப்படுமா?

நம்மாழ்வார்: உங்களிடம் இருப்பது பொது அறிவு. இந்தப் பொது அறிவு விவசாயத்திற்கு உபயோகப்படாது. இன்னும் கொஞ்சம் அறிவு ஆழமானால்தான் விவசாயத்திற்கு அது பயன்படும். ஏரிகளை வைத்து சாகுபடி செய்வதென்பது செங்கல்பட்டில் மட்டும்தான் நடக்கும். அது தஞ்சாவூரில் நடக்காது. ஏன் என்று கேட்டீர்களென்றால், செங்கல்பட்டில் மலைகள் நிறைய இருக்கின்றன. மலையில் பெய்யும் மழை நீர் கடலுக்குப் போவதற்கு முன் மறித்து ஏரிகளில் நிரப்பி சாகுபடிக்குப் பயன்படுத்துகிறார்கள். இங்கு மேட்டூர் தண்ணீர் கடலுக்குப் போவதற்கு முன் மறிக்கப்பட வேண்டும். அப்படி மறித்து 33 ஆறுகளாகத் திருப்பி இருக்கிறார்கள். கல்லணையிலிருந்து 33 ஆறுகளாக பிரித்து கடலில் போய்ச் சேருகிறது. கிட்டத்தட்ட இந்தியாவில் இருக்கின்ற ஆறுகளிலேயே 95 சதவீதம் விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்படும் ஆறு காவிரி ஆற்றுத் தண்ணீர் மட்டும்தான்.

இன்று காடுகளை அழித்ததினால் புயல் மழையாக வரும் நீரை மேட்டூர் அணையில் நாம் தேக்கி வைத்தது போக, அதே போல ஐந்து மடங்கு தண்ணீர் வங்காள விரிகுடாவிற்குப் போய் விடுகிறது. நம்முடைய கரிகாலச்சோழன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்தக் கல்லணையைக் கட்டியதாகச் சொல்கிறார்கள். இங்கிலாந்துகாரன் இங்கு வந்து கல்லணையைப் பார்த்தபோது அவனுடைய தொப்பியைக் கழற்றி மரியாதை செலுத்தினானாம். ஏனென்றால், எப்படிடா தண்ணீர் பாயும் மணல் ஆற்றில் அணையைக் கட்டி இருப்பான் என்று அவனுக்குப் புரியவே இல்லை. ஆகவே அப்படி மரியாதை செய்திருக்கிறான். காட்டாற்றில் தண்ணீர் போய்க் கொண்டே இருக்கும். ஒரு வருடத்திற்குள் கட்டி முடிக்கப்படுகின்ற வேலையுமல்ல இது என்று மலைத்திருக்கிறான். ‘‘இந்த அணையைக் கட்டுவதற்காக இங்கு முதல் கல்லைப் போட்டானே அந்த மனிதனுக்கு என்னுடைய வணக்கம்’’ என்று அவன் சொன்னதாக வரலாற்றில் எழுதி இருக்கிறார்கள். ஆக, அந்தச் சாதனை மிக்க அணையை கரிகாலச் சோழன் கட்டி இருக்கிறான். அணையென்றால் நீரைத் தேக்கி வைத்து பிறகு தண்ணீரைத் திறந்து விடும் அணையல்ல; கொள்ளிடத்திற்கு அதிகமாகச் சொல்லும் தண்ணீரை அணையிட்டு தடுத்துவிட்டோம் என்றால், அதில் குறிப்பிட்ட அளவிற்கான தண்ணீர் காவிரி ஆற்றில் போய்க் கொண்டே இருக்கும். அதற்கு மேல் தண்ணீர் வந்தால் காவிரி அக்கரை தாங்காது. ஆகவே இதைக் கட்டி இருக்கிறான். அதற்கப்புறம் ஒரு விஷயம், பெரிய மன்னர்களை ஒளவையார் பாடவே இல்லை. கரிகாலனை மட்டும்தான் பாடி இருக்கிறாள். பாடும் போது என்ன சொல்கிறாள் என்றால், ‘‘காடு கொன்று நாடாக்கினான். குளம் தொட்டு வளம் பெருக்கினான்’’ என்று எழுதுகிறாள். சரி தானே?

ஆக, காவிரி மண்டலத்திலும் நிறைய குளங்களாகவே வெட்டி வைத்திருந்திருக்கிறார்கள். ஏனென்றால், காவிரியில் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் மட்டும்தான் தண்ணீர் வரும். அதற்காக எங்குப் பார்த்தாலும் குளங்கள் வெட்டினார்கள். தேக்கிய நீரை வருடம் முழுவதும் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால், இன்றைக்கு ஆற்று ஓரத்தில் தொழிற்சாலைகளை உண்டாக்கி வைத்துக் கொண்டு ஆற்று நீர் முழுவதையும் சாக்கடையாக்கி வைத்திருக்கிறோம். உடனடியாக நாம் செய்தாக வேண்டிய வேலை. ஆற்று ஓரங்களில் உள்ள எல்லா தொழிற்சாலைகளையும் பூட்டுப் போட்டு பூட்ட வேண்டியதுதான்.

நேற்று நாங்கள் திருவனந்தபுரத்திலுள்ள பத்மநாப சாமிகள் கோயிலுக்குப் போனோம். அங்கு கோயிலுக்குப் பக்கத்தில் பெரியதாக ஒரு ஏரியைக் கட்டி வைத்திருக்கிறார்கள். பக்கத்தில் குடியிருப்புக்கள் எல்லாம் இருக்கிறது. கோயிலின் மீது கூரை போட்டு விட்டார்கள். அதில் விழும் மழைத் தண்ணீர் ஏரிக்குள் வந்து விழுந்து நிரம்புகிறது. மக்கள் தன்னை கடவுள் காப்பாற்றுவதாக நம்பவைத்தார்கள். ஆனால், உண்மையில் இவர்கள் தான் கடவுளைக் காப்பாற்றினார்கள். ஏனென்றால், இவர்களே வகுத்துக் கொண்ட திட்டங்களால்தான் இவர்களை இவர்களே காப்பாற்றிக் கொண்டார்கள். ஆனால் கடவுள் காப்பாற்றுவதாக போதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மொத்தம் 40 ஆயிரம் ஏரிகளை நம்முடைய முன்னோர்கள் கட்டி வைத்திருந்தார்கள். ஏரி என்றால் என்ன அர்த்தம். ஏர் பூட்டி பயிர் செய்யப்படுகின்ற இடங்களை ஏரி என்றோம். அதோடு சின்னதானால் குளம். ஆடு மாடு குளிக்கலாம். அதைவிடச் சின்னதானால் குட்டை. கை கால் மட்டும் கழுவிக் கொள்ளலாம். இப்படி ஒவ்வொன்றிற்கும் பெயர் வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அந்த 40 ஆயிரம் ஏரிகளில் இன்றைக்கு 20 ஆயிரம் ஏரிகள்தான் இருக்கிறது என்கிறார்கள்.

