Tuesday, April 22, 2008

கவிதை என்பது ஆண் பால், பெண்பால் என்ற எல்லையைக் கடந்து இயங்க வேண்டும்- தமிழச்சி தங்கபாண்டியன்

கவிஞர் தமிழச்சி 2004_கிற்கு பிறகு அறியப்பட்ட பெண் கவிஞர். பன்முகப் பரிமாணம் கொண்டவர். நேரடி அரசியலுக்கு சென்றபிறகும் இலக்கியம் குறித்த உரையாடலை தொடர்ந்து கொண்டிருப்பவர். மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் தீராநதிக்காக சந்தித்தோம்...
தீராநதி: உங்களுடைய பூர்வீகம் விருதுநகர் மாவட்டத்திலுள்ள மல்லாங்கிணறு என்ற சிறு கிராமம். உங்களின் அப்பா தங்கபாண்டியன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தென் தமிழகப் பகுதியில் முக்கிய பிரமுகராக ஒரு காலத்தில் அறியப்பட்டவர். அரசியல் செல்வாக்கு நிறைந்த ஒரு குடும்பப் பின்புலத்திலிருந்து வந்திருக்கிறீர்கள். உங்களின் பால்ய பருவம், சிறு வயது வாசிப்பு அனுபவம், இலக்கியத்தின் மீதான தேடல் என்று உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தோடு நமது பேச்சைத் தொடங்கலாமா?
தமிழச்சி தங்கபாண்டியன்: அப்பா முதலில் திராவிட கழகத்தில் உறுப்பினராக இருந்து பெரியாரின் தொண்டனாக அவரது கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பவராக செயலாற்றிக் கொண்டிருந்தார். பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து, அதன் உறுப்பினராகவும் பொறுப்பாளராகவும் எங்கள் பகுதியில் செயலாற்றினார். அந்த நேரத்தில் பெரியாருடைய, பேரறிஞர் அண்ணாவுடைய கருத்துக்களும் விவாதங்களும் வீட்டில் நடந்து கொண்டிருக்கும். சிறு பிள்ளைகளான நாங்கள் அதைக் கேட்டும் கேட்காமலும் விளையாடிக் கொண்டிருப்போம். என்னுடைய ஒன்றாம் வகுப்பையும் மூன்றாம் வகுப்பையும் என் கிராமத்து பள்ளிக்கூடத்தில்தான் படித்தேன். அப்போது ‘டபுள் பிரமோஷன்’ என்ற ஒன்று இருந்ததினால் நான் இரண்டாம் வகுப்பு படிக்கவில்லை. நேரடியாக மூன்றாம் வகுப்புக்கு வந்துவிட்டேன். அதற்கடுத்த என் படிப்பை விருதுநகரிலுள்ள ஓர் ஆங்கிலப் பள்ளியில் படித்தேன்.
பண்டைய தமிழிலக்கியத்தினுடைய பரிட்சயம் திராவிட இயக்கத்தினருக்கு இருக்கக் கூடிய அளவிலான பரிட்சயமாகத்தான் அன்றைக்கு என் இலக்கியப் பரிட்சயம் இருந்தது. பக்தி இலக்கியங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு எனது எட்டாம் வகுப்பு காலகட்டத்தில் கிடைக்கிறது. ஏனென்றால், நான் அப்போது முறையாக பரதநாட்டியம் கற்க ஆரம்பித்தேன். அப்போது ஆண்டாளின் பாசுரங்களின் வழி பக்தி இலக்கியம் என்ற ஒரு அறிமுகம் நிகழ்கிறது.
தீராநதி : தனியாக ஒரு ஆசிரியரிடம் பரதம் கற்றீர்களா?
தமிழச்சி தங்கபாண்டியன்: தஞ்சை நடராஜன் என்பவர்தான் என்னுடைய பரதநாட்டிய குரு. அவரிடம்தான் அரங்கேற்றம் நடத்தக்கூடிய அளவிற்கு பரதநாட்டியம் கற்றுக் கொண்டேன். ஆக, இந்த அளவிற்குத்தான் என்னுடைய பள்ளிப் பருவத்து இலக்கியப் பரிட்சயங்கள் இருந்தன. இது முடிந்து மதுரை மீனாட்சி கல்லூரியில் பி.ஏ.வும், தியாகராயர் கல்லூரியில் எம்.ஏ.வும் படித்தேன். பி.ஏ. படிக்கின்ற காலத்தில் அதாவது 80களுக்கு பிற்பகுதியில் ஒரு பரவலான இலக்கிய அறிமுகம் எனக்கு கல்லூரி வட்டாரத்தின் மூலமாகக் கிடைத்தது. அதுவரைக்கும் நான் அறிந்திருந்த இலக்கிய வாசிப்பு என்பது சிவசங்கரி, ரமணிசந்திரன், இந்துமதி என்ற அளவில்தான் இருந்தது. கல்லூரிக்குள் வந்தபிற்பாடுதான் சாவி ஆசிரியர் நடத்திய ‘திசைகள்’ என்ற பத்திரிகை அறிமுகம் கிடைத்தது. பிறகு மீராவின் ‘அன்னம்’ மிகத் திருப்புமுனையாக அமைந்த என் இலக்கிய வாசிப்பைச் சொல்ல வேண்டும் என்றால், அது என்னுடைய முதுகலை படிப்பைத்தான் சொல்வேன். சுப்பாராவ் என்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியரிடம் நான் முதுகலையில் படித்தேன். இன்றைக்கும் தமிழிலக்கியத்தில் பரவலான ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருக்கின்ற பேராசிரியர் சிவராமன் என்னுடைய ஆசிரியர். அவர் டி.ஹெச். லாரன்ஸில் பி.ஹெச்.டி முடித்தவர். அதே போல நவீன தமிழிலக்கியத்தில் ஆர்வமும் ஒரு தீர்க்கமான விமர்சனப் போக்கும் கொண்ட பேராசிரியர் சுகுமாரன் என் ஆசிரியர். இவர் லலிதா ஜூவல்லரியின் நிர்வாக இயக்குனராக இருந்தவர். கி.ஆ.பெ.வின் பேரன் இவர். முற்றிலுமான நவீன தமிழலக்கிய போக்குகளுக்குள் என்னை ஈடுபாடு கொள்ளச் செய்தவர் சுகுமாரன் அவர்களும், மதுரை தியாகராசர் கல்லூரியும்தான். ஆனால், இலக்கியம் என்றால் என்ன என்ற புரிதலை எனக்கு உண்டாக்கிக் கொடுத்தவர் என்றால், அவர் என் பேராசிரியர் சுப்பாராவ் அவர்கள்தான். அதற்கு முன்னால் நான் மேலோட்டமான இலக்கியம் படித்துவிட்டு, மேட்டுக் குடித்தனமாக அலம்பித் திரியும் ஒரு பெண்ணாகவே இருந்திருப்பேன் என்று இன்றைக்கு என்னால் கணிக்க முடிகிறது. சுப்பாராவ்தான் தாய்மொழி இலக்கியம் என்பது ரொம்ப முக்கியம். தாய்மொழியில் உங்களுடைய படைப்புத் திறனைப் பற்றி யாருடைய உதவியும் இன்றி ஒரு பத்து வார்த்தை எழுதிக் கொண்டு வாருங்கள். துணைக்கு ஷெல்லியையோ, ஷேக்ஸ்பியரையோ கூப்பிடக்கூடாது என்பார். மொழி என்பது ரொம்ப முக்கியம். அலங்காரமற்ற சொற்கள் என்பது மிக முக்கியம் என்பார். அப்போது நான் மிக அலங்காரமான நடையில் எழுதுவேன். ‘மெட்ட ஃபாரிக்கல் மெர்மைடு’ என்றுகூட என்னை கேலி பேசுவார். வெறும் கமா, கமாவாக எழுதுவது மட்டுமே இலக்கியம் என்று நம்பிக் கொண்டிருந்த என் எண்ணத்தை உடைத்தவர் சுப்பாராவ்தான்
மனதை பயிற்சி செய்வதற்கு செவ்வியல் படிப்பென்பது மிக முக்கியம் என்று அடிக்கடி சொல்லுவார். சுப்பாராவ் காண்ட், ஹெகல், மார்க்ஸ் இந்த மூன்றிலுமே மிக ஆழ்ந்த தத்துவப் பார்வையும், அதை இன்றைய நடைமுறைக்குள் எப்படி பொருத்திப் பார்க்க வேண்டும் என்று சொல்லுவதில் தீர்க்கமான ஒரு பார்வையையும் கொண்டிருந்தார். அந்தப் பார்வைகள் எல்லாம் எனது வளர்ச்சிக்கு உதவி புரிந்திருக்கின்றன என்று சொல்வேன். என்னுடைய எம்.பில் பட்டத்திற்கான ஆய்வு ‘லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ்’_ஐ நிறுவிய பிரியாட்டிரிஸ் வெப் என்ற பெண்மணியின் சுயசரிதை பற்றியது. அவர் விக்டோரியன் சொஸைட்டி என்று சொல்லப்படுகின்ற மேல்தட்டு ஆங்கில குடிமகளாக இருந்த போதும், எப்படி லண்டன் கூலித் தொழிலாளர்களுடைய வாழ்க்கையை ஆழ்ந்து கவனித்தார். அதிலிருந்த வாழ்க்கைக்கான விஷயத்தை எப்படி எடுத்துக் கொண்டார் என்பது பற்றியெல்லாம் ஆய்வு செய்தேன்.
இவர் ஃபேபியன் வெப் என்ற பொருளாதார நிபுணரைத் திருமணம் செய்து கொண்டவர். அவர் சார்ந்திருந்த கம்யூனிஸ தத்துவத்தை எப்படி தன் வாழ்க்கையோடு பொருத்தி வாழ்ந்து காட்டினார் என்பது பற்றியெல்லாம் ஆய்வு செய்யும்போது காரல் மார்க்ஸின் கம்யூனிஸ தத்துவத்தின் மீது எனக்கு ஆர்வம் உண்டாகிறது. அதோடு தமிழ் நவீன இலக்கியத்தின் பரிட்சயம் என்று கிடைக்க ஆரம்பிக்கிறது. சங்க இலக்கியத்தைப் படிப்பதாகட்டும், தி. ஜானகிராமனைப் படிப்பதாகட்டும், சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகளைப் படிப்பதாகட்டும் எல்லாவற்றையும் இவரது அறிவுரையின் பேரில்தான் ஆழமாகப் படிக்க ஆரம்பித்தேன்.
தீராநதி: கல்விச் சூழலோடு கூடிய இலக்கிய பரிட்சயம் என்பது உங்கள் விஷயத்தில் சாத்தியமாகி இருக்கிறது. உங்களின் பேராசிரியர் சுப்பாராவ் தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர். அவருக்கு தமிழ் செவ்வியல், நவீன இலக்கியம் பற்றியெல்லாம் ஆழ்ந்த புலமை இருந்ததா?
தமிழச்சி தங்கபாண்டியன்: தமிழ் செவ்வியல் இலக்கியம் சம்பந்தமான ஆழ்ந்த அறிதல் அவரிடம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கான வாய்ப்பு அவருக்குக் குறைவாக இருந்திருக்கலாம். ஆனால், அவருடைய மாணவர்களாகிய சிவராமனுக்கோ, சுகுமாரனுக்கோ அந்தப் புலமை ரொம்பவே அதிகமாக இருந்தது. ஆனால் சுப்பாராவைப் பொறுத்த அளவில் தெலுங்கு இலக்கியம் சார்ந்த ஒரு தெளிவு இருந்ததாகத்தான் நான் உணருகிறேன். அவர் தெலுங்கு மொழியில் பிரசித்தி பெற்ற பல நல்ல கவிஞர்களை எங்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறார். ஸ்ரீநாரயணகுருவின் கவிதைகளையெல்லாம் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். கத்தாரின் பாடல்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அவர், நான் ஒரு ஆந்திர விவசாயக் குடியிலிருந்து வந்தவன் என்பதை பெருமை பொங்க அடிக்கடி சொல்லுவார். மண் சார்ந்த _ கிராமம் சார்ந்த மக்கள் எதை நமக்கு வாழ்வியல் அனுபவமாக விட்டுவிட்டுச் செல்கிறார்கள். அதை நாம் படைப்பாக்க வேண்டும் என்ற பார்வையை அவர்தான் எனக்கு வழங்கினார். உதாரணமாக, தயிர் உறை ஊற்றுவதை ஒரு முக்கியமான பண்பாகப் பேசுவார். அதை ஒரு ஆந்திர விவசாயப் பெண் எப்படி திறம்படச் செய்கிறார். அது ஒரு கைவினைப் பொருள் செய்வதற்கு ஈடான காரியம் என்பார். இந்த மாதிரியே வாழ்வியல் அறிவைப் பற்றி பல விதங்களில் விளக்கிக் காட்டுவார். தமிழிலக்கியத்தைப் பற்றிய அறிமுகத்தை அவர் எங்களுக்குக் கொடுக்காவிட்டாலும் ஐரோப்பிய, பிரிட்டிஷ் செவ்வியல் இலக்கியங்கள் குறித்த அறிவை அவர்தான் எங்களுக்குக் கொடுத்திருக்கிறார்.
தீராநதி : இந்த மாதிரியான புரிதலோ வாசித்த நீங்கள் எப்போது எழுதத் தொடங்கினீர்கள்?
தமிழச்சி தங்கபாண்டியன்: ஆழ்ந்த படிப்பனுபவத்தின் காரணமாக Êஏதாவது எழுதலாம் என்று நினைக்கின்றபோது கவிதை என்பது அகவயமான வெளிப்பாடு என்று அச்சமயத்தில் தோன்றியதால் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். அப்போது நான் எழுதியவை மிகவும் சாதாரணமானவை. ‘மாரி’ என்ற தலைப்பில் வானம் பார்த்து பயிரிடும் மானாவாரி விவசாயிகள் எப்படி அவல நிலைக்கு ஆட்படுகிறார்கள் என்பது பற்றி எழுதினேன். அது புதுக் கவிதையா? மரபுக் கவிதையா? என்பதெல்லாம் தெரியவில்லை. என் கவிதையைப் பொறுத்த அளவில் என் கவிதை தனக்கான வடிவத்தை தானே தீர்மானிக்கும் என்பதில் அன்று தொட்டு இன்றுவரை தெளிவாக இருந்திருக்கிறேன் என்று இன்றைக்குப் படுகிறது. எந்த முன் தயாரிப்போடும் நான் கவிதைக்குள் போகவில்லை. தியாகராயர் கல்லூரியில் வெளியான ‘அருவி’ என்ற இதழில் அக்கவிதை வெளியானது. அதன் பிற்பாடு நல்ல வாசிப்பிற்கு பிறகுதான் கவிதையை நாம் அணுகவேண்டும் என்ற ஒரு உணர்வு உண்டாகிறது. மேத்யூ அர்னால்டு, அய்.ஏ.ரிச்சர்ட் சொல்வது மிக முக்கியம் ஆனால் அவர்கள் சொல்வதை மட்டுமே வைத்துக்கொண்டு தமிழ்க் கவிதையைப் படிக்கக்கூடாது என்று எண்ணினேன். அதை மட்டுமே வைத்துக்கொண்டு ஒரு தமிழ்க்கவிதை எழுதமுடியாது. ஆகவே ஏறக்குறைய ஏழு, எட்டு வருடங்கள் இது சார்ந்தே என்னுடைய தமிழ் வாசிப்பை பெருக்கினேன்.
இரண்டாயிரத்திலிருந்து நிறைய கவிதைகளை எழுத ஆரம்பித்தாலும் 2004_ல்தான் என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பான ‘எஞ்சோட்டு பெண்’ என்ற தொகுதியை வெளியிட்டேன். என் கவிதைகளை நான் முழு தொகுப்பாக கொண்டுவர வேண்டும் என்று நினைத்தபோது இரண்டு விஷயங்களில் நான் தெளிவாக இருந்தேன். ஒன்று _ என்னுடைய கவிதை என்னுடைய கவிதைகளுக்காக மட்டுமே பேசப்பட வேண்டும். இரண்டு _ என்னுடைய எந்தப் பின்புலமும் இருக்கக்கூடாது. என் தந்தையினுடைய எந்த செல்வாக்கும் என்மீதும் என் கவிதைகள் மீதும் விழக்கூடாது என்று தீர்மானித்தேன். ஆகவேதான் அத்தொகுப்பு மிகத் தாமதமாக ‘மித்ர’ பதிப்பகம் மூலம் வெளியாயிற்று.
தீராநதி : ஏழு, எட்டு வருடங்கள் தொடர் வாசிப்புக்காக நீங்கள் ஒதுக்கிய காலத்தில் வாசிக்கப்பட்ட கவிஞர்கள் யார் யாராக இருந்தார்கள்?
தமிழச்சி தங்கபாண்டியன்: பழந்தமிழ் இலக்கியம் குறித்தும், நமது மரபான அகம் புறம் குறித்த தேடலும் இருந்ததைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். இன்றைக்கு வரை அதுகுறித்த பெரும் புலமை எனக்கில்லை என்றாலும் ஒரு சிறு அறிமுகம் கிடைத்திருக்கிறது, என்றால் அது அந்த வாசிப்பால்தான் சாத்தியப்பட்டிருக்கிறது. நவீன இலக்கியச் சூழல் சார்ந்து அந்தக் காலத்தில் எனக்கு ஆத்மாநாம் அறிமுகமாகிறார். சிறு பத்திரிகை என்ற தீவிரமான ஒரு இலக்கியச் சூழல் இருக்கிறது. அதில் பெண் கவிஞர்களான சுகந்தி சுப்ரமணியம், இரா. மீனாட்சி, லதா ராமகிருஷ்ணன், பெருந்தேவி என்ற கவிஞர்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்பதெல்லாம் தெரியவந்தது அந்தச் சமயத்தில்தான். இவர்களைத் தொடர்ந்து வாசிக்கத் தொடங்கினேன். இந்த நேரத்தில் என்னை மிக பாதித்த கவிஞர் இரா. மீனாட்சிதான். அவர் எனக்கு ஒரு ‘ஐகான்’ ஆகவே இருந்தார் என்றுகூட சொல்லுவேன்.
அவரின் மொழி என்பது முழுவதுமான ஒரு பெண் விடுதலையையும் பெண்ணிய மொழியையும் கொண்டிருந்தாலும் நிலம் சார்ந்த _ இயற்கை சார்ந்த ஒரு நுண்ணுணர்வை அவரிடம் நான் கற்றேன். இதே காலத்தில் 80_84_ல் ஈழக் கவிதைகளும் வரத்தொடங்குகின்றன. சிவரமணி, செல்வி இவர்களின் கவிதைகளை வாசித்தேன். இந்தக் கவிதைகள் வேறு உலகத்தை எனக்கு அறிமுகம் செய்தது. போர்ச்சூழல் சார்ந்து ஒலிக்கும் பெண்களின் குரலை வெளிப்படுத்துவதாக இவர்களின் கவிதைகள் இருந்தன. ஆத்மாநாமின் அறிமுகம் மிக மிக முக்கியமானதாக எனக்கு இருந்தது. சுதந்திரத்தினூடே நவீன மனம் சார்ந்து எழக்கூடிய பிரச்னைகளும் எதற்குள்ளும் வாழமுடியாது வெளியேற விரும்புகின்ற ஒரு படைப்பாக அவரது படைப்புகள் எனக்குப் பட்டன. கவிதை என்பது நிரோஸியஸ் என்பதின் முழு உருவமாக அவர் எனக்குத் தெரிந்தார். அதேபோல நகுலனின் கவிதைகளையும் அச்சமயத்தில்தான் வாசிக்கத் தொடங்கினேன்.
தீராநதி : அப்பாவினுடைய அரசியல் அடையாளம் என்பது தன் மீது விழக்கூடாது என்ற தெளிவோடு எழுத வந்திருக்கிறீர்கள். தன் கவிதைகள் கவிதை என்ற அம்சத்திற்காக மட்டுமே பேசப்படவேண்டும் என்றும் விரும்பியிருக்கிறீர்கள். ஆனால் முதல் தொகுப்பிற்கு உங்களுக்கென்று ஒரு புனைபெயரைத் தேர்ந்தெடுக்கும்போது ‘தமிழச்சி’ என்று மிக பட்டவர்த்தனமாக பெயரைத் தேர்ந்தெடுக்கிறீர்கள். அரசியல் சார்ந்த குறுக்கீட்டை நீங்கள் விரும்பாவிட்டாலும் ஆழ்மன ரீதியாக நீங்கள் திராவிட அரசியலுக்கும் அதன் கருத்தாக்கத்திற்கும் ஆட்பட்டிருக்கிறீர்கள் என்ற வெளிப்பாடாகவே அப்பெயர் புலனாகிறது. இந்தப் பெயருக்கான அடையாளம் எதுவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
தமிழச்சி தங்கபாண்டியன்: அந்த அடையாளம் கண்டிப்பாக என் தந்தை சார்ந்த ‘தமிழ் அடையாளம்’தான். அந்த அடையாளத்தை மிகத் தெளிவாக நான் தேர்ந்தெடுப்பதற்குக் காரணமாக இருந்ததென்று திராவிட இயக்கத்தையும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும்தான் சொல்வேன். நீங்கள் குறிப்பிட்டபடியே அதற்கான ஓர்மையை ஆழ்மனத்தில் எனது அப்பா அப்போதே பதித்திருக்கலாம். தமிழ் வாழ்வு சார்ந்த, தமிழர் பண்பாடு சார்ந்த ஒரு புரிதலையும் அது குறித்தான ஒரு பெருமையையும் அந்த இயக்கம்தான் என்னுடைய வளர் பருவத்தில் எனக்கு உருவாக்கித் தந்திருக்கிறது. அதிலே எனக்குப் பெருமிதம் உண்டு.
அப்போது என்னுடைய புனை பெயர் குறித்து பலர் விமர்சித்தார்கள். ‘உங்களுடைய பெயர் யீuஸீபீணீனீமீஸீtணீறீ ஆக இருக்கிறது’ என்று சொன்னார்கள். ‘நான் தமிழச்சி’ என்று நீங்கள் சொல்லுவதால் தமிழ், தமிழச்சி என்ற ஆதிக்க மனப்பான்மையை அது நிறுவுவதாக ஒரு சாரார் சொன்னார்கள். இரண்டாவது வகைப்பட்டவர்கள் அதை மிகத் தெளிவாக எடுத்துக்கொண்டார்கள். இதுதான் உங்களுக்கான அடையாளம் என்பதற்கான பக்குவம் இருப்பதாகச் சொன்னார்கள். ‘‘ஒரு தமிழ்ப்பெண், அதில் என் கிராமம் சார்ந்த அடையாளமும் இருக்கிறது என்று துணிந்து சொல்வதை நீங்கள் ஏன் ஆதிக்க மனோபாவம் இருப்பதாகப் பார்க்கிறீர்கள். அதைச் சொல்லுவதற்கான மனப்பக்குவமும், துணிவும் எனக்கிருப்பதாகத்தான் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என்று அப்போது நான் அவர்களுக்குப் பதில் சொன்னேன். ஆங்கிலத்திலேயே படித்த, ஆய்வு செய்த ஒரு பெண்ணாக என்னை நான் முன் நிறுத்தாமல் என் மண் சார்ந்த, என் மொழி சார்ந்த, என் வேர் சார்ந்த ஒரு படைப்பாளியாக என்னை முன்நிறுத்தும்போது இவர்கள் வரவேற்கத்தானே வேண்டும்?
தீராநதி : மூன்றாம் வகுப்பிற்கு பிற்பாடு முழுக்க முழுக்க ஆங்கில வழிக் கல்வி என்பதுதான் உங்களின் முதுகலை படிப்பு வரைக்கும் இருந்திருக்கிறது. ஷேக்ஸ்பியரையும், ஷெல்லியையும், சில்வியா பிளாத்தையும் இயல்பாகப் படிக்கும் வாய்ப்பு உங்களுக்கு பாடத்திட்டத்திலேயே இருந்திருக்கும். ஆனால் உங்களின் முதல் கவிதைத் தொகுதியை நீங்கள் வெளியிடும்போது அதிலுள்ள கவிதைகள் முழுக்க மக்கள் மொழியிலானதாக வெளிப்பட்டிருக்கிறது. ‘சனங்களின் கதை’ மூலமாக தமிழ்க்கவிதை வடிவத்தை வட்டார தனிமையலாக முன்வைத்த பழமலய்யின் வழித்தோன்றலாக நீங்கள் வெளியில் அறிமுகமாகிறீர்கள். முதல் தொகுதிக்கு முன்னுரை கூட பழமலய்யிடமே வாங்கி இருக்கிறீர்கள். இந்த முரணை எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழச்சி தங்கபாண்டியன்: திருமணம் வரைக்கும் முழுக்க முழுக்க விடுதி வாழ்க்கைதான் எனக்கு வாய்த்திருக்கிறது. விடுதியை விட்டு எனது சொந்தக் கிராமத்திற்குச் செல்லும்போது தாய் தந்தையிடம் பேசுவது அல்லது கடித பரிவர்த்தனைகள் நடத்துவது எல்லாமே இயல்பான என் தாய் மொழியாகத்தான் இருக்கிறது. என்னுடைய அப்பா ‘மிசா’வில் ஒரு வருட காலம் சிறையில் இருந்தார். அப்போது எனக்கு எழுதிய கடிதங்கள் முழுவதும் தமிழ் மொழியில்தான் வந்திருக்கிறது. எவ்வளவு தூரம் ஆங்கில வழியில் நீங்கள் படித்தாலும் எனது உணர்வுபூர்வமான மொழியை நான் தாய்மொழியில்தான் செய்யமுடியும். என்னுடைய தாய், தந்தை இருவரும் பள்ளி ஆசிரியராக இருந்தவர்கள். கிராமத்தில் சக வயது பிள்ளைகளுடன் நொண்டிக் குதிரை, பச்சைக்குதிரை தாண்டும் போதோ கோலி, பேந்தாக்குண்டு விளையாடும் போதோ ஒரு மணல் தள்ளி விளையாடும் போதோ என்னுடைய அத்தனை வெளிப்பாடுகளும் எளிமையான கிராமம் சார்ந்ததாகவே அதன் மொழியாகவே இருந்திருக்கிறது. ஆக, படைப்பு என்று வரும்போது அது ஓர் இயற்கையான செயலாகத்தான் நிகழ்கிறது. இந்தத் தெளிவை அதாவது ஆங்கில இலக்கியத்தோடு மட்டுமே பயணம் போகாமல் தன் சொந்த மக்களின் மொழியில்தான் வரவேண்டும் என்ற தெளிவை எனக்குக் கொடுத்தது ஐரோப்பிய இலக்கியங்களும், ஆங்கில இலக்கியங்களும், திராவிட இயக்கப் பின்புலமும்தான். என்று சொன்னால் மிகையாகாது. உதாரணத்திற்கு சினுவா ஆச்சிபி சொல்வார். ‘உங்களுடைய படைப்பை உங்களுடைய கிராமத்தின் புழுதி படிந்த ஒரு கிளைச் சாலையிலிருந்து தொடங்குங்கள்’ என்று. இந்தத் தெளிவை எனக்கு ஆங்கில படிப்பு கொடுத்திருக்கிறது. இன்றைக்கும் ‘சுமதி’ என்று என் பெயர் சொல்லி அழைக்கத் தெரியாமல் ‘செமதி’ என்று அழைக்கக்கூடிய மக்கள் என் கிராமத்தில் இருக்கிறார்கள். அங்கிருந்துதான் நான் வருகிறேன். அந்த மொழியில் தானே என் படைப்பும் வரமுடியும்? கவிதையை கருத்தும், அனுபவமும் கலந்த கலவை என்று சொல்லலாம். அனுபவத்தில் உண்மையும், அது சார்ந்த சிறு நெறிப்படுத்தலும் இருக்கவேண்டுமென்றால் நம் மொழியில்தான் நாம் சொல்லவேண்டும். எனது திராவிட இயக்க மரபும் இதற்கு ஓர் அடிப்படை என்பது இங்கு மிக முக்கியமானது.
தீராநதி : உங்களுக்கான கவிதை மொழியைத் தேர்ந்தெடுத்ததைப் போலவே அந்தக் கருத்தியல் சார்ந்து இயங்கக்கூடிய பழமலய் என்ற மூத்த கவிஞரின் முன்னுரையையும் வாங்குகிறீர்கள். உங்களுடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு என்று வருகிறபோது அதன் மொழி மாறுகிறது. சொல்லப்படும் உத்தி, விதம் மாற்றமடைகின்றன. அதற்கு தகுந்த கருத்தியலில் இயங்கக்கூடிய பிரம்மராஜனின் முன்னுரைக்குச் செல்கிறீர்கள். கவிதை குறித்த ஒரு கருத்தியலிலிருந்து வேறு கருத்தியலுக்கு நீங்கள் நகர்ந்து வரும் அடையாளமாக இதைக்கொள்ளலாமா?
தமிழச்சி தங்கபாண்டியன்: இந்த நகர்வு என்பது ஒரு படைப்பாளிக்கு ரொம்ப முக்கியமான விஷயம். முதல் தொகுப்பை எடுத்துக்கொண்டால் மிக நெகிழ்ந்த ஒரு நடையாக _ ஒரு விரிவடைந்த நடையாக அது இருக்கும். கவிதைக்கு செறிவும், அடர்த்தியான நடையும், கட்டுமானமும், சொல்ல வந்ததை மிகக் குறைந்த வார்த்தைகளில் அதே சமயம் வலிமையாக சொல்லவேண்டும். அதுதான் கவிதை. அந்த அம்சத்தோடு சொல்லக்கூடிய திறன் என் முதல் தொகுப்பில் எனக்கு குறைவாகத்தான் கை வந்திருக்கிறது. அதற்குக் காரணம் அன்றைக்கு நான் கையாண்ட கருப்பொருள். என்னுடைய கவிதை அந்த சமயம் அந்த மொழியைத் தானே எடுத்துக்கொண்டது. உதாரணத்திற்கு அந்தக் கவிதைகள் முழுக்க கதைப் பாடல்களாக இருக்கும். ஆக அதற்கு பழமலய் முன்னுரை வழங்கினால் சரியாக இருக்குமென்றெண்ணி அவரிடம் போகிறேன். ‘சனங்களின் கதை’ என்ற கவிதைத் தொகுப்பின் மூலமாக என்னை ஆகர்ஷித்திருந்த கவிஞர் அவர். அப்போது அந்தக் கவிதைத் தொகுதியில் வருகின்ற கதாப்பாத்திரங்களை எல்லாம் ஆவணமாகப் பதிய வைக்கவேண்டும் என்று நினைத்து அந்த மக்களையெல்லாம் புகைப்படமாக பதிய வைத்தேன். இந்த யோசனையை அறிவுமதிதான் கொடுத்தார். இது வெறும் புகைப்படங்களின் தொகுப்பாக இருக்கிறது என்று சிலர் விமர்சித்தார்கள். அறியப்படாத மக்களின் ஆவணமாக இந்தத் தொகுப்பு இருக்கிறது என்ற கருத்தைக்கூட அப்போது பாரதிபுத்திரனும், க. பஞ்சாங்கம் அவர்களும் பதிவு செய்திருந்தார்கள். பூர்வ குடிகளுக்கும் ஆங்கிலேயர்களுக்குமான காலனிய சொல்லாடலில் ஆங்கிலேயர்கள் செய்கின்ற மிகப் பெரிய தவறு என்னவென்றால் பூர்வ குடியினருக்கும், நமக்கும் இருக்கின்ற சில தடைகளை மொழியின் மூலம் மாற்றலாம் என்று அவர்கள் (ஆங்கிலேயர்கள்) நம்பினார்கள் என்ற குறிப்பு வருகிறது. ஆக, மொழி என்பது கவிதையில் ஒரு இறுக்கமான வடிவத்தைக் கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறோம். இது ஒரு பிரக்ஞை பூர்வமான செயல்பாடு என்றுகூட நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். விரிவாகச் சொல்லவேண்டிய ஒரு விஷயத்தை அதற்கென்று இருக்கின்ற உரைநடையில் நீங்கள் சொல்லிவிடலாம். ஒரு விஷயத்தை கவித்துவமாகச் சொல்ல ஆசைப்படும்போது அந்த கவித்துவ உச்சத்தைத் தொட முயலும்போது எனது மொழி மாறுகிறது. படிமங்கள் மாறுகிறது. அந்தச் சமயத்தில் நான் மிகவும் நேசிக்கின்ற கவிஞர் பிரம்மராஜன் எனது கவிதை ஓட்டத்தைச் சரியாக வெளிக்கொண்டு வருவார், நான் எந்தத் தளத்தில் இருக்கிறேன் என்பதை அவரால் சொல்லமுடியும் என்பதால் நான் அவரிடம் முன்னுரைக்காகச் செல்கிறேன். கவிதை குறித்த தெளிவான ஒரு புரிதல் உடையவர் அவர் என்பதாலும்தான் அவரைத் தேர்தெடுத்தேன். அடுத்து என்னுடைய கவிதை எப்படிப் போகுமென்று எனக்குத் தெரியாது.
தீராநதி : அடுத்து தன் கவிதை எப்படி போகுமென்பது உங்களுக்கு மட்டுமல்ல, எந்தவொரு கவிஞனுக்கும் தெரியாதுதான். பிரம்மராஜன் கவிதையில் ஆண் மொழி, பெண் மொழி என்றெல்லாம் தனித்தனியாக இல்லை என்ற கருத்தியலுடையவர். ஆனால் சமகால பெண்கவிஞர்களோ பெண்மொழியை பிரதானமாக வென்றெடுப்பதில் தீவிரமாக செயல்படுகிறார்கள்? பிரமராஜனின் கருத்தோடு நீங்கள் ஒன்றிப் போகிறீர்களா?
தமிழச்சி தங்கபாண்டியன்: கவிதை என்பது ஆண் பால், பெண்பால் என்ற எல்லையைக் கடந்து இயங்க வேண்டும் என்ற நம்பிக்கை உடையவள் நான். பெண்ணிற்கான ஒரு மொழி, பெண்மொழி, பெண்ணியம் என்ற ஒரு போக்கு இன்றைக்கு இருந்தாலும் கூட, என்னுடைய கவிதைகள் என்பது அப்படி ஒரு கருத்தியலுக்குள் செல்ல வேண்டிய அவசியமில்லை என்ற நம்பிக்கையில் எழுதும் பெண்படைப்பாளி நான் என்பதை பிரம்மராஜனால் சரியாக கணிக்கமுடியும் என்று நினைத்தேன். அவரும் அதையே சொல்லியிருந்தார் என்பது உங்களுக்குத் தெரியும்.
தீராநதி : கவிதையில் ஆண்மொழி, பெண் மொழி என்பது வெளிப்பாட்டளவில் எந்தளவிற்கு சரியாக, உண்மையாக இருக்கும் என்பது குறித்து இன்றைய வரைக்கும் ஒரு விவாதம் நடந்து தான் கொண்டுருக்கிறது. ஒரு படைப்பை சிருஷ்டிக்கும் போது ஆண் என்ற பிரஞையோடு பெண் என்ற பிரச்ஞையோடு உண்டாக்குகிறார்கள் என்று கூட பொது அளவிட்டில் எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால் தன்னையே அறியாமல் பெண், ஆண் என்ற அனடயாளத்தை ஒரு படைப்புக்குள் நாம் விட்டு விட்டுதான் செல்கிறோம். இதை ஒரு படைப்பின் நியதி என்ற அளவில் கூட எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நமது மொழி என்பது பொது தளத்தில் ஆண் சார்பு உள்ள ஒரு மொழியாகத் தான் கட்டமைக்கப் பட்டிருக்கிறது என்பதில் உங்களுக்கு கருத்து மாறுபாடு இருக்கிறதா?
தமிழச்சி தங்கபாண்டியன்: எனக்கு அதில் கருத்து மாறுபாடே கிடையாது. பொதுவான தளத்தில் கட்டப்பட்டிருக்கின்ற ஆண்மொழி என்ற தளத்திலிருந்து விலகி வரவேண்டும் என்பதை பெண் கவிஞர்கள் ஒரு முக்கியமான விஷயமாக செய்கிறார்கள். ஆண் சார்ந்த ஒரு மொழியாகவே, நமது பொதுத்தளத்தில் மொழி என்பது இருக்கிறது என்பதில் எனக்கும் சந்தேகமில்லை. ஆனால் பெண்மொழி, பெண்உடல் என்று ஒரு விஷயத்திற்குள்ளாக மட்டுமே கவிதையின் எல்லையைக் குறுக்குவதை நான் ஏற்கவில்லை. கவிதையில் அதுவும் ஒரு போக்கு. ஜனநாயக ரீதியில் அந்தக் குரலையும் நாம் கணக்கில் கொண்டுதான் ஆக வேண்டும். அது மிக முக்கியமான குரலும்கூட.
தீராநதி : படைப்பை பொறுத்தளவில் பல்வேறு குரல்கள் ஒலிப்பதைதான் ஜனநாயகத்தின் குறியீடாக கொள்ள முடியும். உங்களின் சக கவிஞர் தோழியுமான கவிஞர் கனிமொழி ஒரு நேர்காணலில் பெண்ணிய விடுதலை என்ற குரல் கூட ஒரு விதத்தில் ஆணாதிக்கத்தின் மறுவடிவம் தான் என்ற தொனியில் பேசி இருந்தார். நீங்களும் இதை ஆணாதிக்கதின் மறு வடிவமாகவே பார்க்கிறர்களா?