ஒரு காலத்தில் காரல் மார்க்ஸ் இங்கிலாந்திலிருந்து எழுதுகிறார். ‘‘இந்தியாவினுடைய சூழல் ரொம்ப இயற்கை வளம் மிகுந்ததல்ல; அவர்கள் ஏரி குளங்களையெல்லாம் உண்டாக்கி வைத்திருக்கிறார்கள். ஆனால் அவற்றை அடிக்கடி மராமத்து செய்ய வேண்டும். அப்போதுதான் விவசாயம் ஒழுங்காக நடக்கும். ஆனால் இங்கிலாந்திலிருந்து போன ஆங்கில அரசு அவற்றின் மேம்பாட்டிற்குச் செலவழிப்பதே இல்லை. இவர்கள் போருக்குச் செலவு செய்வதும், வரி வசூலிப்பதும், வரிப் பணத்தை தலைநகரத்திற்கு அனுப்புவதும் மட்டும்தான் அங்கிருக்கும் ஆட்சியாளர்களின் வேலையாக இருக்கிறது. ஆகையினால் அங்கு பஞ்சம் மிஞ்சி இருக்கிறது. பஞ்சம் நிலவுகிறது’’ என்று எழுதுகிறார். அப்போது அந்த வெள்ளைக்காரன் போன பிற்பாடு நாம் நம்முடைய மக்களுக்காக ஆள வேண்டுமில்லையா? இப்பவும் பணக்கார நாட்டிற்கு சம்பாதித்துக் கொடுப்பதற்காகவே நம்முடைய ஆட்சியாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே இந்தப் பஞ்சம் இன்னும் தொடருகிறது. காந்தியே சொல்லி இருக்கிறார். ‘இந்தியாவில் ஆறு லட்சம் கிராமங்கள் இருக்கின்றன. இந்த ஆறு லட்சம் கிராமங்கள் வாழ்ந்தால் இந்தியா வாழ்கின்றதென்று அர்த்தம். இல்லையென்றால் இல்லை’ என்றார். அப்போது இந்த ஆறு லட்ச கிராமத்தினையும் வளர விடாமல் செய்து பட்டணத்தை மட்டும் ஊதி ஊதிப் பெருக்கி இருக்கின்றோம். பட்டணமும் இன்றைக்கு நன்றாக இல்லை. எவ்வளவு நகரமாக இருந்தாலும் ஒரு சிலர் வரைதான் தாங்கும். அப்போது பட்டிக்காட்டை வறட்சியில் தொடரவிட்டு விட்டோம் என்றால், எல்லா மக்களும் சாப்பாட்டிற்காக நகரத்தில் வந்து மோதுகிறார்கள். வேலை வாய்ப்பில்லை. வீட்டு வசதியில்லை. குடிப்பதற்கு நீர் இல்லை. மருத்துவ வசதி இல்லை. குழந்தைகளுக்கு பள்ளி வசதி இல்லை. மறுபடியும் என்ன செய்திருக்கிறார்கள். கிராமத்திலிருந்த சேரிகளுக்குப் பதிலாக பட்டணத்துச் சேரிகளை உண்டு பண்ணி இருக்கிறார்கள். ஆகவே மறுபடியும் இந்த ஆறுலட்சம் கிராமத்தினையும் வாழக் கூடிய பூமியாக மாற்றினோம் என்றால், பட்டணத்தில் ஏகப்பட்ட மக்கள் நெரிசலை கிராமத்திற்குத் தள்ளிவிடலாம். அப்போது பட்டணத்தில் இருப்பவர்களுக்கும் சேர்த்து இவர்கள் உற்பத்தி செய்வார்கள்.

தீராநதி : ‘‘பயிர்கள் தானாக வளர வேண்டுமே தவிர, நாமாக வளர்க்கக் கூடாது. இயற்கையான வழிக்கே எல்லாவற்றையும் விட்டு விட வேண்டும். ஆனால் திடீரென்று இந்த எண்ணத்தை ஒட்டுமொத்தமாக நடைமுறைப்படுத்தினால் விளைவு நன்றாக இருக்காது. அதற்குப் பெயர் இயற்கை வேளாண்மை அல்ல; கை கழுவி விடுவது’’ என்று தன்னுடைய இயற்கை வேளாண்மை குறித்து மசானோபு ஃபுகோகா சொல்கிறார். அவர் இந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக தன் நிலத்தை உழுவதை நிறுத்தியதைத் தொடர்ந்தும் அவர் நிலத்தின் வளம், அமைப்பு மற்றும் நீரைத் தக்க வைத்து கொள்ளும் மண்ணின் தன்மை வெகுவாக உயர்வதாக குறிப்பிடுகிறார். அவரது இயற்கை வேளாண்மையை அப்படியே இங்கு நடைமுறைப்படுத்த இயலாதென்ற போதிலும் ஃபுகோகாவின் இயற்கை வேளாண்மையிலிருந்து உங்களின் இயற்கை வேளாண்மை வேறுபட்டதா? கொஞ்சம் விளக்குங்களேன்?