தமிழச்சி : ஆணாதிக்கத்தின் மறு வடிவம் என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் ஆணாதிக்கத்தின் தூண்டுதலினால் வரக்கூடிய வெளிப்பாடு என்று தான் சொல்வேன். தாகூர்கூட மண்ணிலிருந்து விடுதலை பெறுவது மரத்திற்கு சுதந்திரமாகது என்று சொல்வார். அதைப் போலத்தான் பெண்ணியமும். பெண் விடுதலை என்பது ஆண்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஆக, ஆணுக்கான பொறுப்புணர்வுடன் கூடிய ஒரு பெண்விடுதலையைத்தான் எங்களைப் போன்ற கவிஞர்கள் முன்வைக்கின்றோம். அதனால்தான் பிராந்திய பெண்ணியம் என்ற ஒரு கருத்தியலை நான் முன்வைக்கின்றேன். மேலைய பெண்ணியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அளவு கோல்கள் மிக முக்கியமானவை. இதற்கான ஒரு வெளியை உருவாக்கக் கூடிய பொறியை தூண்டுகின்ற விஷயமாக ஆணாதிக்கம் என்பது இருக்கிறது என்று சொல்வேன்.
தீராநதி : பெண்ணியத்திற்குள் பிராந்தியம் என்ற கருத்தியலை நீங்கள் முன்வைப்பதற்கு இன்றைக்கு நடப்பில் இருக்கக் கூடிய பின்காலனிய போன்ற தத்துவங்கள் உதவக்கூடும். அந்தத் தத்துவப்பார்வைதான் உங்களுக்கு இதை வழங்கியும் இருக்கிறது என்றே நம்புகிறேன். ‘எஞ்சோட்டு பெண்’ என்ற உங்களின் தொகுப்பின் மூலம் பாரதி மரபு வழி வந்த பெண்ணாக அடையாளப் படுத்திக் கொண்டீர்கள். இரண்டாவது தொகுப்பான வனப்பேச்சியின் மூலம் தன் மரபு சார்ந்து மக்கள் சார்ந்து மண் சார்ந்து ஒலிக்கக் கூடிய காவல் தெய்வமான நாட்டார் வழி பெண்ணாக அடையாளம் கொள்கிறீர்கள். தமிழ்ச் சமூகம் இப்படி பல்லாயிரக்கணக்காண காவல் தெய்வ வழிபாட்டைக் கொண்டியங்கும் பன்முக பண்பாடு கொண்ட ஒரு சமூகம். ஆனால் நீங்கள் சார்ந்திருக்கும் இயக்கமோ ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற சிந்தாந்தத்தைக் கொண்டியங்கும் ஓர் அரசியல் இயக்கம். இங்கு சிறு நெருடல் எழுகிறது. இந்த முரண்பாட்டை எப்படி விளக்குவீர்கள்?
தமிழச்சி : மிக நுட்பமான ஒரு கேள்வி இது. அந்தப் பெயரிலேயே ஒரு தகவலை வைத்துதான் அந்தத் தலைப்பை நான் வைத்தேன். உக்கிரமான, மண்ணிற்கு மிக நெருக்கமான, அதே சமயம் ஒரு சமூகத்திற்கான காவல் தெய்வமான அவளை நான் எப்படி சோட்டு பருவத்திலிருந்து இன்றைக்கு வரை தூக்கிக் கொண்டிருக்கிறேன். வனத்தில் இருக்கும் அவளை எப்படி ஒரு நகரத்தில் கொண்டு வந்து வைத்திருக்கிறேன். என்னுடைய சிக்கல்களைப் பேசுகின்ற ஒரு பெண்ணாக எப்படி அவளை நான் கொண்டு வருகிறேன் என்பதெல்லாம் மிக முக்கியமாவை.
இவளை ஒரு ‘ஐகான்’ ஆக நான் முன்வைக்க வில்லை.நான் சார்ந்திருக்கின்ற இயக்கத்திற்கு மாற்றாக இவளை நான் முன் வைக்கவில்லை. ஒருகுரலாகத் தான் வைக்கிறேன். என்னைப் போலவே பிராந்திய தமிழ் கிராமத்து மண் சார்ந்த அடையாளத்துடன் இயங்குகின்ற பெண்ணினுடைய குரலாக வனப்பேச்சி என்பவள் வருகிறாள். அவள் இன்றைக்கு இருக்கின்ற மெட்ரோ பாலிடென், காஸ்மோ பாலிடென் லிபரலைஷேசன் குளோபளைஷேசன் என்று சொல்லப்படுகின்ற முற்றிலும் வேறான ஒரு வெளிக்குள் வரும்போது அவளுக்கு எற்படுகின்ற சிக்கல்கள், சிதைவுகள், ஒன்றாமை தனிமைத் துயர், இவற்றால் எப்படி உபாதைக்குள்ளாகிறாள் என்பதை வனப்பேச்சியின் மூலம் நான் ஒரு பெண்ணின் அவஸ்தைகளை முன்வைக்கிறேன்.
இன்றைக்கு இருக்கின்ற உலகமயமான நாகரிக உலகத்தை நான் எப்படிப் பார்க்கிறேன். எப்படி எதிர்கொள்கிறேன் என்பதன் பெண் குரலாகவே இங்கு ‘வனப்பேச்சி’ வருகிறாள். நாகரிகத்திற்கும் தொழில் வளர்ச்சிக்கும் எதிரானவர் இல்லை நாம். அதன் வளர்ச்சி நம் சமூகத்திற்குத் தேவையான ஒன்றாக இருக்கிறது. ஆனால் அதே சமயத்தில் இந்த மாதிரியான வளர்ச்சிகள் வருகின்ற போது நம்மண்ணிற்கே உரித்தான திணை மரபையும், ஆதாரங்களையும் நாம் கொஞ்சம் காப்பாற்றி வைக்க வேண்டிய தேவையும் இருக்கிறது. நீங்கள் கேட்பதைப் போல அண்ணாவின் அரசியல் சித்தாத்தத்துக்கு எதிரான ஒரு தத்துவமாக மாற்றி இதை நான் முன்வைக்கவில்லை. அதற்கு அவசியமும் இல்லை இப்பொழுது.
தீராநதி: பின் காலனியம் போன்ற தத்துவங்கள் நடப்பில் இன்றைக்கு விவாதிக்கக் கூடிய ஒன்றாகவும், அதை முன் வைத்து நம் சமூகத்தின் அடையாளங்களை, வேர்களை மீட்டெடுக்கும் வேலைகளைப் பிரதானப்படுத்தி செய்து கொண்டிருக்கிறோம். நீங்களே குறிப்பிட்டது போல ‘திணை’ வாழ்க்கையில் பல்வேறு தெய்வங்கள் இருந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் சுருக்கி ஒரு தெய்வ வழிபாடு என்பதை அண்ணா முன் வைக்கிறார். அண்ணாவின் அரசியல் தத்துவ அறிவைக் குறைத்து மதிப்பிட முடியாவிட்டாலும், அவரின் இச்சித்தாந்தத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டிய தேவை இருக்கிறது என்பதை உணருகிறீர்களா? ‘திணை’ பண்பாட்டை வெறும் படைப்பு ரீதியாக மட்டுமே காப்பாற்றுவது என்பதை விட அரசியல் ரீதியாக காப்பாற்றுவது முக்கியமில்லையா?
தமிழச்சி தங்கபாண்டியன் : அதில் ஒரு சின்ன அபாயம் இருக்கிறது. ஏனென்றால் இந்தக் குழு சார்ந்த வாழ்க்கையில் சேர்ந்து, கூடி, கொண்டாடி உணவையோ, கள்ளையோ பகிர்ந்து ஒரு காவல் தெய்வத்தினை, ஒரு இடத்தில் வழிபடுவது என்பது வேறு. அதையே இன்றைக்கு மாற்றாக முன் வைக்கும் போது அது ஒரு இந்துத்துவா பெரும் தெய்வமாக மாறிவிடக் கூடிய அபாயம் இருக்கிறது. ஆகவே அதை அரசியல் கட்சிகள் மிக கவனமுடன் அணுகவேண்டிய பொறுப்பு இருக்கிறது. திணைக்கோட்பாடு பல்வேறு பண்பாட்டு அடுக்குகள் கொண்டது. ஆக, இந்தத் திணைக்கோட்பாட்டை பிரதிபடுத்துகின்ற ஓர் அடையாளமாக இது இருக்கும் என்ற ஒரு சின்ன காரணத்திற்காக அண்ணாவின் கொள்கைக்கு மாற்றாக நாம் இதை முன் வைக்க முடியாது. பெரியாரின் சமூக சீர்திருத்தக் கருத்துகளை முன் வைத்துச் செல்வதே உகந்த வழியாக இருக்குமென்று திராவிட முன்னேற்றக் கழகம் நம்புகிறது. நானும் நம்புகிறேன்.
தீராநதி : நீங்கள் இந்துத்துவ சக்திகளின் செயல்கள் குறித்து பேசியதனால் இதைக் கேட்கிறேன். இன்றைக்கு தி.மு.க. ஆட்சி பொறுப்பில் வந்தவுடன் இந்துத்துவ சக்திகளின் ‘பதற்றக்குரல்கள்’ வலுவாக சேர்ந்து ஒலிக்கின்றனவே, ஏன்?
தமிழச்சி தங்கபாண்டியன்: எனது தலைவரே சொல்லி இருப்பதைப் போல ஒரு தமிழர் ஐந்தாவது முறையாக முதல்வராக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்து, தமிழர்களின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் அடையாளப்படுத்துகின்ற காரியங்களைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறாரே என்ற ஒரே காரணத்திற்காகத்தான். அக்குரல்கள் வலுத்து ஒலிக்கின்றன. அதற்கு சரியான சமீபத்திய உதாரணம் ‘சென்னை சங்கமம்’ கலைநிகழ்ச்சி. அது குறித்து காழ்ப்புணர்ச்சி விமர்சனங்கள் சில இருந்தாலும் வேறு எந்த ஆட்சியில் தமிழர்களின் பண்பாட்டை அடையாளப்படுத்துகின்ற இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் நடந்து இருக்கின்றன? தமிழ் குறித்த விவாதங்கள் _தமிழர் பிரச்னை குறித்த போராட்டங்கள் வேறு எந்த ஆட்சிக் காலத்தில் எழுந்திருக்கிறது. ஆக, இப்படியான வெளியை உண்டாக்கித் தருகின்ற செயல்பாடுகள் இந்தத் ‘தமிழ்’ முதல்வரது ஆட்சியில் நடைபெறுவது இந்துத்துவ சக்திகளை எரிச்சல் கொள்ளச் செய்கின்றன என்பதே உண்மை.
தீராநதி : முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் படைப்புகள் குறித்த ஆய்வுகள், அது சமூகத்திற்குள் நிகழ்த்திய தாக்கங்கள் பற்றிய விவாதங்கள் உருவாவதற்கு முன்பாகவே அவரை இலக்கியத்திலிருந்து அப்புறப்படுத்துவதற்கான சகல வேலைகளும் வேக வேகமாக நடக்கின்றன. நான் கூட அவரின் நெருங்கிய அலுவலக உதவியாளனாகப் பணியாற்றி இருக்கிறேன். அவர் எழுத்தின் மீது வைத்திருக்கின்ற பொறுப்புணர்வை நேரில் கண்டிருக்கிறேன். அவரது ‘தூக்கு மேடை’ உள்ளிட்ட பல நாடகங்கள் தமிழுக்கு முக்கியமானவை. இந்த அப்புறப்படுத்துதல் பற்றிப் பேசுங்களேன்?
தமிழச்சி தங்கபாண்டியன் : அவரது தமிழ்ப் பங்களிப்பு அசைக்கமுடியாததது. மிக முக்கியமாக அவரது நாடகங்கள் பற்றி எடுத்துக் கொண்டோம் என்றால், அந்தக் காலத்தில் தலைவர் கலைஞர் உட்பட இரண்டே பெயர் தான் ‘பர்மா’வுக்கும் ‘ரங்கோன்’னுக்கும் புலம்பெயர்த்தவர்களைப் பற்றி நாடகம் எழுதி இருக்கிறார்கள். தலைவர் கலைஞரின் அந்த நாடகங்கள் குறித்து எந்த நவீன இலக்கியவாதிகளும் பேசியதும் இல்லை. விவாதித்ததும் இல்லை. அதே போல எம்.ஆர்.ராதா அவர்களும் நாடகம் எழுதி இருக்கிறார். இந்த மிக முக்கியமான பதிவை இவர்கள் இருவரும்தான் செய்திருக்கிறார்கள். நாடக வரலாற்றை எடுத்துக்கொண்டால் மறுமலர்ச்சிக் காலங்களில் பிரெஞ்சு நாடகத்தில் வரக் கூடிய ‘மோலியர்’ பற்றி எல்லோரும் குறிப்பிடுவார்கள். அந்த அளவுக்கான மிக முக்கியமான வேலையை அவருடைய காலகட்டத்தில் தலைவர் கலைஞர் செய்திருக்கிறார்.
நம் சமூகம் உலுத்துப்போய், புரையோடிப் போய் இருந்த விளிம்பு நிலை மக்கள் பற்றிய சிறு புரிதல் கூட இல்லாத ஒரு கால கட்டத்தில் மக்களை நேரடியாக போய்ச் சேருகின்ற ‘நாடகம்’ என்ற ஒரு சாதனம் மூலமாக வலிமையான மாற்றத்தை நம் சமூகத்திற்குள் நிகழ்த்திக் காட்டியவர் கலைஞர். ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் எப்படி அந்தச் சமூகத்திற்குள் ஒரு கலகத்தை உருவாக்கியதோ அந்த அளவுக்கு நிகரான வேலையைக் கலைஞர் அந்தக் காலத்தில் செய்திருக்கிறார். இதை நானும் ஒரு நாடகக் கலைஞர் என்ற முறையில் பெருமையாக சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு இன்றைக்கு வருகின்ற நவீன இலக்கியவாதிகள் அதுவெல்லாம் வெறும் பிரச்சாரம் _கலைவடிவம் அல்ல என்று சொல்லலாம். அப்படிச் சொல்ல அவர்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. அந்தக் காலகட்டத்தில் ஒரு ‘புரட்சி’யின் குரலாக வெளிப்பட்ட நாடகங்கள் அந்தக் குரலில்தான் பேசும். பேச வேண்டும். அதுபோலவே தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் முதலான நமது மரபின் அச்சிலே தலைவருக்கிருக்கின்ற ஆழ்ந்தப் புலமையும், வெளிப்பாடுகளும் மிகக் காத்திரமானதொரு படைப்பாளி அவர் என்பதை நிறுப்பிக்கிறது.
தீராநதி : மறைமலை அடிகள் முன் வைத்த சைவம் சார்ந்த தமிழுணர்ச்சிக்கும் திராவிட இயக்கம் முன் வைத்த அடுக்கு மொழி தமிழுணர்ச்சிக்கும் பெரிய வேறுபாடுகள் இருக்கின்றன. அதே போலவே திராவிட இயக்க இலக்கியம் என்பது ஓசை நயத்தோடும், ஒலி நயத்தோடும், எதுகை மோனையோடும் தான் வெளிப்பட வேண்டும் என்ற போக்கு இருந்தது. இன்றைக்கு திராவிட இயக்கம் சார்ந்து இயங்கக் கூடிய எழுத்தாளர்கள் சிறுபத்திரிகைகளின் மொழி நடையைப் பின்பற்றத் தொடங்கி இருப்பது கூட எங்களுக்குக் கிடைத்த முழு வெற்றியைத்தான் அது காட்டுகின்றது என்று சில நவீன இலக்கியவாதிகள் ஒரு கருத்தை முன் வைக்கிறார்கள். இவர்களின் விமர்சனத்தை நீங்கள் எவ்வாறு எடுத்துக் கொள்கிறீர்கள். ஏனென்றால் உங்கள் மொழிநடை திராவிட இயக்கப் போக்கின் மொழி நடையை ஒத்தாக இல்லை. ஆகவே இதைக் கேட்கிறேன்?
தமிழச்சி தங்க பாண்டியன் : மிக எளிதாக என்னால் இந்த விமர்சனத்திற்குப் பதில் சொல்ல முடியும். ஒரு படைப்பாளியின் எழுத்தை தீர்மானிப்பதற்கு அந்தச் சமூகத்தினுடைய காலகட்டம் மிக மிக முக்கியமானது. அதை விட்டுவிட்டு ஒரு படைப்பாளியின் எழுத்தை நீங்கள் பார்க்கவே முடியாது. ‘வானம்பாடி’ இயக்கத்தின் மீது கூட இந்த விமர்சனத்தையேதான் வைத்தார்கள். தமிழலக்கிய கவிதையின் வரலாறு, சமகாலப்போக்கு குறித்து புத்தகம் எழுதுகின்றவர்கள் வானம்பாடிகள் பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லாமல் எழுதுகின்ற மோசடியும் இங்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒலி நயமும், ஓசை நயமும் தமிழ்க் கவிதை மரபுகளிலே வரக்கூடிய ஒன்று. அதை யாரும் மறுக்க முடியாது. சந்த நயம் என்பது மரபுக் கவிதையில் இருக்கக் கூடிய மிகப் பெரிய பண்பு.
அடுத்தது, சமூக மாற்றத்திற்காகக் கவிதையை ஒரு பெரிய சக்தியாகப் பயன்படுத்திய காலத்தில் கவிதையின் மொழி என்பது அப்படித்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் பெரும் மக்கள் திரளை உங்களை நோக்கி இழுக்க முடியும். அந்த நேரத்தில் நகுலனுடைய ‘‘நீங்கள் ராமச்சந்திரனா என்றேன்? ராமச்சந்திரன் என்றார் எந்த ராமச்சந்திரன் என்று நான் கேட்கவும் இல்லை. அவர் சொல்லவும் இல்லை’’ என்ற கவிதையை முன் வைக்க முடியாது. அகவயமான என்னுடைய தனிமனித சிக்கல்களை மட்டுமே பேசுவது இலக்கியம் என்று உங்களை நீங்கள் சமூகத்திலிருந்து விடுவித்துக் கொள்கிற கோழைத்தனத்தை ‘திராவிட இயக்கமோ’ ‘வானம்பாடி’ இயக்கமோ என்றைக்கும் செய்ததே கிடையாது. இன்குலாப் அய்யா மீது கூட நவீன இலக்கியவாதிகள் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார்கள். ‘‘படகோட்டிச் செல்கின்ற படகுக்காரரே மிக மெதுவாகப் போங்கள் வழியில் இருக்கின்ற வாத்து முட்டைகள் உடைந்து விடாமல் படகை செலுத்துங்கள்’’ என்று அகவயமான அழகான கவிதையை அவர் எழுதி இருக்கிறார். இப்படி அகவயமான கவிதை எழுதிய அவர்தான் சமூகம் சார்ந்த பல கவிதைகளையும் எழுதி இருக்கிறார். ஆக, நீங்கள் கவிதைகளில் சொல்கின்ற விஷயம் உங்களின் மொழியைத் தீர்மானிப்பதாக இருக்கிறது என்பது ஒன்று.
இரண்டாவது; நான் எழுத வருகின்ற இன்றைய சமூகச் சூழல் எப்படி இயங்குகிறதோ அதற்கான மொழியைத் தேர்ந்தெடுக்கிறேன். இது இயல்பானதொன்று. அப்படிப் பார்த்தால் எனக்கான மொழியைத் தேர்ந்தெடுத்ததற்காக நான் ஐரோப்பிய மேலை இலக்கியத்திற்கு வேண்டுமென்றால் நான் நன்றி சொல்லிக் கொள்ளலாம். இல்லை என்றால், எனக்கான மொழியை நானே தேர்ந்தெடுத்துக் கொண்டதற்கு எங்களுக்கு முன்னால் இயங்கிய தமிழ்ப் பெண் கவிஞர்களுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்ளலாம். ஆண்டாளின் மொழி என்பது புரட்சியான ஒரு கவித்துவ மொழி. ‘‘உன்னுடைய மார்பைச் சேராத என்னுடைய கொங்கைகளைத் திருகி எரிவேன்’’ என்ற ஆண்டாளின் பாடலை விட வேறு என்ன புதியதாக சொல்லி விட முடியும். ஆக, நானும் சக கவிஞர்களும் வெள்ளிவீதி ஆண்டாளின் வாரிசாக அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.
தீராநதி : ஆண்டாளைப் பற்றி உங்களின் பேச்சு போனதால் இதைக் கேட்கிறேன். ஆண்டாள் என்பவள் ஒரு பழங்குடி மரபில் வந்த பெண். இதைத்தான் வைணவ மரபு பிறகு உள்வாங்கிக் கொள்கிறது. ‘வில்லி’ ‘குடும்பம்’ ‘வேடன்’ ‘கந்தன்’ என்ற பழங்குடி இனத்தில் ‘வில்லி’ இனத்திற்கும் கந்தன் இனத்திற்கும் இடையில் நடந்த ஊடாட்டத்தில் அவர் மணம்புரிவதை தவிர்த்ததாக ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. இன்றைக்கு ஆண்டாளை முன் வைக்கின்ற பெண் கவிஞர்கள் இது பற்றி விவாதங்களையெல்லாம் முன்னெடுப்பதாகத் தெரியவில்லையே?
தமிழச்சி தங்கபாண்டியன் : முருகனுக்கும் இதுதான் நிகழ்ந்தது. ‘தெய்வானை’ என்ற ஒன்றே முதலில் கிடையாது. வள்ளிதான் வேட்டுவக்குடி தலைவனுடைய மனைவி என்ற குறிப்புகள் இருக்கிறது. தெய்வானை என்ற ஒன்றைக் கொண்டு வருகிறார்கள். பிறகு முருகன் சுப்ரமணியன் ஆகிறார்.
தீராநதி : பெண்படைப்பாளிகளிடம் இதுபோல ஒரு ‘மறு வாசிப்பு’ தேவையில்லையா? அதைக் கேட்கிறேன்.
தமிழச்சி தங்கபாண்டியன் : கண்டிப்பாகத் தேவை. அகலிகையையோ, ஆண்டாளையோ மறுவாசிப்பு செய்வதோடு நாம் மறுகட்டமைப்பும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.
தீராநதி : உங்களுக்கு கவிதையில் இருக்கின்ற ஈடுபாட்டைப் போலவே நாடகத்திலும் நடனத்திலும் இருக்கிறது. நீங்கள் சுந்தரராமசாமியின் ஜே.ஜே. சிலகுறிப்புகள் நாவல் வாசிப்பில் கூட நாடகக் கலைஞராக வெளிப்பட்டு இருக்கிறீர்கள்.
நான் என்ன கேட்க வருகிறேன் என்றால், இந்த நவீன நாடகங்கள் தமிழ் மரபில் ஊடாடி வந்த தியேட்டர் ஃபார்மை இழந்து விட்டது. அல்லது கை நழுவிப் போக விட்டு விட்டது என்கிறார்கள். உதாரணமாக ஊரில் பொது வெளியில் நாடகம் நிகழ்த்தப்படும் போது அந்தப் பார்வையாளன் எப்போது வேண்டுமென்றாலும் வெளியேறி தன் சொந்த வேலைகளை முடித்துக் கொண்டு மறுபடியும் நாடகத்திற்குள் நுழைவார். இதற்கான சுதந்திரம் நமது நாடக மரபில் திளைத்த ஒன்று. ஆனால் இன்றைக்கு நவீன நாடகங்கள் அரங்கத்திற்குள் நம்மை அடைக்கச் செய்து சமூகத்திற்கும் நமக்குமாக இருந்த ஒரு பொது வெளியைக் காலி செய்து விட்டது. நாடகத்திற்கான (அ) கூத்திற்கான வடிவத்தைக் கையிலெடுத்த நவீன நாடகவாதிகள் அதிலிருந்த சுதந்திரத்தன்மையைப் பறித்து விட்டார்கள் என்கிறார்கள்? நவீன நாடகம் என்ற பெயரில் நாடகத்தின் அம்சத்தையே ந. முத்துசாமி சிதைத்து விட்டார் என்கிறார்களே?
தமிழச்சி தங்கபாண்டியன் : அதை நான் முழுவதுமாக ஏற்றுக் கொள்ள மாட்டேன். முத்துசாமி அய்யாதான் கூத்து என்ற ஒன்றையே அறிமுகப்படுத்துகிறார். அதன் பிறகுதான் கூத்து என்ற கலை வடிவம் பெரிய திருப்பத்தை அடைந்தது. நாட்டார் மரபையோ, கூத்து மரபையோ, செவ்வியல் நாடகமரபையோ நாம் கொண்டு வந்து அரங்கத்திற்குள் நிகழ்த்தும் போது மிக முக்கியமான ஒரு பங்களிப்பை நீங்கள் செய்கிறீர்கள். ஆனால் அதோடு நின்று விடாமல், அதை பரீட்சித்து பல வடிவங்களோடு தொடர்படுத்தியோ விரிவுபடுத்தியோ செல்லும் போதுதான் அடுத்த தளத்திற்கு நாம் போக முடியும். இராமாணுஜம் அய்யா பங்களித்து இருக்கிறாரே. ஆக, இந்த மாதிரியான மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. இதையும் தாண்டி தேரிக்காடுகளிலே முருக பூபதி நிகழ்த்துகின்ற நாடகங்கள் மிக முக்கியமானவை. அதில் அவர் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் அந்த மண்ணிலேயே நடத்திக் கொண்டிருக்கிறார். நீங்கள் குறிப்பிட்டதைப் போல பங்கேற்பவர்களுக்கும் நாடகத்தை நிகழ்த்துபவர்களுக்கும் உள்ள சுதந்திரத்தைக் கொடுக்கின்ற ஒரு வடிவமாக அது இருக்கிறது. நவீன நாடகத்தை எடுத்துக்கொண்டால் அ. மங்கை, பிரசன்னா ராமசாமி, கருணாபிரசாத், வெளி ரங்கராஜன் இவர்கள் எல்லோருக்கும் மரபு சார்ந்த பிரக்ஞை என்பது இருக்கிறது. நவீன பரீட்சித்தலும் இருக்கிறது. கருணா பிரசாத் தன்னுடைய ‘அரவான்’ நாடகத்தை அலையன்ஸ் பிரான்சைஸின் பின்னால் திறந்த வெளியில் தான் நடத்தினார். மரபு சார்ந்த பிரக்ஞை இருந்தாலும் நமது கலை வடிவத்தை நாம் பிற கலாச்சாரத்தோடு இணைத்து எடுத்துச் செல்கின்ற ஒரு கட்டாயமும் தேவையும் இன்றைக்கு இருக்கிறது. அதனால்தான் இவர்கள் அரங்கத்திற்குள் நடத்துகிறார்கள். உதாரணத்திற்கு கிராமத்தில் நடைபெறுகின்ற ஒரு ராவணக் கூத்தையோ அரிச்சந்திரன் நாடகத்தையோ இங்கே இருக்கின்ற பிரெஞ்ச் பார்வையாளர்களுக்கு அல்லது மிக்ஸ்டு காஸ்மோபாலிடன் பார்வையாளர்களுக்குக் கொடுத்தாக வேண்டிய நிலைமை இருக்கிறது. அப்படித்தான் உங்கள் கலை வடிவத்தை அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அப்படி வரும் போது புரசையிலே நடக்கக் கூடிய கண்ணப்பத்தம்பிரானின் கூத்தை நேரில் போய் பார்க்கின்ற வாய்ப்பென்பது எத்தனை நபர்களுக்கு வாய்க்கும். நம்முடைய தமிழ் வடிவத்தை அந்த மண்ணிலிருந்து கொண்டுவர முடியாது என்ற நோக்கத்தை வைத்துக் கொண்டிருந்தால், அது பிறருக்குச் சென்று செல்லக்கூடிய சாத்தியங்கள் குறைந்து போகும்.
தீராநதி : இங்கு தான் சிறு நெருடல் அல்லது சங்கடம் உருவாகிறது. வெளிநாட்டவர்கள் நமது மரபைப் புரிந்து கொள்வதற்காக அரங்கத்தில் இந்த நாடகங்கள் நடத்தப் படவேண்டும் என்று நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். பல ஆண்டுகாலமாக தமிழ்க் கலைத் தன்மையான ஒரு வாழ்க்கையை மட்டுமே நம்பி வாழ்கின்ற மண் சார்ந்த கலைஞர்களிடமிருந்து சில அம்சங்களை மட்டும் எடுத்து, அதன் ‘மாதிரியை’ மட்டுமே வெளிநாட்டவரிடம் இவர்கள் காண்பிப்பதனால் அதையே வெளிநாட்டவர்கள் ‘அசல்’ வடிவமாக நம்பிவிட மாட்டார்களா? பேராசிரியர்களுக்கும், நிறுவனங்களுக்கும் இருக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தி வாழ்வியல் சார்ந்து இயங்குகின்ற அசல் கலைஞர்கள் நொடித்துப் போக செய்து விடுகிறார்கள் அல்லவா?
தமிழச்சி தங்கபாண்டியன் : மேலை நாடுகளில் இன்றைக்கு எழுந்திருக்கின்ற முக்கியமான குற்றச்சாட்டு இதுதான். ஆஸ்திரேலிய பழங்குடிகளின் சடங்குகளையோ பண்புகளையோ காட்டாமல் ‘அறிமுகம் செய்கிறோம்’ என்ற பெயரில் திணை குடிகளிடமிருந்து (வீஸீபீமீரீமீஸீஷீus tக்ஷீவீதீமீ) மரபை அபகரித்து பன்னாட்டு நிறுவனத்திடம் விற்பனை செய்கிறார்கள். என்பதுதான் அது. அந்தக் குற்றச்சாட்டை நான் மறுக்கவில்லை. அப்போது இரண்டுவிதமாகத்தான் இப்பிரச்னையை நாம் அணுக முடியும். அந்தக் கலைஞர்களையே இங்கு அழைத்து வந்து அவர்களையே இங்குள்ள பார்வையாளர்களுக்கு அக்கலை வடிவத்தை நிகழ்த்திக் காட்டச் சொல்லி அறிமுகம் செய்வது. அதற்கான சூழல் தமிழகத்தில் வந்தால் நன்றாகதான் இருக்கும். டெல்லியில் ‘நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா’ இருக்கிறது. பெங்களூரில் ‘ரங்கஷங்கரா’ இருக்கிறது. அதேபோல ஓர் அரங்கம் இங்கிருந்தால் அது சாத்தியப்படும். கூத்து நடக்கும் ஊருக்கே சென்று பார்வையாளர்களைப் பார்க்கச் செய்வது என்ற இந்தப் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருகிறது என்று தான் நினைக்கிறேன்.
தீராநதி : நாடகவியலாளர்கள் தமிழகத்தில் பல காலமாக முன் வைக்கும் கோரிக்கை தமிழகத்திற்கு என்று ஒரு நாடகப்பள்ளி வேண்டும் என்பது. உங்களைப் போன்றவர்கள் அரசின் அருகாமையில் இருப்பவர்கள் என்ற வகையில் இதற்காக ஏதாவது முயற்சி எடுத்து வருகிறீர்களா?
தமிழச்சி தங்கபாண்டியன் : இதுவரைக்கும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நான் ஒரு தி.மு.க. குடும்பத்தைச் சார்ந்தவள் என்றாலும் கூட, இப்போதுதான் இந்த அரசியல் தளத்திற்கு வந்திருக்கிறேன். எனக்கான ஒரு வாசல் திறக்கும் காலத்தில் அதற்கான முயற்சியை நிச்சயம் எடுப்பேன் என்றுதான் இப்போதைக்கு என்னால் சொல்ல முடியும். ஏனென்றால், இது ஒரு முக்கியமான விஷயம். ‘நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா’வை போலவே இங்கும் ஒரு அமைப்பு இயங்கும் அளவிற்கு ஒரு தனி பாரம்பரியமும், அதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளதுதான் தமிழ் நாடகங்களும் தமிழ் நாடக மரபுகளும் என்றால் மிகையல்ல.
தீராநதி : நாடகக் கலைஞர்கள் எவ்வளவு முக்கியமானவர்களோ அதே அளவுக்கு நாடக ஒப்பனை உபகரணங்களைத் தயாரிக்கும் தொழிலாளர்களும் முக்கியமானவர்கள். சேலம், ஆத்தூர் மாதிரியான பகுதிகளில் கண்ணாடிக் கூத்து என்று அறிமுகப்படுத்தப்படுகின்ற கலைஞர்களின் ஒப்பனை பொருட்களை, உடை அலங்காரங்களைத் தயாரிக்கின்ற தொழிலாளர்கள் இன்றைக்கு அத்தொழிலை விட்டுவிட்டு சித்தாள் வேலைக்கும் கட்டிட வேலைக்கும் கூலிகளாகச் செல்லத் தொடங்கிவிட்டார்கள். கலைஞர்களைக் காப்பாற்ற முயற்சித்ததைப் போலவே இந்த நாடக, கூத்து உபகரணம் தயாரிக்கும் தொழிலாளர்களைக் காப்பாற்றும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறதா?
தமிழச்சி தங்கபாண்டியன் : இந்த முயற்சிகளும் கண்டிப்பாக எடுக்கப்பட்டு வருகின்றன. மிக முக்கியமாக இந்த விஷயத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன். மாற்றுப் பாலினர் என்று சொல்லப்படுகின்ற ‘திருநங்கை’களுக்காக தனியாக ஒரு வாரியம் அமைத்தது, நாட்டுப்புறக் கலைஞர்களுக்காக தனியான ஒரு நலவாரியம் அமைத்துக் கொடுத்தது கலைஞர் தலைமையிலான இந்த அரசுதான்.
சென்னை சங்கமத்திற்காக பங்கேற்க வந்தவர்களை தனித்தனியாகச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார் முதல்வர் கலைஞர். அப்போதுதான். 200 ரூபாயாக இருந்த உதவித் தொகையை 1000 ரூபாயாக மாற்றினார். கூத்து கட்டுகின்ற, கரகக்கலைஞர்களான பெண்களுக்கு 35 வயதிற்கு மேல் நாடகங்களில் நடிக்க முடியாது என்பதால் ஆண்களுக்கு தனி வயது வரம்பையும், பெண்களுக்கென்று தனி வயது வரம்பையும் ஏற்படுத்திக் கொடுத்தார். பெண்களுக்கு 32 வயதிலேயே அந்த உதவித் தொகையைக் கொடுக்க வேண்டும் என்றறிவித்திருக்கிறார். அச்சமயத்தில் ஒப்பனைக் கலைஞர்களுக்கான இந்தக் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. அதற்கான கள ஆய்வைச் செய்து தாருங்கள் என்று முதல்வர் கேட்டிருக்கிறார்.
தீராநதி : பெர்டோல் ப்ரக்ட், மகா ஸ்வேதா தேவி, கேரளப் பெண் எழுத்தாளர் ஸ்ரீகுமார், அருந்ததி ராய், பாப்லோ நெரூடா, ழான் பால் சார்த்தர் போன்ற பல எழுத்தாளர்கள் அரசியல் இயக்கம் சார்ந்த நிலைப்பாடு, இயக்கச் செயல்பாடு என்று இயங்கிக் கொண்டிருந்தவர்கள். இயங்கிக் கொண்டிருக்கிறவர்கள். எழுத்தையும் இயக்கச் செயல்பாட்டையும் இரு கண்ணென கொள்பவர்கள். சுகுதகுமாரி (ஸ்ரீகுமார்). அமைதிப் பள்ளத்தாக்கு பிரச்னையில் தீரமாக நின்று போராடியவர். பெர்டோல் ப்ரக்ட் தன் அரசியல் இயக்கச் செயல்பாட்டிற்காக நாடு கடத்தப்பட்டவர். ஆனால் இங்கு பெர்டோல் ப்ரக்ட் மாதிரியான படைப்பாளியை மொழிபெயர்ப்பவர்கள் படைப்பை மட்டுமே பிரதானப்படுத்துகிறார்கள். அவர்கள் இயக்கச் செயல்பாட்டிற்கு சம்பந்தமற்றவர்களாக இருக்கிறார்கள். ஃபேன் காற்றில் உட்கார்ந்து கொண்டு பேராசிரியர் பணியில் மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டு சௌகர்யமாக வாழ்ந்து வருபவர்களாக இருக்கிறார்கள். பெர்டோல் ப்ரக்ட் போன்றவர்கள் இயக்கச் செயல்பாட்டிலிருந்துதானே தன் படைப்புக்கான தீரத்தைப் பெற்றிருக்கிறார்கள். ஒரு படைப்பாளிக்கு இயக்கச் செயல்பாடென்பது முக்கியமானதல்லவா?
தமிழச்சி தங்கபாண்டியன் : மிக மிக அவசியமானது அது. அதை மறுதலித்துவிட்டு உங்களுடைய வாழ்க்கையையோ, படைப்பையோ முன்னெடுத்துக் கொண்டு செல்ல முடியாது. இந்தக் கேள்விக்கு அறம் சார்ந்து நான் ஒரு பதிலைச் சொல்ல வேண்டுமென்றால் நானே அந்த இயக்கப் பணியைச் செய்யத் தொடங்கவில்லை. ஆகையால் தார்மீக ரீதியாக நான் மற்றவர்களின் மீது இக்குற்றச்சாட்டை வைக்க முடியாது. இனிமேல் வரப்போகின்ற என்னுடைய வாழ்க்கைதான் இதற்கான பதிலைத் தரமுடியும் என்று நம்புகிறேன்.

Thursday, April 10, 2008

சமகால எழுத்தாளர்களுக்கு அரசியல் பார்வை இல்லை-நாஞ்சில் நாடன்

‘‘கதாநாயக நடிகனுக்கு படத்துக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் தருகிறார்கள். பத்தாயிரம் ரூபாய் மாசம் சம்பளம் வாங்கும் உயர் நிலைப் பள்ளி ஆசிரியன் அந்தத் தொகையை ஊதியமாகப் பெற 300 ஆண்டுகள் பணி செய்ய வேண்டும். முன்னூறு நெடிய ஆண்டுகள், முப்பது தலைமுறைகள். கூலிக்காரன் என்றால் ஆயிரம் ஆண்டுகள்.
அழுகை வரவில்லையா உங்களுக்கு? எனக்கு வருகிறது. நடிகனைத் தொட்டுப் பார்க்க விரும்பியவர்கள் நாம், நடிகையைக் கோயில் கட்டி கும்பிட்டவர்கள் நாம், கவர்ச்சி நடிகை குடித்து மிஞ்சம் வைத்த எச்சில் சோடாவை அண்டாவில் விட்டு நீர் சேர்த்துக் கலக்கி அரை கிளாஸ் பத்து ரூபாய் எனப் பிரசாதம் விநியோகித்தவர் நாம், பச்சைக்குத்திக் கொள்ளவும் தீக்குளிக்கவும் செய்பவர்கள் நாம், நடிகைகக்குத் தீண்டல் தாண்டிப் போனால் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்துபவர்கள் நாம். மன்றங்கள் நடத்தி மாற்று மன்றத்தின் பட்டினிக் குடலைக் கிழித்து மாலை போடுபவர் நாம் _ நம்மை நாம் என்ன பெயர் சொல்லி அழைப்பது? ஏமாளி என்றா, மூடன் என்றா? மூர்க்கன் என்றா? கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாலுடன் பிறந்த வாயப்பன் என்றோ?’’ என்று அங்கதம் பொங்க பேசும் நாஞ்சில் நாடன் தமிழன் செவ்வியல் படைப்பாளி. ‘தலைகீழ் விகிதங்கள்,’ ‘என்பிலதனை வெயில் காயும்,’ மாமிசப் படைப்பு, ‘மிதவை’, ‘சதுரங்கக் குதிரை, என்ற ஆறு நாவல்களும் ‘தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்’ ‘வாக்குப் பொறுக்கிகள்’ ‘உப்பு’ ‘பிராந்து’ ‘சூடிய பூ சுடற்க என்னும் ஐந்து சிறுகதை தொகுப்புகளும் ‘நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’ நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று’ ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ என்னும் மூன்று கட்டுரை தொகுப்புகளும் ‘மண்ணுள்ளிப் பாம்பு’ என்ற ஒரு கவிதை தொகுப்பையும் எழுதி இருக்கிறார். இவரது மொத்தக் கதைகளையும் முழுத் தொகுப்பாக நாஞ்சில் நாடன் கதைகள் என்ற தலைப்பில் ‘தமிழினி’ பதிப்பம் வெளியிட்டிருக்கிறது. கூடவே இரு கட்டுரை தொகுப்பையும் மற்றவையெல்லாம் ‘விஷயா’ பதிப்பகம் வெளியிட்டவை. இனவரையில் நூலை காலச்சுவடு’ வெளியிட்டிருக்கிறது.
தன் வீட்டில் நேர்ந்த இரண்டு துக்க காரியங்களில் இரண்டு மாதங்கள் தள்ளிப்பான இந்த நேர் காணல் இந்த மாதம் சாத்தியமானது. கோவை சிங்காநல்லூர் ஐயர்லேஅவுட் பகுதியில் வசிக்கும் அவரை ஒரு மாலை பொழுதில் தீராநதிக்காக சந்தித்தோம்.
தீராநதி :
உங்களுடைய முதல் சிறுகதையான ‘விரதம்’ 1975 ஜூலை மாதம் ‘தீபம்’ இதழில் வெளிவந்திருக்கிறது. உடனே அந்தக் கதைக்கு ‘இலக்கிய சிந்தனை’ பரிசும் கிடைத்திருக்கிறது. அப்போது உங்களுக்கு உத்தேசமாக 28 வயதிருக்கும். அன்றிலிருந்து தொடர்ந்து இடைவிடாமல் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சமகால இலக்கியப் பரப்பில் இயங்கிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த ஆண்டோடு அறுபது வயதை எட்டி இருக்கிறீர்கள். அன்றைக்கு உங்களுக்கு எழுத்தின் மீதாக உண்டான ஆர்வம், வாசிப்பிலிருந்து இன்றைக்கு நீங்கள் அடைந்திருக்கும் ‘இடம்’ வரைக்குமான விஷயங்களை வாசகப் பதிவிற்காக ஞாபகப்படுத்தி பேசுங்களேன்?
நாஞ்சில் நாடன் : ஆரம்பத்தில் என்னுடைய தனிமையைக் கொல்வதற்காகத்தான் நான் எழுத ஆரம்பித்தேன். பிறமாநிலத்தில் சென்று பணி செய்யவேண்டிய கட்டாயம். பேச்சுத் துணைக்கோ, சுக, துக்கங்களைப் பகிர்ந்துக்கொள்வதற்கோ ஒரு தமிழனோ, மலையாளியோகூட இல்லாத சமயத்தில் தன்னந்தனியனாக உணர்ந்தேன். ஒருபுறம் பிறந்து வளர்ந்த ஊரின் ஞாபகங்கள் மனதை அழுத்திக்கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு வடிகாலாக எழுத ஆரம்பித்தேன். ‘விரதம்’ மாதிரியான சிறுகதைகள் எழுத வந்ததன் மூலம் நான் இழந்த அல்லது தொலைத்த ஒரு உலகத்தை எனக்குள்ளாகவே மறு வெளிப்பாடு செய்து பார்த்துக்கொண்டேன். அதிலொரு சுகம் இருந்தது எனக்கு. அப்படி எழுதியபோது தொடர்ந்து இதே வழியில் போகலாம் என்று ஒரு தைரியம் கிடைத்தது.
ஆரம்பத்தில் ழிஷீstணீறீரீவீணீ வாக உருவான என் எழுத்து நாள் போகப்போக ழிஷீstணீறீரீவீணீ என்ற இடத்தோடு மட்டும் நின்று விடவில்லை. பிறந்த வளர்ந்த இடம் பற்றி, என்னுடைய சூழல் பற்றி, சமூகம் பற்றி, எனக்குத் தெரிந்த விஷயங்கள் பற்றி, என்னுடைய நேரடியான அனுபவங்கள் பற்றி எனக்கு நிறைய சொல்வதற்கு இருந்தது. இதை ஒரு பகிர்தல் என்று வேண்டுமென்றால் வைத்துக்கொள்ளலாம். இந்தப் பகிர்தலுக்கு என்னுடைய சிறுகதைகளையும், நாவல்களையும் பயன்படுத்திக்கொண்டேன். இப்படித்தான் தொடங்கினேன். பின்னால் எனக்கென்று ஒரு பார்வை ஏற்பட்டது. இது சிறு வயதிலேயேகூட இருந்திருக்கலாம். ஆனால் அது துலக்கம் பெறாமல் இருந்தது. பிறகு ஒரு துலக்கம் கிடைத்த பிற்பாடு மேலும் தீவிரமாக என்னால் எழுத முடிந்தது. இப்படித்தான் முப்பத்துநான்கு வருஷமாக நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
இந்த வடிவங்கள், யுக்திகள் பற்றி விஷயங்களை எல்லாம் கற்றுத் தேர்ந்துகொண்டு நான் எழுத வரவில்லை. எனக்கெது எளிதாக வாய்த்ததோ, எனக்கெது எளிதாக எழுத வந்ததோ அதில்தான் நான் தொடர்ந்து சென்றேன். இந்த வடிவச் சிக்கல்களுக்குள்ளாக நான் எப்போதும் திகைத்து நின்றதில்லை.
தீராநதி : உங்களின் ழிஷீstணீறீரீவீணீவைக் கொல்வதற்காகவே எழுத ஆரம்பித்தீர்கள் என்பது சரி, அப்படி எழுத ஆரம்பிப்பதற்கு முன்னவே உங்களுக்கு கதை, நாவல்கள் வாசித்த அனுபவம் இருந்ததா?
நாஞ்சில் நாடன் : என்னுடைய பதிநான்கு பதினைந்து வயதிலேயே வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். _ எனக்கெது புரிந்ததோ அதை. தொடக்கத்தில் எல்லா இளைஞர்களுக்குமே அந்தக் காலத்தில் கல்கி, சாண்டில்யன் போன்றவர்களின் சரித்திரக் கதைகள் மீது பெரிய ஆர்வம் இருந்தது. பிறகு வடுவூர் துரைசாமி அய்யங்கார், ஆரணி குப்புசாமி முதலியார் போன்றவர்களின் துப்பறியும் மர்மக் கதைகள் மீதும் பெரிய ஆர்வம் இருந்தது.
இவர்கள்தான் முதலில் என்னை வாசிப்பை நோக்கி நகர்த்தினார்கள். எங்கள் ஊர் வீரநாராயணமங்கலத்தில் நூலகமொன்று இருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில், நாஞ்சில் நாடு என்ற பகுதியில், பழையாற்றங் கரையிலுள்ள ஒரு சின்ன, ரொம்ப அழகான விவசாய கிராமம் அது. சுற்றிலும் நெல் வயல், வாழை, தென்னை இந்த மூன்றுதான் முக்கிய பயிர்கள். அப்புறம் கன்றுகாலிகள் என்று, இவ்வாறான சூழலோடுதான் என்னுடைய வாசிப்பும் சேர்ந்து நகர்ந்தது.
எங்கள் ஊர் நூலகத்தில் கல்கி, சாண்டில்யன், நா. பார்த்தசாரதி பின்னால் தொடர்ந்து அகிலன். அதன்பிறகு அநுத்தம்மா, மு. வரதராஜன் இப்படி தொடர்ந்து போ. ஒரு காலத்திற்குப் பிறகு மர்மக்கதைகள் வாசிப்பதற்கான ஈடுபாடு குறைய ஆரம்பித்தது. மர்மக்கதை எழுத்தாளர்கள் எண்ணிக்கையில் பெரிய அளவில் நம்மிடம் இல்லை. நான்கு ஐந்து பொருட்படுத்தக் கூடிய எழுத்தாளர்களைத் தவிர்த்து சரித்திரக் கதைகள் என்பது சொல்லும்படியாக இல்லை. இப்படிப் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் அதாவது, என்னுடைய 26, 27 வயதில் நான் பாம்பேக்கு குடிபெயர்கிறேன். அங்கு பம்பாய் தமிழ்ச்சங்கத்தில் ஒரு நூலகம் இருந்தது. அங்கு உறுப்பினராக நான் சேர்ந்தேன். அந்த நூலகத்திலிருந்து வீட்டிற்கு தினமும் இரண்டு புத்தகங்கள் வாசிக்க எடுத்துக்கொண்டு போகலாம். இந்தச் சந்தர்ப்பத்தில் நான் தினமும் இரண்டு புத்தகங்கள் படித்தேன். ஏறக்குறைய 400, 500 பக்கங்கள் தினமும் படித்தேன். அதற்கான நேரமும் சாவகாசமும் எனக்கிருந்தது. அப்போது அந்த நூலகத்தில் வே. நாகராஜன் என்ற ஒருவர் இருந்தார். ‘வேனா’ என்ற பெயரில் அந்தக் காலத்தில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். தொகுப்பாக எதுவும் வரவில்லை. அவருக்கு பூர்வீகம் கும்பகோணம். தி. ஜானகிராமனின் தெருவாசி. நண்பர். அவர், ‘கிருஷ்ணன் நம்பியைப் படிச்சிருக்கியா?’ ‘நீல. பத்மநாபனைப் படிச்சிருக்கியா?’ என்று கேட்டு நல்ல நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்தார். சுந்தரராமசாமியை அவர்தான் எனக்குச் சொல்லிக்கொடுத்தார். அவர் சொல்லச் சொல்ல அந்தப் புத்தகங்களைத் தேடி பிடிக்க ஆரம்பித்தேன். ஏற்கெனவே நான் படித்துக்கொண்டிருந்த அகிலன், பார்த்தசாரதி, கல்கி, சாண்டில்யன் அநுத்தம்மா, லக்ஷ்மி இவர்களைத் தாண்டின ஒரு விஷயம் எனக்குக் கிடைத்தது. கிருஷ்ணன் நம்பி அப்போது மொத்தமே இரண்டு புத்தகங்கள்தான் எழுதி இருந்தார். அப்போதுதான் நீல.பதம்நாபன் ‘தலைமுறைகள்’ நாவலை எழுதி முடித்திருந்தார். பிறகுதான் ‘பள்ளிகொண்டபுரம்’ வந்தது. இப்படி அன்று தொடர்ந்து இன்றைக்கு வரைக்கு ஒரு தரமான வாசிப்பிற்கு என்னை நான் ஆட்படுத்திக்கொண்டுதான் இருக்கிறேன். இன்றைக்கு சமகாலத்தில் வெளிவந்திருக்கும் எல்லா இளைய எழுத்தாளர்களின் புத்தகங்களையும் நான் வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
தீராநதி : அன்றைக்கு ஆரம்பித்து இன்றைக்கு நீங்கள் வந்து நிற்கும் இடம் வரைக்கும் மன நிறைவைத் தரக் கூடிய ஓர் எல்லையை எட்டி இருப்பதாக நீங்கள் உணருகிறீர்களா?
நாஞ்சில் நாடன் : இதை இரண்டு விதமாகப் பார்க்கலாம். ஒன்று _ என்னால் செய்ய முடிந்ததை நான் செய்திருக்கிறேன். அப்படிப் பார்க்கும் போது ஒரு நிறைவெனக்கிருக்கிறது. இரண்டு நான் செய்தது போதுமா என்று பார்த்தால் எனக்கு இன்னும் செய்வதற்கு நிறைய இருக்கிறது. அதைச் செய்துவிட்டு சென்று விட வேண்டும் என்ற எண்ணமும் எனக்கிருக்கிறது. இதை நான் அகம்பாவமாகச் சொல்வதாகக் கூட நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
சில விஷயங்களை நான்தான் சொல்லியாக வேண்டும் என்ற எண்ணம் எனக்கிருக்கிறது. இதை தான் சொல்லவில்லையென்றால், இது தமிழ் மக்களுக்கு சொல்லப்படாமலேயே கூட போய்விடக் கூடிய ஓர் அபாயம் இருக்கிறது என்பது எனக்குத் தெரிகிறது. இதை நீங்கள் கர்வமாக எடுத்துக் கொண்டாலும் சரி, அல்லது வேறு எப்படி எடுத்துக் கொண்டாலும் எனக்கு சரிதான். சாதாரணமாக ஒரு ‘விரதம்’ என்று சிறுகதையை எழுத ஆரம்பித்து நேற்றைக்கு ‘டைம்ஸ் இன்று’ வில் வெளியான ‘கோம்பை’ வரைக்கும் எடுத்துக் கொண்டு பார்த்தால், ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு அந்த தீப் பந்தத்தைத் தூக்கிக் கொண்டு நான் நடந்திருக்கிறேன் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். இது என்னால் சாத்தியமாகி இருக்கிறது. தமிழிலக்கிய உலகில் சிறுகதை என்ற பிரிவிலேயோ அல்லது நாவல் என்ற பிரிவிலேயோ இருக்கின்ற மொத்த தூரத்தையும் நான் கடந்து விட்டேன் என்று சொல்லவில்லை. ஆனால் என்னால் முடிந்த தூரத்தை நான் கடந்திருக்கிறேன்.
தீராநதி : உங்களுடைய சிறுகதையிலோ கட்டுரையிலோ அல்லது நாவல்களிலோ பழந்தமிழ் இலக்கியங்கள் மிகுதியாக கையாளப்பட்டிருக்கின்றன. அப்படிப் பயன்படுத்தும் போது அது துருத்திக் கொண்டு நிற்காமல் தன்னியல்பாக அவற்றை எடுத்துப் பிரயோகிக்கிறீர்கள். திருமந்தரம், சைவத் திருமுறைகள், திருக்குறள், சங்கப்பாடல்கள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம் என்று உங்களின் பழந்தமிழ் பற்று ஒரு கல்வியாகவே உங்கள் படைப்பிலக்கியத்தில் போதிக்க, வாசிப்பிற்கான சுவைக் கூட்ட வந்து வந்து விழுகிறது. வெள்ளாள பிள்ளைமார்கள் மரபில் பாரம்பரிய தொடர்ச்சியாகவே ஒரு பழந்தமிழ் பாண்டித்யம் சர்வசாதாரணமாகவே புழங்கும். அந்த அறிமுக அளவீட்டிற்கான அறிவு கூட உங்களின் படைப்புகளுக்கு உதவி இருக்கலாம். ஆனால் நீங்கள் முதலில் கதை சொல்லத் தொடங்கி பிற்பகுதியில் ஒரு சங்கப் புலவனைப்போல உரைநடையில் கதைபாட ஆரம்பித்திருக்கிறீர்கள். நவீன செவ்வியல் மரபைச் சேர்ந்த ஒரு படைப்பாளியாகவே உங்களை நான் அடையாளப்படுத்த விரும்புகிறேன். உங்களுக்குக் கிடைத்த பழந்தமிழ் இலக்கிய பரிட்சயம் விருப்பத்தின் பால் அமைந்ததா? அல்லது கல்விப் புலம் சார்ந்ததா? ஏனென்றால் நீங்களரு கணிதவியல் வகுப்பைச் சார்ந்த மாணவனென்பதால் கேட்கிறேன்?
நாஞ்சில் நாடன் : பழந்தமிழ் இலக்கியப் பயிற்சி என்பது என்னுடைய குடும்பத்தின் மூலமாக எனக்குக் கிடைக்கவில்லை. என்னுடைய குடும்பம் ரொம்ப சாதாரணமான அன்றாடங் காய்ச்சும் விவசாயக் குடும்பம். வெள்ளாளர் மரபில் குறிப்பிட்ட சில குடும்பங்கள் மட்டுமே தேவாரம், திருவாசகம், மற்ற சமய திருமுறைகள் பற்றிய அறிமுகத்துடனிருக்கும். இது எல்லா குடும்பத்திற்குள்ளும் இருக்குமென்று சொல்ல முடியாது. நூறு குடும்பங்களில் ஒன்று அல்லது இரண்டு குடும்பத்திற்குத்தான் அந்த வாய்ப்பு அதிகம். என் குடும்பம் அதற்கு தொடர்பில்லாத விவசாய குடும்பம்.
நானெப்படி பழந்தமிழ் இலக்கியத்திற்குள் வந்தேனென்றால், ஆரம்ப பள்ளியைத் தாண்டி உயர்நிலை பள்ளிக்கு வருகின்ற போதே பள்ளியில் நடக்கின்ற பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டிகளிலெல்லாம் நான் கலந்து கொள்வேன். அப்படி கலந்து கொள்கிறபோது எங்கள் ஊரில் படித்தவர்களிடம், விஷயம் தெரிந்தவர்களிடம் ‘நான் இந்தத் தலைப்பில் பேசப் போறேன் அல்லது எழுதப் போறேன். எனக்கு எழுதிக் கொடுங்கள்’ என்று கேட்டு எழுதி வாங்கிக் கொள்வேன். ஒரு மூன்று அல்லது நான்கு பக்கங்கள் எழுதிக் கொடுப்பார்கள். நான் மனப்பாடம் செய்வேன். அவர்கள் எழுதிக் கொடுக்கும் போது அந்தக் கட்டுரையை அல்லது பேச்சை செறிவாக்குவதற்காக அங்கங்கே பழந்தமிழ் பாடல் வரிகளை செருகுவார்கள். பொங்கலின் சுவையைக் கூட்ட முந்தரி பருப்புகளை சேர்ந்து நாம் சுவையேற்றுவதைப் போல பழந்தமிழ் பாடல்களை சேர்த்து எழுதி தருவார்கள். அச்சுவைக்கு பழக்கப்பட்ட நான் பிறகு எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் போது தனியாகவே அந்த ‘முந்திரிப் பருப்புகளை’ தேடத் தொடங்கினேன். பள்ளி படிப்பு முடிந்த பிற்பாடு நானே என்னுடைய பேச்சுகளுக்கு, கட்டுரைகளுக்கான புத்தகங்களைத் தேடி எழுதுவதற்கான பயிற்சி எனக்கு வந்து விட்டது. திருக்குறள், கவிமணி, நாமக்கல் கவிஞர், பாரதியார் பாரதிதாசன் பிறகு பாடப்புத்தகத்தில் இருக்கின்ற செய்யுள்கள் என்று ஊன்றிப் படிக்க ஆரம்பித்தேன். பாடத் திட்டத்தில் மனப்பாட பாடல்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அந்தப் பாடல்கள் எனக்கு மனப்பாடமானதாகி விடும். செய்யுள்களில் அப்படி ஒரு ருசி எனக்குத் தெரிய ஆரம்பித்தது.
நான் எட்டாம் வகுப்பு படிக்கின்ற போது சீவகசிந்தாமணியிலிருக்கின்ற பாடல்கள் என்னுடைய பாடபுத்தகத்தில் இருந்தது. வசந்த சேனை பந்தாடுகின்ற இரண்டு பாடல்கள். ரொம்ப சுவாரஸ்யமான சந்தமுள்ள பாடல். ரொம்ப சுவையாக இருக்கும். எனக்கென்ன அப்போது தோன்றியதென்றால் அந்த சீவகசிந்தாமணி முழுக்க இப்படித்தான் பாடல்கள் இருக்கும் போல என்று. எங்கள் ஊர் நூலகத்திலிருந்து அந்தப் புத்தகத்தை வீட்டிற்கு எடுத்துக் கொண்டுப் போனேன். தெருவில் அதை எடுத்துக் கொண்டு போகும் போது ஊர் மக்கள் எல்லோரும் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள். ‘‘எதுக்குடா இத்த தண்டி புத்தகத்தை தூக்கிட்டுப் போற தலையில வெச்சு தூங்கறதுக்கா?’’ என்று கேலி பேசினார்கள். நான் ஒரு கௌரவத்திற்காக புத்தகத்தை மூன்று நாட்கள் வீட்டில் வைத்திருந்து விட்டு திரும்ப கொண்டு வந்து கொடுத்துவிட்டேன். என்னால் அதை படிக்க முடியவில்லை. எப்படி ஒரு எட்டாம் வகுப்பு மாணவனால் அதை படிக்க முடியும்? ஆக, இப்படி எந்தப் புத்தகம் கையில் கிடைத்தாலும் நான் படிக்க ஆரம்பித்தேன். செய்யுள், உரைநடை, கதை, கவிதை என்று பலவிதமாக படிக்க ஆரம்பித்தேன். அப்போதெல்லாம் பத்தாம் வகுப்பிலேயே பாடத்திட்டத்தில்‘குகப்படலம்’ இருந்தது. சிலப்பதிகாரத்தினுடைய ‘வழக்குரைகாதை’ இருந்தது. வாசிப்பில் தேர்ச்சி வருகின்றபோது அந்த மொழி உங்களை வசீகரிக்கின்றது. 1964_ல் நான் எஸ்.எஸ்.எல்.சி. படித்த போது எனக்கு தமிழ் சொல்லி தந்த ஆசிரியர்கள் எல்லாம் ஈடுபாட்டோடு சொல்லித் தந்தார்கள்.
கூலிக்கு மாரடிக்கவில்லை அன்றைக்கு இருந்த தமிழாசிரியர்கள் உரைநடையை வாசிப்பதைப் போல செய்யுளை வாசிக்க மாட்டார்கள். அசை பிரித்து சொற்கள் தெளிவாக, அர்த்தம் தெளிவாக புரிகின்ற விதத்தில் பாட்டை சொல்லிக் கொடுப்பார்கள். அப்படி இரு முறை, மூன்று முறை அவர்கள் பாட்டை சொல்லும் போது அந்தப் பாட்டெனக்கு மனப்பாடமாகி விடும். இன்றைக்குள்ள சமகால கல்வி மாணவர்கள் அந்தக் கல்வி முறையை இழந்து விட்டார்கள். இன்றைய தமிழாசிரியர் பலரும் தமிழ் சொல்லித் தரும் முறை அறியாதவர்கள்.
இன்னொன்றையும் இங்கு நான் சொல்ல வேண்டும். ஆரம்பக்காலத்தில் எனக்கு கொஞ்சம் அரசியல் ஈடுபாடு இருந்தது. ஏ.கே. கோபாலன் காலத்தில் அதாவது 1962_ம் ஆண்டு வாக்கில் இந்தோ_சீனா யுத்தம் வந்ததில்லையா அப்போது ஒரு பொதுவுடமைவாதி எங்க ஊரில் வந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருந்தார். கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக பிரியாத காலம் அது. அவர் ஒரு மலையாளி. அவருடைய மனைவிக்கு எங்கள் ஊர்தான் சொந்த ஊர். மலையாள நாளிதழ்களைதான் அவர் படிப்பார். அவர் எங்களுடன் கோட்பாடுகள் சம்மந்தமாக உரையாடுவார். அவர் மூலமாக பொதுவுடமை கருத்துக்களை தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன். அதே போல எங்கள் வீட்டிற்கு ‘திராவிட நாடு’ பத்திரிகை வரும். என் சித்தப்பா அப்பத்திரிகையை தொடர்ந்து வாங்கிக் கொண்டிருந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் தோன்றிய முதல் இரண்டு தி.மு.க. கிளைகளில் எங்கள் ஊரும் ஒன்று. முத்தாரம், முரசொலி, தென்றல் இப்படி தி.மு.க. சார்புடைய பத்திரிகைகள் தொடர்ந்து ஊருக்கு வந்துக் கொண்டிருந்தன.
அப்புறம் அரசியல் சொற்பொழிவுக் கூட்டங்கள் கேட்க ஆரம்பித்தேன். அநேகமாக அன்றைய காலத்திய எல்லாத் தலைவர்களின் சொற்பொழிவுகளையும் கேட்டிருக்கிறேன். ஈ.வெ.ரா. பெரியார், ஈ.வெ.கி.சம்பத், நெடுஞ்செழியன், அண்ணாதுரை, சி.பி. சிற்றரசு பி.ராமமூர்த்தி, எஸ்.ஏ. முருகானந்தம், கே.டி.கே. தங்கமணி, ம.பொ.சி. இப்படி எல்லா சொற்பொழிவுகளையும் கேட்டிருக்கிறேன். இந்தத் தலைவர்கள் சொற்பொழிவுகளின் நடுவில் சில கவிதை வரிகளை மேற்கோள் காட்டுவார்கள். திருக்குறளை பாரதியை மேற்கோள் காட்டுவார்கள். பாரதிதாசனை கண்டிப்பாக மேற்கோள் காட்டுவார்கள். மு. வரதராசனின் வரிகளை மேற்கோள் காட்டுவார்கள். இப்படி அரசியல் கூட்டங்களுக்கு போவதால் என்னுடைய சிந்தனை வளத்தை பெருக்கிக் கொள்ள வாய்ப்பாக அது அமைந்தது. பின்னால் தான் இலக்கிய மதிப்பீட்டின் படி, அளவீட்டின்படி எது சிறந்தது? எது அதை விட சிறந்தது? எது அதை விட அதை விட சிறந்தது என்று ஒப்பிடுகின்ற தன்மை எனக்கு மிக பிற்பாடுதான் வந்தது. அதனால் நான் சகட்டுமேனிக்கு எல்லாவற்றையும் படித்தேன். இதன் மூலம்தான் எனக்கு சமூகம் சார்ந்த ஒரு பார்வை கிடைத்தது. அரசியல் சார்ந்த பார்வை கிடைத்தது. இலக்கியம் சார்ந்த பார்வை கிடைத்தது.
1964_ல் எஸ்.எஸ்.எல்.சி. முடித்து விட்டு பி.எஸ்.சி. படிக்க வருகிறேன். 1967 தேர்தலில் தான் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ் நாட்டில் முதல் முறையாக பெரும்பான்மையான இடங்களை பிடித்து வெற்றி கொள்கிறது. 1962 தேர்தலிலேயே ஒன்பதாவது படிக்கும்போது நான் வாடகைக்காரில் உட்கார்ந்து ‘மைக்’ பிடித்துக் கொண்டு, வாக்காள ‘பெருமக்களே...’ என்று பேசி தி.மு.க.விற்காக ஓட்டு சேகரித்திருக்கிறேன். காலையிலிருந்து மாலைவரைக்கும் கிராமம் கிராமமாக போய் பிரச்சாரம் செய்திருக்கிறேன். பிறகு இந்த அரசியல் கட்சிகள் பற்றிய அபிப்ராயம் தலைகீழாக மாறியது. ஆகவே அரசியல் நடவடிக்கைகளையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு தொடர்ந்து வாசிப்பதில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.
தீராநதி: என்னுடைய கேள்வி பழந்தமிழ் இலக்கியங்களை தனிப்பாடமாக கற்றீர்களா?