நம்மாழ்வார் : முதலில் ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எல்லா விஷயத்தையும் எல்லா இடத்திலும் உற்பத்தி பண்ணலாம். ஆப்பிள் மரம் கூட நம்முடைய மண்ணில் வளர்ந்து விடுகிறது. ஆனால் காய்க்க மாட்டேன் என்கிறது. அதுபோல ஒன்று இரண்டு மரங்கள் தான் நம் சூழலுக்கு ஒத்துவராதே ஒழிய, மற்ற எல்லாவற்றையும் நம்முடைய மக்கள் வளர்த்து சாதித்து விட்டார்கள். திருச்சியை விட வெயில் அதிகமாக இருக்கக் கூடிய பட்டுக்கோட்டை பகுதியில் காப்பி விளைகிறது. லவங்கம் விளைகிறது. ஆல் ஸ்பைஸஸ் பிளாண்ட் விளைகிறது. கோகோ விளைகிறது. ஜாதிக்காய் விளைகிறது. பாக்கு விளைகிறது. இப்படி எல்லாவற்றையும் வளர்த்துக் காண்பித்து விட்டார்கள். இது எப்படிச் சாத்தியமென்று கேட்டீர்கள் என்றால், அது ஒரு இயற்கைச் சூழலில் வளர்கிறது. அதை ‘மைக்ரோ கிளைமேட்’ என்பார்கள். இப்போது நீங்கள் நல்ல வெயிலில் ரோட்டில் சைக்கிளில் பயணம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். களைத்து விடுகிறீர்கள். உடனே சாலை பக்கத்தில் உள்ள வேப்ப மரத்தின் கீழ் உள்ள நிழலில் போய் நிற்கிறீர்கள். உடனே உங்களுக்கு குளுகுளு என்று இருக்கிறதில்லையா? உடனே உங்களின் களைப்பு போய் விடுகிறதல்லவா? அதற்குப் பெயர்தான் ‘மைக்ரோ கிளைமேட்’ என்கிறோம். ஒரு சின்ன இடத்தினால் கூட ஒரு வித்தியாசமான சூழலை நம்மால் உருவாக்க முடியும். பாலைவனத்தில் ஒட்டகத்தின் மீது செல்பவன் பக்கத்திலுள்ள நீர்ச்சுனை பக்கமாக நிற்பான். அதை பாலைவனச் சோலை என்பார்கள். ஒயாஸிஸ் என்றும் சொல்வார்கள். அங்கு இளைப்பாற அவனுக்கு நிழல் கிடைக்கிறது. அருந்த நீர் கிடைக்கிறது. சாப்பிட பேரீச்சம் பழம் கிடைக்கிறது. அவனுக்குத் தேவையான சகலமும் கிடைக்கிறது. மனிதன் அறிவை மட்டும் சரியாகப் பயன்படுத்தினான் என்றால் எங்கும் வாழ்வதற்கான சரியான சூழலை, அழகாக உருவாக்கிவிட முடியும். இதுதான் உங்களின் ஒரு பகுதி கேள்விக்கான பதில். அடுத்தது நாம் ஃபுகோகாவிற்குள் போவோம். ஃபுகோகாவினுடைய ‘ஒற்றை வைக்கோல் ‘புரட்சி’யை எல்லோரும் படித்திருக்கிறார்கள். அடுத்தாற்போல் வந்த இரு புத்தகங்களை யாரும் படிக்கவில்லை. ‘நேச்சுரல் வே ஆஃப் ஃபாமிங்’ என்ற புத்தகம் வந்திருக்கிறது. ‘ரோடு பேக் டு நேச்சர்’ என்ற புத்தகம் வெளி வந்திருக்கிறது. இந்த இரண்டு புத்தகத்திற்கு அடுத்து இப்போது ஒரு புது புத்தகம் கூட வெளி வந்து விட்டதென்று நினைக்கிறேன்.

‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ புத்தகம் முழுக்க நெற் சாகுபடி பற்றி தான் பேசுகிறது. ‘நேச்சுரல் வே ஆஃப் ஃபாமிங்’ புத்தகத்தில் இயற்கை வழி பண்ணையம் பற்றிய ஏகப்பட்ட விஷயங்கள் பேசப்படுகிறது. முக்கியமாக ஜப்பானிலிருந்து எந்த இடத்தில் நாம் வித்தியாசப்பட்டு நிற்கிறோம் என்று கேட்டால், ஜப்பானில் 52 வாரம் மழை பெய்கிறது. இங்கே மூன்று மாதம் மட்டும்தான் மழை பெய்கிறது. இந்த மூன்று மாத மழையும் 45 நாட்களுக்குள் பெய்ந்து விடுகிறது. இங்கு தான் பெரிய வித்தியாசம் ஏற்படுகிறது. ஃபுகோகா பதினைந்து வருடங்கள் நிலத்தில் இயற்கை வழி விவசாயத்திற்கான வேலையைச் செய்து விட்டு அதற்குப் பிற்பாடு உழுவதை நிறுத்தி விட்டார். நாமும் உடனே நம்முடைய நிலத்தில் உழுவதை நிறுத்திவிட்டு விவசாயம் பண்ண முடியாது. ஃபுகோகா உழவேண்டாம் என்று சொல்லவே இல்லை. மண்புழுவும் புல் பூண்டுச் செடியின் வேர்களும் நிலத்தை இயற்கையாகவே உழுகிறதே பிறகு எதற்கு நீ தனியாக உழவேண்டும் என்று கேட்கிறார். இந்த ‘உழவு’ என்பது திருவள்ளுவரின் அதிகாரங்களில் வரக்கூடிய ஒரு தலைப்பு. உழவு என்றால் என்ன அர்த்தம்? ‘உழவு’ என்றால் துன்பம் என்று அர்த்தம். மழை பெய்து கொண்டிருக்கும்போது விவசாயி தலையில் ஒரு சாக்குப் பையைப் போட்டுக் கொண்டு நிலத்தை உழுது கொண்டிருப்பான். ஒரு மாதம் தொடர்ந்து மாடு உழுததென்றால், அதனுடைய கால் செக்கச் செவேல் என்று வெளுத்து விடும். அதன் கால் உரோமங்கள் எல்லாம் உதிர்ந்து விடும். குளம்பெல்லாம் தேய்ந்து போய்விடும். உழவு மாட்டிற்கே இவ்வளவு சங்கடங்கள். அப்போது விவசாயி மாடாக உழைக்கிறான். அதனால்தான் சிறப்பு என்று வள்ளுவர் சொன்னார். இதுதான் இனியது என்று சொன்னார். ‘‘சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை’’ என்கிறார். துன்பப்பட்டீர்கள் என்றாலும், அந்த உணவு சிறந்தது. ஏருக்குப் பின்னால்தான் உலகமே இருக்கிறது என்பதுதான் இதன் பொருள். ‘ஏர்’ என்றால் தமிழில் ‘அழகு’ என்ற இன்னொரு அர்த்தமும் இருக்கிறது. தன் நூலில் ஃபுகோகா டிராக்டரை ரொம்பவும் அழகாக தாக்குகிறார். ஒருவன் விடாமல் கண்விழித்து ஆராய்ச்சி செய்கிறான். கடைசியாக என்ன கண்டுபிடித்திருக்கிறான் என்றால் கிட்டப்பார்வைக்கு மூக்கு கண்ணாடி. ‘ஏன் அய்யா இவ்வளவு கண்விழித்து கண்களை கெடுத்துக் கொண்டு உடலையும் வருத்தி துன்பப்படுகிறீர்’ என்று கேட்டால் ‘கண்ணாடி கண்டுபிடிப்பதற்கு’ என்று பதிலளிக்கிறான். அதே போல பூமியை உப்பைப் போட்டு எவ்வளவு தூரம் கெடுக்க முடியுமோ அவ்வளவையும் கெடுத்து வைத்து விட்டு மாட்டு கலப்பையினால் இனி உழவே முடியாது என்கின்ற நிலை வரும் போது டிராக்டரைக் கொண்டு வந்து இறக்குகிறார்கள் என்று விமர்சிக்கிறார் ஃபுகோகா. மண்ணின் இயற்கை தன்மையைக் கெடுத்து விட்டு டிராக்டரைக் கண்டுபிடித்தீர்கள். டிராக்டர் ஓடுவதற்கு எண்ணெய் வேண்டுமே அதற்காக பூமியில் சுரங்கம் தோண்டி வேறு ஒரு பகுதியைக் கெடுத்தீர்கள். இதற்கு தேவையான இரும்புச் சாமான்களைச் செய்வதற்காக காட்டினை அழித்தீர்கள். ஆக, சுற்றுச் சூழலைக் கெடுத்துவிட்டுதான் இந்த டிராக்டரே வருகிறது. ஆனால் நம்ம மாடு உழும் போது சாணி போடுகிறது. அது மண்ணிற்குள் இறங்கி எருவாகிறது. அதனால்தான் ‘ஏர்’ என்பதை அழகு என்றார்கள் தமிழர்கள்.

கிராமத்தில் சொல்வார்கள் ‘‘கோணக்கா மாணக்க மூணு பேரு கூட்டிப் பார்த்தா பத்து காலு’’ என்று. இரண்டு மாட்டையும் சேர்த்து எண்ணினால் எட்டுக் கால். அதை ஒட்டுபவனின் கால் இரண்டு. மொத்தம் சேர்த்தால் பத்து கால். ஆக, மாட்டை தனியாக நம்முடைய விவசாயி பிரித்துப் பார்க்கவில்லை. தன்னுடைய சொந்தமாகச் சேர்த்துப் பார்க்கிறான். அடுத்தது உங்களுடைய கேள்வியின் முக்கியமான பகுதிக்கு வருகிறேன். ஷப்பானில் மொத்தம் 12 மாதமும் மழை பெய்வதினால் அவர்கள் ஆறு மாதம் நெல் அல்லது பார்லியை விதைப்பது, ஆறு மாதம் கோதுமை விதைப்பது என்று பிரித்துக் கொண்டார்கள். நெல் அறுப்பதற்கு ஏழு எட்டு நாட்களுக்கு முன்னாலேயே கோதுமையை விதைத்து விடுவார்கள். அதேபோல் கோதுமையை விதைப்பதற்கு முன்னாலேயே நெல்லை விதைத்து விடுகிறார்கள். அப்போது உழுவதற்கே வேலை கிடையாது. நாற்று விடுவது தேவையில்லை. புடுங்கி நடவேண்டியதில்லை. பூமி எப்போதும் மூடியே இருக்கிறது. களை மண்டாது. அப்படியே நிலம் முன்னேறிவிட்டது. ஆனால் நமக்கு அப்படி இல்லை. மூன்று மாதம்தான் மழை. மீதியெல்லாம் வெயில், காற்று என்றிருக்கிறது. என்னுடைய கூட்டாளி ஆரோவில்லில் (பாண்டிச்சேரி பக்கமாக) இருக்கிறான். பெல்ஜியத்துக்காரன். அவனது பெயர் பெர்னார்டு டி கிளார்க். இந்த பெர்னார்டு டி கிளார்க்குதான் எனக்கு வழிகாட்டி. கிளார்க் என்ன செய்தார் என்றால், இங்கு நம்முடைய பருவநிலைக்குத் தகுந்த மாதிரி மூன்று பயிர் சுழற்சியைக் கொண்டு வர வேண்டும். கொண்டு வந்தார். அவரது முறைப்படி மழைக்காலத்தில் நெல்லை பயிர் செய்தார். அதற்கடுத்தது சோளமும் தட்டைப் பயிறும் பயிர் செய்தார். சோளம் நேராக விளைந்து நிற்கிறது. தட்டை அதைச் சுற்றிக் கொண்டு வளர்கிறது. சோளம் மண் சத்தை எடுக்கிறது. தட்டை பயிர் சத்தை சேர்க்கிறது. மூன்றாவது நல்ல வெயில் பருவம் வரும் போது வெறும் உரச் செடிகளை மட்டுமே விதைப்பது என்று திட்டமிட்டுக் கொண்டார். ஆக, பூமி எப்போதும் மூடியே இருக்கும். இதனால் மண் வளம் பெருகச் செய்கிறது. நாம் முன்னோர்கள் இப்படித்தானே பயிர் செய்தார்கள்.