நாஞ்சில் நாடன்: தனியாகப் பாடமாக எடுத்து நான் படிக்கவில்லை. பழந்தமிழ் இலக்கிய அறிமுகம் என்பது நானே தேடிக் கொண்டது. அதற்கு என்னுடைய ஆசிரியர்களும் உதவி இருக்கிறார்கள். நான் பி.எஸ்.ஸி. படிக்கும் போது, வகுப்பு இல்லாதபோது நூலகத்தின் மாடியில் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பேன். அப்போது கீழே எம்.ஏ. பாடம் நடந்து கொண்டிருக்கும். நான் மேல் இருந்தே அந்தப் பாடத்தை கவனிப்பேன். ஒரு நாள் ஆசிரியர் ‘என்ன பார்க்குற?’ என்றார். ‘பாடம் கவனிக்கிறேன்’ என்றேன். ‘பாடம் கவனிப்பதாக இருந்தால் பின் பெஞ்ச்சில் வந்து உட்கார்ந்து கவனி’ என்றார். உடனே போய் உட்கார்ந்துவிட்டேன். தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் எம்.ஏ. மட்டும் இருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வேறு எந்தக் கல்லூரியிலேயும் ‘றிநி கோர்ஸ்’ கிடையாது. டாக்டர் எஸ்.எஸ்.சுப்ரமணியன், டாக்டர். இ.வி.மணி, டாக்டர் அரசு ஆறுமுகம், புலவர் கே.சி.தானு தெ.ந. மகாலிங்கம் என்று எங்கள் கல்லூரியில் தமிழில் திறமை வாய்ந்த நிறைய ஆசிரியர்கள் இருந்தார்கள். பின்னால் நான் பம்பாய்க்கு போய் வாசிப்பை தொடர்ந்த காலத்தில் காரைக்குடி அழகப்பா இன்ஜினியரிங் கல்லூரியில் மேனேஜராக இருந்த ரா. பத்மநாபன் என்பவர் பம்பாய் தமிழ்ச்சங்கத்தில் கம்பன் வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார். இவர் தமிழ்க்கடல் ராய. சொக்கலிங்கத்தின் மாணவர். அதில் பதினேழு மாணவர்கள் சேர்ந்தோம். வாரத்தில் மூன்று நாட்கள் வகுப்பு. தொழிற்சாலையில் வேலை முடிந்தவுடன் நான் ஒழுங்காக வகுப்பிற்கு போய்விடுவேன். உரையே இல்லாமல் மர்ரே ராஜம் அய்யர் போட்டிருந்த கம்பராமாயணம் புத்தகத்தை எங்கள் கையில் கொடுத்து விட்டு, வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரையை கையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்துவார். இந்த பதினேழு மாணவர்கள் என்பது நாட்பட நாட்பட பதினொன்றாகி, ஒன்பதாகி, ஏழாகி, மூன்றாகி, இரண்டாகி கடைசியில் ஒன்றாக ஆனது. அந்த ஒரே மாணவன் நான்தான். கடைசியில் அவர் என்ன சொன்னார். இந்த ஒரு மாணவனுக்காக ஏன் நான் வகுப்பிற்கு வரவேண்டும். ‘நீ வேண்டுமானால் என் வீட்டிற்கு வா’ என்றார். நான் போனேன். முகம், கை கால் அலம்பிவிட்டு வீட்டிற்கு சென்றால் அந்த அம்மா, ஆசிரியர் மனைவி, (எனக்கு மாமி தெரியாது. அம்மா தான் தெரியும்) எனக்கு காபி போட்டு கொண்டு வந்து கொடுப்பார். என்ன வாழ்நாளில் ஙிமீst சிஷீயீயீமீமீயை அங்குதான் முதன் முதலில் குடித்தேன். என்னுடைய ஆசிரியர் தீவிர பக்தர். சைவ நெறி, கம்பன் மீது பெரிய ஈடுபாடு. அவர் ராமர் பட்டாபிஷேக படத்திற்கு முன்னால் உட்கார்ந்து தான் பாடம் நடத்துவார். நான் அந்த வயதில் தீவிர நாஸ்திகன். ஆனால் எங்களுக்குள் ஒரு பரஸ்பரம் மரியாதை இருந்தது. அப்படி மூன்று வருடம் பாடம் கேட்டேன். அவருடைய சிறப்பென்னவென்றால் வெறும் கம்பனோடு மட்டும் பாடத்தை நிறுத்திக் கொள்ள மாட்டார். மார்கழி மாதம் என்றால் திருப்பாவை திருவெம்பாவை படிப்போம் என்று அதை சொல்லிக் கொடுப்பார். இப்படி தினமும் ஒரு திருப்பாவை, திருவெம்பாவை பாடலை சொல்லிக் கொடுப்பார். கிட்டதட்ட திருப்பாவை திருவெம்பாவை முழுக்க எனக்கு மனப்பாடம். அதேபோல தேவாரம், திருவாசகம் சொல்லிக் கொடுப்பார். கம்பனில் 13 ஆயிரத்துச் சொச்சம் பாடல்களில் ரசிகமணி டி.கே. சிதம்பர நாத முதலியார் இடைச் செருகல் என்று தள்ளிய பாடல்கள் உட்பட சேர்த்து அவரிடம் பாடம் கேட்டிருக்கிறேன். பாடம் எடுக்க உடல் நலம் இல்லை என்றால் அபிராமி அந்தாதி கோளாறு பதிகம், ஜெயதேவர் அஷ்டபதி பாடல் காசட்டுகளை போட்டு கேட்கச் சொல்லுவார். அவருக்கு திருக்குறளில் நல்ல புலமை இருந்தது. சமய இலக்கியம் மீது எனக்கு ஓரளவுக்கு பரிச்சயம் கிடைத்ததற்கு முக்கிய காரணம் ரா. பத்மநாபன்தான். அவர்தான் ‘நாராயணீய’த்தை தமிழ் செய்தார் பின்பு.
தீராநதி : அந்தக் காலத்தில் தி.மு.க. சார்புள்ளவனாக அரசியலில் தீவிரமாக இயங்கி இருக்கிறேன் என்று நீங்கள் சொன்னீர்கள். மிகப் பெரிய பொருளாதார மேதையான டாக்டர் ப. நடராஜன் அவர்களை எதிர்த்து தி.மு.க. சார்பில் பிரச்சாரம் செய்தீர்கள். அன்றைக்கு விடலைத் தனமாக அரசியல் களத்தில் நீங்கள் எதிர்த்தவர் மிகப் பெரிய ஆளுமையானவர். இன்றைக்கு அதை யோசிக்கும் போது நெருடலாக உணருகிறீர்களா? தவறு இழைத்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சி மேலெழுகிறதா?
நாஞ்சில் நாடன்: அதாவது 1962_வருட தேர்தல் என்று நினைக்கிறேன். டாக்டர் பா. நடராஜன் என்பவர் எகிப்திய அரசுக்கு பொருளாதார ஆலோசகராக இருந்தார். திருமந்திரத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் அவர். உண்மையிலேயே மேதைதான் அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு மாணவனாக இருப்பேன் என்று நினைக்கிறேன். அந்தத் தேர்தலில் சிறுவர்கள் தேர்தல் பிரச்சார வண்டிகளின் பின்னால் ஓடுவது, சுவரொட்டிகளை ஒட்டுவது என்று இருந்தபோது, நான் பிரச்சார வண்டியில் மைக் பிடித்திருந்தேன். அந்தத் தேர்தலில் நடராஜன்தான் ஜெயித்தார்.
ஜெயித்த பிற்பாடு அவருக்கு எங்கள் ஊரிலேயே ஒரு வரவேற்பு கொடுத்தார்கள். ஊரைச் சார்ந்தவன் என்ற முறையில் நான் வரவேற்பு உரை ஆற்றினேன். ரொம்ப சின்ன பையன்தான் நான். அன்று பேச எனக்கு சிலர் எழுதியும் தந்தார்கள். கொஞ்சம் நானாவும் பேசினேன். நான் பேசியதை பார்த்துவிட்டு ‘பையன் நன்றாகப் பேசுகிறான்! ஆனால் கொஞ்சம் வழி தப்பி நிற்பதை போல தெரிகிறது?’ என்று ஒரு கருத்தைச் சொன்னார். அதை இப்போது யோசித்து பார்க்கும் போது ரொம்ப அவமானமாகத்தான் கருதுகிறேன். எவ்வளவு பெரிய மேதை? திருமந்திரத்தை தமிழில் படித்து புரிந்து கொள்வதே எவ்வளவு சிரமமான காரியம். அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். ஒரு அரசாங்கத்திற்கு பொருளாதார ஆலோசகராக இருந்தவர். தமிழ் நாட்டிற்கு ‘பிலானிங் திட்டக் கமிஷன் சேர்மேனாக’ வந்தவரை நாம் இப்படி எதிர்த்து செய்திருக்கிறோமே என்று பின்னால் யோசித்து பார்க்கின்றபோது வருத்தமாகத்தான் இருக்கிறது.
தீராநதி : ஒரு காலத்தில் தி.மு.க. கலாச்சாரம் கொண்டு வந்த மேடை நாகரீகம் என்பதற்கு மக்களிடம் ஒரு ஈர்ப்பும், அவசியமும் இருந்தது. அதில் நீங்கள் குறிப்பிட்ட ஈ.வெ.கி. சம்பத் என்பவர் ஒரு முக்கியமான பேச்சாளர். அவரை மறுத்து வரும் பேச்சுகளை கூட நாகரிகமாக மறுப்பவர் அவர் பொய் சொல்கிறார் என்று சொல்லமாட்டார். ‘உண்மைக்கு மாறாக பேசுகிறார்’ என்றுதான் குறிப்பிடுவார். தன் பேசில் கூட ‘பொய்’ என்ற வார்த்தை கலக்க கூடாது என வாழ்ந்தவர். அப்படியான தி.மு.க.வின் மேடை மரபு பிற்காலத்தில் நழுவி கொச்சையாகிவிட்டதே?
நாஞ்சில் நாடன் : அதாவது 1967 காலகட்டத்தில் மேடைத் தமிழ், எழுத்துத் தமிழ் என்று தமிழை ஓரளவிற்கு சமூக பயன்பாட்டிற்கு முன்னெடுத்து சென்றதில் திராவிட இயக்கத்தினுடைய சேவையை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. அன்றைக்கு சினிமா தியேட்டருக்கு போகின்ற ஒரு கல்லூரி மாணவனின் கையில் கூட ஒரு புத்தகம் இருக்கும். புத்தகம் கையில் எடுத்துச் செல்வதை ஒரு பெருமையாக கருத செய்தவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள். மேடைகளில் அவர்கள் தான் புத்தகத்தை பரிசளிக்கச் சொன்னார்கள். புத்தகத்தின் பக்கங்களை மேற்கோளிட்டார்கள். நெடுஞ்செழியன் போன்றவர்கள் இலக்கியம் பேசுகின்ற போது ஒன்றரை மணிநேரம் ஆடாமல் அசையாமல் அப்படியே உட்கார்ந்து கேட்க முடியும். அந்த ஆற்றல் அவர்களுக்கு இருந்தது. அவர்கள் நடமாடும் பல்கலைக்கழகங்களாக இல்லாவிட்டாலும் படிப்பாளிகளாக இருந்தார்கள். மேடைக் தமிழை மட்டுமல்ல எழுத்து தமிழையும் அவர்கள் தம்பங்குக்கு முன்னெடுத்துச் சென்றார்கள். ஆனால் என்ன நடந்த தென்றால் அவர்கள் அதை தாண்டி வளரவில்லை. பிறகு இது அலங்காரமாக மாறியது. ‘ஷீஸ்மீக்ஷீளீவீறீறீ’ என்று சொல்லுவோமில்லையா அப்படி மொழியை பயன்படுத்திப் பயன்படுத்தி நொந்து போகச் செய்து விட்டார்கள். அருவருக்க தக்க ஒரு மொழி நடையாக பிற்காலத்தில் அது மாறியது. தமிழ் சினிமாக்களிலேயே திராவிட கலாச்சாரத்தின் மேடை மொழி நடையை கொச்சைப்படுத்துகிற மாதிரியான காட்சிகள் இன்றைக்கு வருகின்றன. அதன் மூலம் அந்த நடையை கிண்டல் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அன்றைக்கு திராவிட இயக்கத்தினர் குறைந்த பட்சம் பாரதிதாசனையாவது அறிமுகம் செய்தார்கள். மு.வ.வை அறிமுகப்படுத்தினார்கள். திருக்குறளைச் சொன்னார்கள். புறநானூற்றிலிருந்து பாடல்கள் சொன்னார்கள். அகநாநூற்றிலிருந்து பாடல்கள் சொன்னார்கள். குறுந்தொகையிலிருந்து சொன்னார்கள். இப்படி குறைந்த பட்ச தமிழறிவையாவது மேடைகளில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அந்த மரபு நின்று போய்விட்டது. இன்றைக்கு எந்தத் தலைவனுக்கும் ‘இரண்டு வரி’ சொல்ல முடியும் என்பதை நாம் எதிர்பார்க்க முடியவில்லை.
தீராநதி : தொடர்ந்து உங்களின் படைப்புகளில் உணவு வகைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். அதுவும் போகிறப் போக்கில் சொல்லாமல் உணவு முறைகளில் புதைந்திருக்கும் செய்முறை, செய்நேர்த்தி, பண்பாட்டுக் கூறுகள், அது சமூகத்திற்குள் எவ்வாறு கையாளப்படுகிறது என்ற கலாச்சார தகவல்களையெல்லாம் பிரக்ஞை பூர்வமாக பதியவைத்திருக்கிறீர்கள். அண்மையில் நீங்கள் எழுதி இருக்கும் ‘யாம் உண்டோம்’ சிறுகதை வரை இது தொடர்ந்து வந்திருக்கிறது. சுந்தரராமசாமி வீட்டில் எதேட்சையாக ஒரு சந்திப்பில் ஜெயமோகனை பார்த்த போது ‘‘நீங்க குலசேகரம் பக்கம் தானே? அந்தப் பக்கமெல்லாம் அவியலிலே மாங்கா போடும் வழக்கம் கிடையாதே’’ என்று பேச்சை சாப்பாட்டின் பொருட்டே தொடங்குகிறீர்கள். ‘அன்னம்’ எதன் பொருட்டு உங்களின் படைப்புகளில் ‘வேள்வி’ பெறுகிறது?
நாஞ்சில் நாடன்: இது ஒரு நினைவிலின்று மனநிலையிலிருந்துதான் உருவாகிறதெ நினைக்கிறேன். அல்லது ஆழ்மனநிலை என்று கூட வைத்துக் கொள்ளலாம். எது பொருத்தமானதோ அதை தேர்ந்தெடுத்துக் கொள்வது உங்களின் சௌகர்யம். இதற்கு காரணம் என்னை என்று யோசிக்கும் போது நான் இளம் பருவத்தில் தாங்கொணா வறுமையை அனுபவத்திருக்கிறேன். இதையெல்லாம் ஃபேஷனுக்காக இன்று சொல்லிக் காட்ட விரும்பவில்லை. அறுவடை காலத்தில் மூன்று வேளைக்கும் சோறு இருக்கும். மாதத்தில் ஓரிரு நாட்கள் தோசைக்கு போடுவார்கள். எங்கள் ஊரில் நெல்லைத் தவிர வேறு பயிர் கிடையாது. கம்மங்கூழ் எங்களுக்குத் தெரியாது. சோளம் தெரியாது. கேழ்வரகு தெரியாது. நாங்கள் அரிசியை நம்பி வாழ்கிறவர்கள். அறுவடையான நாலுமாதத்தில் நெல் காலியாகி விடும். கடனுக்கு நெல் வாங்க வேண்டும். இந்த வறுமை என்னை தொடர்ந்து கல்லூரி படிப்பு முடிக்கின்ற வரை தாக்கிக் கொண்டுதான் இருந்திருக்கிறது. ஆகவே சோற்றினுடைய அருமை என்பது எனக்குத் தெரியும். ஒருவரின் வீட்டுவாசலில் போய் நின்று குடிக்க சுடு கஞ்சி கொடுங்கள் என்று கேட்டு வாங்கி சாப்பிடுகின்ற ஒரு எளிய மாணவனின் மனநிலை என்ன என்பது எனக்குத் தெரியும். நல்ல சாப்பாடு என்பதே கல்யாண வீட்டில்தான் கிடைக்கும். 21 கூட்டான் என்று எங்கள் ஊர்பக்கம் சொல்வார்கள். அத்தனை வகை வகையான சாப்பாடுகள் பரிமாறப்படும். கிடைக்குமோ கிடைக்காதோ என்பதற்காக முதல் பந்தியில் சாப்பிட உட்கார்ந்து பாதியிலேயே நான் எழுப்பிவிட பட்டிருக்கிறேன். பல சமயங்களில் இப்படி நடந்திருக்கிறது. ஆக, தொடர்ந்து வறுமை என்பது என்னை தாக்கிக் கொண்டிருக்கிறது. இதுவெல்லாம் சேர்ந்து உணவு மீது ஒரு அபரிமிதமான காதலை, வெறியை, ஒரு விருப்பத்தை _ எந்தச் சொல்வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்_ எனக்கு ஏற்படுத்தி இருக்கிறது. இப்போது நான் சம்பாதிக்கிறேன். ஓரளவுக்கு சோத்துக்கவலை இன்றிதான் இருக்கிறேன். நினைப்பதை இன்று என்னால் வாங்கிச் சாப்பிட முடியும். ஆனாலும் உணவை என்னால் வீண் செய்ய முடியாது.
அதேபோல பம்பாய் மாதிரியான வெளி மாநிலத்திற்கு சென்ற பிற்பாடு நம் கலாச்சாரம் சார்ந்த உணவுகளின் நெருக்கடி ஏற்படுகிறது. சாதாரணமாக தமிழ்நாட்டுத் தமிழர்கள் கொத்தவரங்காயை விரும்பிச் சாப்பிடமாட்டார்கள். ஆனால் பம்பாய் சென்றால் சாப்பிட்டுதான் ஆக வேண்டும். இங்கு கத்திரிக்காய் சாப்பிடாதவர்கள் கூட பம்பாய்க்கு சென்றால் சாப்பிட்டே தீரவேண்டும். ஆக, இப்படியான நெருக்கடி எந்த வகையான உணவின் மீதும் ஒரு காதலை ஏற்படுத்துகிறது. எந்த வீட்டிற்குச் சென்றாலும் சாப்பிடுகின்ற சாப்பாடு நன்றாக இருந்தால் இன்னும் கொஞ்சம் போடுங்கள் என்று கேட்டு வாங்கிச் சாப்பிடக் கூடியவன் நான். என்றைக்குமே சாப்பாட்டின் முன்னால் நான் கூச்சப்படமாட்டேன். நான் விரும்பி உண்கின்றவன். கொஞ்சம் கொச்சையாக சொன்னால் நானொரு நல்ல சாப்பாட்டு ராமன். சாப்பாட்டு ராமன் என்ற அந்த நிலையிலேயே நின்று விடாமல் மேற்கொண்டு அதை பற்றி கேள்விகளை எழுப்பிக் கொண்டு தொடர்ந்து போய் கொண்டிருக்கிறேன். ஒரு பெங்காலி வீட்டில் எப்படி ‘தால்’ தயாரிப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். வங்காளத்தில் தோலுடன் கூடிய உளுந்தை வேக வைத்து அதில் ‘தால்’ செய்து பொரித்த அயிலை மீனை போட்டுக் கொடுப்பார்கள். இதற்கெல்லாம் ஒரு ரசனையை நீங்கள் உருவாக்கிக் கொள்ளவில்லை என்றால் நீங்கள் அதை அனுபவிக்க முடியாது. வேண்டாம் என்று நீங்கள் அதை தவிர்த்தால் அந்த அனுபவத்தினை நீங்கள் தவற விடுகிறீர்கள். நான் அந்த அனுபவத்திற்கு என்னை தயார்படுத்திக் கொள்கிறேன். அதைத்தான் என் எழுத்தில் பதிவு செய்கிறேன். வெறுமனே சாப்பிட்டேன் என்று சொல்லாமல் அந்த அனுபவத்தை வாசகனுக்கு ஏற்படுத்துகின்ற விதத்தில் சொல்லவேண்டும். அப்படித்தான் சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.
அப்புறம் பயிர் வகைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். காய்கறிகளை பசுமையாக பார்ப்பது எனக்கு பிடிக்கும். காய்கறிகளை வாங்குகிறேனோ இல்லையோ உழவர் சந்தைக்கு போய் காய்கறிகளை தினமும் பார்த்துவிட்டுத் திரும்புவேன். மலர்களை பார்ப்பதை போல கத்தரிக்காய் குவியலாக இருப்பதையும், வெண்டைக் காய் குவியலாக இருப்பதையும் பார்ப்பதென்பது எனக்கு ஒரு கிளர்ச்சி ஊட்டக் கூடிய விஷயமாக இருக்கிறது. நீங்கள் ரோஜாவையும், முல்லையையும், மல்லிகையையும் பார்த்து தான் கிளர்ச்சி அடைய வேண்டுமென்ற அவசியமில்லை. அதற்கு ஒரு வாசனை உண்டென்றால் இதற்கும் ஒரு வாசனை இருக்கிறது. பறித்த உடன் வெண்டைக் காயை முகர்ந்து பார்த்தால் அதற்கு ஒரு வாசனை இருக்கும். பறித்தவுடன் பால் வடிகின்ற புடலங்காய்க்கு ஒரு வாசனை இருக்கிறது. கத்தரிக்காய்களிலேயே எத்தனை ரகம் நம்மிடம் இருந்திருக்கிறது தெரியுமா? மண்ணை நேசிக்கின்றவனுக்கு, மண்ணினுடைய மக்களை நேசிக்கின்றவனுக்குத்தான் இப்படியான பார்வைகள் இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.
தீராநதி : நீங்கள் குறிப்பிடுவதைப் போல ஒவ்வொரு காய்கறியிலேயும் பல்வேறு வகைகள் இருந்திருக்கின்றன. இன்றைக்கு ஒரு கை விரலில் அடக்கி விடுகின்ற எண்ணிக்கைகளுக்கு சுருங்கி போய்விட்டன. சிலி நாட்டிலிருந்து பச்சை மிளகாய் வந்த பிற்பாடுதான் ‘அல்சர்’ என்ற புதுவகை நோய் நம் சந்ததிகளுக்கு அறிமுகமாகிறது. பச்சைமிளகாய்க்கு முன்னால் ‘மிளகு’க்கு பழக்கப்பட்டவர்கள் நாம். இப்படி பல்வேறு வகைகளிலிருந்து சுருங்கி ஒன்றை நோக்கி மட்டுமே விதைப்பு, உற்பத்தி, விற்பனை என்பதை நினைத்தால் உங்கள் மனசு கொதிக்கவில்லையா?
நாஞ்சில் நாடன் : இதை பெரிய சமூக இழப்பென்று தான் நான் நினைக்கிறேன் என்றாலும் நமது அல்சருக்குக் காரணம் பச்சை மிளகாய் அல்ல. ஒவ்வொரு மண்ணிற்கும் தோதான காய்கறிகள் நம்மூர்களில் விளைகின்றது. ஆம்பூர் அல்லது ஆற்காட்டில் விளைகின்ற கத்திரிக்காயின் ருசி வேறு. தஞ்சாவூரில் விளைகின்ற கத்திரிக்காயின் ருசி வேறு. நாகர்கோவிலில் விளைகின்ற கத்திரிக்காயின் ருசி வேறு. இப்படி ருசியில் சின்ன வித்தியாசங்கள் இருக்கின்றன. அதன் நிறத்தில் வித்தியாசம் இருக்கிறது. வடிவத்தில் வித்தியாசம் இருக்கிறது. பின்னால் விவசாய ஆராய்ச்சி நிலையங்கள் எல்லாம் வருகின்றபோது மகசூல் மாத்திரத்தையே மனசில் வைத்துக் கொண்டு வீர்ய விதை, வீர்ய பயிர், வீர்ய சாகுபடி என்று தரப்படுத்திவிட்டார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 67 வகையான நெல்கள் பயிரிடப்பட்டதாக ஆய்வாளர் அ.கா. பெருமாள் சொல்கிறார். எனக்கே இருபது முப்பது நெல்களின் பெயர்கள் தெரியும். கட்டிச் சம்பா என்று ஒரு ரகம். சுத்தமான சம்பா அரிசி. அது கேரளாவில் பயன்பாட்டில் இருக்கின்ற மட்டை அரிசி இல்லை. நம்முடைய மண்ணுக்கே உரிய வகையை சேர்ந்தது. நம்முடைய சீதோஷ்ணத்திற்கு, நம்முடைய காற்றிற்கு, மழைக்கு தாக்குப்பிடிக்கின்ற ஒரு பயிர் இது. இவர்கள் வேறு பயிர்களை அறிமுகம் செய்து கட்டிச் சம்பாவை அழித்து விட்டார்கள். வல்லரக்கன் என்ற ஒரு நெல் வகை. அரிசி மாவில் செய்கின்ற பலகாரங்களுக்கு பெண்கள் விரும்பி பயன்படுத்தும் அரிசி வகை. தொன்ணூ று நாட்களில் அறுவடை செய்கின்ற ‘அறுவங் கொறுவா’ என்று ஒரு பயிர். இவை எல்லாம் இன்று எங்கே?
இப்படி மண் சார்ந்த பல விஷயங்களை நாம் இன்றைக்கு இழந்தாயிற்று. ‘அரிக்கிதராதி’ என்ற நெல் இன்றைக்கு கிடைக்குமா என்று தெரியவில்லை. ‘அறுவங்குறுவா’ கிடைக்குமா தெரியவில்லை. ‘கல்மணல்வாரி’ என்று ஒரு நெல் வகை. ‘தட்டாரை வெள்ளை’ என்ற நெல்லை எங்கள் ஊர் வடமதியில் விதைப்பார்கள். கார், பசானம் என்று சொல்வார்கள். ஒன்று பொடியில் விதைப்பது. மற்றது தொழியில் விதைப்பது. ‘வாசறுமிண்டான்’ என்ற நெல்லை ஊரில் நடுவார்கள். அந்த அரிசியை சோறு பொங்கி இலையில் போட்டால் பிச்சு வெள்ளைப் பூ மாதிரி வெள்ளை வெளேர் என்று இருக்கும். அதே போல ‘காணம்’ என்ற பயிறு வகை இருந்தது. கொள்ளு என்று இதை சொல்வார்கள். இதை மலையாளத்தில் ‘முதிரை’ என்பார்கள். சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சுத்தமான தமிழ்ச்சொல்லிது. இதில் கருப்பு, வெள்ளை என்ற நிறத்தில் தனித்தனியாகவும் கருப்பு வெள்ளை இரண்டும் சேர்ந்த நிறத்திலும் இருக்கும். இப்போது வீரிய விதை உற்பத்தி மூலம் தவிட்டு நிறத்திலானது மட்டுமே கிடைக்கிறது. சுவையும் கெட்டுப் போயிற்று.
அதேபோல் தட்டை பயிறு. இதை நாங்கள் பெரும் பயிறு என்போம். இது சிகப்பு, கருப்பு, வெள்ளை என்று மூன்று நிறங்களில் கிடைத்தது. இன்றைக்கு தவிட்டு நிறம் மட்டும்தான். அப்புறம் மொச்சை, கருத்த மொச்சை தென்மாவட்டங்களில் கிடைக்கிறது. கருத்த எள்ளிற்கும் வெள்ளை எள்ளிற்கும் குணங்களில் வேறு பாடு உண்டு. பாகற்காயில் மிதிபாகற்காய் என்று ஒன்று உண்டு. தரையில் படரும். சின்ன குமிழ் மாதிரிதான் இருக்கும். அதை இன்று காண்பதற்கில்லை. இப்படி பல விஷயங்களை நம்முடைய சந்ததிகள் இழந்து கொண்டிருக்கின்றன. நம்மால் இதற்கு என்ன செய்ய முடியும்? புலம்பத்தான் முடியும். நம்மாழ்வார் போன்ற இயற்கை விஞ்ஞானிகளிடம் கேட்டால் கண்ணீர் விட்டு கதறுகின்ற மாதிரி கதை கதையாகச் சொல்வார்.
தீராநதி : நமது நாடு அடிப்படையில் விவசாய நாடு. விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய நமது அரசியல்வாதிகள் அணுஆயுத ஒப்பந்தத்தை தலையில் தூக்கிக் கொண்டு திரிகிறார்கள். சமீபத்தில் விமிஞிஷி ஐ சேர்ந்த நாகராஜன் என்பவர் விவசாயத் தற்கொலைச் சாவுகள் குறித்து மேற்கொண்ட ஆய்வின் முடிவில் 89362 பேர் தற்கொலை கொண்டிருப்பதாக ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார். 2002க்கு பிறகு 30 நிமிடத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்வதாக புள்ளி விபரம் தெரிவித்திருக்கிறார். இதற்கெல்லாம் ஒரு விவசாய படைப்பாளியாக எப்படி சஞ்சலப்படுகிறீர்கள்? எப்படி வெளிப்படுத்துகிறீர்கள்?
நாஞ்சில் நாடன் : என்னுடைய படைப்புகள் மூலமாகத்தான் இந்த ஆதங்கத்தையெல்லாம் நான் வெளிப்படுத்துகிறேன். சமீபத்தில் ‘யாம் உண்பேம்’ சிறுகதையில் ஒரு விவசாயின் சோகத்தைதான் நான் சொல்லி இருக்கிறேன். தமிழ்நாட்டில் இருக்கின்ற விவசாயிகளுடன் பீகாரில் இருக்கின்ற ஒரு விவசாயின் நிலைமையை ஒப்பிட்டு பார்த்தால் அவனுடைய நிலைமை அதலபாதாளத்தில் இருக்கிறது. இன்றைக்கும் குடிநீருக்காக மூன்று நான்கு கிலோ மீட்டர் நடக்க வேண்டிய நிலை அவர்களுக்கு இருக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு சுக்கா ரொட்டி கிடைக்காமல் பட்டினி கிடைக்கின்றவர்கள் அங்கு இருக்கிறார்கள். அவனால் எப்படி தன்னுடைய பிள்ளைகளுக்கு கல்வி கொடுக்க முடியும்? நான் இருபது வருடத்திற்கு முன்னால் சந்தித்த கை வண்டி இழுக்கின்ற ஒரு உ.பி.த் தொழிலாளியிடம் வறுமை குறித்து பேசியபோது ‘‘சாப்பிடுவதற்கான ரொட்டியின் மாவு அளவுக் குறைவாக இருந்தால் ‘சப்ஜி’ யில் காரத்தை ஏற்றிவிடுவோம்’’ என்றார். காரம் அதிகமாக இருந்தால் குழந்தைகள் அதிகமாக தண்ணீர் குடித்து விடுமாம். இப்படித்தான் இருக்கின்றது தொழிலாளிகளின் நிலைமை, விவசாயிகளின் நிலைமை.
பத்து வருடத்திற்கு முன்னால் விற்பனையான சோப்பின் விலை இன்றைக்கு எவ்வளவு கூடி இருக்கிறது? அன்றைக்கு அதே விவசாய பொருளின் விலை இன்றைக்கு எத்தனை மடங்கு கூடி இருக்கிறது என்று ஒப்பிட்டு பார்த்தால் சோப்பின் விலை நான்கு மடங்கு உயர்ந்திருக்கிறது. விவசாய பொருளின் விலை ஒன்னரை மடங்கு உயர்ந்திருக்கிறது. ஒரு பருவத்தில் தக்காளியின் விலை கூடுதலாக இருக்கிறது என்று தக்காளி போட்டால் விலை கிலோ எட்டு அணாவிற்கு இறங்கிவிடுகிறது. அதே போல் வெங்காயளம். முப்பத்திரண்டு ரூபாய் உயர்கிறது என்று பார்த்தால் உடனே இரண்டு ரூபாய்க்கு இறங்கி விடுகிறது. வெங்காயம், உருளைக் கிழங்கும் வட மாநிலங்களில் ஆட்சியையே தீர்மானிக்க கூடியதாகக் கூட இருக்கிறது. ஆக, இங்கே விவசாயத்தை புறக்கணிக்கின்ற ஒரு அரசியல் அமைப்பு தான் நம் நாட்டில் இருக்கிறதென்று எனக்குத் தோன்றுகிறது.
தீராநதி : யதார்த்த வகை எழுத்து என்பது இன்றும் பலருக்கு உபப்பளிக்கக்கூடிய எழுத்தாகவே இருக்கிறது. ரியலிஸம் என்ற சொல்லே ஜெர்மானிய மொழிச் சொல்லான ‘ஸிமீணீறீ றிஷீறீவீtவீளீ’ என்ற பதத்திலிருந்து பெறப்பட்டது. ‘ஸிமீணீறீ’ என்பது யதார்த்தம். ‘றிஷீறீவீtவீளீ’ என்பது ஆங்கில சொல் குறிக்கும் அரசியல் என்ற பொருளிலிருந்து பெறப்பட்டது. இச் சொல்லை முதன் முதலாக ‘பிஸ்மார்க்’ என்பவர்தான் உச்சரித்தார். ஐரோப்பிய அதிகாரம் சமநிலையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் அவர் இந்தச் சொல்லை உபயோகித்தார். பிரெஞ்சு நாவலாசிரியரான ‘பால்ஸாக்’ ரியலிஸத்தின் தந்தையென்று அறியப்பட்டவர். அவர் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்த மிகப் பெரிய மேட்டுக் குடிகளிலிருந்து திருடன், தாசி, என்று விளிம்பு நிலை மனிதர்கள் வரைக்கும் மிகத் துல்லியமாக சித்தரித்தவர். அதே போல க்யுஸ்தாவ் ஃளோபெரின் ‘மாதாம் வொவாரி’ (னீணீபீணீனீமீ ஙிஷீuணீக்ஷீஹ்) ஒரு மகத்தான ரியலிஸ நாவலாகும். தமிழில் ஜெயகாந்தன் இதையட்டி எழுதிய எழுத்தாளராக நம்மால் எடுத்துக் கொள்ள முடியும். அதே போல மலையாளத்தில் தகழி சிவசங்கரப் பிள்ளையைச் சுட்டலாம். இப்படி உயரிய அரசியல் தத்துவார்த்த பார்வையுடன் விழிப்புற்ற இந்த இஸத்தையட்டி தமிழில் எழுதும் பல சமகால எழுத்தாளர்களுக்கு (விதிவிலக்கும் உண்டு) கொஞ்சம் கூட அரசியல் பார்வையே அற்று வெறும் உரையாடலை மட்டுமே எழுதுவது யதார்த்தமான எழுத்தாக இங்க போதிக்கப்படுகிறது. ஒரு சமூகம் ஏன் கல்வி கற்கும் சமூகமாக தொடர்ந்து இருந்து வருகிறது? ஒரு சமூகம் ஏன் தொடர்ந்து வறுமையின் பிடியிலேயே சிக்சிச் சீரழிகிறது? ஒருவன் எப்படி பணக்காரனாக இருக்கிறான்? ஒருவன் ஏன் ஏழையாகவே இருக்கிறான்? பாரதி கூட கஞ்சி ‘குடிப்பதற்கு இதன் காரணம் இதுவென்ற அறியுமிலார்’ என்கிறார். அரசியல் புரிதலோடு கூடிய பார்வையும் எழுத்தில் சேர்ந்து பதியப்பட பட வேண்டாமா?