ஆக, நம்முடைய வரலாற்றையும் கலாச்சாரத்தையும் அடிப்படையாகக் கொண்டு மூன்று பயிர்த் திட்டமாக கொண்டு வந்தார் கிளார்க். ஃபுகோகா சொல்கிறார். ‘‘இயற்கைக்கு ஒரு விதி இருக்கிறது. இயற்கை கொடுத்ததைத் திருப்பி அளிப்போம். நெல்லை விளைத்தால் நெல்லை எடுத்துக்கொண்டு வைக்கோலைத் திரும்ப நிலத்திற்கே கொடுத்துவிடு. ஆக, வேண்டியதை எடுத்துக் கொண்டு வேண்டாததை இயற்கையிடம் திருப்பிக் கொடுக்கப் பழக வேண்டும். இன்றைக்கு மக்களுக்கு அரசாங்கம் கோடி கோடியாக செலவழிப்பதாகச் சொல்கிறது. ரோடு போடுகிறது. மின்சாரத்தைத் தயார் செய்து கொடுக்கிறான். தண்ணீர் சப்ளையெல்லாம் செய்து கொடுக்கிறான். ஆனால் விவசாயிகளுக்கு கிராமத்தில் தானியங்களை அடித்து உலர்த்துவதற்கு ஒரு களம் செய்து கொடுக்கவில்லை. விவசாயி தார் ரோட்டிற்குக் கொண்டு வந்து விரவி பஸ் லாரியை தானியத்தின் மீது ஓட விட்டு தானியத்தைப் பிரிக்க வேண்டிய நிலைமைதான் இன்னும் இருக்கிறது. இதனால் என்ன ஆகிறது? ரோட்டிலேயே வைக்கோலை போட்டுவிட்டு வந்து விடுகிறான். அடுத்த நாள் மாடு மேய்க்கப் போகும் சிறுவன் அவற்றிற்கு ‘தீ’ வைத்து எரித்துக் கொண்டிருக்கிறான். வைக்கோல் சத்து நிலத்திற்குப் போய்ச் சேரவில்லை. ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கொள்கை (அ) தத்துவம் என்றும் நடைமுறை என்றும் இரண்டு இருக்கிறது. நடைமுறை ஊருக்கு ஊர் வித்தியாசப்படும். ஆனால் கொள்கை ஊருக்கு ஊர் வித்தியாசப்படாது. உலகம் முழுவதும் ஒன்றுதான்.

தீராநதி : நம் மரபிலிருந்து அழிந்துபோன, அதாவது ரசாயன வேளாண்மையில் காணாமல் போன பல்வேறு வகைப்பட்ட தானியங்களை நம்மால் மறுபடியும் மீட்டெடுக்க முடியுமா?

நம்மாழ்வார் : எங்கள் ஊரில் இருந்த கோயில் மாடு திருடு போய்விட்டது. மூன்று வருடம் போராடி மாட்டை திரும்பக் கொண்டு வந்து விட்டார்கள். அதே போல நம்முடைய தானிய வகைகள் எல்லாம் பிலிஃப்பைன் நாட்டுக்குத் திருட்டு போய் இருக்கிறது. நம்முடைய விஞ்ஞானிகளை அனுப்பி வைத்தால் திரும்ப கொண்டுவந்து விடப்போகிறார்கள். நம்முடைய ஆட்களை வைத்துத் தானே அவர்கள் திருடி இருக்கிறார்கள். இந்தத் துணைபோன திருடனை அனுப்பி உண்மையான திருடனைப் பிடித்துக் கொண்டுவா என்றால் பிடித்துக் கொண்டு வருகிறான். நம்முடைய தானியங்கள் எல்லாம் இயற்கையாக அழிந்து போகவில்லை. திருடுதானே போய் இருக்கிறது.

தீராநதி : இதற்கு முன்னால் கூட ‘மான்சாண்டோ விதைகளை’ கொண்டு வந்து நம்முடைய நாட்டில் அறிமுகம் செய்தார்கள். தொடர்ந்து அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக வல்லரசு நாடுகள் அதற்கான வேலைகளை நடத்திக் கொண்டுதான் இருக்கின்றன. மனித சமூகத்திற்கே பெரும் கேடு என்று தெரிந்த ஒரு விஷயத்தை, ஒரு சாதாரண சாமான்யன் கூட புரிந்து கொள்ளக் கூடிய ஒரு விஜயத்தை, நம்முடைய அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ளாமல் போவது ஏன்? 123 அணு ஆயுத ஒப்பந்தத்திற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் அளவுக்குக் கூட இந்த பிரச்னைகளுக்குக் கொடுக்கப்படுவது இல்லையே அது ஏன்?