நாஞ்சில் நாடன் : நீங்கள் குறிப்பிடுவதை போல எல்லாவற்றிற்குள்ளும் அரசியல் என்பது இருக்கிறது. ஒரு முருங்கை மரத்தை பற்றி பேசினாலும் அதற்குள் ஒரு அரசியல் இருக்கிறது. சமகால எழுத்தாளர்களுக்கு ஒரு அரசியல் பார்வை இருக்கிறதா என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது. அல்லது இருந்தே எழுதுவதற்கு தயக்கம் காட்டுகிறார்களா என்ற கேள்வியும் இருக்கிறது. அரசியல்வாதிகளை, நிர்வாகத்தை எதற்கு பகைத்து கொள்ள வேண்டும் என்ற ஒரு எண்ணம் இருக்கிறது. எழுத்தாளனுக்கு தினமும் நல்ல செய்தித்தாள் படிக்கிற பழக்கமாவது இருக்கிறதா என்ற ஐயம் வருகிறது எனக்கு. இதை பொதுமைப்படுத்திச் சொல்லவில்லை. ஈழத்தில் இருக்கின்ற மாதிரி ஒரு பிரச்னை இங்கில்லை. ஒரு ஜீவ மரண போராட்டத்தின் நெருக்கடிக்குள் தமிழ் நாட்டு எழுத்தாளன் இல்லை. இவர்களுக்கு தெள்ளத் தெளிவாகத் தெரியும். சூழ்நிலை மாசுப்பட்டிருக்கிறது என்று. சுற்றுச்சூழல் மோசமாக இருக்கிறது என்று. நதிகள் மாசு பட்டிருக்கிறது என்று. தகுதியானவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்று. தகுதியானவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கவில்லை என்று. இந்த அரசியலை நேருக்கு நேர் சந்திப்பதில் சமகால எழுத்தாளனுக்கு ஒரு பயம் இருக்கிறது. போன தலைமுறை எழுத்தாளனுக்கு இருந்த பயத்தை விட சமகால எழுத்தாளனுக்கு இந்தப் பயம் கூடுதலாக இருக்கிறது.
இலக்கியம் என்பது ஒரு பார்வையில் பொழுது போக்கு என்றிருந்தாலும் கூட அதை தாண்டிய ஒரு பயன் நிலை அதற்கு இருக்கிறது. ஆகவே அடிப்படையான சில கேள்விகளை ஒரு கவிதை, ஒரு சிறுகதை, ஒரு கட்டுரை எழுப்ப வேண்டிய தேவை இருக்கிறது. அகவய பயணியான எழுத்தாளனுக்கு இந்தச் சிக்கல்கள் இல்லை. சட்டம் அவனுக்கு ஒரு அச்சமல்ல. ஆனால் யதார்த்தை எழுத வருகின்றவனுக்கு பிரச்னை இருக்கிறது. ஏனென்றால் யதார்த்தம் மூர்க்கமாக இருக்கிறது. இந்த யதார்த்தத்தை நேரடியாக சொல்லியாக வேண்டும். நெத்தியடியாக சொல்ல வேண்டியதாக இருக்கிறது. அப்படி நெத்தியடியாக சொல்வதெல்லாம் யதார்த்தமா என்ற உப கேள்விகளும் பின்னால் வரும். யதார்த்தமும் நமக்கு அளவற்ற சுதந்திரத்தை வழங்கி இருக்கிறது. இந்தச் சுதந்திரத்தை தமிழ் எழுத்தாளன் பரிபூர்ணமாக பயன்படுத்திக் கொள்கிறானா என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய தேவையும் எழுகிறது. நொய்டாவில் 52 உடல்களை தோண்டி எடுத்தார்கள். அவர்களின் கை எலும்பு கிடைக்கிறது. கால் எலும்பு கிடைக்கிறது. tஷீக்ஷீsஷீ கிடைக்கவில்லை என்றால் அதனுடைய காரணங்கள் என்ன? பத்திரிகை செய்திகள் கூறுகின்றன இதில் சிறுநீரகங்கள் கலவாடப்பட்டிருக்கின்றன என்று. அப்போது 52 நபர்களின் சிறுநீரகங்களும் 104 நபர்களுக்கு போய் சேர்ந்திருக்கின்றன. அப்போது அதை வாங்கியவர்கள் யார்? இதை நடத்தி வைக்கின்ற மருத்துவமனைகள் எவை? அதன் நிர்வாகிகள் யார்? அறுவை செய்த மருத்துவர்கள் யார்? உதவி செய்த செவிலியர்கள் யார்? இவர்களுக்கு எல்லாம் மயக்க மருந்து கொடுத்தவர்கள் யார்? இப்படி விரிந்துக் கொண்டே போக வேண்டும் ஒரு எழுத்தாளனின் சிந்தனை. இது குறித்தெல்லாம் விசாரணை இருக்கிறது. வழக்கு இருக்கிறது. தீர்ப்புகள் வரும் என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஆனாலும் இது குறித்து எழுத்தாளனின் எதிர்ப்பு என்ன? உங்களின் வாசகனுக்கு நீங்கள் சொல்லப்போவதென்ன? இந்தப் பொறுப்பு எழுத்தாளனுக்கு இல்லையா? ஆக, இதன் மூலம் பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் கோழைகளாக இருக்கிறார்கள் என்று நாம் சொல்ல வேண்டியது இருக்கிறது. சமீபகால என்னுடைய கதாப்பாத்திர படைப்பான ‘கும்பமுனி’ மூலம் சமூகத்தில் இருக்கின்ற சிக்கல்கள் சம்மந்தமான என்னுடைய எதிர்வினைகளை நான் செய்து கொண்டுதான் இருக்கிறேன். என்னுடைய எல்லா கட்டுரைகளிலும் நான் வெளிப்படையாகவேதான் பேசுகிறேன். சாடுகிறேன்.
தீராநதி : ‘குடி’ என்ற பழக்கம் நம் சமகால சூழலில் ஒரு அவச் சொல்லாக மாற்றப்பட்டிருப்பதைக் குறித்து தொடர்ந்து மூன்று கட்டுரைகள் எழுதி இருக்கிறீர்கள். ‘உண்ணற்க கள்ளை’ கட்டுரையே இறுதி கட்டுரை என்று நீங்கள் குறிப்பிட்டாலும் இன்னும் நீளுமென்று நான் நினைக்கிறேன். ‘கள்’ உண்பது என்பது வெப்பம் தகிக்கும் பூமத்திய ரேகை அருகாமையில் வாழ்கின்ற நமது குடிகளுக்கு பண்பாடு சம்மந்தப்பட்டது என்பதை தாண்டி உடல் நலம் சம்மந்தப்பட்டதாகிறது. கள் ஒரு அருமருந்து ‘பனை மரம்’ தான் நமது தமிழகத்தின் தேசியச் சின்னம். ஆனால் இன்று ‘கள்’ அந்நியமாக்கப்பட்டு கூடவே குற்றமாகவும் மாற்றப்பட்டிருக்கிறது. ஆனால் மதுபான வகைகள் அரசு அங்கிகரிக்கும் ஒன்றாக இன்றைக்கு இருக்கிறது. ‘தரமான’ குடிகாரர்களின் பட்டியலை வெளியிடும்போது ஜெய மோகன் உங்களுக்கு முதலிடம் வழங்கி இருந்தார். 30 ஆண்டுகளுக்கு மேலாக நிதானமான குடிகாரனாக நீங்கள் இருப்பது குறித்தும் எழுதியும் இருக்கிறீர்கள். ஆண் பெண் இருபாலரையும் சேர்ந்து ஆறரை கோடிக்கு சற்று அதிகமுள்ள தமிழக மக்கள் தொகையில் இந்த வருடம் தீபாவளி பண்டிகை நாளில் மட்டும் (பத்திரிகை தகவலின்படி) 60 கோடிக்கு மது விற்பனையாகி இருப்பதாக தெரிய வருகிறது. அரசு இதன் மூலம் தனது வருவாயை அதிக அளவில் குவித்திருக்கிறது. நான் என்ன கேட்க வருகிறேன் என்றால் உங்களைப் போல ‘தரமான’ குடிகாரர்கள் என்பது சொற்ப எண்ணிக்கையை ஒட்டியது. பெரும்பாலான குடித்தனங்களில் ‘குடி’ கலாச்சாரம் என்பது குடும்பத்தைச் சிதைப்பதாக இருக்கிறது. இதை எப்படி நியாயப்படுத்துகிறீர்கள். மெத்தப் படித்த குடிகாரர்களின் அளவீடுகளை வைத்து விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலுக்கும் சேர்த்து நியாயம் உரைப்பது சரியா?
நாஞ்சில் நாடன் : இதில் இரண்டு அடிப்படையான வேறுபாடுகள் இருக்கிறது. ஒன்று குடிப்பவன். இன்னொன்று குடிகாரன். இதில் நான் முதல் வகையைச் சேர்ந்தவன். இன்னும் சொல்லப் போனால் குடித்தவன். குடிகாரன் என்பனை ‘அடிக்ட்’ என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். குடிப்பவன் என்பவனை குடிக்கின்ற பழக்கமுள்ளவன் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். இதில் குடிக்கின்றவன் மொத்த மக்கள் தொகையில் எவ்வளவு? குடிகாரன் என்பவன் எத்தனை சதவீதம் என்று நாம் பிரித்து பார்க்கிறோம். ரோட்டில் விழுந்து கிடப்பவன், பொண்டாட்டியை அடிப்பவன், வாங்குகின்ற சம்பளத்தையெல்லாம் குடித்துவிட்டு வீட்டுக்குப் போகிறவன் என்பவர்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட சதவீதம் மட்டும்தான்.
இவர்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு குடிப்பவனை எல்லாம் குடிகாரன் என்று முடிவுக்கு வந்து தீர்பெழுதலாகாது. இந்தச் சிக்கல் எல்லாவிதமான நுகர் கலாச்சாரத்திலும் இருக்கின்ற ஒன்று. குடிப்பழக்கமே இல்லாத ஒருவன் தினமும் எழுபது ரூபாய் எண்பது ரூபாய் செலவு செய்து ஹோட்டலில் பரோட்டாவும் சிக்கனும் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு போகவும் செய்கிறான். இவனும் ஒரு வகையில் குடும்பத்திற்கு எதிராக செயல்படுபவன்தான். திரும்பத் திரும்ப என்னுடைய மூன்று கட்டுரைகளிலும் நான் சொல்ல வருகின்ற விஷயம்: இதை அறம் சார்ந்த விஷயமாக பார்க்கவில்லை என்பதும் ஒரு ஒழுக்கம் சார்ந்த விஷயமாக பார்க்கிறேன் என்பதும். இங்கு நீங்கள் குடிப்பதை தோந்தெடுக்கவில்லை என்றால் ரொம்ப நல்லது. குடிப்பதை நீங்கள் விரும்புகிறீர்கள் என்றாலும் ரொம்ப நல்லதே.
‘குடி’ என்ற ஒன்றை பெரிய அளவில் நாம் நம் சமூகத்திற்குள் அறிமுகப்படுத்தி விட்டோம். இது கடந்த 50 ஆண்டுகளில் நம்முடைய நாட்டில் ஏற்படுத்தப்பட்ட விஷயம். இனி திரும்பி போவது முடியாத காரியம். நீங்கள் விரும்பினாலும் திருப்பிப் போக முடியாது. சினிமா பார்த்து கெட்டு போனவர்கள் எத்தனை பேர் நம் சமூகத்தில் இருக்கிறார்கள்? எங்கள் ஊரில் அல்வா வாங்கி தின்னே கெட்டு போனவர்கள் என்று ஒரு பட்டியல் சொல்கிறார்கள்? ஆக, நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் ஒருவனுடைய குடிப்பழக்கத்தை வைத்து அவன் நல்லவனா? கெட்டவனா என்ற நற்பத்திரத்தை வழங்காதீர்கள் என்று தான். நம்முடைய சமண நூல்களும் அதற்கு பிற்பாடு வந்த நீதி நூல்களும் சொல்வதில் ஒரு உண்மை உள்ளது. ‘நஞ்சுண்பான் கள் உண்பானே’ என்கிறது குறள். ‘சான்றோரால் எண்ணப்பட வேண்டாதவர்’ என்றும் வள்ளுவர் பேசுகிறார். அதை நான் மறுக்கவில்லை. இதையெல்லாம் குடியை அதீதமாக கையாண்டு கெட்டுப் போய்விடாதே என்பதற்கான எச்சரிக்கைச் சொல்லாகத் தான் நாம் கொள்ள வேண்டும்.
தீராநதி : ‘நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’ என்ற கட்டுரை நூலை எழுதி இருக்கிறீர்கள். அது ஒரு இனவரைவியல் ஆவண நூல். அவலா, தோசையா என்ற சொற்பிரயோகத்தை வைத்தே அவர்கள் மருக்கள் தாயவழியை சார்ந்தவரா மக்கள் வழி தாயத்தை சார்ந்தவரா என்பதையெல்லாம் குறிப்பில் உணர்த்தி அம்மக்கள் வாழும் பண்பாட்டினை தெளிவுற பதிவு செய்வதோடு திருமணத்திற்கு முன் மணமகனுக்கு ‘சர்வாங்க சவரம்’ செய்யப்படுவது, சோரம் போன பெண்களை வீட்டு மூலையிலேயே கொன்று புதைப்பது என்ற அதிர்ச்சியுறும் தகவல்களைக் கூட பட்டவர்த்தனமாக பேசுகிறீர்கள். இப்படி நாஞ்சில் நாட்டிற்கென்று தனி கலாச்சாரம் இருப்பதை எழுத்தின் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறீர்கள். கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை ‘மருமக்கள் வழி மான்மியம்’ என்ற இனவரைவியல் நூல் எழுதி இருக்கிறார். என்னுடைய கேள்வி: ஒரு சமூகத்தை பற்றி எழுதப்படும் இனவரைவியல் நூலென்பது அச்சமூகத்தின் உள் பார்வையாளனாக இருப்பவரால் மட்டுமே எழுதப்பட வேண்டும் என்ற வலியுறுத்தலும், அப்படி உள் பார்வையாளனாக இருந்து பதியப்படும் தகவல்களில் உயர்வு நவிற்சி ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது ஆகவே வெளி பார்வையாளன் எழுதுவதன் மூலமே இவைரைவியலின் மெய்மையை அடைய முடியும் என்ற விவாதமும் இன்றைக்கு உலக முழுவதும் பேசப்பட்டு வருகிறது. அதே வேளையில் வெளிபார்வையாளன் என்பவன் பல பண்பாட்டுத் தகவல்களை பகுத்தறிவு என்ற கண்கொண்டு மட்டுமே அணுகி கலாச்சார அணுகுமுறைகளை கேலிக்குரியதாக மாற்றி தவறாக புரிந்துகொள்ள வழி ஏற்படுத்தி விடுவதும் உண்டு. உள் பார்வையாளனாக நீங்கள் எழுதி அப்புத்தகத்தில் ‘எங்களுக்கே இதெல்லாம் சாத்தியம்’ என்ற உயர்வு நவிற்சி குரல் தென்படவே செய்கிறது. இந்த உள் பார்வை? வெளிப்பார்வை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
நாஞ்சில் நாடன் : இந்தத் தன்மைகள் நான் பிறந்து வளர்ந்த இனத்திற்கு மட்டும்தான் இருக்கிறதென்று ஆணித்தரமாக நான் சொல்ல வரவில்லை. இந்த இனத்திற்கு இந்தத் தன்மை இருக்கிறது. இந்த சிக்கல் இருக்கிறது என்றுதான் சொல்ல வருகிறேன். இதன் மூலம் பிற இனங்களுக்கும் இந்த மாதிரி சிக்கல்கள், தன்மைகள் இருக்கும் என்பது எனக்கு தெரியும். எதையும் மிகைப்படுத்தி நான் பேசவில்லை. ஒருவேளை புதியதாக நீங்கள் கேள்வி படுவதால் இந்தச் சந்தேகங்கள் வரலாம். மரபுகளில் இருக்கின்ற விஷயங்கள் எப்படி மாறிப்போய் இருக்கிறது. எப்படி திரிந்து போய் இருக்கிறது என்று சொல்வதுதான் என்னுடைய வேலை. மிகைப்படுத்துவதல்ல; இந்தச் சமூகத்தில் நான் பிறந்து வளர்ந்ததினால் உள் பார்வையாளன். ஆனால் நானொரு எழுத்தாளனாக இருப்பதினால் நானொரு வெளிப்பார்வையாளன். இரண்டும் ஒரே ஆள் தான். ஆகையால் அதனுடைய பலமும் எனக்கிருக்கும். பலவீனங்களும் எனக்கிருக்கும். என்னுடைய சமூகத்தில் எனக்கொரு நாற்காலி வேண்டும் என்று எதிர்பார்த்து நான் இந்தக் காரியத்தை செய்யவில்லை.
தீராநதி : ‘ஊதுபத்தி’ என்ற உங்களின் சிறுகதை பெருத்த எதிர்வினையை சந்தித்தது. ‘‘தனது வெள்ளாளச் சாதி வெறியை மீண்டும் நிருபிக்கிறார்’’ என்று குற்றஞ்சுமத்தப்பட்டு அதை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பாடமாக வைக்கக் கூடாது என்று துணை வேந்தருக்கும் அமைச்சருக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. இந்தச் சாதி திமிர் குற்றச்சாட்டை இடித்துரைத்து ‘ஷிலீஷீuறீபீ ஜிலீமீ கிutஷீக்ஷீ ஙிமீ ரிவீறீறீமீபீ’ என்ற கட்டுரையைக் கூட எழுதி இருக்கிறீர்கள். அதில் புதுமைப்பித்தன், சுஜாதா, சுந்தரராமசாமி, ஜெயமோகன் எல்லோருக்கும் இதுதான் நடந்தது என்று வருந்துகிறீர்கள். ஒரு படைப்பு சாதிய பின்புலத்தோடு வாசிக்கப்படுவதென்பது ஒரு சரியான முறையா? ஆரோக்கியமான போக்கா?
நாஞ்சில் நாடன் : இதை ஆரோக்கியமான போக்கில்லை என்பதுதான் என்னுடைய கருத்தும். உண்மையாக நேர்மையாக எழுத வருகின்ற எவனும் முதலில் தன்னுடைய சாதியை கடந்தாக வேண்டும். சாதியை கடந்ததாக வேண்டுமென்று சொல்கிற போது அவன் தனிமனிதனாக இருந்தால் மட்டுமே அது சாத்தியம். அவனொரு குடும்ப மனிதனாக இருக்கின்ற போது அவனால் எல்லா சந்தர்ப்பத்திலும் சாதியை கடந்தவனாக தன்னை பீற்றிக் கொள்ள முடியாது. அதில் நெருக்கடிகள் உண்டு. என்னை பொறுத்த அளவில் ஒரு எழுத்தாளன் என்பவன் தன்னுடைய எழுத்துக்கள் மூலமாகவோ அல்லது தன்னுடைய செயல்பாடுகள் மூலமாகவோ பிற ஜாதியை இழிவுபடுத்துகிறானா? தன் ஜாதிக்கு மட்டும் வக்காலத்து வாங்கி பேசுகிறானா? தன் ஜாதியே உயர்வானதென்று நினைக்கிறானா? அதன் மூலமாக வன்முறையில் ஈடுபடுகிறானா? அதன் பொருட்டு அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுகிறானா என்று ஒரு கணக்கெடுத்துப் பார்த்தால் தான் அது நேர்மையானக் கணிப்பாக இருக்க முடியும். தெரிந்தோ தெரியாமலோ நான் வெள்ளாள சாதியில் பிறந்திருக்கிறேன். வேளாண்மை என்பது விவசாய சம்பந்தப்பட்ட சாதி. இது ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையான பெயர்களில் வழங்கப்படும். ஆய்வாளர் அ.கா. பெருமாள் தன் ஆய்வின்படி தமிழ்நாட்டில் 66 வகையான வெள்ளாளர்கள் இருக்கிறார்கள் என்கிறார். அதில் ஒரு வகை வெள்ளாளர் குடும்பத்தில் நான் பிறந்திருக்கிறேன். நான் பிறந்த வகுப்பு சிறுபான்மை வகுப்பை சார்ந்த சாதி. எங்கள் சாதியில் ஒரு எம்.எல்.ஏ. வருவது கூட சிரமம். ஒரு காலத்தில் நிலவுடைமையாளர்களாக இவர்களில் சிலர் இருந்திருக்கிறார்கள். எல்லா வெள்ளாளர்களும் நிலவுடைமையாளர்கள்அல்ல. 10 சதவீதமானவர்கள் நிலவுடமையாளர்கள் என்றால் 90 சதவீதம் விவசாய கூலிகளாக இருந்திருக்கிறார்கள். ‘சேட்’ களிலும் பிச்சைக்காரர்கள் உண்டு என்பது போல. என் மீது ‘இவன் வெள்ளாளர் சாதிக்கு எதிராக எழுதுபவன்’ என்ற குற்றச்சாட்டும் என் சாதியை சேர்ந்தவர்கள் வைக்கிறார்கள். வெளியில் இருப்பவர்கள் இவன் வெள்ளாளர் சாதிக்கு ஆதரவாக எழுதுகிறான் என்கிறார்கள். ஆனால் ஏதோ இதற்குள் ஒரு அரசியல் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஒரு நோக்கத் தோடு என் மீது சுமத்தப்படுகின்ற குற்றச் சாட்டுகளுக்கு நான் பதில் சொல்வதாக இல்லை.
தீராநதி : ‘நேர்காணல்’ என்ற உங்கள் சிறுகதையில் எழுத்தாளர் ‘கும்பமுனி’க்கு சாகித்ய அக்தெமி விருது கிடைக்கிறது. உடன் அவ்விருதை கும்பமுனிய மறுத்து விடுகிறார். அது பரபரப்பில் செய்தியாகி விடுகிறது. ‘எள்ளல்’ தொனிக்கு விதத்தில் கதை நீளுகிறது. ‘நேர்காணல்’ கதை வெளியானது 1998_ம் வருடம். ஆனால் சில வருடங்களுக்கு முன்னால் நாகர்கோவிலில் அமைச்சர் முன்னிலையில் உங்களுக்கு விருது வழங்க முன் வந்தபோது நிஜத்தில் நீங்கள் மறுத்தீர்கள். ஆக, உங்களின் உள்மன சித்திரம்தான் கும்பமுனி மூலம் கதையாகி இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு ‘இயல் விருதின் மரணம்’ என்று ஜெயமோகன் ‘தமிழினி’யில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். இலக்கிய வெளிக்குள் விருதுகளின் இருப்பென்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
நாஞ்சில் நாடன் : தமிழ்நாட்டில் பதினொன்றோ பனிரெண்டோ பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இந்தப் பல்கலைக் கழகங்கள் எல்லா முதலமைச்சர்களுக்கும் டாக்டர் பட்டம் வழங்குகின்றனர். எனக்கு தெரிந்து நடிகர் விஜய் என்பவருக்கு ஒரு பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கி இருக்கிறது. திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு இரண்டு பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டங்கள் வழங்கின. நாற்பது வருடங்களாக தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிற ஓர் எழுத்தாளனுக்கு ஏதாவது ஒரு பல்கலைக் கழகம் ஏதாவது ஒரு டாக்டர் பட்டம் வழங்கி இருக்கிறதா? ஒரு பல்கலைக் கழக ‘செனட்’டிற்கு அல்லது துணைவேந்தருக்கு நேற்றைய சமூகத்தையும், இன்றைய சமூகத்தையும், நாளைய சமூகத்தையும் பற்றி சிந்திக்கின்ற சமூக அளவில் செயல்படுகின்ற படைப்பிலக்கியவாதிகள் குறித்து ஏதாவது அக்கறை இருக்கிறதா? இப்படி ஒரு படைப்பாளி இருக்கிறான் என்ற நினைப்பாவது அவர்களுக்கு இருக்குமா? இதே சூழல்தான் பரிசு தருகின்ற நிறுவனங்களிலும் இருக்கிறது. சிறந்த எழுத்தாளர்களுக்கு இந்த மொழியில் எந்த விருதும் கொடுக்கப்படவில்லை. ஆ. மாதவனுக்கு கொடுக்கப்படவில்லை. சுந்தரராமசாமிக்கு கொடுக்கப்படவில்லை. நகுலனுக்கு கொடுக்கப்படவில்லை. ஒரு மொழியின் உச்ச நிலையில் செயல்படுகின்றவர்களுக்கு வழங்கப்படாமல் அதே மொழியில் தரம் குறைந்து செயல்படுபவர்களுக்கு வழங்கப்படுகின்றது. விருதுகள் இன்று கொடுக்கப்படுவன அல்ல. வாங்கப்படுவன. அதற்கு சாதிப்பலம், பணபலம், அதிகாரபலம் அதிகமாக வேண்டும்.
தீராநதி : மிதவையில் ‘சண்முகம். சதுரங்க குதிரையில் ‘நாராயணன்’. எட்டுத்திக்கும் மதயானையில் ‘பூலிங்கம்’. தலைகீழ் விகிதங்களில் ‘சிவதாணு’. மாமிசப்படைபில் ‘கந்தையா’. என்பிலதனை வெயில் காயும் ‘சுடலையாண்டி’. அப்புறம் ‘கும்பமுனி’. இப்படி ஆண் மையப்படுத்தப்பட்ட படைப்பாகவே உங்களின் ஒட்டுமொத்த படைப்புலகமும் இருக்கிறதே?
நாஞ்சில் நாடன் : நீங்கள் சொல்ல வருவது எனக்குப் புரிகிறது. ஜெயமோகன் தனது விமர்சனத்தில் இதை முக்கியப்படுத்திச் சொல்கிறார். யோசித்து பார்க்கும் போது அது சரிதான் என்று எனக்கு தோன்றுகிறது. அப்படித்தான் அது அமைந்திருக்கிறது. இதை திட்டமிட்டு செய்தேன் என்று எனக்கு சொல்லமாட்டேன் ஒருவேளை என் குண அமைப்பு அதற்கு ஒரு காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது.
தீராநதி : உங்களுடைய உரைநடை இலக்கியங்களை படித்து விட்டு கவிதையை படித்தால் அதில் கவிதைக்கான அம்சம் குறைந்திருப்பதாக நான் நினைக்கிறேன். அது சரியா?
நாஞ்சில் நாடன் : சரிதான் என்று நினைக்கிறேன். நான் கொஞ்சம் கவிதைகள் எழுத முயற்சி செய்தேன். என்னுடைய முதல் காதல் கவிதையின் மீதுதான். ஆனால் எந்தக் காலத்திலும் என்னை நான் கவிஞனாக உணர்ந்ததில்லை. நான் கவிதை எழுத முயற்சித்தாலும் அது கிட்டதட்ட ஒரு செய்யுள் வடிவத்தில்தான் வெளி வருகிறது. ஆகவேதான் தொடர்ந்து கவிதை முயற்சியில் நான் ஈடுபடவில்லை.
தீராநதி : எழுத்தைப் போலவே இசையின் மீதும் காதல் கொண்டவர் நீங்கள். நமது இலக்கிய மரபென்பது இயல் இசை நாடகம் என்று மூன்று வகைபடுத்தப்பட்டிருந்தாலும் ஒன்றிலிருந்து ஒன்றை தனித்து நோக்குவென்பது கடினம். சிலப்பதிகாரம் என்ற காப்பியமே ‘இசைக் குறிப்புகளால் உண்டாக்கப்பட பேரிலக்கிய இசை குறிப்பு’ என்று வீ.க.பா. சுந்தரம் குறிப்பிடுகிறார். படைப்பிலக்கியத்திற்கும் இசைக்குமான உள்ள தொடர்பு தி.ஜானகிராமன் காலம் வரைக்கும் வந்திருக்கிறது. நவீன இலக்கிய காலத்திற்கு பிறகு படைப்பிலக்கியத்திற்கும் இசைக்குமான உறவு அறுந்து விட்டதைப் போல் தெரிகிறதே?
நாஞ்சில் நாடன் : எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. பெரும்பாலானய நவீன இலக்கிய வாதிகள் இசைக்குத் தொடர்பற்றுப் போய் விட்டார்கள் என்றுதான் தெரிகிறது. இதில் திராவிட அரசியலும் குறுக்கிட்டிருக்கிறது. தமிழிசை என்பது கர்நாடக இசை என்ற பெயரில் வழங்கப்பட்டாலும் கூட அது தமிழின் இசைதான். ஆனால் ஒரு காலகட்ட அரசியல் நமக்கு இதை பார்ப்பனர்களின் இசை என்று சொல்லித் தந்திருக்கிறது. இதனால் வெகு ஜனத்தை இந்த இசையிலிருந்து விலக்கி நிறுத்தி விட்டோம். தாளம் என்பது மனிதனின் அடிப்படையான ஒரு விஷயம். சுருதி என்பதும் அப்படிதான். இவையெல்லாம் மொழி மீறிய, பிரதேசங்களை மீறிய, ஜாதியை மீறிய ஒரு தன்மை. பிஸ்மில்லாகானின் ஷெனாய் இசைக்கு நீங்கள் என்ன மொழி சொல்ல முடியும். திருஞானசம்பந்தரின் தேவாரத்தை எடுத்துக் கொண்டால் எல்லா பாடல்களும் பண் அடிப்படையில்தான் இருக்கிறது. எந்தப் பண் எந்தக் கர்நாடக இசையாக மாறியது என்பதெல்லாம் இசை அறிஞர் ஆய்வாளர் மம்மது போன்றவர்கள் சொல்கிறார்கள். பெரிய அறிஞர்கள் விரிவாக பேசுகிறார்கள். நாம் ஒரு காலகட்டத்தில் அரசியல் காரணத்திற்காக மரபிசையை புறக்கணித்தோம். ஆனால் சினிமா இசையை புறக்கணிக்கவில்லை. மரபிசையை புறக்கணித்ததால் சினிமா இசை பெரிய அளவுக்கு ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டது. ஆக, நவீன இலக்கியவாதிகள் பலர் இந்த அரசியல், குடும்பச் சூழல் காரணமாக மரபிசைக்கு வந்து சேரவில்லை.