நம்மாழ்வார் : இதற்கு பதிலை நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும். நீங்கள்தான் ரொம்ப படிக்கக் கூடிய ஆளாக இருக்கிறீர்கள். அதாவது நம்மூரில் நிறைய வட்டிக் கடைகள் எல்லாம் இருக்கிறது. இதற்கு ‘பேங்க்’ என்று பெயர் வைத்திருக்கிறோம். இந்த பேங்க் என்பது எங்கிருந்து வந்தது என்பதை நான் அறிந்து கொண்ட போது ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. 1985_ல் நான் இங்கிலாந்து சென்றிருந்தபோது ஒரு நண்பர் என்னைக் கூப்பிட்டுக் கொண்டு போய் ஒரு ஏரிக்கரையை காண்பித்தார். அந்த ஏரிக் கரைக்குக் கீழாக நிறைய தரிசு நிலங்கள் இருந்தன. ‘இதுதான் எங்கள் காலத்தில் சந்தையாக இருந்தது. இந்த ஏரியினுடைய கரை இருக்கிறது பாருங்கள், அதற்கு பெயர் பேங்க். இந்தக் கரைக்கு பக்கத்தில் ஒரு காய்ந்து போன மரம் கிடக்கும். அந்த மரத்தின் மீதமர்ந்து இரண்டு நபர்கள் காலையில் சந்தைக்கு வரும் விவசாயிகளுக்குக் கடன் கொடுப்பார்கள். சாயுங்காலம் விவசாயி வட்டியுடன் கொண்டு வந்து தொகையைத் திரும்பக் கொடுப்பான். அதான் ‘பேங்க்’கிலிருந்து பணம் போனது. ‘பேங்க்’கிலிருந்து பணம் வந்தது. ஆக, ‘பேங்க்’ என்றால் ஏரிக்கரை. ஏரிக்கரையில் உட்கார்ந்து வட்டிக்குக் கொடுத்து வியாபாரம் பண்ணவன் இன்றைக்கு கோடி கோடியாக மாளிகைகள் எல்லாம் கட்டிக் கொண்டு எங்கெங்கோ இருக்கிறான். அத்தனை பேர்களும் வட்டிக் கடைக்காரர்கள். வட்டிக்கடை வைத்திருப்பவன் எந்த உழைப்பும் செய்வதில்லை. சட்டை காலரில் அழுக்குப்படாமல் உழைக்கிறான் அவன். அதே போல நாம் உலக வங்கியில் கடன் வாங்கினோம். அவனுக்குக் கடன் பட்டிருக்கிறோம். இங்கு விளைந்ததை விற்று அவனுக்கு இன்னும் வட்டியையே கட்டிக் கொண்டிருக்கிறோம். ஆக, அவன் உழைக்கவே வேண்டாம். நாம் சுகமாக இருக்க வேண்டும். மற்றவர்கள் யாராவது உழைக்க வேண்டும். நம்ம வயிறு நிரம்ப வேண்டும். அது அவர்களின் கொள்கையாக இருக்கிறது. இதை வேறு மாதிரி சொன்னோம் என்றால், பேங்கில் இருக்கும் அதிகாரி என்ன சொல்கிறான் ‘ஒரு திட்டத்தைக் கொண்டு வாருங்கள். நான் பணம் தருகிறேன்’ என்கிறான். அதே மாதிரி ஒரு திட்டத்தை நாம் கொண்டு போனால், ‘உங்களின் திட்டம் 30 சதவீதம் லாபம் வரும் என்று வாக்குறுதி தந்தால்தான் அதற்கு நான் பணம் கொடுப்பேன்’ என்கிறான். அப்போது லாபம் சம்பாதிப்பவனுக்கு மட்டும் தான் பணம் தருவான் ‘பேங்க்’காரன். ஆக, முப்பது சதவீதம் லாபம் கிடைக்கும் என்றால் எவனாக இருந்தாலும் கடன் வாங்கி தொழிலைத் தொடங்குவான். 50 சதவீதம் லாபம் வரும் என்றால் சட்டத்தை மீறுவான். 100 சதவீதம் லாபம் கிடைக்கும் என்றால் கொலை செய்வான். 200 சதவீதம் லாபம் வருமென்றால் தானே செத்தாலும் பரவாயில்லை என்று அக்குற்றத்தைத் துணிந்து செய்வான். இதுதான் அரசியல் பொருளாதார கொள்ளை. அது இன்றைக்கும் சரியாக இருக்கிறது. ஆக, வரப்போகும் லாபம் தான் ஒருவன் எப்படி நடந்து கொள்வான் என்பதைத் தீர்மானிக்கிறது.

தீராநதி : இதுபோல வர போகும் கேடுகளை ஏன் நம்முடைய விஞ்ஞானிகள் முன் கூட்டியே அரசிடம் எடுத்துச் சொல்லக் கூடாது?

நம்மாழ்வார் : நாம் தான் இங்கு தப்பு செய்கிறோம். விஞ்ஞானம் என்ன செய்யுமென்றால், ஒன்றை எப்படிச் செய்ய வேண்டும் என்பதைத் தான் சொல்லும். ஆனால் ஒரு இலக்கியவாதிதான் ஏன் செய்ய வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டும். அதனால் இலக்கியவாதிகள் தான் விஞ்ஞானிகளுக்கு யோசனை சொல்ல வேண்டுமே தவிர, விஞ்ஞானிகள் இலக்கியவாதிகளுக்கு யோசனையைச் சொல்லக் கூடாது. கனடாவில் உள்ள ஒரு விஞ்ஞானி என்ன சொல்லி இருக்கிறான் தெரியுமா? ‘‘இந்த விஞ்ஞானிகள் செய்வதற்காக நான் வெட்கப்படுகிறேன்’’ என்று சொல்லி இருக்கிறான். விஞ்ஞானிகள் வரலாற்றைப் படிக்காமல் விஞ்ஞானத்தைக் கையில் எடுக்கக்கூடாது. வரலாற்றில் இரண்டு பெரிய தவறுகள் நடந்திருப்பதாக கனடா நாட்டு விஞ்ஞானி சுட்டிக் காட்டுகிறார். ஒன்று : 1938_39 DDT என்று ஒரு விஜத்தைக் கண்டுபிடித்தார்கள். அந்த DDT விஷத்தை கிணற்றில், ஆற்றில் கலந்து விட்டால் எதிரிகள் நம்மீது படையெடுத்து வரும்போது அந்த தண்ணீரைப் பருகிவிட்டு இறந்து விடுவார்கள். அல்லது குடிக்க முடியாமல் திரும்பி விடுவார்கள். அந்த விஜத்தைக் கண்டுபிடித்து உயிரியைக் கொலை செய்யுமா என்று தெரிந்து கொள்வதற்காக பூச்சியின் மீது தெளித்தான். பூச்சி செத்து விட்டது. ஆனால் 1945_ல் போர் முழுக்க நின்று போய் விட்டது. உடனே இதை பூச்சி மருந்து என்று சொல்லி உலகம் முழுவதும் பரப்பினார்கள். ஆனால் தயாரித்தது எதற்கு? ஆட்களைக் கொல்வதற்கு. இந்த விஜத்தைக் கண்டுபிடித்தவன் பெயர் Paul Muller. இந்த Paul Muller1948_ல் நோபல் பரிசையே கொடுத்தார்கள். மனித மேம்பாட்டிற்காக பாடுபட்ட விஞ்ஞானி என்று சொல்லி விருதைக் கொடுத்தார்கள். 1960_61_ல் என்ன தெரிய வந்ததென்றால், அந்த மருந்து மனிதனையெல்லாம் கொல்கிறது என்று தெரிய வருகிறது.

அமெரிக்காவில் உள்ள மரத்தின் மீது வண்டுகள் இருக்கிறது என்பதற்காக ஹெலிகாப்டரில் கொண்டு சென்று மரத்தின் மீது இந்த மருந்தை தெளித்தார்கள். அந்த மரத்தின் இலை பட்டு கீழே விழுந்ததை தின்று மண்ணில் இருந்த மண்புழு செத்து விட்டது. செத்த மண்புழுவைத் தின்ற பறவை செத்துப் போனது. ‘ராபின்’ என்ற ஒரு பறவை அங்கிருந்தது. அது என்ன செய்யுமென்றால் பனிகாலம் வரும் போது நாட்டை விட்டு வெளியில்போய் விடும். வசந்த காலம் வரும் போது சத்தம் போட்டுக் கொண்டு நாட்டிற்குள் திரும்பும். ஆக, வசந்தம் வரப்போகிறது என்று ‘கட்டியம்’ கூறக் கூடிய பறவை அது. இப்போது அந்தப் பறவையையே அங்கு காணோம். இதையெல்லாம் பார்த்து விட்டு கடல் விஞ்ஞானி ராச்சேல் கார்சன் என்பவள் ஒரு புத்தகத்தை எழுதினாள். எழுதிய அடுத்த வருடமே அவள் கேன்சர் நோயினால் இறந்து போனாள். DDT என்ன செய்யுமென்றால், நம்முடைய உள்ளுறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தி விந்து சுரப்பதையே நிறுத்தி விடும். உள்ளுக்குள்ளே புற்று நோயை வளர்க்கும். அந்தப் புத்தகத்தைப் படித்த அந்நாட்டு மக்கள் அபாயத்தை உணர்ந்து பின் போராடி அதைத் தடுத்து நிறுத்தினார்கள். அவர்களின் தேசிய பறவை வழுக்கை தலை கழுகு காணாமல் போய்விட்டது. ஹெலிகாப்டரில் தெளிக்கும் மருந்து மரத்தின் மீது மட்டுமே விழாது. அது பக்கத்தில் இருக்கும் ஆறு, ஏரிகளின் மீதும் விழும். அப்படி விழுந்து நீரில் கலந்த அந்நீரைப் பருகிய மீன்கள் நோய்வாய் பட்டு மெதுவாக நீந்தின. அதை சுலபமாக வேட்டையாடி உண்ட கழுகுகள் இறந்து போயின. இவ்வளவு பெரிய தீங்கை கண்டுபிடித்த விஞ்ஞானிக்குத்தான் நாம் நோபல் பரிசை கொடுத்திருக்கிறோம். அதே போல குளோரோ ஃபுளோரோ கார்பன் வாயுவைக் கண்டுபிடித்தவனுக்கு பரிசு கொடுத்தார்கள். இதைத் தான் ஏர் கண்டிஷனில் எல்லாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த வாயுதான் ஓசோன் மண்டலத்தை ஓட்டை போடுகிறது. இந்த வாயு காற்றை விட லேசானது. அதனால் அது ஓசோன் திரையைக் கிழித்துக் கொண்டு மேலே போகிறது. ஓசோன் என்றால் என்ன அர்த்தம்? ஆக்ஸிஷன் அடர்த்தியாக இருக்கிறதென்று அர்த்தம். ‘ஓ’ என்றால் ஆக்ஸிஜன். பொதுவாக ‘ஓ’ என்பது இரண்டாக (O2) இருக்கும் இதில் ‘ஓ’ மூன்று அனுவாக இருக்கிறது. இந்த வாயு ஓசோனின் காற்றுத் திரையைக் கிழித்துக் கொண்டு மேலே போகும் போது குளோரின் தனியாகப் பிரிந்து விடுகிறது. பிரிந்ததும் கனமாகி கீழே இறங்குகிறது. அப்போது ஓசோனை ஓட்டை போடுகிறது. இதனால் என்ன நடக்கிறது. சூரியக் கதிர்கள் வடிக்கப்படாமல் கீழே இறங்குகின்றன. அதனால் நமது தோலில் புற்றுநோய் உண்டாகிறது. ஆக, விஞ்ஞானம் என்றாலே முன்னேற்றமானது என்று நினைப்பவனை விட முட்டாள் வேறு ஒருவன் இருக்க மாட்டான். முன்னேற்றமாகவும் இருக்கலாம், இல்லாமலும் போகலாம். அதான் சரி.

தீராநதி : பறவைகளின் இறப்பு குறித்து சொன்னீர்கள். மாலத்தீவில் ‘கல்வேரிய மேஷர்’ என்ற மரங்கள் சமீப காலமாக புதியதாக எதுவும் முளையவே இல்லை. எல்லாம் முன்னூறு ஆண்டுகள் பழமையான மரங்கள்தான் இருக்கிறது. ஏன் என்று ஆராய்ந்த போது அம்மரத்தின் விதைகள் தானே மண்ணில் விழுந்தால் முளைப்பது கடினம். அதுவே டோடோ (DODO) என்ற ஒரு பறவை உண்ட பிற்பாடு அதன் கழிவிலிருந்து வெளியேறும் விதைக்குத்தான் முளைக்கக்கூடிய வீரியம் இருக்கிறது என்று கண்டுபிடித்தார்கள். இன்றைக்கு DODO முற்றிலுமாக அழிந்து விட்டது. ஆகவே அம்மரங்கள் புதியதாக முளைக்கவே இல்லை என்பதும் தெரிய வந்தது. இங்கிருக்கும் ஆலமரத்திற்கும் வேம்பிற்கும் கூட இந்த ‘விதிகள்’ பொருந்தும். இந்த மாதிரி இயற்கை சுழற்சியின் வளையத்தை மனிதர்கள் எந்த அளவிற்கு நாசப்படுத்தி இருக்கிறோம் என்று சொல்லுங்களேன்?

நம்மாழ்வார் : DODO பறவை எப்படி செத்ததென்று நீங்கள் சொல்லவில்லையே?

தீராநதி : தெரியவில்லை. சொல்லுங்கள்?