Thursday, February 28, 2008

வ.ஐ.ஜெயபாலன் நேர்காணல்




விடுதலைப் புலிகளைப் பற்றி பல வதந்திகள் நிலவும் சூழலில், உண்மை அறிய நார்வேயிலிருக்கும் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனைத் தொடர்பு கொண்டோம். இலங்கையில் சமாதான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நார்வே அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவில் இடம் பெற்றிருப்பவர் இவர். (முன்னைய பேட்டியின்போது சமாதானத்துக்கான நார்வே விசேட துதுவருக்கு வெளிவாரி ஆலோசகராக பணிபுரிந்ததை பதிவுசெய்தார்கள். இம்முறை தவறுதலாக குழுவில் இடம் பெற்றதாக பதிவாகியிருக்கிறது - ஜெயபாலன்)




இலங்கைத் தமிழர் நிலை இப்போது எப்படி உள்ளது?


‘‘பொதுமக்கள் மீதான தொடர் விமானக் குண்டு வீச்சுகளும் பீரங்கித் தாக்குதல்களும் இலங்கைத் தமிழ் மீனவர்களுக்கு எதிரான கடற்படையின் அட்டூழியங்களும் அதிகரித்துள்ளது. மறு புறத்தில், அதிகரித்துவரும் மருந்து, உணவுப் பொருட்கள் எரிபொருள் நெருக்கடி விரைவில் தமிழ் மக்களைப் பட்டினிச் சாவுக்குள் தள்ளிவிடும். சர்வதேச கண்காணிப்புக் குழுவின் செயல்பாடுகள் தமிழ் மக்களுக்குக் குறைந்த பட்ச பாதுகாப்பாக இருந்தது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் உத்தியோக பூர்வமாகக் கைவிடப்பட்டதால், ஜனவரி 16_ல் இருந்து சர்வதேசக் கண்காணிப்புக் குழுவினர் வெளியேறிவிட்டார்கள்.இது விடுதலைப் புலிகளின் மீதான யுத்தம் என்று சிங்கள அரசால் குறிப்பிடப்பட்டாலும் இது விடுதலைப் புலிகள் உருவாவதற்கு முன்னமே ஆரம்பித்த தமிழர்மீதான யுத்தத்தின் தொடர்ச்சி என்பதை மறைக்கமுடியாது.’’


இந்தப் போர்ச் சூழலில் இந்தியா என்ன நிலைப்பாட்டில் இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?


‘‘இந்தியா, தமிழகம் _ இலங்கைத் தமிழர்களின் நலன்கள் வரலாற்றால் இணைக்கப்பட்டது. இது உடைந்தால் எல்லா தரப்பும் பாதிக்கப்படும். இதனாலும் நீடிக்கும் எங்கள் பகையாலும் சீனாவும் பாகிஸ்தானும் ஏனைய இந்திய விரோதிகளும்தான் பயனடைவார்கள்.தமிழருக்கெதிரான இனக்கொலைப் போரில் இலங்கை அரசுக்கும் கடற்படைக்கும் உதவுவதை இந்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். நாம் அழிக்கப்பட்டாலும் தமிழர் இனக்கொலைக்கு இந்தியாவும் உதவியது என்கிற பழிச்சொல் வேண்டாம்.’’


பிரபாகரனின் துணைவியார் மதிவதனி ஈழ அகதிகளுடன் சேர்ந்து மின்னல் வேகப் படகுமூலம் தமிழகம் வந்துவிட்டதாக வரும் தகவல்கள் உண்மையா?


‘‘இதுபோன்ற அடிப்படைகள் இல்லாத வதந்திகளுக்கும் ஊகங்களுக்கும் எப்படிப் பதில் சொல்வது? ஆயிரம் ஆயிரம் வருடங்களாக சிங்கள அரசுகளிடம் இருந்து இலங்கைத் தமிழருக்கு தமிழ்நாடுதான் பாதுகாப்பாக இருந்தது. 1620 வரை நீடித்த இலங்கைத் தமிழரின் யாழ்ப்பாண அரசுக்கு தஞ்சாவூரில் இருந்துதான் படை திரட்டப்பட்டது. அதன்பின்னர் போர்த்துக்கீசியர் காலத்தில் மதரீதியான ஒடுக்குதலுக்கு அஞ்சி நம்மவர்கள் இராமேஸ்வரத்துக்கும் வேதாரணியத்துக்கும்தான் தஞ்சமென்று ஓடி வந்தார்கள்.’’


விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சமீபத்தில் நடந்த தாக்குதலில் காயமடைந்து விட்டதாக செய்திகள் வருகின்றனவே?


‘‘இது அடிக்கடி இலங்கைப் படையினரால் சொல்லப்படுகிற சேதிதானே? சிங்கள ஆட்சியாளர்கள் பிரபாகரனோடு போராட்டம் முடிந்துவிடுமென்கிற அவர்களது நப்பாசையில் தங்கள் கனவைச் சொல்கிறார்கள். விடுதலைப் புலிகளின் அமைப்பை நன்கு அறிந்தவன் என்கிற வகையில் அவர்கள் கனவுகள் எதுவுமே நனவாகாது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.’’


விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு பிரபாகரனின் மகன் தலைமை ஏற்கப் போவதாகச் சொல்கிறார்களே?


‘‘இந்தச் சேதிக்கும் அடிப்படை எதுவும் இல்லை. சார்லஸ் அன்ரனி கல்விக்காக லண்டன் போனபோது தப்பி ஓடி விட்டதாகச் சொன்னார்கள். இப்ப திரும்பிவந்து போராட்டத்தில் இணைந்து கொண்டதும் தலைவராகப் போகிறார் என்கிறார்கள். இந்த இரண்டு கருத்துக்களும் அடிப்படையில் ஒன்றுதான்.’’.