நம்மாழ்வார் : மாலத்தீவில் அந்த DODO பறவைகள் ரொம்ப சுகமாக வாழ்ந்து கொண்டிருந்தன. இந்துமகா கடலில் மாலத்தீவு என்பது ரொம்ப அழகாக இருக்கிறதென்று நிறையப் பேர் சுற்றுலாவிற்குச் சென்றார்கள். அப்படிப் போனவர்கள் நல்ல சுகத்தை அனுபவித்தார்கள். போனவர்கள் சும்மா போகவில்லை. துப்பாக்கியுடன் போனார்கள். இந்தப் பறவைகளுக்கு இவர்கள் தன்னைச் சுடுவார்கள் என்று தெரியாததால் அது சாதுவாக உட்கார்ந்திருந்ததால் அதை சுட்டுச் சுட்டே தின்றார்கள். அப்படியே ஒரு பறவை கூட மிச்சமில்லாத அளவிற்கு சுட்டுச் சுட்டு தின்றிருக்கிறார்கள். இப்போது தான் அவர்களுக்குத் தெரிய வருகிறது DODO இல்லை என்றால், கல்வேரியமரங்கள் முளைக்காதென்று.

தீராநதி : நம்முடைய நாட்டுப் பிரச்னைக்குள்ளாக வருவோம். ஒரு காலத்தில் தான் உண்டதுபோக இருக்கும் தானியங்களை வியாபாரம் செய்தார்கள் நம் முன்னோர்கள். அதில் ஒரு நியாய தர்மம் இருந்ததாக நாம் இன்று படிக்கிறோம். ஆனால் இன்றைய சந்தையில் கிடைக்கும் சகல பொருட்களிலும் கலப்படம் கலப்படம். எதிலும் ஒரு நம்பகத் தன்மையற்ற வியாபாரமே நடக்கிறது. ரசாயன முறையில் தவறுகளைச் செய்வதற்கென்றே இன்றைக்கு இயந்திரங்கள் எல்லாம் கூட விலைக்கு வந்துவிட்டன. இதன் மூலம் வியாபாரி அதிக லாபம் அடையலாம்? இப்படி நாணயமற்ற ஒரு போக்கு நம் சமூகத்திற்குள் எப்படிப் புகுந்தது?

நம்மாழ்வார் : நம்முடைய சமுதாயம் என்றைக்கு நீதியாக வாழ்ந்த தென்று நீங்கள் சொல்கிறீர்கள்? அசோகனின் அப்பன் பிந்துசாரன் இருந்தான் பாருங்கள் அவனும் புத்தனும் நண்பர்கள். அப்படி இருந்தும் அசோகன் தொடர்ந்து கொலை செய்து கொண்டே வருகிறானே? எங்கே நீதியாக இருந்தது நம் சமூகம்? நாடு முழுவதும் எப்போது பார்த்தாலும் போராட்டம்?. ‘இவன்’ அவனை வெட்டுவது. ‘அவன்’ இவனை வெட்டுவது. அந்தக் காலத்திலிருந்து இன்று வரைக்கும் அதைத்தானே செய்து கொண்டிருக்கிறார்கள். ஆக, நீதி என்ற ஒன்று வரவேண்டுமென்றால், அது இனிமேல்தான் வர வேண்டும். இராஷராஷசோழன் காலத்தில் தண்டனை இது : மழை பெய்யவில்லை. பூமி விளையவில்லை என்று வைத்து கொள்ளுங்கள். என்ன செய்வார்களென்றால் குடிசையில் இருக்கின்ற வெண்கல பாத்திரங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு குடிசைக்குத் தீயை வைத்து விட்டு அவனுக்கு சிவ துரோகி என்று பட்டம் கட்டி நாடு கடத்திவிடுவார்கள். இது தஞ்சை பெரிய கோயிலின் கல்வெட்டில் எழுதி இருக்கிறது. நிலத்தையெல்லாம் சிவனின் சொத்தாக எழுதி வைத்துவிட்டார்கள். குத்தகை கொடுக்கவில்லை என்றால் சிவனுக்குத் துரோகம் செய்துவிட்டதாக அர்த்தம். சிவனுக்குத் துரோகம் செய்தவனுக்கு தண்டனை என்னவென்றால், ‘‘மண் கலம் உடைத்து பொன் கலம் எடுத்து குடிசைக்கு தீ வைத்து சிவதுரோகி பட்டம் சூட்டி நாடு கடத்துதல்’’ இதுதான் தண்டனை. அப்போ என்றைக்கு நீதி இருந்திருக்கிறது?

தீராநதி : பொத்தம் பொதுவாக எல்லாம் அநீதியானவர்கள் என்று தீர்ப்பெழுதுவது சரியானதா?

நம்மாழ்வார் : பாரதியார் சொன்னதை எடுத்துக் கொள்ளுங்களேன். ‘‘உழுது விழித்து அறுப்பாருக்கு உணவில்லை. பொய்யைத் தொழுது அடிமை செய்வார்க்கே செல்வமெல்லாம் உண்டு’’ என்று நான் சொல்லவில்லை பாரதியார்தான் சொல்லி இருக்கிறார். எங்கே இருந்திருக்கிறது நல்ல சமூகம்?

தீராநதி : சரி, இன்றைக்கு இருக்கும் வியாபார சமூகத்தை எப்படிப் புரிந்து கொள்கிறீர்கள்?

நம்மாழ்வார் : உலகத்திலேயே முதன்முதலாக உழைக்காமலே சாப்பிட்ட கூட்டம் வியாபாரிகளின் கூட்டம்தான். பாண்டிச்சேரியில் டூப்ளேவுக்கு சிலை வைத்திருக்கிறார்கள். பண மூட்டைகளாக அடுக்கி அதன் மீது உட்கார்ந்து இருப்பான் டூப்ளே. பணம் குவிப்பதற்காக இங்கு வந்தான் அவன். பணம் குவித்துக்கொண்டு போகிறான் அவன். ஆனால் இந்த நாட்டில் குடிமகன் என்று சொல்லிக் கொள்பவன் டூப்ளே வைப்போல நடந்து கொண்டான் என்றால் இவனும் கொள்ளைக்காரன் போலவே நடந்து கொள்கிறான் என்றே அர்த்தம்.