Friday, February 01, 2008

சினிமாக்காரர்கள் பெரியாரைத் தொலைத்துவிட்டார்கள்-தமிழவன்



தமிழ் சமகால இலக்கிய உலகில் தமிழவன் குறிப்பிடத்தக்க படைப்பாளி. அமைப்பியல் தத்துவத்தை தமிழ்ச் சமூகத்திற்குள் கொண்டு வந்தவர். ‘ஏற்கெனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’ ‘ஜி.கே. எழுதிய மர்ம நாவல்’, ‘வரலாற்றில்படிந்த நிழல்கள்’ போன்ற நாவல்களை நவீன வடிவத்தில் எழுதி வெளியிட்டவர். இதன் மூலம் புது வகையான நடையை மேற்கொண்டவர். வார்ஸா பல்கலைக்கழகத்தில் நான்கு ஆண்டு தமிழ் போதித்துவிட்டு தற்சமயம் ஆந்திர மாநிலம் திராவிடன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையை தோற்றுவித்து அதன் தலைவராக இருந்து வருகிறார். இவரது சமீபத்திய நாவல், ‘வார்ஸாவில் ஒரு கடவுள்’. இவரின் அசல் பெயர் கார்லோஸ். தீராநதிக்காக ஆந்திரமாநிலம் குப்பத்தில் உள்ள திராவிடன் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்யப்பட்ட நேர்காணல் இது.
தீராநதி: இந்த வருடம் புத்தகக் கண்காட்சிக்கு வெளிவர இருக்கும் ‘வார்ஸாவில் ஒரு கடவுள்’ என்ற உங்களின் புதிய நாவலை தோதாக வைத்துக் கொண்டு நமது பேச்சைத் தொடங்கலாம் என்று நினைக்கிறேன். நாவலின் வடிவம், கதைக்களம், பின்புலம் பற்றி முதலில் சுருக்கமாகச் சொல்லுங்கள்?
தமிழவன் : வார்ஸாவுக்கு நான் 2001_ல் தமிழ்ப் பேராசிரியராக வேலை செய்யச் சென்றேன். எனக்கு முன்னால் தி.சு. நடராஜன், இராமசுந்தரம், க. சுப்பிரமணியம், நாச்சிமுத்து, இந்திரா பார்த்தசாரதி போன்றவர்கள் அங்கு சென்று தமிழ்ப்பேராசிரியராக பணிபுரிந்து விட்டுத் திரும்பி இருக்கிறார்கள். அதில் இந்திரா பார்த்தசாரதி மட்டும்தான் நாவலாசிரியர். நானும் சென்று வழக்கமான தமிழ்ப்பேராசிரியர் வேலையைத்தான் செய்துகொண்டு இருந்தேன். கடைசியில் ஆறுமாதம் பணி நீட்டிப்பு எனக்குக் கொடுத்தார்கள். அங்கு சென்று வேலை செய்து கொண்ட காலங்களில் ‘பொலிஷ்’ மொழி இலக்கியம் பற்றி நிறையத் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன். ‘பொலிஷ்’ மொழியில் வேகமாக வாசிக்கக் கூடிய ஆற்றல் எனக்கு இல்லாததால் ஆங்கிலப் புத்தகங்களை வாங்கி வாசித்துக் கொண்டிருந்தேன். அங்கு ஆங்கிலப் புத்தகங்களை விற்பனை செய்யும் கடைகள் மிகவும் குறைவு. ஒரு சில கடைகளில் மட்டும்தான் ஆங்கில நூல்கள் விற்பனைக்கு இருக்கும். ‘அமெரிக்கன் புக் சென்டர்’ என்ற ஒரு ஆங்கிலப் புத்தக விற்பனையகத்திலிருந்துதான் நான் புத்தகங்கள் வாங்கிப் படிப்பேன்.இந்தியாவில் இருந்த காலங்களில் வேலைப் பளு காரணமாக எந்தெந்தப் புத்தகங்களை வாசிக்க நேரம் இல்லாமல் தவித்தேனோ அந்தப் புத்தகங்களையெல்லாம் வாங்கி அங்கிருக்கும்போது படிக்கத் தொடங்கினேன். குறிப்பாக எல்லாவிதமான ‘கிளாசிக்’ நூல்களையும் வாங்கி வாசித்தேன். அப்படிப் படிக்கும் சமயத்தில் அதற்கான சிந்திப்பிலேயே சதாசர்வகாலமும் இருந்தேன். என்னைப் பொறுத்தளவில் நான் இரண்டு துறைகளிலும் கால் ஊன்றிக் கொண்டிருப்பவன். ஆய்விலும் என்னுடைய பங்களிப்பு இருக்கிறது என்று நான் கருதுகிறேன். தற்கால இலக்கியத்திலும் எனக்கு தொடர்ச்சியான ஈடுபாடு இருக்கிறதென்றும் நினைக்கிறேன். இப்படி வாசித்துக் கொண்டிருக்கும்போது இன்றைய சமகால நாவல் உலகம் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொண்டேன். இந்தப் புரிதலால் எனக்குள் ஒரு நாவல் எழுத வேண்டும் என்ற உத்வேகம் உண்டானது. ஏற்கெனவே இந்தியாவில் நான் நாவல் எழுதிக் கொண்டிருந்தவன் என்பதால் இந்த ஆவல் இயல்பானதொன்றாகவே உணர்ந்தேன்.முதலில் ‘காதலோடு கூடிய போர்க் காலம்’ என்ற ஒரு ஸ்கிரிப்ட்டைத்தான் தயார் செய்தேன். 1965_ல் பாளையங்கோட்டையில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாக வைத்து அந்த நாவலை எழுதி இருந்தேன். இன்றைக்குள்ள பல இளைஞர்களுக்கு இந்தி எதிர்ப்புக் காலகட்டத்தில் நடந்த போராட்டங்கள் பற்றி போதுமான புரிதல் இல்லாததனால் அந்தத் தகவல்களை இலக்கியத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்று கருதி அந்த நாவலை எழுதி முடித்தேன். மொத்தம் இருநூறு பக்க அளவில் முடி.ந்தது அந்நாவல். அதற்கு பிற்பாடு எனக்கு நாவல் எழுத வேண்டும் என்ற ஆர்வம் இல்லாது போனது. இந்த சமயத்தில் திடீரென்று ஆறுமாதம் நீட்டிப்பு கிடைத்ததால் சரி, நாம் ஏதாவது ஒரு நாவலை எழுதி முடிக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். நாவல் எழுதுவததற்கு மன ஒருமைப்பாடு என்பது ரொம்ப முக்கியம். இந்த சமயத்தில் கிடைக்கின்ற ஓய்வு நேரத்தை நாவல் எழுதுவதற்கு ஒதுக்கி விடவேண்டுமென்று திட்டமிட்டுக் கொண்டேன். அங்கிருந்து வெளியாகும் ‘ஆன் லைன்’ வெப் சைட்டுகளில் ஒரு சில அனுபவ ரீதியிலான சின்னச் சின்ன கட்டுரைகளை எழுத மட்டுமே நேரம் கிடைத்த எனக்கு, இந்தப் பெரிய ஓய்வு என்பதை உருப்படியான காரியத்திற்குச் செலவிட்டாக வேண்டும் என்ற எண்ணம் உதித்தது.இந்த நேரத்தில் இன்னொன்றையும் நான் சொல்லியாக வேண்டும். தமிழ்நாட்டுச் சிறுபத்திரிகைச் சூழலிலிருந்து சென்றவன் என்ற வகையில் எனக்கு இங்கிருந்து வெளிவருகின்ற பத்திரிகைகளோடு உள்ள உறவு இந்தக் காலத்தில் தடைப்பட்டுப் போனது. சுத்தமாக தொடர்பே இல்லாமல் உறவு அறுந்து போய்விட்டது. ஆகையால் இங்கே உள்ள இலக்கியச் சூழலில் என்ன நடக்கிறது என்பதே எனக்குத் தெரியாமல் போய் விட்டது. வருடத்தில் ஒன்பது மாதங்கள் வெறும் பனி மட்டுமே பொழிகின்ற ஒரு நாட்டில் நான்கு வருடங்களைக் கழிக்க வேண்டியதாகிவிட்டது. ஒரு இலை தழைகளைக் கூட நீங்கள் பார்க்க முடியாது. எங்கு பார்த்தாலும் வெறும் பனி மட்டுமேதான் கண்களுக்குத் தெரிகின்ற ஒரு சூழலில் ஒன்று, நமக்கு சிறு வயது ஞாபகங்கள் மிதந்து வரும். அதற்காக ஒரு நாவலை எழுதினேன். அது, காதலோடு கூடிய போர்க்கலம். இரண்டு _ அனைத்துலக வாசகர்களை மனதில் வைத்து ஒரு தமிழ் நாவல் எழுத வேண்டும் என்பதற்காக ஒரு நாவலை எழுதினேன். அனைத்துலக வாசகர்களைக் கருத்தில் வைத்து எந்தத் தமிழ் நாவல்களும் வெளிவருவதில்லை என்ற எண்ணம் எனக்கிருந்ததனால் (இதை தற்பெருமைக்காக நான் சொல்லவில்லை. அதற்கான கட்டத்தை நான் தாண்டிவிட்டேன். சிறு வயதில் சில காரியங்களை அகங்காரமாக எடுத்துக்கொண்டு எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசி யிருக்கிறேன். இப்போது நான் அப்படி நிச்சயமாக பேசுவதில்லை) இந்த எண்ணத்தை முன் வைத்து ஒரு நாவலையும் எழுதி முடித்தேன். அந்த இரண்டாம் நாவல்தான் ‘வார்ஸாவில் ஒரு கடவுள்.’ முதல் நாவல் இன்னும் பிரசுரமாகவில்லை.நான் கன்னட மொழிச் சூழலில் இருந்த காலத்தில் அப்போது கன்னடமொழி நாவல்கள் நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படுமா? என்ற ஒரு விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்ததைக் கவனித்திருக்கிறேன். இந்தக் காலத்தில் தான் சல்மான் ருஷ்டி போன்றவர்கள் இந்திய நாவல்கள் எதுவும் சரியாக இல்லை. அனைத்துலக வாசகர்களை மனதில் கொண்டு நாவல் வெளி வருவதில்லை என்ற கருத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒரு விதத்தில் சல்மான் ருஷ்டி சொல்வதென்னவோ உண்மைதான். இந்திய மொழிகளில் வெளிவருகின்ற நாவலை அனைத்துலக வாசகனுக்கு மொழி பெயர்த்துக் கொடுத்தால் அவன் அதை அனைத்துலக நாவலாக எடுத்துக் கொள்ளமாட்டான்.இன்றைக்கு உதாரணமாக ஹாருக்கி மொரகாமி என்பவர் எழுத ஆரம்பித்திருக்கிறார். ரொம்ப கவனத்திற்குரிய ஒரு எழுத்தாளர் அவர். ஜப்பானிய பின்னணியிலிருந்து அவர் எழுதுகிறார். ஆனால் அனைத்துலக வாசகர்களை இலக்கு வைத்து எழுதுகிறார். நமது இந்திய மொழிகளில் இந்த மாதிரி இலக்கு வைத்து எழுதுகின்ற எழுத்தாளர்கள் இல்லை. ஏனென்றால் நமது கலாசாரத்தில் நாவல் எழுவதற்கு ஒரு எல்லையை உருவாக்கி இருக்கிறார்கள். அதற்குள்ளாகத்தான் நாம் எழுதுகிறோம். இப்படி எழுதவில்லை என்றால் நமது வாசகன் அதற்குள் பழக்கப் படமாட்டான். இவனுக்கு பழக்கப்பட்ட விதத்தில்தான் நீங்கள் சொல்ல வேண்டும். இதற்காக நாம் ஒரு சின்ன எல்லையை உருவாக்குகின்றோம். ஆனால் இதற்கும்மேல் அனைத்துலக வாசகர்கள் என்ற ஒரு பெரிய எல்லை இருக்கிறது. தமிழிலக்கியத்தில் அனைத்துலக வாசகர்களைக் குறி வைத்து எழுதக்கூடிய எழுத்து ஒன்றை முயற்சி செய்து பார்ப்போமே என்றுதான் ‘வார்ஸாவில் ஒரு கடவுள்’ என்கின்ற இந்த நாவலை நான் எழுதினேன்.
தீராநதி: இந்த நாவலின் உள்ளடக்கம் என்ன?
தமிழவன்: இதுவரை நான் பேசியது முழுக்க இந்நாவல் எழுதுவதற்கான உந்துதல் எப்படி ஏற்பட்டது என்பதை ஒட்டியது. இங்கிருந்து வார்ஸாவுக்கு ஆசியவியல் நிறுவனத்திற்கு தமிழ் போதிக்கும் ஆசிரியராக போய் சேர்ந்தேன் இல்லையா? அப்போது இரண்டு வகையான பாதிப்புகள் எனக்குள் ஏற்பட்டது. ஒன்று _ நான் கர்நாடகத்தில் முழுக்க தமிழ்ப் பேராசிரியனாக இருந்தவன். யாராவது என்ன பேராசிரியர் நீங்கள் என்று கேட்டால் தமிழ்ப்பேராசிரியர் என்று சொல்லமாட்டேன். ஏனென்றால் என்னை குறைவாக எடைபோட்டு விடுவார்களோ என்ற தாழ்வு மனப்பான்மை. இப்படி ஒரு தாழ்வு மனப்பான்மையோடு வார்ஸாவுக்குச் சென்றால் என்னை தமிழ்ப்பேராசிரியன் என்பதற்காகவே முதன்முதலாக பெருமைப்படுத்தியது அந்த வார்ஸா பல்கலைக்கழகம். அங்கிருந்த மாணவர்கள் என்னிடம் நான் தமிழ் படிக்கின்றேன் என்று பெருமிதத்தோடு சொன்ன போது குற்ற உணர்வில் குமைந்தேன். இது நாள் வரை ஒரு சிறு பிராந்திய மொழிக்குள் அகப்பட்டுக் கொண்டு முட்டாள் தனமாக தாழ்வு மனப்பான்மையில் உழன்று இருக்கிறோமே என்று சங்கடப்பட்டேன். அனைத்துலகப் புகழ் பெற்ற தமிழ்மொழிப் பேராசிரியன் நான் என்று பெருமைப்பட்டல்லவா இருக்க வேண்டும் என்று சிந்தித்தேன்.தமிழ் மொழி மற்ற இந்திய மொழிகளைப் போன்ற ஒரு மொழியல்ல; இந்தி என்ற செயற்கையான மொழி ஒன்றை செயற்கையாக பிரபலப்படுத்தி ஃபிரெஞ்ச், ஆங்கிலம், ரஷ்யன் போன்ற மொழிகளுக்கு இணையாக யுனஸ்கோ உள்ளிட்ட அளவில் மதிப்புக் கொடுத்து உலகம் முழுக்க உள்ள பல பல்கலைக்கழகங்களின் மூலம் இன்றைக்கு பரப்பப்படுகிறது. இதற்காக மத்திய அரசு கோடிக் கணக்கில் பணத்தைச் செலவிடுகிறது. என்னுடைய பேராசிரியர் பணி என்பது இந்தியத் தூதரகத்துடன்தான் இணைக்கப்பட்டிருந்தது. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்லும் இந்தியப் பிராந்திய மொழிப் பேராசிரியர்கள் எல்லோருக்கும் இந்தியத் தூதரகம்தான் மாதச் சம்பளத்தினை வழங்கும். உலகம் முழுக்க உள்ள 110 இந்தியத்தூதரகங்களில் இந்தி மொழியைப் பரப்புவதற்கென்றே கலாச்சார செயலாளர் என்ற பதவி ஒன்று இருக்கிறது. அந்தப் பதவியில் இருக்கின்ற ஐ.எஃப்.எஸ். அதிகாரிகளின் தலையாய வேலைகளில் ஒன்று இந்தி மொழியைப் பரப்புவது என்பது. இந்தி எதிர்ப்பு என்பதெல்லாம் இனித் தேவையில்லை. அதற்கான காலகட்டங்களெல்லாம் போய்விட்டது என்று பல அரசியல் தலைவர்கள் சமீபகாலமாக தமிழ் நாட்டில் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த நினைப்புகளெல்லாம் தவறானவை. இந்தி மொழி ராஜஸ்தான் என்ற மொழியைக் கொன்று கொண்டிருக்கிறது. ‘மைதிலி’ என்ற மொழியின் இருப்பையே இன்றைக்கு கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. ஆக இந்தி மொழி என்பது வருங்காலங்களில் பிராந்திய மொழிகளை பயங்கரமாக கொல்லப் போகிறது. அதனால் இந்தி எதிர்ப்பு என்பது ஒவ்வொரு மொழியிலும் இருந்தால் தான் அந்தந்த மொழிகளும், வட்டார கலாச்சாரங்களும் உயிர் பெற முடியும் என்பது எனக்குப் புரிய வந்தது. போலந்து நாட்டில் முப்பது ஆண்டுகளாக தமிழ் படிக்கும் பாரம்பர்யம் இருக்கிறது. இதனைத் தொடங்கி வைத்தவர் இராமசுந்தரம். இரண்டாம் உலகப்போரின் போது முதன்முதலாக குண்டு போடப்பட்ட நகரம் வார்ஸா நகரம். புதிய உலகத்தினுடைய ஒரு வரலாறு படைக்கப்பட்ட ஒரு இடத்தில் நான் இருக்கிறேன். வார்ஸா பல்கலைக்கழகத்தில் இருக்கின்ற புத்தி ஜீவிகள் எல்லோரும் கம்யூனிஸ வீழ்ச்சியை எப்படிப் பார்க்கிறார்கள் என்று தெரிந்து கொண்டபோது நான் அதிர்ந்துபோனேன். ஏனென்றால் நான் தென் இந்தியாவைப் பொறுத்தளவில் குறிப்பாக தமிழகத்தைப் பொறுத்தளவில் மார்க்ஸிய மரபின் வழியிலிருந்து பல விஷயங்களைப் புரிந்து கொண்டு உருவான ஒரு புத்திஜீவி. மார்க்ஸியத்தின் மூலமாகத்தான் உலகத்தைப் பார்க்கிறேன். நான் வார்ஸாவுக்குச் சென்றபோது மார்க்ஸியம் என்ன ஆயிற்று என்ற கேள்வியோடுதான் அங்கு சென்றேன்.முதன் முதலாக நான் வார்ஸா கடைத்தெருவிற்குத் சென்றபோது என் அருகாமையில் நின்ற காரைப் பார்த்து ஒருவன் ‘அதை பார்க்காதே. அது கம்யூனிஸ காலகட்டத்தினுடையது. நன்றாக இருக்காது. ஆகவே பார்க்காதே?!’ என்றான். அதே போல ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நான் காரில் சென்றபோது அந்த வண்டியின் டிரைவர் வலது பக்கம் கை காட்டி ‘‘அதோ தெரிகிறதே பார் ஒரு கட்டிடம். அது ஒரு காலத்தில் எங்களை பயங்கரமாக பயமுறுத்திய கட்டடம்’’ என்றான். என்ன கட்டடம் என்று நான் கேட்டதற்கு ‘‘கம்யூனிஸ கட்சியின் தலைமைச் செயலகம்’’ என்றான். அதே போல வார்ஸாவில் மிக பிரமாண்டமான ஒரு டவர் இருக்கிறது. அந்தப் பக்கம் செல்லும் எல்லோருமே அதைப் பார்த்து ‘‘இதை நாங்கள் வெறுக்கிறோம்’’ என்பார்கள். ஏன்? என்று நான் விசாரித்த போது ‘‘ஸ்டாலின் கொடுத்த கொடை இது. அந்த ஆள் எங்களுக்கு கொடை வழங்குகிறானாம்?!’’ என்று கிண்டல் செய்தார்கள். போர்டிங் ஸ்கூல்களில் நமது பிள்ளைகளை கொண்டு போய்ச் சேர்த்தால் நமது பிள்ளைகள் அந்தப் பள்ளியை வெறுப்பார்கள். அங்குள்ள ஃபாதர்கள் பிள்ளைகளை நடத்துகின்ற முறையைப் பார்த்து குழந்தைகள் அப்படி நினைக்கும். அது போல ஒரு ஆட்சி போலந்தில் நடந்து இருக்கிறது. பல்கலைக் கழகங்களிலெல்லாம் ஒற்றர்கள் இருப்பார்களாம். யாரை எப்போது கைது செய்வார்கள் என்பதே தெரியாதாம். இந்த மாதிரியான ஒரு கம்யூனிஸ ஆட்சிதான் ஐரோப்பாவில் இருந்திருக்கிறது. இது ஒரு வரலாற்று ரீதியிலான திருப்பம். இதற்கு பின்புலமாக அவர்களுக்கு மதத்தை நோக்கிய ஓர் ஈர்ப்பு இருந்திருக்கிறது. இதையெல்லாம் ‘வார்ஸாவில் ஒரு கடவுள்’ என்ற என்னுடைய நாவலுக்குள் கொண்டு வந்திருக்கிறேன். கிழக்கத்திய கலாச்சாரத்தை நோக்கி அவர்களுக்கு எப்படி ஓர் ஈர்ப்பு வருகிறது என்பதை நாவலில் சொல்லி இருக்கிறேன். வார்ஸா பல்கலைக்கழகத்தில் எனக்குச் சொல்லப்பட்ட பல நிஜக் கதைகளையெல்லாம் கற்பனையான பாத்திரங்களின் மூலமாக இங்கு கொண்டு வந்திருக்கிறேன்.இந்த நாவலை வடிவத்திலேயும், உள்ளடக்கத்திலேயும் முற்றிலும் புதிய வகையான வாசகர்களை மையமாக வைத்து எழுதி இருக்கிறேன். இதை மொழிபெயர்த்து போலீஷ்காரர்களுக்கு கொடுத்தால் இதை அவர்கள் எங்களுடைய நாவல் என்று சொல்ல வேண்டும். அதே நேரத்தில் நமது வாசகர்களின் வாசக ஈர்ப்பும் குறையக் கூடாது. இந்தப் புள்ளியை மையமாக வைத்து இதை நான் எழுதி இருக்கிறேன்.
தீராநதி: நீங்கள் குறிப்பிட்ட ஹாருக்கி மொரக்காமி என்ற எழுத்தாளர் ஜப்பானிய கலாச்சாரத்தில் பிறந்து வளர்ந்து தற்சமயம் அமெரிக்காவில் வாழ்ந்து வருபவர். அவர் அங்கிருந்துகொண்டு சர்வதேச பின்புலத்தோடு ஜப்பானிய கலாச்சாரத்தை முன்வைக்கிறார். ஆனால் இந்தியாவிலிருந்து அமெரிக்கா போன்ற பல நாடுகளுக்குக் குடியேறிய நமது எழுத்தாளர்கள் அங்கு சென்றும் இந்தியாவில் தாங்கள் கழித்த பால்ய பருவத்தையே ழிஷீstணீறீரீவீணீ மனநிலையில் நின்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழ் எழுத்துக்களில் ழிஷீstணீறீரீவீணீ வின் குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. தமிழ் எழுத்தாளர்கள் இந்த ழிஷீstணீறீரீவீணீ வை தாண்டவே முடியாதா? ஏன் இந்த விபத்து நிகழ்கிறது?தமிழவன்: இது ஒரு முக்கியமான கேள்வி. இந்தக் கேள்வியை இரண்டு விதங்களில் நான் பார்க்கிறேன். ஹாருக்கி மொரக்காமியை பொறுத்த அளவில் அவர் எழுதி சமீபத்தில் வெளிவந்திருக்கும் நாவல் வரை எல்லா எழுத்துக்களையும் நான் படித்துவிட்டேன். அதே போல போர்ஹெஸின் சகல எழுத்துக்களையும் நான் வாசித்துவிட்டேன். மொரக்காமி மதுவைக் கலந்து விற்பனை செய்கின்ற ஒரு சின்ன கடையை நடத்திக் கொண்டிருந்தவர். அவர் மெத்தப் படித்த படிப்பாளியோ அல்லது பெரிய எழுத்தாள குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவரோ இல்லை. திடீரென்றுதான் அவர் நாவல் எழுத ஆரம்பித்து உலகப் புகழ் பெற்றார். அதற்கு பிற்பாடு பெரிய செல்வந்தராகி அமெரிக்காவில் இப்போதுதான் குடியேறி இருக்கிறார் போலுள்ளது. அதற்கப்புறம்தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அவரது எழுத்துக்கள் அமெரிக்காவிலும் புகழடைந்தன.இதற்கு என்ன காரணம் என்றால் அவர் நவீன ஜப்பானைத்தான் எழுதுகிறார். சிறுவயதிலிருந்தே பழைய கடைகளில் அவர் வாசித்திருந்த அமெரிக்க நாவல்களின் தாக்கத்தினால் அவரது எழுத்துக்கள் இயல்பாகவே உலககளாவிய வடிவத்தில் வெளிப்பட்டன. ஐரோப்பிய கலாச்சாரத்தைப் போல ஒரு ஜப்பானிய கலாச்சாரம் இன்று வளர்ந்து கொண்டு வருகிறது பாருங்கள், அந்த நவீன வாழ்க்கையைத்தான் அவர் தனது எழுத்தின் மையமாக எடுத்துக் கொள்கிறார். மரபார்ந்த ஜப்பானிய கலாச்சாரத்தை எடுத்துக் கொள்ளும் மொரக்காமி அனைத்துலக விஷயங்களையும் தனது நாவல்களில் சேர்த்துக் கொள்கிறார்.அடுத்து நீங்கள் கேட்ட ழிஷீstணீறீரீவீணீ விஷயத்திற்கு வருவோம்?! வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்த இலங்கை எழுத்தாளர்களை மொத்தமாகச் சேர்த்து ‘ஈழத்தமிழ்க் கவிதைகள்’ என்ற முழுதொகுப்பை நான் கொண்டு வந்திருக்கிறேன். இதை கன்னடத்தில் மொழிபெயர்த்து கொண்டு வந்தேன். அவர்களின் போராட்டம் பிற மொழிக்காரர்களுக்கும் தெரியவர வேண்டும் என்பதற்காக இதைச் செய்தேன். அதில் எல்லா கவிதைகளும் இந்த ழிஷீstணீறீரீவீணீ தன்மையைச் சேர்ந்ததாகவே இருந்தன. நமது வீட்டை விட்டு ரொம்பக்காலம் வெளியில் சென்றவுடன் நம்மை இரண்டுவிதமான மனோபாவங்கள் விரட்டுகின்றன. ஒன்று_நமது சிறு பருவமும், நாம் பிறந்து வளர்ந்த ஊரின் நினைவுகளும். அதுதான் நம்மை ழிஷீstணீறீரீவீணீ விற்குள் இழுத்துக் கொண்டு வந்து தள்ளுகிறது.இரண்டு _ தாய் வழிபாடு என்கின்ற ஒரு மரபு நமக்கு இருக்கிறது இல்லையா அதுதான் நம்மை தொடர்ந்து ழிஷீstணீறீரீவீணீவிற்குள் ஆட்படுத்துகிறது. தாய்வழிபாடு என்று வேறு தேசத்து எழுத்தாளர்களும் எழுதினாலும் அவர்கள் ழிஷீstணீறீரீவீணீ என்கின்ற அம்சத்தில் அப்படியே விழுந்துவிடுவதில்லை. அதை தாண்டிச் செல்கிறார்கள். இது தமிழ் மற்றும் இந்திய எழுத்தாளர்களுக்குள் நடப்பதில்லை. நமது எழுத்துக்கள் வட்டார எழுத்துக்களாக சுருங்கிப் போவதற்கான காரணம் இதுதான். இது ஒரு கலாச்சாரப் பிரச்னை என்று எனக்குத் தோன்றுகிறது. என்னைப் பொறுத்தளவில் ஒரு எல்லைக்கு மேல் சென்று என்ன சொல்வேன் என்றால், நாவல் இலக்கியம் என்பது மேற்கைப் பார்த்து இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் வந்தது. அப்படி உருவான நாவல்கள் இந்தியத் தன்மைக்கு ஏற்ப மறு வடிவம் கொண்டது. பாருங்கள் அங்கேயே பிரச்னை ஆரம்பித்துவிட்டது.நமது இந்தியத் தன்மைக்கு ஏற்ப ஜோக்ஸ் அது இது என்று எல்லாவற்றையும் சேர்த்து நம் வாசகர்களைக் கவரும்படியான ஒரு வடிவத்தில் நாவலை முதன்முதலில் கொடுத்தார்கள். ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ நாவலில் இதற்கான எல்லா அம்சங்களின் வேர்களையும் நீங்கள் தேடிப்பிடிக்கலாம். நமது வாசகர்களைக் கவரும்படியாக இருக்க வேண்டுமென்றால் நமது பிரச்னைகளைக் கொண்டு வர வேண்டும் என்று முடிவெடுத்து நாவலைச் செய்தார்கள். நமது பிரச்னைகளை எழுதும் போது நாவல் வடிவத்தில் ஏதோ ஒரு அனைத்துலக தன்மை குறைபட்டுப் போய்விட்டது. ஆக, நாம் எழுதுவது எல்லாம் நம் நாவல்களே ஒழிய அனைத்துலக நாவல்கள் அல்ல; ஒரு விதத்தில் நாவல் அல்லாத நாவல்களை நாம் எழுதிக் கொண்டிருக்கிறோமா? என்ற கேள்வியும் இதற்குள் வருகிறது.
தீராநதி : அனைத்துலக நாவலுக்கான தன்மையை நோக்கி நாம் நகர்ந்து செல்ல வேண்டிய கட்டாயம் இன்றைக்கு இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அந்த மாதிரியான அம்சம் என்பது ஆரோக்கியமானதொன்று. ஆனால் அலெக்ஸ் ஹேலி, சினுவா ஆச்சிப்பி போன்றவர்கள் அவர்களின் மரபார்ந்த விஷயங்களை, கலாச்சாரங்களை, பிரச்னைகளை ஒரு நாவலாகச் சொல்லும் போதுகூட அதில் அனைத்துலக வாசிப்புத்தன்மை என்பது இருக்கிறது. இந்தச் சிக்கலை எப்படிப் பார்க்கிறீர்கள்?
தமிழவன் : இந்தச் சிக்கலுக்கு முக்கியமான காரணம் தமிழ் நாவல்களுக்கு ‘எடிட்டிங்’ என்பது இல்லாமல் இருப்பதுதான் என்று நினைக்கிறேன். இதுவரை எந்தப் பதிப்பகமும் ஒரு நாவலை ‘எடிட்டிங்’ செய்து முறையாக வெளியிட்டதாக தகவலே இல்லை. ‘‘லிட்ரரி எடிட்டிங்’’ என்பது நமது கலாச்சாரத்திலேயே இல்லை. வெளிநாடுகளில் உள்ள பதிப்பகங்கள் ஒரு நாவலை ‘எடிட்டிங்’ செய்து வெளியிடுவதில் அக்கறை காட்டுகின்றன. அப்படி எடிட்டிங் செய்யக் கொடுக்கும் போது எடிட்டர் என்பவர் இதுவெல்லாம் அனைத்துலக வாசகனுக்கு வேண்டாதது என்று முடிவு செய்வார். இந்த மாதிரி நாமும் நமது நாவலை ‘இன்டர்நேஷ்னல் எடிட்டிங்’கிற்கு உட்படுத்தினாலே அது நாவலுக்கு இன்னொரு வடிவத்தைக் கொடுக்கும். சினுவா ஆச்சிப்பியின் நாவலில் செய்திருப்பது இதைத்தான். ஹாருக்கி மொரக்காமியின் பெரிய நாவலொன்று சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. அந்த நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டு வரும்போது பாதிக்குமேல் வெட்டித் தள்ளிவிட்டார்கள். ஜெர்மன் மொழியில் அது மொழி பெயர்க்கப்பட்டு வெளியான போது தொலைக்காட்சிகளில் பெரிய விவாதத்தைக் கிளப்பியது. அப்போது அவர்கள் சொன்னார்கள் ‘‘இது அசலான ஜப்பானிய நாவல் அல்ல; நமக்காக மறு உருவாக்கம் செய்யப்பட்ட நாவல்’’ என்று. தமிழ் நாவலில் ஏன் ‘எடிட்டிங்’ என்பதே இல்லை என்றால் இவை எல்லாம் தமிழனுக்காக எழுதப்படுகின்ற நாவல்கள். மனதிற்குள் நான் ராஜராஜசோழன் என்றோ, பாண்டியன் என்றோ, சங்ககாலத்துப் பெருமை இது என்றோ பேசிக் கொண்டிருக்கலாம். ஆனால் இவை உங்களுக்குப் பயன்படாது. இந்தியாவிற்குள் நாம் இருக்கின்றவரை நாம் அடிமைகள்தான். நமது அடிமைத் தனத்தைப் புரிந்து கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும்.சமீபத்தில் கலைஞர் ‘ராமர் பாலம்’ பிரச்னை தொடர்பாக உண்ணாவிரதம் இருந்தபோது அனைத்திந்திய மீடியாக்கள் முழுவதும் கலைஞருக்கு எதிரான கருத்துக்கள் வெளியிட்டன. ஏதோ தமிழ்நாட்டில் பயங்கரமான பிரச்னை ஒன்று நடந்துவிட்டதைப் போல சித்திரித்தார்கள். இதற்கு என்ன காரணம் என்றால் தமிழர்கள் தங்களுடைய அனைத்துலக அடையாளத்தை மறு உருவாக்கம் செய்து பார்க்கின்ற ஓர் அறிவுப்பூர்வமான அரசியல் இங்கு வராமல் போனதால்தான். தமிழகத்தில் உள்ள எந்த ஒரு அரசியல் கட்சியின் பிரதிநிதிகளும் மனிதவள மேம்பாட்டு துறைக்கான அமைச்சர் பதவியைக் கேட்டுப் பெற மாட்டார்கள். கலாச்சாரத் துறை அமைச்சராக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட மாட்டார்கள். அதே போல என்.பி.டி.னுடைய தலைவராக ஒரு தமிழன் இருக்க வேண்டும் என்று ஒருவர் கூட ஆசைப்பட்டதில்லை. கன்னட மொழிக்காரர்கள் அந்தத் துறை தனக்குத்தான் வேண்டுமென்று சண்டை போட்டு வாங்குகிறார்கள். சாகித்ய அகாடமியின் தலைவராக வரவேண்டும் என்று இந்தி மொழிக்காரனும், பெங்காலி மொழிக்காரனும், கன்னட மொழிக்காரனும்தான் சண்டைபோட்டுக் கொண்டு இருக்கிறானே ஒழிய, தமிழனுக்கு அந்த மாதிரி ஒரு பதவி இருக்கிறதென்றே தெரியாது.கலாச்சாரம் என்பது உங்களுடைய வரலாற்றை எப்படித் தீர்மானிக்கிறது என்பதை கட்டாயம் நீங்கள் புரிந்து கொண்டே ஆக வேண்டும். இன்றைக்கு படு வேகமாக மாறிவரும் நவநாகரிகமான விஷயமாகட்டும் அல்லது வேறு எந்தவிதமான விஷயமாகட்டும் அதைப் புரிந்து கொள்வதற்கு கலாச்சார புரிதல் என்பது மிக மிக முக்கியமானது. ஒரு மத்திய மந்திரியாக இருப்பவரைவிட நாவல் எழுதுகின்ற ஒருவர் தமிழனுக்கு முக்கியமானவர் என்பேன். அரசியல்வாதி என்பவர் இரண்டாம் பட்சம்தான். கலாச்சாரவாதி என்பவர் பெரிய ஆளுமை. ஆனால் தமிழ்நாட்டில் குட்டி நடிகர்களும் நடிகைகளும்தான் கலாச்சாரவாதிகளாக முன் நிறுத்தப்படுகிறார்கள். இதுவெல்லாம் துக்கமான விஷயமில்லாமல் வேறென்ன? நாவல் என்கின்ற ஒன்றை எடுத்துக் கொண்டால் அரசியலுக்குப் போகவேண்டும். வரலாற்றுக்குப் போகவேண்டும். அரசியலும் வரலாறும் அரசியல்வாதியிடம் இல்லை நாவலாசிரியனிடம் தான் உள்ளன. அதனால்தான் சொல்கிறேன், அரசியல்வாதியை விட நாவலாசிரியன் முக்கியமானவன். இப்படியெல்லாம் ஒரு விவாதத்தை நாம் முன்னெடுத்துக் கொண்டுபோக வேண்டும்.
தீராநதி: இலக்கியம் என்பது கலாச்சாரத்தின் செய்தியாகவும் அதே சமயம் அதனுடைய கூச்சலாகவும் இருக்கிறது. அது கலாச்சாரத்தின் தலைநகரமாகவும் அதே சமயம் அது சீர்குலைவுக்கான ஆற்றலாகவும் கூட இருக்கிறது. அது வாசிப்பைக் கோருவதும், அர்த்தம் தொடர்பான பிரச்னைகளில் வாசகர்களை ஈடுபடுத்துவதுமான ஒரு எழுத்துமுறையாகவே உள்ளது என்று ஜானதன் கல்லர் குறிப்பிடுகிறார். உங்களின் தத்துவ பின்புலத்திலிருந்து ஒரு படைப்புக்கு கலாச்சாரம் முக்கியமானதா? அழகியல் முக்கியமானதா? என்றால் நீங்கள் இதற்கு முன்னால் கலாச்சாரம்தான் முக்கியமானது என்ற முடிவை எட்டி இருக்கிறீர்கள்! அழகியலை விட கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தை எப்படி முக்கியமானதாக நீங்கள் நிறுவுகிறீர்கள் என்று சொல்ல முடியுமா?
தமிழவன் : ரொம்ப ஆழமான ஒரு பிரச்னை இது. இதை நீங்கள் சரியாக கேட்டிருக்கிறீர்கள். கலாச்சாரத்திற்கும் அரசியலுக்கும் இடையில் ஓர் இடைவெளி இருந்தாலும், ஒரு சில குறிப்பிட்ட கட்டங்களில் இரண்டிற்கும் முரண்பாடு இருந்தாலும் இரண்டிற்கும் ஒரு தொடர்பு என்பது எப்போதும் உண்டு. உதாரணமாக ஒன்றைச் சொல்கிறேன். தி.மு.க. வின் காலகட்டத்தில்தான் கலாச்சாரத்திற்கும் அழகியலுக்குமான ஒரு தொடர்பு இல்லாமல் போனது. தி.மு.க.வின் அரசியல் காலகட்டத்தில் இந்த இரண்டிற்குமான தொடர்பு இல்லாமல் போனதற்கான வரலாற்றுக் காரணம் என்னவென்று பார்த்தால் இந்த அழகியலை முன்வைத்தவர்கள் பிராமணர்களாக இருந்தார்கள் என்பதுதான். மணிக்கொடி, எழுத்து, கசடதபற போன்ற பத்திரிகைகள் அழகியலை வலுவாக முன்வைத்தன. தி.மு.க.வைப் போலவே இடதுசாரிகளும் அழகியலுக்கு எதிரானவராக தங்களை முன் நிறுத்திக் கொண்டார்கள். இந்த காலகட்டத்தில்தான். க.நா.சு.வை நான் ஆதரிக்கிறேன். நான் க.நா.சு.வை ஆதரித்தவுடன் தி.மு.க.வினரும், இடதுசாரிகளும் அவரை ஒரு பிராமணர் என்று சொல்லி ஒரு போர்வையைப் போட்டு அமுக்கப் பார்த்தார்கள். தமிழ்க் கலாச்சாரத்திற்குள் வரலாற்று ரீதியாக தொடர்ந்து நீங்கள் ஒரு விஷயத்தை கவனித்துப் பார்த்தீர்களென்றால் அழகியலை எல்லோருமே கொலை செய்திருக்கிறார்கள். ‘எழுத்தில்’ தொடங்கிய இந்த சிறுபத்திரிகை மரபுதான் தொடர்ந்து அழகியல் பக்கம் நின்று கொண்டிருந்தது. சென்னையில் முற்போக்கு எழுத்தாளர்களின் தேர்தல் நடந்தபோது, க.நா.சு. அவர்கள் எதிரி அணியில் நின்றார் என்று சொல்லி அவரை ஒரு பாஸிஸ்ட்டாக சித்திரித்தார்கள். அழகியல்வாதிகள் எல்லாம் இடதுசாரிகளுக்கு எதிரானவர்கள் என்ற ஒரு நிலைப்பாட்டை க.நா.சு.வே எடுத்திருக்கிறார். எனவே இந்த விஷயத்தில் க.நா.சு.வும் விமர்சிக்கப்பட வேண்டியவர்தான் என்பதில் ஐயமில்லை. வரலாற்றின் காலகட்டத்தில் க.நா.சு எதிரிகளின் பக்கமாக சாய்ந்துவிட்டார். ஆனால் கடைசி கட்டத்தில் இந்த நிலைப்பாட்டை மாற்றினார்ஆனால் க.நா.சு.வின் இன்னொரு முகமான அழகியல் முகத்தை தமிழர்கள் பாதுகாக்க வேண்டும். அதற்காக நாம் அவருக்கு விழா எடுக்க வேண்டும். இதை நான் ரொம்ப முக்கியமான செய்தியாகச் சொல்ல விரும்புகிறேன். 1980_களில் வெளியான ‘படிகள்’ போன்ற பத்திரிகைகளும் வேறு சில நண்பர்களும் அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தோம். ஆக பிராமணர்களின் கூட்டத்திலிருந்து அழகியலை நாங்கள் மீட்டு வெளியில் கொண்டு வந்தோம். இதற்கு பிராமணர்களின் மத்தியிலும் பல எதிர்ப்புகள் இருந்தன.அழகியல் என்பது பிராமணர்களுக்கு உரியது. அதனால் அதை நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்ற பேச்சுகள் எல்லாம் அர்த்தமற்றது. அப்படி யாருக்கும் எழுதி வைக்கப்பட்ட ஒன்றல்ல அழகியல் என்பது. அழகியலையும் கலாச்சாரத்தையும் இணைக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. நீங்கள் மேற்கோள் காட்டிய ஜானதன் கல்லர் விஷயத்திற்குள் வருவோம். அழகியலுக்கும் கலாச்சாரத்திற்கும் சில வேளைகளில் முரண்பாடு வரும். ஆனால் இரண்டுமே இணைந்து போகக்கூடிய கூறுகள் இன்றைக்கு வந்திருக்கின்றன. பின்நவீனத்துவம் என்று சொல்லக் கூடிய புதிய கலாச்சாரம் இன்றைக்கு வளர்ந்து வந்திருக்கிறது. குறிப்பாக இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் கலாச்சாரமும் அழகியலும் ஒன்றாக இணைகின்றன. இணைந்தால்தான் சரியான ஓர் உலகப்பார்வை உங்களுக்குக் கிடைக்கும்.
தீராநதி : அப்போது நீங்கள் உங்களின் பழைய நிலைப்பாட்டிலிருந்து மாறி வந்து இருக்கிறீர்கள் இல்லையா?
தமிழவன் : உங்களின் பார்வை சரியானதுதான். ஆரம்பகட்டத்தில் நான் வெறும் கலாச்சாரத்தின் மட்டத்திலேயே நின்றால் போதும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். கலாச்சாரத்திற்குள் அழகியல் இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன் ஏனென்றால் நானும் எனது கருத்துக்களை இடதுசாரிகளிடமிருந்து கற்றுக் கொண்டவன் என்பதால் இந்த நிலைப்பாட்டைக் கொண்டிருந்தேன்.
தீராநதி : நாம் இதற்கு முன் நாவலைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம். ரொலாண்ட் பார்த் தனது ‘பிரதி தரும் இன்பம் (ஜிலீமீ ஜீறீமீணீsuக்ஷீமீ ஷீயீ tலீமீ tமீஜ்t) என்ற கட்டுரையில் கற்பனையில் உருவாக்கப்பட்ட கதா பாத்திரங்களுக்காக ஆசிரியன் கண்ணீர் வடிப்பதும், அதைப் படித்துவிட்டு வாசகர்களும் கண் கலங்குவதும் ஒருவித தற்காலிக மனச்சிதைவு நோய் என்கிறார். நமது மொழியில் வருகின்ற பல நாவல்கள் இந்தத் தன்மையோடுதானே வெளிவருகின்றன?
தமிழவன் : இந்தக் கேள்வியும் ஒரு ஆழமான விஷயத்தை எழுப்பக்கூடிய ஒன்றுதான். இலக்கியத்திற்கு என்ன பயன்பாடு இருக்கிறது? இலக்கியத்திற்கு நவீன வாழ்க்கையில் என்ன இடம் இருக்கிறது? இப்படி பிரச்னைகள் சார்ந்த விஷயம் இது. உங்களை ஏதோ ஆழ்ந்த கனவுக்குள்ளாக ஆழ்த்துவது, ஏதோ ஒரு மாய இன்பத்தை வழங்குவது என்று இலக்கியத்திற்கு ஒரு தன்மை இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் பின்நவீனத்துவத்திற்கு முக்கிய இடமிருக்கிறது என்று ஏன் சொல்கிறோம் என்றால் இந்தக் குறைகளையெல்லாம் பின் நவீனத்துவம் தான் கண்டுபிடித்திருக்கிறது. ‘சுய பிரதிபலிப்பு’ என்ற ஒரு கருத்தாக்கம் பின் நவீனத்துவத்தில் இப்போது வந்திருக்கிறது. அது என்னவென்றால் நீங்கள் நாவல் எழுதும்போது ‘இது நாவல்’ என்று சொல்லிக் கொண்டே போக வேண்டும். எம்.ஜி.ஆரின் படத்தைப் பார்த்துவிட்டு அவருக்கு ஓÊட்டுப்போடப் போகிற மனோபாவம்தான் இலக்கியத்திற்குள்ளும் நடக்கிறது.இலக்கியத்திற்குள் இருக்கின்ற அழுகுணித் தன்மையை எப்போதுமே பரிசோதிக்கவும் அதிலிருந்து மனிதர்களை பாது காக்கவும் கூடியதுதான் இலக்கிய விமர்சனம். அந்தப் பாதுகாப்பும் விமர்சனமும் நமக்குத் தேவையாகிறது. இந்த மாதிரியான கும்பல் இலக்கியத்திற்கும் நல்ல இலக்கியத்திற்குமான வேறுபாட்டை க.நா.சு.தான் முதலில் சொன்னார். அதற்காக அவர் ‘‘நான் சொல்கின்ற பட்டியலை மட்டுமே படி’’ என்றார். அப்படி ஒரு பட்டியலை அவர் வெளியிட்டதுகூட நல்ல காரியம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்த அளவில் நீங்கள் எழுப்பிய இந்தப் பிரச்னையை ரொம்ப ஆழமான ஆராய்ச்சிக்கு உட்படுத்தி இருக்க வேண்டும். ஏனென்றால் தமிழர்கள் எல்லோரும் உணர்ச்சி மயமானவர்கள் என்று அரசியல்வாதிகளிலிருந்து சாதாரண ஆட்கள் முதற்கொண்டு சொல்கிறார்கள். உணர்ச்சிவசமான இந்த மனிதக் கூட்டத்திற்கு இந்த விவாதம் ரொம்ப முக்கியமானதாக நாம் எடுத்துக் கொண்டு சர்ச்சித்து இருக்க வேண்டும். ஆழமாக விவாதித்திருக்க வேண்டும். எனவே ‘பிரதி தரும் இந்த இன்பம்’ இருக்கிறதல்லவா இது பல கொடூரங்களுக்கு நம்மை கொண்டு செல்லும். ரொலாண்ட் பார்த் சொல்வது உண்மைதான். என்னுடைய நாவல்களில் வாசகனை நோக்கி கேட்கக்கூடிய ஒரு குரலைக் கொண்டு வருவதை முக்கியமான விஷயமாக முயற்சித்திருக்கிறேன்.
தீராநதி : உங்களுடைய பிரதிகளை வாசிக்கும் போது ஒரு வாசகன் என்பவன் இவ்வளவு முயற்சிகளை இவர் மேற்கொண்டிருக்கிறார் என்ற மைய இழையைப் பிடிக்க முடியும். இதை கட்டமைப்பதற்கான சகல வேலைகளையும் நுட்பமாகச் செய்திருக்கிறீர்கள். ‘‘ஜி.கே. எழுதிய மர்ம நாவலில்’ பௌத்தம் பற்றிய எதிர் கருத்துக்களை இலங்கைத் தமிழன்தான் எழுதுவதாக சொல்லப்படுகிறது. மைய இழையாக, உட்பொருளாக, ஆழமாக நீங்கள் வைத்த பிரதியை அதே ஆழத்தோடு கூடிய ஒரு வாசிப்பு இங்கு நடந்திருக்கிறதா?
தமிழவன் : ஒரு வகையில் தோல்வியுற்ற விமர்சகன் என்று என்னை நான் சொல்லிக்கொள்கிறேன். பல காலங்கள் கழித்து இப்போதுதான் தமிழ்த்துறைத் தலைவராக வந்திருக்கிறேன். நான் என்றைக்கும் தமிழ்த்துறை பக்கம் தலைகாட்டியவனே கிடையாது. என்னுடன் பணிபுரிகின்றவர்கள், நண்பர்கள் யாருமே என்னுடைய எழுத்தைப் படித்தவர்கள் கிடையாது. அனந்தமூர்த்தி போன்றவர்கள் என்னிடம் ‘‘உங்களுடைய எழுத்தையெல்லாம் தமிழர்கள் புரிந்து கொள்கிறார்களா? ஏதாவது அங்கீகரிக்கிறார்களா?’’ என்று கேட்பார்கள். அதற்கு, அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை என்று பதில் சொல்லி இருக்கிறேன். இந்த மாதிரியான புதிய குரல்களை ஏதோ ஒரு வகையில் இவர்கள் அங்கீகரிக்கவில்லை. நானும் சங்க இலக்கியத்தைப் பற்றி எழுதி இருக்கிறேன். நச்சினார்க்கினியரைப் பற்றி எழுதி இருக்கிறேன். ஆனால் அந்த எழுத்தில் ஒரு மாறுபட்ட தன்மை இருக்கிறது. யாருமே அதை எடுத்துக் கொண்டு பிரச்னைக்கு உட்படுத்தி அறிவுபூர்வமாக விவாதித்ததில்லை. ஒரு சிலர் நான் ‘திருப்பாவை’ பற்றி எழுதியதைப் படித்துவிட்டு ‘இவன் அபாயகரமான மனிதன்’ என்று சங்கேதமாக பேசி அக்கருத்தைப் பரப்பி இருக்கிறார்கள். வைஷ்ணவ மதத்தைச் சார்ந்தவர்கள் இந்தக் காரியத்தைச் செய்தார்கள்.
தீராநதி : அமைப்பியல் என்ற தத்துவ பின்புலத்திலிருந்து தொடங்கிய உங்களின் சிந்தனை படிப்படியாக வளர்ந்து இன்றைக்கு பின் நவீனத்துவம் வரைக்கும் வந்து சேர்ந்திருக்கிறது. தமிழவன் என்றாலே ஞானக் கூத்தன் கவிதைகளை முதலில் விமர்சித்து பிறகு அந்நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து ஆதரித்து எழுதியதுதான் நினைவுக்கு வருகிறது. தற்கால தமிழ்க் கவிதைகளின் தொடர் வாசகனாகவும், விமர்சகனாகவும் இருந்து வருகிறீர்கள். பின்நவீனத்துவ கோட்பாடு கவிதைகளை நிராகரிக்கின்றது. கவிதை என்பது குறியீடுகளாலும், ஏகப்பட்ட அர்த்தங்களின் சுமையாலும் ஆனது. மரபார்ந்த கவிதைகள் வித்தியாசமான மொழிப் பிரயோகத்தால் ஆனவை என்றால் நவீன கவிதையோ மொழியை வன்முறையாக்கிக் கொண்டுதான் தோன்றி இயங்கிக் கொண்டிருக்கிறது என்று ரொலாண்ட் பார்த் சொல்கிறார். கூடவே பொதுப்படையாகப் பார்த்தால் கவிதை என்பது பொருட்களின் அந்நியப்படுத்தப்படாத அர்த்தங்களைத் தேடிக் கொண்டிருப்பதே என்றும் எழுதுகிறார். நீங்கள் பின் நவீன கருத்தாக்கத்தைக் கொண்டு கவிதை என்ற வடிவத்தை நிராகரிக்கிறீர்களா? ஆதரிக்கிறீர்களா?
தமிழவன் : சமீப காலமாக கவிதைகளைப் பற்றி எழுதுவதை தவிர்த்துக் கொண்டு வருகிறேன். புதுக் கவிதைகள் தோன்றிய காலத்திலிருந்து தொடர்ந்து கவனித்து வருபவன் என்ற வகையில் எங்கு புதுக் கவிதைகள் பற்றி எழுதுகின்ற வாய்ப்புக் கிடைத்தாலும் உடனடியாக அதைப் பயன்படுத்தி எழுதிக் கொண்டேதான் இருந்திருக்கிறேன். வார்ஸாவுக்குச் சென்ற நான்கு ஆண்டுகளில் தமிழில் நடந்திருக்கும் பெரிய மாற்றத்தை நான் புரிந்துகொள்ள முடியாமல் போய்விட்டேன். சமீப காலமாக, குறிப்பாக நான்கு ஆண்டுகளாக பெண்கள் தமிழ்க் கவிதைகளில் செய்திருக்கின்ற மாற்றத்தை முக்கியமானதொன்றாக நான் பார்க்கிறேன். ஆழமாக இதைப் புரிந்து கொண்டு இவற்றைப் பற்றி நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டும்.
தீராநதி : ரொலாண்ட் பார்த் சொல்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கிறேன்?
தமிழவன்: தமிழில் இதுவரை இல்லாத ஒரு பெரிய மாற்றம் கவிதைகளில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் பல மொழிகளிள் யாப்பைத் துறந்த சமயத்திலும்கூட விடாமல் பிடித்துக் கொண்டிருந்த தமிழ் மொழியில் இந்த மாற்றம் அதிரடியானது. புதுக்கவிதைக்குள் ஏதோ ஒரு ரகசியம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ரொலாண்ட் பார்த்துக்கு வேண்டுமென்றால் ஃபிரெஞ்ச் மொழிகளில் நடக்கின்ற ரகசியங்களை பிடிக்க முடியாமல் போய் இருக்கலாம். ஃபிரெஞ்ச்சை விட ஆழ்ந்த பாரம்பரியம் கொண்ட தமிழ் மொழியில் பரிச்சயம் உள்ள எனக்கு இப்போது தமிழில் நடந்து கொண்டிருக்கிறதில் ஏதோ ஒரு தொடர்ச்சி இருக்கிறது என்றே படுகிறது. 1980களில் இருந்த இலக்கிய விமர்சனத்தை இன்றைக்கு எல்லோரும் அழித்து விட்டார்கள். அன்று அடிதடி, தகராறுகள் எல்லாம் நடக்கும். ஆனால் அதோடு கூடிய தத்துவ விவாதமும் இருந்துகொண்டேயும் இருக்கும். சண்டை போட்டுதான் பல விஷயத்தை நாம் கற்றுக் கொள்வோம். இதைத்தான் சமீபத்தில் இப்போது எம்.எல்.ஏ.யாக இருக்கும் ரவிக்குமாரிடம் பேசிக் கொண்டிருந்த போது வலியுறுத்தினார்.
தீராநதி : தமிழில் சமகாலமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் கைனோகிரிடிசிஸம் (ரீஹ்ஸீஷீநீக்ஷீவீtவீநீவீsனீ) என்பது செழுமையாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். (கைனோ கிரிடிசிஸம் என்பது பெண் எழுத்தாளர்களிடத்திலும் பெண்களுடைய அனுபவத்தைச் சித்திரிப்பதிலும் அக்கறை கொண்ட பெண்ணிய விமர்சனமாகும்) ஆனால் இங்கு அந்தப் பெயர்களில் பெண்ணிய எழுத்துக்கள் அணுகப்படுவதில்லை...
தமிழவன் : கைனோகிரிடிசிஸம் என்பதெல்லாம் இங்கே வராது. அமைப்பியலை நாங்கள் இங்கு கொண்டு வந்தபோது கூட தமிழுக்கு ஏற்ற தன்மையில் அது வலியுறுத்தப்பட்டது. பின் அமைப்பியலுக்கும் இது பொருந்தும். தமிழ் மக்களுக்கு வாழ்க்கை என்பது முக்கியம். வாழ்க்கைக்கான சில விஷயங்கள் கலாச்சாரத்தில் இருக்கிறது. அதோடு இணைத்துதான் நம்முடைய சிந்தனையும் போக வேண்டும். அதற்காகத்தான் தொல்காப்பியத்திற்கு நான் தேடிப் போனேன். அமைப்பியலை முன் வைத்த மேலை நாட்டவர்களுக்கும் நமது தொல்காப்பியத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? அமைப்பியலும் மொழியியலிலிருந்து வந்தது என்று சொல்கிறார்கள். நமக்கும் மொழியியல் பற்றிய ஆழ்ந்த பார்வைகள் தொல்காப்பியத்தில் இருக்கிறது. அவர்களைவிட பழைமையான சிந்தனை நமது தொல்காப்பியத்தில் இருக்கிறதே! அதையெல்லாம் தெரியாமல் உடனே அவர்கள் சொல்வது போல் அதே பாதையில் செல்லக் கூடாது. இல்லையென்றால் நமது பார்வை போலித்தனமாக மாறிவிடும். ஆக, மேற்கத்திய பெண்ணியவாதிகளின் அதே தன்மைகள் இங்கேயும் வேண்டும் என்றெல்லாம் சொல்ல முடியாது. தமிழ்த் தன்மை கொண்ட பெண்ணியக் கவிதைகள்தான் இங்கே உருவாகும்.
தீராநதி : என்னுடைய கேள்வியை முடிப்பதற்குள் முன்னதாகவே பேச ஆரம்பித்துவிட்டீர்கள். சரி, அதுவும் ஒருவிதத்தில் நன்மைதான். பெண்ணியக் கோட்பாடு இருவிதமான இழைகளை உள்ளடக்கியுள்ளது. ஒன்று அது உளப் பகுப்பாய்வை அதனுடைய உறுதியான பாலியல் அடிப்படைகளுக்காகப் புறக்கணிக்கிறது. மற்றது ஜாக்குலீன் ரோஸ் (யிணீஹீuமீறீவீஸீமீ ஸிஷீமீs), மேரி யெ கொபஸ் (விணீக்ஷீஹ் யிஷீநீஷீதீus), மற்றும் காஜா சில்வர்மன் (ரிணீழீணீ ஷிவீறீஸ்மீக்ஷீனீணீஸீ) போன்ற பெண்ணிய அறிஞர்கள் உளப்பகுப்பாய்வைச் சிறப்புற மறுவெளிப்பாடு செய்திருப்பதை இணைத்துக் கொள்கிறது. ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை உளப்பகுப்பாய்வு நெறிமுறைகளை இயல்பாக்கிக் கொள்வதில் உள்ள சிக்கல்களைப் புரிந்து கொள்கிறார்கள். அந்த அம்சத்தைக் கொண்டுள்ள உளப்பகுப்பாய்வின் மூலமே பெண்களின் இக்கட்டை ஒருவரால் புரிந்து கொள்ளவும் மறு கற்பனை செய்து பார்க்கவும் நம்பிக்கை கொள்ளவும் முடியும். இலக்கியப் பெரும் திரட்டை (லிவீtமீக்ஷீணீக்ஷீஹ் நீணீஸீஷீஸீ) விரிவாக்கியதன் மூலம் புதிய விவாதப் பொருள்களின் பரப்பு ஒன்றை அறிமுகப்படுத்தியதன் மூலம் பெண்ணியம் அதனுடைய பல்வகைத் திட்டவரைவுகளினூடே அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் இலக்கியக் கல்வியில் முக்கியமான மாற்றத்தைத் தோற்றுவித்துள்ளது. ஆனால் இங்கு பெண்ணியம் சார்ந்த கவிதைகள் வெளியான அளவிற்கு அதன் தத்துவங்கள் எழுதப்படவில்லை. அறிமுகப்படுத்தப்படவில்லை. தத்துவப் பார்வை இல்லாததனால் இவை மலினமான அணுகுமுறையோடு அலசப்படுகின்றனவா? அதைப் பற்றி கேட்கிறேன்?
தமிழவன் : நீங்கள் சொல்வது சரியானது. ‘உடல் அரசியல்’ என்ற சொல் இருக்கிறதில்லையா அதை ஆங்கிலத்தில் ‘பாடி பாலிடிக்ஸ்’ என்று குறிப்பிடுகிறார்கள். அந்த ஆங்கில வார்த்தையைத்தான் இவர்கள் தங்களுக்குத் தெரிந்த பொருளில் எடுத்து மொழிபெயர்த்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள். மேற்கத்திய தத்துவப் பரப்பில் நீங்கள் குறிப்பிட்டுச் சொல்லும் பேர்கள் எந்தளவுக்கு முக்கியமானவை என்பது எனக்குத் தெரியவில்லை. லுசி ஈரிகரே என்பவரின் புத்தகத்தை வார்ஸாவில் நான் இருந்த போது வாசித்தேன். அவர் கிழக்கு மற்றும் மேற்கு கலாச்சாரத்தைப் பற்றி அதில் எழுதி இருக்கிறார். அவர் ஒரு உளப்பகுப்பாய்வாளர். தீவிரமான யோகாவில் ஈடுபட்டு, அதில் பெண்களுக்கு ஏற்படும் மனோநிலை என்ன? அதனால் உண்டாகும் பிரச்னைகள் என்ன? என்று ஆராய்ந்து பெண்ணிய நோக்கில் ஒரு புதுப் புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார். பெண்ணியத்தில் கிழக்கத்திய சமூகங்கள் எப்படி யோக நிலையில் ஈடுபாடு கொள்கிறார்கள் என்று நுட்பமாக ஆராய்ந்திருக்கிறார்.ஆண் பெண் உறவில் ஏற்படும் அழுத்தத்தை நமது நாட்டில் சமணம் வந்த பிற்பாடு அடக்கி இருக்கிறது. இவர் அதைப் பற்றி தரவாக வைத்து ஆராய்ந்து அந்த அழுத்தத்தை முழுவதுமாக வெளியேற்றிவிட வேண்டும் என்கிறார். மனித மனநிலை நாகரிகத்தினால் இறுக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவத்திலும் கூட அது இறுக்கப்பட்டிருக்கிறது. சிறையில் அடைப்பதைப்போல மனித உணர்வுகள் கட்டுப்படுத்தப்பட்டு கிடக்கிறது. அந்தக் கட்டுப்பாட்டை கொஞ்சம் நெகிழ்த்தினாலும் கூட பெரிய எதிர்ப்புகள் நமது கலாச்சாரத்தில் ஏற்படுகின்றன. சமீபத்தில் நடிகை குஷ்புவின் பிரச்னையில் அதுதான் நடந்திருக்கிறது. சங்க இலக்கியம் என்பது இந்தக் கட்டுப்பாடை மீறியதொரு வாழ்க்கை. தொல்காப்பியத்தில் ‘களவியல்’ என்பது இயல்பானதொன்று. பரத்தையிடம் போதல் என்பது இயல்பானதொன்றாக சொல்லப்படுகிறது. ‘கள்’ உண்ணுதல் என்பதும் கூட சங்க இலக்கியத்தில் அங்கீகரிக்கப்பட்டதொன்றாகவே இருந்திருக்கிறது. மகிழ்வான ஒரு நிகழ்வு அது.சமண கருத்துகளுக்கு தமிழ்ச் சமூகம் ஆட்பட்ட பிற்பாடு தொல்காப்பிய கருத்துகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தன்மையான கருத்துகள் இங்கு ஏற்பட்டிருக்கின்றன. சமண மரபில் வந்த வள்ளுவர் ‘கள்ளுண்ணாமை’ என்ற தனி அதிகாரத்தையே எழுதுகிறார். ஆக, ‘மகிழ்வு’ என்பதை பெண் கவிதைகளில் பார்க்கும் போது முதன் முதலாக இந்தப் பிரச்னையை தொடத் துவங்கி இருக்கிறார்கள். பெண்களும் தங்களுடைய உடலை மகிழ்ச்சியோடு பார்க்கலாம் என்று ஒரு புதுக் குரல் உள்ளே வந்திருக்கிறது. அது ஆழமாக சிந்திக்கக் கூடிய ஒரு விஷயமாக எனக்குப் படுகிறது. நமது சமூகத்தில் இந்தக் குரல்கள் இப்போதுதான் உள்ளே வந்திருக்கின்றன. இதை முற்றிலும் ‘போலி’ என்று ஒதுக்கவும் முடியாது. அதே சமயத்தில் விமர்சன தளம் ஒன்று இதற்கெல்லாம் இங்கே இல்லாதிருப்பதுதான் பெரிய ஆபத்தென்றும் நினைக்கிறேன்.
தீராநதி: இதுவரை கல்வி புலமாக இது வளர்த்தெடுக்கப்படாமல் இருக்கிறதல்லவா அந்தச் சிக்கலைப் பற்றி கேட்கிறேன்?
தமிழவன்: இந்தத் தோல்விக்கு முதற் காரணம், ‘போலி’ பல்கலைக் கழகங்கள். கோடிக்கணக்கான மத்திய தரவர்க்கத்தினுடைய பணத்தை ஹிநிசி என்பது இங்கே அனுப்பிக் கொண்டே இருக்கிறது. இந்தப் பல்கலைக் கழகங்கள் எல்லாம் மக்களுடன் இணைந்த ஆய்வுகளோ ஆராய்ச்சிகளோ நடத்துவதே இல்லை. ஒரு சிறுபத்திரிகைக்காரனையாவது அழைத்து எந்தப் பல்கலைக்கழகமாவது ஆராய்ச்சி செய்கிறதா? பெண் கவிதைகளில் நடந்திருக்கும் மாற்றங்கள் நமது சமூகத்தில் தற்காலத்தில் நடந்து கொண்டிருக்கும் நேரடி பிரச்னைகள். இந்த விவாதங்களையெல்லாம் பல்கலைக்கழகங்கள்தான் எடுத்துக் கொண்டு விவாதித்திருக்க வேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் பல்கலைக் கழகங்கள் தோற்றுப் போய்விட்டன. துணை வேந்தர்கள் தோற்றுப்போனார்கள். நமது கல்வி அமைச்சர்கள் தோற்றுப் போனார்கள். அகாடமிகள் தோற்றுப் போயின. சிறுபத்திரிகைகள்தான் இதை தூக்கிக்கொண்டு கடினமாக உழைக்கின்றன. பல மொழி பெயர்ப்புகளை சொந்தச் செலவில் வெளியிடுகின்றன.முழுச் சுதந்திரம் கொடுத்து பல்கலைக் கழகம் ஒரு துறையை உருவாக்குவதற்கு இன்றைக்கு எனக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கும் நேரத்திலும் கூட முழுவதுமாக இந்தக் குரலை என்னால் உள்ளே கொண்டு சேர்க்க முடியவில்லை. அதில் பல சிக்கல்கள் இருக்கின்றன.
தீராநதி: தத்துவ அறிவு என்பது வாழ்க்கைக்கு தேவையானதொன்று. தத்துவம் என்பது குழப்பமடைந்த மனித இனம் மீண்டும் சரியாகச் சிந்திப்பதற்குச் செய்யும் முயற்சியாகும் என்று சமகால தத்துவ ஆய்வாளரான எட்வர்டு கிரெய்க் சொல்கிறார். நீட்ஷேவோ தத்துவவாதியை ‘ஒரு பயங்கரமான வெடி மருந்து; அவனிடமிருந்து எதுவும் பாதுகாப்பாகத் தப்பிக்க முடியாது’ என்கிறார். தத்துவ அறிவை நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள்?
தமிழவன்: இது ஒரு மையமான பிரச்னை. சிறுபத்திரிகைகள் சூழலில் இயங்குகின்ற நண்பர்கள் மத்தியில் தத்துவம் பற்றிய ஆராய்ச்சி விவாதமெல்லாம் மீண்டும் வந்திருக்கிறது. முன்பெல்லாம் நான் மேலைக் கலாச்சாரத்தில் இருக்கிற தத்துவ கருத்தாக்கங்களை அப்படியே கொண்டு வந்து இங்கே வைத்து விவாதித்துக் கொண்டிருந்தேன். இன்றைக்கு எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், தமிழ்த் தேசிய மனோபாவத்திற்குள் (சுமார் ஆறுகோடித் தமிழர்கள் மத்தியில் இயங்கக் கூடிய மனோபாவத்தின் அடையாளத்தை நான் தமிழ்த் தேசிய மனோபாவம் என்று குறிப்பிடுகிறேன்) தத்துவம் பற்றிய விவாதம் மிக மிக முக்கியமானது. சைவ சித்தாந்த மரபு, பௌத்த மரபு, சமண மரபு என்று பல தத்துவ மரபுகள் தமிழ்ச் சமூகத்திற்குக் கண்டிப்பாக இருந்திருக்கிறது. தற்கால தத்துவ மரபு என்பதை நாம் மேற்கத்திய சிந்தனையாளர்களோடு இணைத்து வைத்து இன்றைக்கு விவாதித்துக் கொண்டிருக்கிறோம். தத்துவத்தைப் பொறுத்தவரை இரண்டு விதமான போக்குகள் உண்டு. ஒன்று: தத்துவம் வாழ்க்கைக்குத் தேவையானது என்பது. இரண்டு: தத்துவம் அழிவைக் கொண்டு வந்துவிடும் என்பது.உலகத் தத்துவ மரபில் நீட்ஷேவின் தத்துவம் மிக முக்கியமானது. தன் வாழ்நாள் முழுவதும் தத்துவத்திற்கே செலவழித்த ஒரு தத்துவவாதியான நீட்ஷேதான் நீங்கள் குறிப்பிட்ட அந்தக் கருத்தையும் சொல்லி இருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. ஆகையால் தான் தெரிதா கூட தனது சிந்தனைகளை விளக்க இலக்கியத்தை கையில் எடுக்கிறார். போகப்போக தெரிதா தத்துவவாதியா? இலக்கியவாதியா? என்ற சந்தேகம் எழுகிறது. நமது தத்துவத்தை தேசியமயப்படுத்த வேண்டும் என்பது என்னுடைய கருத்து. சைவசித்தாந்தத்தில், மணிமேகலையில், பக்தி இலக்கியத்தில் இருக்கக் கூடிய வைஷ்ணவம் போன்ற தத்துவ மரபுகளை ஆழமாக மீண்டும் நாம் வாசிக்க வேண்டும். தொல்காப்பியம் இன்று மறுபடியும் ஒரு ஃபேஷனை போல மேலெழுந்திருப்பதின் அர்த்தம் அதுதான். இன்றைக்கு எல்லோரும் உரைமரபுகள் மிகவும் முக்கியமானவை என்று சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். 1980_களில்தான் இந்தப் பார்வை வலியுறுத்தப்பட்டது. அதற்குக் காரணம் என்னவென்றால் தெரிதாவினுடைய கருத்துக்களை நம்முடைய உரைமரபுகளோடு இணைத்துதான் புரிந்துகொள்ள முடியும் என்ற ஒரு குரல் இங்கு உருவானது. ஆக, நான் என்ன சொல்கிறேன் என்றால் தத்துவத்தை தமிழர்கள் மிகவும் தீவிரமான ஒரு விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் பரிதாபம் என்னவென்றால் சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள தத்துவத்துறையில் எந்த மாணவர்களும் சேர்வதேயில்லை. பெங்களூர் பல்கலைக்கழகத்திலுள்ள தத்துவத்துறையை சமீபத்தில்தான் மூடினார்கள். சிறுபத்திரிகைகளின் தத்துவ இயக்கத்திற்கு எந்த அரசும் பணஉதவி செய்வதில்லை. ஆனால், சாகித்ய அகாடமியில் கோடிக்கணக்கில் பணம் இருக்கிறது. டெல்லியிலிருந்து சாகித்ய அகாடமியின் உயர் அலுவலர் ஒருவர் சென்னைக்கு வருகிறார் என்றால் சுமார் 30 ஆயிரம் ரூபாய் விமானச் செலவுக்காக வழங்கப்படுகிறது. இந்தச் செலவில் அடிக்கடி விமானத்தில் பலர் பறந்து கொண்டிருக்கிறார்கள். யாராவது கணக்கெடுப்பு நடத்தினால் சாகித்ய அகாடமியின் பரிசுக்கு எவ்வளவு பணம் செலவாகிறது, விமானச் செலவுக்கு எவ்வளவு பணம் செலவாகிறது என்று பார்த்தால் 90 சதவீதப் பணம் விமானச் செலவுக்காக மட்டுமே செலவழிக்கப்படுவது தெரிய வரும். வருடத்திற்கு புத்தகத்திற்கு வழங்கப்படும் பரிசுத் தொகை 25 ஆயிரத்தை அதிகப்படுத்தச் சொல்லி விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு இருக்கக் கூடிய நிர்வாகத்தினர் அதற்கு ஒப்புதல் வழங்க மறுக்கிறார்கள். இதையெல்லாம் ஏன் நாம் பொது தளத்திற்குள் விவாதிக்கத் தொடங்கவில்லை என்பது எனக்கு புதிராகவே இருக்கிறது.
தீராநதி : உங்களின் தொடர் பேச்சில் மைய இழையாக ழான் பொத்திரியாரின் (யிமீணீஸீ ஙிணீஸீபீக்ஷீவீறீறீணீக்ஷீபீ) ஹைபர் ரியாலிட்டி என்ற கருத்தாக்கம் வந்துகொண்டே இருக்கிறது. ‘‘உண்மை இறந்து விட்டது. இங்கு எதுவுமே நிஜம் இல்லை. நகல்களின் பிம்பங்களை பொழிந்த படிதான் டி.வி. கம்ப்யூட்டர், சினிமா, பத்திரிகை, விளம்பரங்கள் யாவுமே இருக்கின்றன. இந்த நகல்கள்தான் நமது கலாச்சாரத்தின் உண்மைகள்’’ என்று அவர் சொல்கிறார். நமது தமிழகத்தில் கூட சமீப காலமாக ‘சேகுவேரா’ என்ற டி_ஷர்ட் பிம்பம் உண்மை பிம்பத்தைவிட கவர்ச்சியாகவும், வியாபார நுகர் பொருளாகவும் மாற்றப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் நீங்கள் எப்படி புரிந்து கொள்கிறீர்கள்? இன்றைய அரசியலை நீங்கள் புரிந்து கொள்ள இவை உங்களுக்கு எப்படி பயனுள்ளதாக இருக்கின்றன?
தமிழவன் : ஒரு விதமான பின் நவீனத்துவ அரசியல் என்பது இங்கேயும் செயல்படுகின்றது என்பது உண்மைதான். இந்தியாவிலேயே இந்தப் பிம்பங்களின் கவர்ச்சியில் அதிகமாக சிக்கி கலாச்சாரத்தை இழந்தவர்கள் நமது தமிழர்கள்தான். சினிமாவில் வருகின்ற பிம்பங்களை நிஜமெனக் கருதி அவர்களை தங்களின் விடுதலையை பெற்றுத்தரக் கூடிய தலைவர்களாக பார்த்து பிரமித்தார்கள். தொலைக்காட்சியைப் பார்த்து அதில் பேசுகின்ற மொழியை இன்றைக்கு நமது பிள்ளைகள் பழகத் தொடங்கி இருக்கிறார்கள். இதுபோல வாழ்க்கையே சினிமாவாக மாறி இருக்கிறது. வரலாற்று ரீதியாக விஜய நகரப் பேரரசு தமிழகத்திற்கு வந்தபோது பெரும்பாலான தெலுங்கர்கள், பிறமொழியினர் எல்லாம் நம் சமூகத்திற்குள் வருகிறார்கள். இவர்களிடம் ஒரு சாராம்சத்தன்மை என்பது இல்லை. வீட்டுக்குள் ஒரு மொழியைப் பேசிக்கொண்டு வெளியில் ஒரு மொழியைக் கையாண்டார்கள். இன்றைக்குப் பிறமொழி பேசுகின்றவர்களை நான் தமிழர்கள் இல்லை என்று சொல்லமாட்டேன். இவர்களும் தமிழர்கள்தான். இவர்களை நாம் பாதுகாக்க வேண்டும். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் இவர்களெல்லாம் சேர்ந்து ஒரு தமிழ் அடையாளத்தைக் கட்டி உருவாக்கி இருக்கிறார்கள் இல்லையா அதுதான் பின் நவீனத்துவ அடையாளத்தின் அடிப்படை.தமிழர்கள் அல்லாதவர்கள் கூட தன்னை வெளிச்சமூகத்திற்குள் ‘தமிழன்’ என்று அடையாளப்படுத்திக் கொள்வது ஒரு பின் நவீனத்துவ ‘ஐரனி.’ இங்கே ஒரு மலையாளி முதல்வராக வரலாம், கர்நாடகத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக ஆட்சி செய்ய முடிந்திருக்கிறது. இந்த மாதிரி பின் நவீனத்துவ ‘ஐரனி’ தமிழ்ச்சமூகத்திற்கு பலமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் பின் நவீனத்துவக் கோட்பாடு இல்லாமல் வேறு எந்த அடிப்படையிலும் நம்மால் புரிந்துகொள்ள முடியாது. அதேபோல சினிமாவும் அரசியலும் பின்னிப் பிணைந்திருக்கிறது. அதுவும் இதன் அடிப்படைதான். பழைய காலத்தில் பெரியார் சொன்னதுபோல இவர்களை கூத்தாடிகள் என்று சொல்லி ஒதுக்க முடியாது. பெரியாரும் சினிமாக்காரர்களை தொலைக்கப் பார்த்தார். ஆனால் நடக்கவில்லை. கடைசியில் சினிமாக்காரர்கள் பெரியாரைத் தொலைத்து விட்டார்கள். இன்று பெரியாரைக் காணவில்லை. அவரைத் தேட வேண்டியதாக இருக்கிறது. இதுவெல்லாம் பொத்திரியார் சொல்லும் ‘உண்மை இறந்துவிட்டது’ என்ற கருத்தோடு பொருந்திப்போகக்கூடிய ஒன்றுதான்.